Thursday, June 30, 2011

11. இதயத்தின் ஓசைகள் - கவிதைத் தொகுதி

இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் பெண் கவிஞர்கள் வரிசையில் கலைப்பட்டதாரி ஆசிரியரான ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களும் இணைந்துகொள்கிறார். தனது கவிதைத் தொகுதியாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் இவர், விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி), முதிசம் (பொன்மொழித் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியராகவும் காணப்படுகிறார்.

ஆசிரியர் தொழிலை பெரும் சேவையாக மேற்கொண்டு பல மாணவர்களுக்கு அறிவுக்கண் கொடுத்தவர் ஸக்கியா அவர்கள். அதனால் பல மாணவர்கள் இன்றும் அவரை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள என்ற சிறந்த ஆய்வு நூலையும் எழுதி பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரது எழுத்து ஆளுமைக்கு இந்நூல் சிறந்த சான்று. அந்த எழுத்து ஆளுமையோடு கவிதைத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். என்று தனது அணிந்துரையில் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கான கவிதைகளும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான கவிதைகளும் இந்தக் கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. மொத்தத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய விதத்தில் இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இத்தொகுதியில் சமாதானம், தாயின் பெருமை, ஒற்றுமை, அறிவுரைகள், உழைப்பின் மகிமை, போர் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

தாயின் கருவறை சுகம் இந்த உலகத்தில் எந்த பாகத்திலும் கிடைக்காது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கருவறை என்பது மிகவும் பாதுகாப்பானதொரு இடம். குழந்தையாக நாமிருந்தபொழுது இந்த உலகத்தின் எந்தவித அக்கிரமங்களும், நோய்நொடிகளும் எம்மைத் தாக்கும் வீதம் மிகக்குறைவு. தன் கண்ணைப்போல நம்மை நேசிக்கும் ஒரேயொரு உயிர் நம் தாய் மாத்திரம்தான். உலகத்தில் யாரை நாம் நேசித்தாலும் அல்லது யார் நம்மை நேசித்தாலும் அதில் ஒரு சுயநல உணர்வு கலந்திருக்கும். ஆனால் அத்தகைய எந்த உணர்வும் இன்றி நூறுவீத அன்புடன் பழகும் தாயின் பெருமை அம்மா வேண்டும் (பக்கம் 17) என்ற கவிதையில் இப்படிக் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.

அம்மா வேண்டும் எனக்கு ஓர் அம்மா வேண்டும். அள்ளி அணைத்து ஆறுதல் தந்திட எனக்கு அம்மா வேண்டும். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இப்பாரினில் எதற்குமீடாகா அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். பள்ளி விட்டுத் துள்ளி வரும் என்னை அள்ளியணைத்து முத்தமிட்டு பக்குவமாய் வளர்த்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். அன்னைக் கீடான ஓருயிர் ஆயிரம் தேடினாலும் உண்டோ உலகில் ஆறுதல் அளித்தெனைக் காத்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும்.

ஏமாற்றங்களும், களவு பொய் புரட்டுக்களும் நிறைந்த உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிரி யார் என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றோம். உற்ற தோழர்களை சந்தேகப்படுமளவுக்கு சிலரின் நடவடிக்கைகள் துரோகமாய் அமைந்துவிடும் துரதிஷ்டங்களைப் பரவலாக சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகையதொரு நிலைமையினை நம்ப நட நம்பி நடவாதே (பக்கம் 18) என்ற கவிதையினூடாக அறிவுரை கூறுகிறார் இப்படி

உள்ளத்தில் நஞ்சு வைத்து உதட்டினிலே அமுதம் வைத்து பள்ளத்தில் தள்ளி விடும் பாவிகள் தான் எத்தனை பேர்? கள்ளமாகப் பழகிக் காரியம் சாதித்து குள்ள நரிகளாய் வாழும் கயவர்கள் எத்தனை பேர்? நல்லவன் போல் நடித்து நயவஞ்சகம் புரியும் நண்பனை நம்பியதால் நாதியற்றோர் எத்தனை பேர்?

மழையில்லை என்று வாய்கிழியப் பேசும் நாம் மரம் வளர்ப்பதை மாத்திரம் ஏனோ மறந்து போகிறோம். மரங்களற்ற பொட்டல் வெளியில் மழை வரும் வரை காத்திருத்தல் எத்தனைப் பெரிய முட்டாள் தனம்? காடுகளை அழித்து கட்டடிடங்களை நிர்மாணித்துச் நச்சுப் புகையை சுவாசிப்பதால் எவ்வளவு நோய்களுக்கு ஆளாகின்றோம். இதையெல்லாம் உணர்த்துமாற்போல மரங்களை நாட்டுவோம்: மாநிலம் காப்போம் (பக்கம் 24) என்ற கவிதை அமைந்திருக்கின்றது.

மனிதனோ மண்ணதன் புனிதத்தை நீக்கி
மதியினை இழந்து மறம் பல புரிந்து
மரங்களை வெட்டி மாளிகை கட்டி
மாநிலமதனை மாசுபடுத்திட்டான்
மழை வழி நீரெல்லாம் வற்றிப் போகாமல்
மரமெல்லாம் பட்டுப் போய் மணல் வெளியாகாமல்
மன்பதை வாழ்வெல்லாம் கருகிப் போகாமல்
மரங்களை நாட்டுவோம் மாநிலம் காப்போம்

யாருடைய தலையெழுத்து மாறினாலும் தோட்டத்தொழிலாளர்களின் தலையெழுத்து மட்டும் இத்தனைக் ;காலங்களாக இன்னும் மாறவில்லை. அந்த பாவப்பட்ட ஜீவன்கள் பரம்பரை பரம்பரையாக பலருக்கும் அடிமைப்பட்டு முறையாக உண்ணக் குடிக்க வழியில்லாமலும், உடுத்துவதற்குரிய துணியில்லாமலும் அவதிப்படுவது கண்கூடாக நடக்கின்ற விடயம். மலையக சிறுமிகளை தலைநகரத்தில் உள்ள பெரிய பணக்கார வீடுகளுக்கு வேலைக்கு அனுப்புதல், பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய காலத்தில் கடைகளில் வேலை செய்யும் வாலிபர்கள் என்று அவர்களது வாழ்க்கை தன்னிச்சையின்றியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.

வெயில் மழை பாராமல் மலைகளில் தேயிலை பறித்து தமது ஜீவனோபாயத்தை நடத்துகின்ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு மங்கை பற்றிய தனது ஆதங்கத்தை தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்து ஓடாகிப் போன மங்கையே (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.

கொழுந்து கொய்து கொய்து உன்
கொடும் பசியைத் தீர்த்திடும்
கொடியே உந்தன் வாழ்வினில்
கொடுமை என்று நீங்குமோ?
முதுகில் கூடை சுமந்ததால்
முள்ளந்தண்டு வலிக்குதோ
முதுமை காணும் வரையிலும்
முடிவே இன்றி உழைப்பதோ?

இன்று பணக்காரர்களாக நம்மத்தியில் வாழும் பலரை நாம் அவதானித்திருக்கின்றோம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர்தான் உண்மையில் நல்மனம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள். வேறு சில பணம் படைத்தவர்கள் தாமும் தங்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தால் போதும் என்ற கீழ்த்தரமான எண்ணம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பள்ளிப் படிப்புக்கு பணமின்றி தவிக்கும் ஒரு மாணவனின் துன்பமோ, உண்ண உணவின்றி பசியால் வாடும் ஏழைகளின் கதறல்களோ, திருமணம் முடிக்க அத்தனை தகுதியிருந்தும் சீதனம் கொடுக்க வழியில்லாமல் ஏங்கும் அபலைகளின் உஷ்ண மூச்சோ இவர்களின் இதயத்தை உருக்குவதில்லை. மாறாக அவ்வாறானவர்கள் உதவி கேட்டு சென்றாலும் அவர்களை அவமதித்து அனுபபும் நிலைகள் பரவலாகிவிட்ட நிலைiயில் அவர்களின் கவனத்துக்காகத் தான் செல்வச் சீமானே என்ற கவிதை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

உண்ண உணவின்றி
உறவினர் உழல
உற்றாரும் பெற்றாரும்
ஊமை போல் வாட
உதவி செய்யாமல் வாழலாமோ செல்வச் சீமானே

இவ்வாறான மனதைத் தொடும்; கவிதைகளை கவிஞர் உணர்வுபூர்வமாக மிகவும் அற்புதமாக முன்வைத்திருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள், அறிவுரைகள் பற்றியும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக காணப்படுகின்றார் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
வெளியீடு - முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் (ஆநுPளு)
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 150/=

10. இடி விழுந்த வம்மி - கவிதைத் தொகுதி

இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சமகாலத்தில் கவிதைத் தொகுதிகளின் வரவு இலக்கியத்துறையில் அதிகமாய் அணிசேர்த்து தமிழ்ச் சுவை செழுமையுடன் இலக்கிய தாகத்துக்கு அமிர்தமாகின்றது. அந்த வகையில் இடி விழுந்த வம்மி| என்ற கவிதைத் தொகுதியின் வருகை சிறப்பாக அமைகின்றது. இந்த நூலின் ஆசிரியர் கல்முனை அபார் அவர்கள். இவர் பிரபலக் கவிஞர் சோலைக்கிளி அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கவிதைத் தொகுதி அபாரின் கன்னித் தொகுதியாக, ஒரு உயிரின் வெளியீடாக 48 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

தொலைந்து போன கிராமம், திருடப்பட்ட இரவு, தலையெழுத்து மாறிய ஊர், சந்தையை சுமந்து வந்த பைத்தியம், என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, என்னுள் நானில்லை, பூமியை விட்டுப் பயணம், கட்டில் காதலி, மனதைச் சப்பிய மாடு, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், கவிதை பேசிய இரவு, சுவைக்காத சுதந்திரம், நன்றியுடன் நான், துளிர் - காய் - பழு, ஒரு மூடைப் பயம், காறித் துப்பிய ஜுலை, மலட்டு வானம், காகக் கூடு, குட்டு வாங்கும் நகரம், எனது மயானம், சப்பாத்துக் கால் இரவு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கவிதைத் தொகுதியில் பெரும்பாலான கவிதைகள் உருவக, உருவகித்தல்களை வெளிப்படுத்துவனவாக நிரம்பிக் காணப்படுகின்றன.

''இடக்கரடக்கல் அற்ற பச்சையான பிரதேச வழக்குகளினதும், கிராமத்தவர்களின் உருவக உருவகிப்பு பேச்சுமுறையினதும் வெளிப்போந்தலாக 1989களின் பிற்பகுதியில் கல்முனைப் பிரதேசத்தில் உருவான கவிதைச் சூழலைச் சுவீகரித்து 1990களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்தான் அபார். ... அவரின் கவிதைகள் தனக்குரிய முறையில் தாளிதமாகி, சுதாகரித்து புதிய பரிமாணங்களைத் தொட்டது. அதன் விம்பங்களை அபாரின் இந்த இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதியில் பார்க்கக் காணலாம். முதல் வாசிப்பில் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே ஒன்று போலத் தோன்றக்கூடும். மரத்தில் தாவும் குரங்குகள் எல்லாம் ஒரே மாதிரி தெரிவதுபோல - இந்தக் கவிதைப் போக்கின் பாணியில் சொன்னால் இதற்குக் காரணம் இந்தக் கவிதைகளின் இடைவிடாத உருவக, உருவகிப்புத் தன்மையே.'' என்று அபாரின் கவிதைகள் பற்றி திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

இனம். மதம், மொழி, என்ற வகையில் பிரிந்து போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைந்துகொள்கிறான். இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் எவருமே கட்டுண்டுப்போகின்றார்கள். இந்த வகையில் அபாரின் இயற்கை ரசிப்புக்கு உட்பட்ட கவிதைகளாக என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், மலட்டு வானம், காகக் கூடு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய கவிதைகளைக் குறிப்பிடலாம்.

என்னுள் நானில்லை (பக்கம் 12) என்ற கவிதையில்

என் கண்ணைக் கொத்திக் குடிக்க
அரவங்கள் அரளுகின்றன
என் எலும்பை வேட்டையாட
நாய்கள் வட்டமிடுகின்றன

என் இதயத்தைக் கொத்திப் புரட்டி
மரவள்ளி நடலாம்!
அல்லது
கீரை விதை தூவலாம்!

இந்தக் கவிதையூடாக காதலில் தோற்றுப்போன ஒரு வெறுமைத் தன்மையை வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். மானம் காத்த ஆடைகளை காற்று கழற்றிக்கொண்டு போவதாக குறிப்பிடுவதிலிருந்து எல்லா வஸ்துக்களும் தன்னை பந்தாடிப்பார்க்கின்றன என்ற நிலையை இயற்கையோடு ஒப்பிட்டு மிக அருமையாக உவமித்திருக்கின்றார்.
மனதைச் சப்பிய மாடு (பக்கம் 17) என்ற கவிதையில் அழுக்கடைந்திருந்த மனம், தூய்மையாகிவிட்டது போன்றதொரு விடயத்தை இயம்பி நிற்கிறார். மாடு சாணத்தை ஈரலில் கழித்தது எனவும், அதை மொய்க்க வந்த இலையான கூட்டங்கள் இடம்மாறி சிறுகுடலில் மொய்த்து விளையாடியது எனவும் சொல்லும் கவிஞர், இறுதியாக மனமிருந்த இடம் வாசமாவது வீசட்டும் என்று கீழுள்ள வரிகளினூடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

போகட்டும்
ஊத்தை மனம்
மனமிருந்த இடத்தில்
மல்லிகைக்கொடி நட்டால்
வாசமாவது வீசும்!

தூக்கம் வராத தருணங்களில் பலவித கற்பனைகள் எல்லோருக்கும் எழுவதுண்டு. அந்தமாதிரியான சில அனுபவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கவிதை பேசிய இரவு (பக்கம் 21) என்ற கவிதை சுவாரஷ்யமாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் பயங்கரத்தை நாசூக்காக சொல்லப்பட்டதுமாக இருக்கிறது. அந்தக்கனவு கீழுள்ளவாறு வரிகள் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

தாலியறுத்த பெண்கள்
வேலி பாய்கிறார்கள்
அஹிம்சை பேசிய மனிதன்
ஆள் தின்னுகிறான்

என் பேனைக்குள்ளேயிருந்து
இரண்டு புடையான்கள்
படமெடுத்து வந்து
என் கவிதைக்கு
கொத்திவிட்டுப்போயின

சுவைக்காத சுதந்திரம் (பக்கம் 23) என்ற கவிதை காதலின் சோகத்தை சொல்லுகின்றது. சின்ன வயசில் செதுக்கியெடுத்த சிற்பிபோன்றிருந்த தன் காதலி, ஒரு குரோட்டன் இலையாய் அலறிப்பூவாய் தனக்குள் வாழ்ந்த காதலி.. இல்லாமல்போன வேதனையை வெளிப்படையாக காட்டும் கவிதையாக இதை நோக்கலாம். உலகக் காதலர்கள் அறியும் வரைக்கும் காகங்களுக்கு கத்தச்சொல்லியும், நாய்களுக்கு குரைக்கச்சொல்லியும் தனது காதலின் வேதனையை முகாரி இசைக்கிறார் இப்படி

என் சிறகு
முறிந்து விட்டது
இனி
எங்கே போவேன்?
யாரைத் தேடுவேன்?

என் இதயம்தான்
இருந்தென்ன
இறந்தென்ன
என் இதயம் போனபிறகு?

பறவைகளைப் பார்த்திருக்கிறோம். அதன் கீச்சுக்குரலைக் கேட்டிருக்கிறோம். பறவைகள் பற்றிய பல கவிதைகளை படித்துமிருக்கிறோம். எனினும் அபார் தனது காகக் கூடு (பக்கம் 34) என்ற கவிதையில் காகத்தைப்பற்றி பாடியிருக்கிறார். தினமும் பெருக்கிய முற்றத்தில் சுள்ளியும் முள்ளும் பரவிக்கிடக்கிறது. பெண் காகம் அடைகாத்துக்கொண்டிருக்கின்றது. அண்டை வீட்டுக்காரியின் கோழிகளின் இறகுகளையும், தென்னந்தும்புகளையும் கூடுகட்டுவதற்காகக் கொண்டு சென்ற காகம் அவற்றை தனது வீட்டு முற்றத்தில் போட்டிருப்பதாக கூறும் கவிஞர் தனது கற்பனையின் உச்சகட்டமாக காகத்தின் எச்சத்தை எப்படி எழுதியிருக்கிறார் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வாசல் முழுக்க எச்சங்கள்
மண்ணுக்கு மருதாணி போட்டாற்போல
இருக்கிறது

இவ்வாறு இயற்கையோடிணைந்த வாழ்வியலை கவிதைகளில் தத்ரூபமா தந்திருக்கும் அபார் இன்னும் பல படைப்புக்களைத் தந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும் என்று வாழ்த்தி நிற்கிறேன்.

நூலின் பெயர் - இடி விழுந்த வம்மி (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - அபார்
முகவரி - 143, சாஹிப் வீதி, கல்முனை - 05.
தொலைபேசி - 0776 912029
விலை - 200/=

Thursday, June 23, 2011

09. "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" - கவிதைத் தொகுதி

"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" - கவிதைத் தொகுதி

மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்ற கவிதைத் தொகுதி 76 பக்கங்களை உள்ளடக்கி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது இவரது இரண்டாவது நூலாகும். ஏற்கனவே இவர் வேர்களும் பூக்கட்டும் என்ற உளவியல் நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

தியாகம் அவள் பெயர், நீதான் அவள், நீ - நட்பு - காதல், முதிர்கன்னி, செத்தா போய்விட்டேன், கல்லறைக் கனவு, எனது ஆட்டோகிராப்ஃ, ஒரு ரயில் பயணம், முள்ளிவாய்க்கால் முடிவுரை, தமிழ் சுதந்திரம், ஊர்ப் பக்கம், பயணங்கள் முடிவதில்லை, ஒரு காதல் காவியம், அடங்காத காதல், கொன்றுவிடுங்கள், மொட்டைக் காதலும் முடிந்து போன கற்பனையும், கடற்கரைக் காதல், புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும் ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


இந்தக் கவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

'காதலையும் கிளர்வையும், இளம் பெண்களையும் மட்டுமே கவிப் பொருள்களாகக் கொள்ளும் எம் இளைஞர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான கவிஞனாக அமல்ராஜைக் காண்கிறேன். சமூகத்தின் நிகழ்வுகளை தன் அக்கரையுள்ள சமூகப் பார்வையினால் நோக்கி ஆதங்கப்படுகிறார், ஆத்திரப்படுகிறார். தாய்மை பற்றி உருகும் கவிஞர், யுத்தம் பற்றிக் கவலைப்படுகிறார். முள்ளி வாய்க்கால் முடிவுரையை வாழ்க்கையை முழுதும் தொலைத்த ஒரு பெண்ணை முன்னிறுத்தி எம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். சில காதல் கவிதைகளிலும் அவரின் கவித்திறமை, காதல் உள்ளம் புரிகிறது.' என்று ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

அணிந்துரை வழங்கிய கவிமாமணி அகளங்கன் அவர்கள் 'இன்று ஈழத்தில் வெளிவரும் இலக்கியப் படைப்புக்களில் கவிதை நூல்களே அதிகம் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. புதுக்கவிதைத் தொகுப்புக்களே அதிகம் வெளிவருகின்றன. அதில் காதல் கவிதைகளே அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் இளைஞர்களே அதிகமாக இத்துறை சார்ந்த நூல்களை எழுதிவெளியிடுவதே. சில புதுக் கவிதைத் தொகுப்புக்கள் வெறும் நாட்குறிப்புப் புத்தகம் போல அல்லது காதலிக்கு அனுப்ப வேண்டிய காதலனின் கடிதம் போல இருக்கின்றன. சில தொகுப்புக்கள் காதலையும் சமூகத்தையும், சம காலத்தையும் பாடுவனவாக அமைந்துள்ளன. இந்த வகையில் பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்னும் இக்கவிதைத் தொகுதி காதலோடு சமகாலம், சமூகப் பிரச்சினை என்பவற்றை கலந்ததாக அமைந்துள்ளதைப் பாராட்டலாம்.' என்கிறார்.

நூலாசிரியர் தனதுரையில் 'கவிதையை நான் அதிகம் நேசிப்பவன். அவற்றை அதிகம் வாசிப்பவனும் கூட. கவிதையை எழுதுவது சுலபம். ஆனாலும் அதை நல்ல கவிதைக்குரிய இயல்புகளுடன் காலத்திற்கு ஏற்றாற் போல் உருவாக்குவதில்தான் ஒரு கவிஞனின் வெற்றி தங்கியிருக்கிறது. அந்தவகையிலே, நானும் ஒரு நல்ல சமூகக் கவிஞனாக வெற்றிபெற வேண்டுமென்பதே எனது ஆவல். வாசித்தாலும் யதார்த்தச் சிந்தனைப் போக்கும் தரமான கவிதைகளை உருவாக்க ஊன்றுகோல்களாக அமையவல்லன.' என்கிறார்.

திருமணமாகாத ஒரு பெண்ணின் மனநிலையை முதிர்கன்னி (பக்கம் 12) என்ற கவிதையில் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். சீதனம் என்ற பிரச்சனைப் பற்றி காலங்காலமாக பேசி வந்தாலும் அது தருகின்ற காயங்கள் மட்டும் ஏனோ இன்னும் ஆறவில்லை. வாழையடி வாழையாக அந்த பிரச்சனை எல்லா சமூகத்திலும் ஊடுறுவி விட்டது. தாலி பாக்கியம் பெறாமல் முதுமையாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண் இதயத்தின் ஓசைகள் இவ்வாறு சோக கீதம் பாடுகின்றது.

மஞ்சத்துப் பெண்கள் கொஞ்சிக் குலாவும் முற்றத்தின் மூலையில் மூச்சுமின்றி பேச்சுமின்றி முக்காட்டோடே முப்பது வருடங்கள்... இது அலரிப் பூவும் அந்தஸ்து கேட்கும் காலம் அப்படியிருக்க இந்த அல்லிப்பூ மட்டும் ஏன் இன்னும் சாகாமலும் சமையாமலும் விலைபோகாமல் கிடக்கிறது? கையிலில்லை - எங்களிடம் ஆனால் கைகளிருக்கு. பணமில்லை உண்மைதான் மனமிருக்கு - நல்ல குணமிருக்கு...

செத்தா போய்விட்டேன் (பக்கம் 18) என்ற கவிதையில்

ஓர் அந்திப் பொழுதின் முந்திப் பார்க்கும் பிந்திய பகல்களுக்;குள் சிக்கிக் கேட்கும் யுத்த விமானங்களின் குண்டு மழையில் நனைந்து கரைந்த வலது கையும்... வெட்ட வெளியில் விட்டு வந்த வீட்டுப் பொருட்களை மீட்கப்போய், நட்டு வைத்த கன்னி வெடியில் காலை வைத்து மண்ணோடு போன மற்றொரு காலும்... என் உடலில் - ஓர் உறுப்பென்று இன்று மறந்தே போனது எனக்கு... என்று கவிஞர் வேதனைப்படுகிறார். மட்டுமல்லாமல் எங்களையும் கண்கலங்க வைக்கிறார்.

கடந்த காலங்களின் பொதுமக்கள் பட்ட துயர்களை வைத்து பயணங்கள் முடிவதில்லை (பக்கம் 52) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாம் மடிந்து போக மாட்டோம் என்றும் வயிற்றில் உதைத்தாலும் முதுகில் பிள்ளையை சுமப்பவர்கள் தமது வீரத்தாய்கள் என்றும், இழப்பும் களைப்பும் தம்மை ஒன்றும் செய்யவியலாது என்றும் உறுதியாக கூறி நிற்கிறார். இவரது மன ஆதங்கம் நியாயமானது. இதை அவர் சொல்லியிருக்கும் பாங்கு வித்தியாசமானது.

இன்று தொடங்கிய
பயணமல்ல - அது
நாளை முடிவதற்கு
எமது பயணங்களுக்கு
எனது வயதாகிறது...
சொத்தை இழந்தோம்
செத்துவிடவில்லை
மண்ணை இழந்தோம்
மாண்டுவிடவில்லை
மானமிழந்தோம்
மண்டியிடவில்லை

ஒரு காதல் காவியம் (பக்கம் 58) என்ற கவிதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கிறது. காதலித்து ஏமாறும் ஆண்களின் வேதனையும், காதலித்தவளையே கரம்பிடித்த ஆடவனின் சோகத்தையும் நயக்கத்தக்கதாக வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு இதமாயிருக்கிறது. ஓரிரு பெண்கள் செய்யும் சில தவறுகள், சில ஆண்கள் செய்து விட்டுப்போகும் காதல் லீலைகள் காதல் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த சுகத்துக்கே கேடு விளைவிப்பதாக மாறிவிட்டது. தற்காலத்தில் காதல் வெறும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. இந்தக் கவிதையின் சிறப்பாக உவமான உவமேயத்தை மாலை நேரம் கவிஞரின் மனதில் எத்தகைய கற்பனையை தோற்றுவித்திருக்கிறது என்பதை நோக்கலாம்.

சோம்பல் முறிக்கும் மாலைப்பொழுது
தங்கச் சூரியனும் தாண்டமுடியாக் கடலும்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்ளும் நேரம்

விஷமிகளாக சமூகத்தில் நடமாடித்திரியும் இரட்டைவேடம் கொண்டவர்களுக்கு சாட்டையடியாக எழுதப்பட்டிருக்கிறது கொன்றுவிடுங்கள் (பக்கம் 65) என்ற கவிதை. நேர்மையில்லாத பார்வைகளும், மகிழ்ச்சியற்ற சிரிப்பும், உண்மையற்ற புகழ்ச்சியும், யதார்த்தமற்ற வார்த்தையும் கொண்டு போலிகளாக நடிக்குமிவர்களிடமிருந்து தப்புவதே சிறப்பானது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டும் அழகிய முன்மாதிரி இந்தக் கவிதை. இவ்வாறானவர்களுடன் வாழ்வதை விட செத்துவிடுதல் மேலானது என்ற கருத்தை இன்று பலர் சொல்வதைக் கேட்கிறோம். இந்த கருத்தை பிரதிபலிக்கும் இரு வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

பொய்யான வாழ்க்கை மலிந்துகிடக்கிறது இதற்குள் உண்மைகள் மட்டும் பொசுங்கித் துடிக்கிறது.. போலி முகங்களை ஒப்பனை செய்து அழகாக பொருத்தியிருக்கிறார்கள் சில மனிதர்கள்.

காதல், சமூகம், போர், தாய்மை போன்ற பல அம்சங்களை வைத்தும் கவியெழுதும் ஆற்றல் மிக்க இளம் கவிஞரான பி.அமல்ராஜ், எதிர்வரும் காலங்களிலும் இன்னும் பல இலக்கிய படைப்புக்களைத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - சிறுக்கல்கள் சித்திரமாகின்றன (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - பி. அமல்ராஜ்
முகவரி - 66, பெரியகமம், மன்னார்.
தொலைபேசி - 023 2251364, 0773 268913.
விலை - 150/=