Saturday, December 31, 2011

15. மகுட வைரங்கள் - கவிதைத் தொகுப்பு

மகுட வைரங்கள் கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

பதுளை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது நித்தியஜோதி அவர்களின் மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுப்பு. கல்வியமைச்;சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாலராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ள இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கவிதை நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். இணையத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியீடாக, 76 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 43 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மலையக மக்களின் வாழ்கையைப் புடம் போட்டுக் காட்டும் ஓரிரு கவிதைகளையும், காதல் கவிதைகளையும், ஆன்மீகம் சார்ந்த சில கவிதைகளையும் இந்நூலில் தரிசிக்கலாம்.

இணைய தளத்தில் இலக்கியங்களைத் தேடி தகவல்களை சேகரித்த அனுபவம் கவிஞர் நித்தியஜோதி அவர்களுக்கு உண்டு. வாழ்க்கை என்னும் இணையப் பத்திரிகையை நெனசல நிலையம் ஊடாக வெளியிட்டு இலங்கை முழுவதும் இணைய வாசகர்களுக்கு இலக்;கியம் வாசிக்கத் தந்தவர். ... நவீன காலத்திற்கேட்ப தகவல் தொழில்நுட்பம், இணையம் என்பவற்றில் ஈடுபாடும், அவற்றின் பயன்பாடும் தமிழ் இலக்கியத் துறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்று தனது வெளியீட்டுரையில் கௌரிசங்கர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பூனாகலை பௌர்ணமி கலை இலக்கிய வட்டத்தின் தலைவரான ஆறுமுகம் கலையரசு அவர்கள் இக் கவிதை நூலுக்கு அணிந்துரையை வழங்கியுள்ளார்.

அப்புத்தளை தமிழ் இலக்கிய ஆய்வு மன்றத்தின் செயலாளர் பௌஸர் நியாஸ் தனது பதிப்பாசிரியர் உரையில் இந் நூலிலுள்ள கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. நவீனத்துவம் மிளிர்ந்து கவிதைகள் நடை போடுகின்றன. கவிதைகளின் உருவம், சொல்லாட்சி, உள்ளடக்கம் என்பன ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து இக்கவிஞரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார்.

காதல் சொன்ன கண்ணாளன் என்ற கவிதையில் (பக்கம் 18) காதலி தனது உள்ளத்தை கூறியிருக்கிறார். மேலும் கண்களால் கேட்கும் கேள்விகளுக்கு செயலால் பதில் கூறும் தனித்திறமை தனது காதலுக்கு கிடைத்த முதல் மரியாதை என்கிறார் கவிதையின் நாயகியான அந்தப் பெண். மனதினால் தான் மனைவியாகிவிட்டதாக கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

சிங்கார சிரிப்புகள்
நாகரீக மூட்டத்தினுள்ளே
முகம் கழுவும் நாளில்
வெட்கத்திற்கு மட்டும்
மரியாதை தந்தவனே..
உந்தன் வேள்வியால்
நானே
மனைவியாகிறேன்
மன ஊஞ்சலில்...

காதலில் விழுந்தவர்கள் நேரெதிர் மாற்றங்களான விடயங்களை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே விளங்காத ஒரு அதிசய உலகத்தில் அவர்கள் இருப்பார்கள். அதே நிலை நீ ... என்றும் நான்... (பக்கம் 46) என்ற கவிதையிலும் நயமாக உரைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கீழுள்ள அடிகளைக் குறிப்பிடலாம்.

புரிந்து கொண்டும்
பதிலைத் தேடுகின்றாய்..
நானோ...
வினாவைத் தேடுகின்றேன்..

கவிதையில் ஆர்வம் காட்டி வரும் கவிஞர் நித்தியஜோதி அவர்கள் இன்னும் காத்திரமான கவிதைகளைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - மகுட வைரங்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கவிஞர் நித்தியஜோதி
வெளியீடு - இணைய தமிழ் இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0729068724
விலை - 200 ரூபாய்



பதிவுகள் வலைத்தளத்தில் இந்த விமர்சனத்தைப் பார்வையிட...

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=549:2011-12-29-03-54-12&catid=14:2011-03-03-17-27-43

Friday, December 9, 2011

14. கரை தேடும் அலை - கவிதைத் தொகுதி

கரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கிறார் இளம் கவிஞர் புவிலக்ஷி. அழகிய அட்டைப் படத்தோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுதியாக கரைதேடும் அலை என்ற கவிதைத் தொகுதியை புவிலக்ஷி வெளியிட்டிருக்கிறார். உள்ளக்கிடக்கைகள் என்ற கவிதைத் தொகுதியை இவர் ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல கவிஞர்களை உருவாக்கிய கிழக்கு மண்ணில் இவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்தவர். டிசைன் லப் வெளியீடாக, 57 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 55 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பல கவிதைத் துளிகளும் உள்ளடங்குகின்றன.



நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், காதல், இதய வாழ்த்து, யாரும் இல்லையே, சுனாமியே, காதல் தேவதை, கலங்காதே, சவால், தூரத்துறவு, புரியாத புதிர், வேதனை, கரை தேடும் அலை, என் அழகே, வாழ்த்துக்கள், உறவு தேடும் உள்ளம், துயரம், அம்மாவே, அழியாத நினைவுகள், ஏழைப் போராளி, நான் இயேசு அல்ல, பலமேது?, இறுதி வரை, நீயும் பறந்திடுவாய், உனக்காக, கவிஞனின் காதலி, சாயம், பிரிவுத் துயர், சிறை வாழ்க்கை, சிரிப்பு, எதிர்பார்ப்பு, இடைவெளி, சுவை, கனவு, கேட்க யாருண்டு, உயர்வு, பிரசவம், கிடைக்குமா?, நிழல் இல்லாத நினைவு, உணர்வாய், துன்பமில்லை, தரிசனம், வசந்தம், உறுதிகொள், அதிஷ்டம், எதற்காக?, ப்ரார்த்தனை, காத்திருப்பு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

திமிலைத் துமிலன் அவர்கள் கவிதையும் இந்தத் தொகுதியும் என்ற தலையங்கத்தில் கருத்துரையொன்ரை வழங்கியுள்ளார். அம்பிளாந்துறையூர் அரியம் அவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் கவிதைகள் என தனது வாழ்த்துரையை வழங்கியுள்ளார். ம. புவிலக்ஷி தனதுரையில் ``இரண்டாவது தொகுப்பாய் வெளியாகும் கரை தேடும் அலையில் என் உணர்வுகள் மட்டுமல்ல சில உண்மைகளும் அலைகளாய்...'' வெளிப்படுகின்றன என்கிறார்.

சுனாமியின் தாக்கம் பற்றி பொதுவாக எல்லா கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதுகிறார்கள். இத்தனை வருடங்களாகியும் சுனாமியின் பாதிப்புக்கள் இன்றும் எச்சங்களாகவே இருக்கின்றன. சொத்திழந்து சொந்தமிழந்து வாடும் பலர் இன்னும் நிவாரணம் கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சை விட்டபடியும், நிரந்தரமான சுமைகளை நெஞ்சில் சுமந்தபடியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புவிலக்ஷியின் கவிதையிலும் சுனாமி புகுந்திருக்கிறது. தங்கையை இழந்த தனயனின் சோகம் நினைவலைகள் என்ற கவிதையில் (பக்கம் 01) இவ்வாறாக கவியாக்கப்பட்டிருக்கிறது.

கண் இமைக்கும் நேரமதில்
கை நீட்டிய தங்கையை - உன்
கரங்களால்
அள்ளிக்கொண்டதும்
நான் நிர்வாணமாய்
நின்றதும்...
மாறாத ரணமாய்...


அலைச் சப்தங்களில்
என் உறவுகளின்
அலறல் கேட்பதால்
கடலுக்குச் செல்வதையே
தவிர்த்துவிட்டேன்
இப்போதெல்லாம்...

ஒரு தந்தையின் பரிவோடு வடிக்கப்பட்டிருக்கும் கவலை என்ற கவிதையில் (பக்கம் 05) ஒரு அழகிய சிறுமியின் படம் கவிதைக்கு உயிர்சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

என் பிஞ்சு நிலாவின்
உறக்கம் கலைந்ததில்
என் உள் நெஞ்சம்
வேதனையில் வெதும்புகிறது..

காதல் வயப்பட்டாலே மனிதருக்குள் பௌதீக மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நிரூபிப்பது போல் காதல் (பக்கம் 07) என்ற கவிதையினூடாக புவிலக்ஷி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். காதலியின் குரல் ஓசை தன் தலையணைக்குள் கேட்கும் என்பதை கவிநயத்தோடு கூறும் அவரது மொழிநடை இதோ...

தலையணைக்குள்
ஒலிக்கும் உன் காதல்
குரலின் ஓசைக்காய்
விழியுறக்கம் மறந்து
விழித்துக் கிடக்கிறேன்...

காலம் எதையும் மாற்றக் கூடியது. அது மனித மனங்களையும் மாற்றவல்லது. இன்றைய நண்பர்களை எண்ணி உன் இரகசியங்களைச் சொல்லாதே. ஏனெனில் அவன் எதிரியாக மாறலாம் என்றொரு மூத்தொர் வாக்கு உண்டு. அதற்கிணங்க பகைவரையும் நாம் எதிர்க்கக்கூடாது. அவர்கள் ஒருநாளில் நண்பராகலாம் என்ற தத்துவத்தை விளக்குவதாக சவால் என்ற கவிதை (பக்கம் 14) அமைந்திருக்கிறது.

எந்த மனிதனையும் ஓரிரு நாளில் நல்லவர் என நம்பிவிடாதே! அந்த நம்பிக்கையே உன்னை ஏமாளியாக மாற்றலாம்.. கெட்டவர்கள் கூட நல்லவர் தான். கெட்டவர் என்பது நிரூபனமாகும் வரை..

காதலியின் பிரிவு எத்தகைய கொடுமை என்பதையே உணர்வு என்ற கவிதை (பக்கம் 43) சுட்டி நிற்கிறது. உலகத்தில் சந்தோஷம் தரும் அத்தனை விடயங்களும் காதலியின் பிரிவால் அர்த்தமற்றுப் போகின்றன. எல்லா நிகழ்வுகளும் இன்பமாயிருக்கும்போது காதலியின் பிரிவு மாத்திரம் வாட்டுவதாக இக்கவி வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

புல் சிரித்தது
பூ சிரித்தது..
புல்லின் மீது
பனித்துளி சிரித்தது..

காற்று இனித்தது..
காதல் இனித்தது..
ஏனோ...
அவளுடைய பிரிவு மட்டும் கசத்தது...

உள்ளக்கிடக்கைகள், கரை தேடும் அலை என்ற இரு கவிதைத் தொகுதிகளைத் தந்த புவிலக்ஷி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்பதே எமது அவா. அவரது முயற்சி தொடர எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கரை தேடும் அலை (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ம. புவிலக்ஷி
வெளியீடு - டிசைன் லப்
முகவரி - 190, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொழும்பு - 15.
விலை - 200/=