Tuesday, September 3, 2013

48. குதிரைகளும் பறக்கும் என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குதிரைகளும் பறக்கும் என்ற சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சட்டத்தரணி பதுளை சேனாதிராஜா அவர்களின் 'குதிரைகளும் பறக்கும்' என்ற கன்னிச் சிறுகதைத் தொகுதி 127 பக்கங்களில் 12 சிறுகதைகளை உள்ளடக்கி கொடகே பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

குதிரைகளும் பறக்கும், குறியீடுகள், நிலா இல்லாத பௌர்ணமிகள், கோணல் சித்திரங்கள், அட்டைகள், முற்றுப்புள்ளி, சலனம், கனவுகளுக்கு விடுமுறை, இன்னொரு ஹிரோஷிமா, இட்லரின் இடைவேளை, பிளெக் மெஜிக், நகர்வு ஆகிய 12 கதைகள் இதில் காணப்படுகின்றன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் கற்பனைகள் கலக்காதபடி மிகத் தத்ரூபமாக எழுதப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டும், அவர்களின் வறுமை நிலையை புடம்போட்டுக் காட்டக் கூடியதாகவும் இச்சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


குதிரைகளும் பறக்கும் என்ற முதல் கதை தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகளை தலை நகரங்களில் வீட்டு வேலைக்கு விடும் விடயம் பற்றிப் பேசுகிறது. அதில் கார்மேகம் என்பவனுடைய மகள் கோமதி அவள் வேலை செய்யும் வீட்டிலுள்ள தங்க நகையை திருடிவிட்டதாக அந்த வீட்டு எஜமானி குற்றம் சுமத்துகின்றாள். ஏழைகள் என்பதால் எதையும் பேசி மனதைப் புண்ணாக்கும் எஜமானர்களின் சுயரூபம் தெளிவாக கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

'ஓ பச்சக் கொழந்தயா இவ? பச்சக் கொழந்தக்கி ஒரிஜினல் நகைய எடுத்து ஒழிச்சு வச்சிக்கிட்டு கொண்டு போக தெரயுமா?' என்ற வீட்டு எஜமானி கேட்கும் கேள்வியில் எத்தனை இளக்காரம் இருக்கிறது என்பதை அறிய முடியும்.

'அம்மா.. ஒங்க கதைய நிப்பாட்டுங்க. நாங்க ஏழைகள்தான். எவனையும் ஏமாத்தி பொழப்ப நடத்தல. முடிஞ்ச மட்டும் நேர்மையாக இருக்கோம். பசி பட்டினியா இருந்தாலும் எங்கயும் நாம ஓடிப் போகல' என்று கார்மேகம் சொல்வதிலருந்து கோமதியினதும், கார்மேகத்தினதும் மனது எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

கதை இறுதியில் தனது கணவரிடம் கொடுத்திருந்ததையும், அதை மறந்துவிட்டுத்தான் கோமதியை சந்தேகப்பட்டாள் என்றும் கதாசிரியர் உண்மையை வெளிக்காட்டுகின்றார்.

அட்டைகள் என்ற சிறுகதையானது களுத்தறை மாவட்டத்தின் மத்துகம டவுனுக்கு அருகேயுள்ள கிராமப்பற பாடசாலையின் அவலத்தை மிகச் சரியாக சுட்டிக்காட்டுகிறதெனலாம். ஆப்தீனும், இமாமும் காரில் பிரயாணத்தை மேற்கொள்கின்றனர்.

வழியில் ஒரு மூதாட்டியிடம் விசாரித்ததும் இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டும் என மூதாட்டி சொல்கிறார். சற்று நேரத்தில் ஒரு கடைக்காரரிடம் நியுபோட் வத்த எங்கே இருக்கிறது? என்று கேட்டபோது அவன் இடத்தை கூறிவிட்டு ஒரு கட்டத்துக்கு மேல் காரில் பயணிக்க முடியாது என்று சொல்கிறான்.

கொஞ்சதூரம் காரில் செல்லும்போது பாதையில் நிரம்பியிருந்த நீர்நிலைகளிலும், குழிகளிலும் காரின் சில்லுகள் தடம் புரள்கின்றன. இமாம் ஆப்தீனிடம், 'இதுக்கு மேல போனா கார பஞ்சிகாவத்தக்கி குடுக்கோணும்' என்று சொல்லியிருக்கும் பதில் நகைச் சுவையாக இருப்பதுடன் பாதையின் சீரற்ற தன்மையையும் கண்முன் நிறுத்துகிறது.

அதுபோல ஆப்தீன், இமாம் ஆகியோரின் பிரதேச வழக்கில் அமைந்த பேச்சை நூலாசிரியர் அழகாக சொல்லியிருக்கும் பாங்கு அவர் பல்வேறுபட்ட மக்களுடனும் பழகுகின்றார் என்பதைக் காட்டி நிற்கிறது.

மழை நீர் மண்ணை பிரட்டிக் கொண்டிக்கும் நிலையை பால்தேத்தண்ணி போன்ற நிறம் என்ற உவமானத்துடன் சொல்லியிருப்பது ரசிப்புக்குரியது.

சப்பாத்துக்களில் நீர், சகதி எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு இருவரும் ஒருவாறு மலையுச்சியை அடைகின்றனர். அப்போது சாரம், பத்திக் சட்டை அணிந்து விரைவாக வரும் ஒருவரிடம் 'ஸ்கூல் எங்க இருக்கி?' எனக் கேட்டதும் அவர் இடத்தைக் காட்டிவிட்டு ஏன் என்று கேட்கின்றார். ஆப்தீனுக்கு அவரது கேள்வி வியப்பாக இருக்க பதிக் சட்டைக்காரர் அதற்கான விளக்கத்தை தானே சொல்கிறார்.அதாவது மழைக்காலம் என்றபடியால் அட்டைகள் நிறைய வருகின்றன. ஆதலால் ஸ்கூல் முடப்பட்டுள்ளது என்றதோடு அவசரமாக விடைபெற்றுக்கொள்கின்றார். இமாமுக்கும், ஆப்தீனுக்கும் பெரிய அதிர்ச்சி. அங்கே சிறியதொரு மாரியம்மன் கோவிலும், சில மனிதர்களும் காணப்படுகின்றனர். அவர்களிடம் பாடசாலையின் நிலை பற்றி விசாரித்தபோது அவர்கள் இப்பாடசாலை குறித்த தமது அதிருப்தியை வெளியிடுகின்றனர். கல்வி கந்தோருகள், அரசியல் வாதிகள் என்று சொன்னாலும் இதற்கொரு தீர்வில்லை எனவும், அதிபர் விரும்பிய நேரம் பாடசாலை மூடம்படும் என்றும் ஊர்வாசிகள் கூறுகின்றனர். அதிபரின் வீடு எங்கே என ஆப்தீன் கேட்டதற்கு தூரத்தில் காணப்பட்ட கெசட், சீடி போன்றவற்றை விற்கும் கடையை அதிபர் நடத்துவதாகவும், பாடசாலை பையன்களை உதவியாக வைத்துள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

என்ன அதிசயம். பத்திக் சட்டை போட்டவரை காட்டி 'ஐயா அந்தா போறாரு. ஸ்கூல் பிரின்சிபலு' என்று சொல்கின்றனர். இவற்றையெல்லாம் கண்காணித்துவிட்டு ஆப்தீன் சென்று ஒரு கிழமையில் அதிபரை தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யபட்டுள்ளதாக 'மேல் மாகான கல்வி அதிகாரி ஆப்தீன்' என கையெழுத்திட்டு அதிபருக்கு கடிதம் அனுப்புகிறார். விசாரணையின் போது அதிபர் பை நிறைய ரம்புட்டான் கொண்டு வந்து ஆப்தீனுக்குக் கொடுக்கப்போய் அதன் காரணமாக நிரந்தர சேவை நிறுத்தம் பெற்றதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அட்டைகள் ஒரு மனிதனின் இரத்தத்தை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதே போலத்தான் இந்த அதிபரைப் போன்ற சில அட்டைகளும் மாணவர்களின் நல்ல எதிர்காலத்தை உறிஞ்சி விடுகின்றன. அதிபருக்கு கிடைத்த தண்டனையானது பாடசாலைகளில் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு ஒரு சாட்டையடியாகவும். பாடமாகவும் அமைந்துள்ளது. அதிபர்கள் பொறுப்பின்றி இவ்வாறு நடந்து கொள்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைகின்றது. சமூகத்தில் இன்று அநீதமாக நடக்கும் இது போன்ற விடயங்களை கதாசிரியர் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

இட்லரின் இடைவேளை என்ற கதை சமூகத்தினர் நன்கு அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதொரு விடயம் பற்றிப் பேச முனைகிறது. முத்து என்பவனே இந்தக் கதையில் வரும் இட்லர் ஆவான். இட்லர் எத்தனைப் பேரின் வாழ்வை சிதைத்தவன் என்பதை வரலாறுகள் இயம்பி நிற்கின்றன.
முத்து என்பவன் மலையக சமுதாயத்தில் உலாவும் ஒரு விஷக்கிருமி. என்னவென்றால் மலையகத்தில் வாழும் குடும்பத்தில் உள்ள சிறுமியர்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் தொழில் அவனுடையது. பொய், புரட்டல்களைக் கூறி ஆசை வார்த்தைகளைக் காட்டி நகர்ப் புறங்களில் உள்ள வீடுகளுக்கு கொண்டுபோய் விடுவான். எனினும் அதன் பிறகு அந்த வீடுகளில் சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களைக் கூட அந்த வீட்டு எஜமானிடம் இருந்து காசு பெற்றுவிட்டால் அதனை மறைத்துவிடும் பேர்வழி அவன். அப்படிப்பட்டதொரு கொள்கை உடைய அவன் தனது மகளை உயர்தரம் வரை படிக்க வைக்கின்றமை கதைப் போக்கின் வளர்ச்சிக் கட்டமாகும். எனினும் ஒருநாள் அவன் எதிர்பாராத விதமாக மகளின் உபதேசத்துக்கு ஆளாகின்றான். மகளும், மனைவியும் இந்த இழிதொழிலை விட்டுவிடுமாறு கெஞ்சுகின்றனர். அதன் காரணமாக கொஞ்ச காலத்துக்கு இந்த தொழிலை விட்டுவிட்டு பிறகு தொடரலாம் என்று முத்து எண்ணுகிறான். இதைத்தான் இட்லரின் இடைவேளை என்ற கதை சொல்லி நிற்கிறது.

இப்படியாக பல உண்மை நிகழ்வுகளை வாசர்கள் அறியும் பொருட்டும், விழிப்புணர்வூட்டும் வகையிலும் சிறுகதைகளாக எழுதியுள்ள சேனாதிராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். எதிர்காலத்தில் இன்னும் பல படைப்புக்களைத் தந்து வெற்றி பெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - குதிரைகளும் பறக்கும்
நூலாசிரியர் - பதுளை சேனாதிராஜா
ஈமெயில் - gsenathy06@gmail.com
வெளியீடு - கொடகே பதிப்பகம்
விலை - 350 ரூபாய்

47. ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விசித்திரமான மனித மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் மனிதனின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்தது. மந்திர தந்திரங்களால் அதற்கு தீர்வு காணப்போய் மாட்டிக் கொண்ட வரலாறுகளும் இதற்குச் சான்று. ஒரு உளவியலாளரின் ஆலோசனைகள் இதற்கு புறம்பானவை. அவை பெரும்பாலும் மனிதனின் ஆழ் மனதை சம்பந்தப்படுத்தி நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்து வைத்தியம் செய்வதால் அந்த வைத்தியம் சாத்தியப்பாடானதாக அமைகின்றது.

நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களால் அத்தகையதொரு உளவியலாளரைப் பற்றிய ஒரு புத்தகம் அண்மையில் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. ஒரு ஈரு நெஞ்சனின் உளவியல் உலா என்ற தலைப்பிட்டு அல்ஹாஜ் யு.எல்.எம். நௌபர் அவர்களைப் பற்றியே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

உளவியலாளர் ஆன்மீகவாதியாகவும், இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர் மேற்கொள்ளும் வைத்தியங்கள் அளப்பரிய சாதனைகளை தொட்டு விடுவதும் உண்மை. அந்த அடிப்படையில் நௌபர் அவர்களும் தனக்கு அல்லாஹ் கொடுத்த மன வலிமையின் பிரகாரம் பலருக்கு தன்னால் இயன்ற அளப்பரிய சேவைகளைச் செய்து வருகின்றார்.

நௌபர் அவர்களின் உளவியல் சம்பந்தமான முழு விபரங்களும் இந்தத் தொகுதியல் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அவரது வைத்தியத்தின் மூலம் குணமாகியவர்களின் கருத்துக்களும் இந்தத் தொகுதியில் உள்வாங்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பு எனலாம்.

சிந்தனை வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்தூல் 550 பக்கங்களை உள்ளடக்கி உளவியல் துறை சார்ந்த மேற்படிப்புகளில் நௌபர் அவர்கள் பெற்ற சான்றிதழ்களும் சான்றாதாரமாக இதில் அச்சாகியிருக்கின்றதுடன் முக்கியமான புகைப்படங்களும் இதில் காணப்படுகின்றன.

ஷஉளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனிதனின் மன செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் பற்றி ஆய்வு செய்யும் ஓர் இயலாகும். இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளோரை உளவியலாளர்கள் என அழைக்கிறோம். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்சானிகள் என அழைக்கப்படுவர்| (பக்கம் 54) என உளவியலாளர்கள் பற்றியும், உலகில் தலை சிறந்த உளவியல் அறிஞர்கள்; பற்றியும் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் தனது பரந்துபட்ட தேடல்களை எமக்கு வழங்கியிருக்கின்றார். எனவே அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஆளுமைகள் பற்றி அலசுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.

நௌபர் அவர்கள் தனது பேணுதலான இறை பக்தியின் மூலமும், தன்னுடைய உளவியல் ஆற்றல்களை வளர்த்துக்கொண்டவர். சின்ன வயதிலிருந்தே பிரார்த்தனை மூலம் அல்hஹ்விடம் எதனையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. எந்தளவுக்கென்றால் தான் சிறுவனாக இருந்தபோது முதல் தவணையில் அவர் வகுப்பில் இரண்டாவது நிலை பெறுகிறார். அடுத்த தவணையில் முதல் நிலை பெற வேண்டும் என நினைப்பது சர்வ சாதாரணமான விடயம். ஆனால் இதில் பொதிந்துள்ள ஆச்சரியம் என்வென்றால் அவர் தனக்கு இன்ன இன்ன பாடங்களில் இத்தனை புள்ளிகள் வர வேண்டும், சராசரி நிலைப் புள்ளி இத்தனைதான் இருக்க வேண்டும் என்று கேட்டு பிரார்த்தித்தார். என்ன ஆச்சரியம் அடுத்த தவணையில் தான் கேட்ட அதே புள்ளிகள் அச்சு அசலாக அதே அளவில் வந்திருந்ததை இறைவன் அருள் இல்லாமல் வேறென்ன என்பது?

சிலபொழுதுகளில் அவர் காணும் கனவுகள் உண்மையாகவே நிகழ்ந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் அவரது உள்ளத்தில் தானாகவே உதித்திருக்கின்றன. அவை பற்றிய விடயங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. கௌரவ ரணில் அவர்கள் பிரதமராகி இரண்டு வருடங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து விடும், சுனாமிப் பேரலை பற்றிய எதிர்வு கூறல் போன்றவற்றை நௌபர் அவர்கள் முன்கூட்டியே கூறி இருக்கின்றார். அவை நடந்து முடிந்த விடயம் என்பதும் நாமறிந்ததே. அத்துடன் கர்ப்ப கால உபாதை, முள்ளந்தண்டு பாதிப்பு, தெளிவற்ற கண்பார்வை, பித்தப்பைக் கல், இதயத்தில் துளை, வயிற்றுப் புண் இன்னும் பல நோய்கள் என்று வந்தவர்களுக்கு துஆ பிரார்த்தனை மூலம் சிகிச்சையளித்து குணமாக்கிய அதிசய ஆன்மீக சக்தி நௌபர் அவர்களிடம் இருக்கின்றது.

இலங்கையில் நமது இஸ்லாமிய சமூகத்தில் பக்தியை மாத்திரம் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்டு, இல்லாதவர்களுக்கு உதவி வரும் நௌபர் அவர்களை ஈருநெஞ்சன் என புன்னியாமீன் அவர்கள் விளித்திருப்பது சாலப் பொருத்தம். நௌபர் அவர்களைப் பற்றி அறியத் தந்த கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களையும், பிறர் நலனையே தன்னலனாகக் கொண்டு வாழ்ந்து வரும் மகான் அல்ஹாஜ் நௌபர் அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று பிரார்திக்கிறேன்!!!

நூலின் பெயர் - ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா
நூலாசிரியர் - கலாபூஷணம் புன்னியாமீன்
தொலைபேசி - 0812493749
வெளியீடு - சிந்தனை வட்டம்
விலை - 880 ரூபாய்