Tuesday, February 4, 2014

52. முள்மலர்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

முள்மலர்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 


முள்மலர்கள் என்ற பெயரில் இனியவன் இஸாருத்தீனின் இரண்டாவது கவிதைத் தொகுதி 138 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே மழை நதி கடல் என்ற தனது கன்னிக் கவிதை நூலை வெளியிட்டுள்ளார். முள்மலர்கள் கவிதைத் தொகுதியில் 33 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு நல்ல கவிஞனோடு கை குலுக்குகிறேன் என்ற தலைப்பில் தனது வாழ்த்துரையை புதுக் கவிதைகளின் தாத்தா, மு. மேத்தா அவர்கள்   பின்வருமாறு முன்வைத்துள்ளார். 

''இலங்கைக் கவிஞர் இனியவன் இஸாறுதீன் தன் இதயத்தை திறந்து காட்டியிருக்கிறார். உயிர்த் துடிப்பாய் உணர்ச்சிப் பூச்சரமாய் உள்ளத்தின் வெள்ளப் பெருக்காய் இவரது கவிதைகள் காட்சியளிக்கின்றன. சொற்களின் சூரத்தனமும் இதில் இல்லை. கவித்துவத்தின் கஞ்சத்தனமும் இதில் இல்லை. யாப்பின் அதிகாரமும் இதில் இல்லை. புதுமையின் அகங்காரமும் இதில் இல்லை. அனுபவக் களஞ்சியமாக அறிவின் நதியோட்டமாக விளங்கும் ஒரு நல்ல கவிஞனோடு கைகுலுக்குகின்றேன். ஒரு நல்ல மனிதனை என் இதயத்துள் குடியமர்த்துகின்றேன். கவிதை பல பேரிடம் பொய்யாக இருக்கிறது. இவரிடமோ மெய்யாக இருக்கிறது.''

கவிஞர் வேதாந்தி என்று அழைக்கப்படும் சேகு இஸ்ஸதீன் அவர்கள் தனது விதந்துரையில் நம்பச் சொல்லுகிறேன் என்ற தலைப்பிட்டு, `கொக்குப் பறக்கும் - புறா பறக்கும் - குருவி பறக்கும் - குயில் பறக்கும் - நக்குப் பொறுக்கிகளும் பறப்பர். நான் ஏன் பறப்பேன்? என்று மார்தட்டி தனது எழுதுகோலில் ஈட்டி முனைகளைச் சொருகி இனியவன் இலாருத்தீன் முள் மலராய் மாறி முதுகெலும்புகளை நிமிர்த்தி வைக்கிறார்' என்கிறார்.

சமூக உணர்வினால் பாதிக்கப்பட்ட கவிஞர் என்ற தலைப்பிட்டு தனது அணிந்துரையை முன்வைத்துள்ளார் தென் கிழக்கு பல்கலைக் கழக மொழித் துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ். அவர் தனதுரையில் 'கிழக்கிலங்கை கவிவளம் நிரம்பிய பிரதேசம் வீட்டிலும், வெளியிலும், வயலிலும், வாய்க்கால் வழியிலும் மக்கள் கவி பாடிக் களிக்கும் பிரதேசம். இம்மண்ணின் மக்களுக்கு கவி ஒரு வரம். இந்தத் தொடர்ச்சி செந்தமிழ்க் கவிதையிலும் அவர்களுள் பலரை வல்லவராக்கியுள்ளது. அவ்வகையில் அட்டாளைச்சேனையில் பலருக்கும் அறிமுகமானவர் இனியவன் இஸாருத்தீன் எனும் கவிஞர். முள் மலர்கள் தொகுதி மூலம் முற்றிலும் சமூக விமர்சனக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்' என்கிறார்.

உரிமையைத் தாருங்கள் (பக்கம் 39) என்ற கவிதையானது யதார்த்த வாழ்வில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்றது. முஸ்லிம்ளுக்கு எதிராக இடம்பெறுகின்ற நடத்தைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இக்கவிதையானது, எந்தப் பிரச்சனை வந்தாலும் அல்லாஹ்வை நாம் வணங்குவதை யாராலும் தடுக்க முடியாத ஈமான் (நம்பிக்கை) எமக்கிருக்கிறது என்பதை ஆழமாக எடுத்தியம்புகின்றது.

நாங்கள் தொழும் மஸ்ஜித்
நாங்கள் ஓதும் வேதம்
நாங்கள் அணியும் ஆடை
நாங்கள் உண்ணும் ஆகுமான உணவு
எல்லாவற்றையும் எங்களுக்கு எதிராய்
இகசியமாகவும் பரகசியமாகவும் சிதைக்கலாம்

ஆனால் தடுக்க முடியுமா உங்களால்?
அல்லாஹ்விடம் நாங்கள் 
பணிவதையும் கேட்பதையும் தியாகிப்பதையும்...

கரிப்புகை வாழ்வு (பக்கம் 46) என்ற கவிதையில் வாழ்க்கை பற்றிய தத்துவத்தை அழகாக வடித்திருக்கின்றார் கவிஞர். மகிழ்ச்சியை விட வாழ்க்கையில் துயரங்களே தலைவிரித்தாடுகின்றன என்பதை சிமிணி விளக்குக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. வறுமையில் வாடும்போது அணைக்க வேண்டிய கைகள் ஆணி அறைகின்றன என்று துயருருவதை கீழுள்ள வரிகள் எடுத்தியம்புகின்றன.

சிமிணி உடைந்த விளக்குபோல நம் வாழ்வு
வெளிச்சத்தை விட
கரிப்புகையே அதிகம்

ஆரத்தழுவி அணைக்க வேண்டிய கைகள்
ஆணி அறைகின்றன என்னில்
இல்லாமையால் நான்
தனிமையிலும் வெறுமையிலும் தவிக்கும் போது

இன்றைய உலகை இயக்க வைப்பதில் முக்கிய பங்கு கணனிக்குரியது. உலகத்தின் சுழற்சி கணனியில் தங்கியிருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை. கணனியின் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுகையில் கணனியில் நான்கு மதங்களைப் பற்றிய தகவல்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் மனிதர்களைப் போல் மதத்துக்காக முரண்படுவதில்லை என்ற உண்மையை அழகாக கணினி (பக்கம் 59) என்ற கவிதை உணர்த்துகின்றது.

குர்ஆன் பைபில் பகவத்கீதை
எல்லாவற்றையும் உனக்குள்
நீ வைத்திருந்தாலும்
அவை ஒன்றை ஒன்று மதவெறியில்
அடித்துக்கொள்வதுமில்லை
அழித்துக்கொள்வதுமில்லை

நீ ஒரு விமானம்
கடவுச் சீட்டில்லாமலும்
பயணச் சீட்டில்லாமலும்
எல்லோரும் உனக்குள்ளேயே
உலகம் சுற்றிப் பார்க்கலாம்

சின்ன அரும்புகளும் சில கேள்விகளும் (பக்கம் 63) என்ற கவிதை யுத்தம் பற்றிப் பேசுகின்றது. சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் யுத்தம் பற்றிய கணிப்பு எப்படியிருக்கும் என்பதை கீழுள்ள வரிகள் விளக்கம் தருகின்றன. மக்களுக்கு எந்தவித நலன்களுமே இல்லாத ஒரு போராட்டத்தால் அவர்களின் இயல்பு வாழக்கை பாதிக்கபட்டு, விலைவாசிகள் அதிகரிக்கப்பட்டு வாழக்கைக் கோலமே மாறிவிட்டது. யுத்தத்துக்காக கோடிக் கணக்கில் பணம் செலவாகின. அந்த யுத்தம் பற்றிய சிறுவர்களின் கேள்வி வரிகள் இதோ.. 

இதுவரை 
உங்கள் போராயுதத்தால்
உரிமையையா வென்றீர்கள்?
உயிர்களைத்தானே 
கொன்றீர்கள்

கோடி கோடியாய்க் கொட்டிக் கிடந்த
மக்கள் பணத்தில்
கொலையாயுதங்கள்தானே
கொணர்ந்தீர்கள்...
அதில் என்ன எங்களுக்கு
கல்விக்கூடமா திறந்தீர்கள்?

இறுதிவலி (பக்கம் 102) என்ற கவிதையில் சிறுபான்மைச் சமூகம் அனுபவிக்கின்ற கொடுமைகள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு காலத்துக்கும் ஏதாவது ஒரு சிறுபான்மை சமூகம் சின்னா பின்னமாக்கப்படுவதை கவிதையின் கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றன.

இதுவரை
மதங்கொண்ட வேட்டைப் பற்களால்
சுவைக்கப்பட்ட மனிதம்
சக்கையாக்கப்பட்டு சிதைந்தது
சிறுபாண்மைச் சமூகம்

கானல்நீராகிப் போன காதல் பற்றி வெள்ளைக் காகிதம் (பக்கம் 110) என்ற கவிதை கூறி நிற்கின்றது. தடயங்கள் மட்டும் இருக்கின்ற ஒரு காதல் வலி இக்கவிதையில் மிக ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. தன் கனத்துப்போன மனசைப் பற்றிச் சிந்திக்காமல் ஊராரின் வாய்வார்த்தைகளைப் பற்றி சிந்தித்து காதலை இல்லாமலாக்கிக்கொண்ட காதலிக்கு, காதலன் எழுதும் வரிகளாக இவை காணப்படுகின்றன. 

ஒரு நாள்
பக்கத்து வீட்டாரின்
பார்வைக்குப் பயந்து
நீ
என் விழிகளை விட்டே
விரண்டோடி விட்டாய்

சிரிப்பதற்குக் கூட
சிலருடைய சம்மதம்
வேண்டும் உனக்கு

முள்மலர்கள் என்ற இத்தொகுதியில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் அரசியல் சார்ந்த விடயங்களையும், சமூகம் சார்ந்த சிந்தனைகளையும் கொண்டுள்ளது. ஒரு கவிஞன் சமூகம் பற்றிப் பேசாவிட்டால் அவன் கவிஞனாக இருக்கவே முடியாது. அந்த வகையில் தன் தேசத்தவருக்காக குரல் கொடுக்கும் கவிஞர் இஸாறுதீனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - முள்மலர்கள்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - இனியவன் இஸாறுதீன்
தொலைபேசி - 0672278404
மின்னஞ்சல் - isarudeen@gmail.com
விலை - 400 ரூபாய்

51. விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


இலக்கியம் என்பது கற்பனை ஆற்றலையும், சிறந்த சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். அதில் கவிதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் என பல வடிவங்கள் காணப்படுகின்றன. கவிதை என்பது சொல்ல வந்த விடயத்தை சொற்ப வரிகளுக்குள் உள்ளடக்கி வெளிப்படுத்துவதாகும். சிறுகதை என்பது சொல்ல வந்த விடயத்தை தெளிவாக குறிப்பிட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு வெளிப்படுத்துவதாகும். அல்லது கதாசிரியரே கதை சொல்லியாக இருந்தும் சொல்ல முடியும்.

செல்வி சஹீலாவின் விதி வரைந்த பாதை என்ற சிறுகதைத் தொகுதி 67 பக்கங்களில் 10 சிறுகதைகளை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்துள்ளது. விதி வரைந்த பாதை, கலங்காதே கண்மணி, உன்னோடு வாழாவிட்டால், கருவோடு கருகிய தாலி, நிம்மதியாகவே வாழ்ந்திருப்பேன், பாவம் இந்தப் பாவை இவள், கறுப்பு ஜுன்,
தீயில் கருகிய மொட்டு, மனதைத் திறந்த மடல், அமாவாசை பௌர்ணமியாகிறது போன்ற
தலைப்பில் அமைந்த சிறுகதைகளே அவையாகும். புதிய எழுத்தாளர்கள் வரிசையில்
தற்போது இவரும் இணைந்து கொள்கின்றார். அட்டாளைச் சேனையைப்
பிறப்பிடமாகவும், கிண்ணியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தர்கா நகர்
தேசிய கல்வியியற் கல்லூரியின் முதன்மொழி தமிழ் கட்டுறு ஆசிரியப்
பயிலுனராகப் பயிற்சி பெற்று, தற்போது கிண்ணியா மத்திய கல்லூரியில்
ஆசிரியராகக் கடமையாற்றுபவர்.

கிண்ணியா தி/அல்ஹிறா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான இவர் தனது பாடசாலைக் காலங்களில் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளிலும், தமிழ் மொழித் தினப் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனது கலை இலக்கிய
ஆற்றலை நன்கு வெளிப்படுத்தி பல பரிசில்களையும், சான்றிதழ்களையும் தனதாக்கிக் கொண்டவர். இவற்றுக்கு மேலாக கல்வியியற் கல்லூரி உள்ளகப் பயிற்சிக் காலத்தில்  கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறுகதை எழுத்தாளராக அறியப்படும் இவர் தினகரன் மற்றும் மித்திரன் வார வெளியீடுகளில் தொடராக எழுதி வந்துள்ளார்.

ஹனீபா சஹீலா தனதுரையில் ''வேர்கள் மண்ணுக்குள் வாழ்வது போல, நெஞ்சுக்குள் வலிகள் இருக்கும் வரை கலைப் படைப்புக்கள் வெளிவரத் துடிக்கும். சிறு சிறு
வலிகள் வரிகளை வரையத் தூண்டுகின்றன. சிறகுகளை விறகுகளாக்க முனைவோருக்கு முன் விறகுகளையும் சிறகுகளாக்கத் துடிக்கிறது என் மனது. சிறு வயதில்
வாசிப்பில் கொண்ட ஈடுபாடே என் விரல்களுக்குள் பேனையைச் சிக்க வைத்தது. சிக்கிய பேனா சிந்திய சில்லறைகளை சேமிக்கும் முயற்சியே இது'' என்கிறார்.

வெலிப்பன்னை ரஹ்மானிய்யா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் தேசமாணி
அல்ஹாஜ் ஏ.டப்ளியூ.எம். அஸார் அவர்கள் தனது ஆசியுரையில் பின்வருமாறு
குறிப்பிடுகின்றார். ''சமூகப் பிராணியான மனிதனின் சிந்தனைகளை ஒரு குறுகிய
வட்டத்திற்குள் மட்டும் நிறுத்திவிடாமல் பரந்தளவில் பயன்படுத்துவது
இன்றைய கால கட்டத்தில் குறைவே. ஆனால், இளம் எழுத்தாளரான இவர் சமூகத்தோடு
நெருக்கமாகி, சமூகத்தில் நடக்கும் உண்மைகளைத் தேடி சிறுகதைகளாகப்
புனைந்து, அதை நூலுருப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதே. மே/மது/
வெலிப்பன்னை ரஹ்மானிய்யா மகா வித்தியாலயத்தில் கட்டுறுப் பயிற்சிக்காக
வந்த இவர், கற்பித்தல் நடவடிக்கையோடு  மட்டும் நின்றுவிடாமல் சிறுகதை,
கவிதை போன்ற எழுத்தாக்கங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்புவதோடு அவற்றைத்
தொகுத்து நூலுருப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்.''

அகம் சார்ந்த அழகான கதைகளுடன், சமூகம் சார்ந்த கதைகளும் இத்தொகுதியில்
உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஒரு ஆரம்ப எழுத்தாளருக்குரிய
தன்மைகளைவிட்டும் தூரமாகி பல படைப்புக்களைப் படைத்தவர் போன்று அவர்
எழுதும் விதம் வாசகரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளச் செய்கின்றது. அவர்
இடைக்கிடை பயன்படுத்துகின்ற கவி வரிகளும், பழமொழிகளும் கதையின்
சுவாரஷ்யத்தை அதிகரிக்கின்றது.

முதல் சிறுகதையான விதி வரைந்த பாதை (பக்கம் 09) என்ற கதை, காதலைப் பற்றி
அழகாக பேசியிருக்கின்றது. காதலன் காதலை மறந்து போனதும், அவனது நண்பன் ஒரு
சகோதரனாய் இருந்து ஆறுதல் சொல்கின்றான். அந்த ஆறுதலில் சகோதரத்துவமும்,
நட்பும் மிக அழகாக காட்டப்பட்டிருக்கின்றது. இறுதியில் அந்தப் பெண் ஒரு
வைத்தியரைத் திருமணம் முடிக்கின்றாள். அவளது முன்னைய காதலன் காலத்தின்
கோலத்தால்  விபத்துக்குள்ளாகி, ஒரு காலையும் இழந்துவிடுகின்றான். ஒரு
நல்ல பெண்ணை இழந்துவிட்டதால் அவனது வாழ்க்கை விதி வரைந்த பாதை வழியே
செல்கின்றது.

கலங்காதே கண்மணி (பக்கம் 19) என்ற சிறுகதையும் தனது கருவாக காதலையே
கொண்டிருக்கின்றது. அண்ணால் ஏமாற்றப்ட்ட ஒரு பெண்ணுக்கு அவனது தம்பி
வாழ்வு கொடுப்பதாக கதையோட்டம் காணப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில்
பலரும் காதலை ஒரு பொழுதுபோக்காகவே கொண்டிருக்கின்றார்கள்.

உன்னோடு வாழாவிட்டால் (பக்கம் 24) என்ற சிறுகதை, ஆழமான அன்பை
வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. தனது தோழியினூடாக காதலைச்
சொல்கிறாள் சஜி. ஆனால் பர்ஸாத் அவளது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அவனது
கல்யாணமும் நிச்சயமான பிறகு சஜி தனது தூய காதலை நிரூபிப்பதற்காக
தண்டவாளத்தில் இறந்து கிடந்தாள். தனிமையாக கிடந்த அவளது கையை மாத்திரம்
கண்டதும் பர்ஸாத் அந்த கை மீது முத்தமிடுகின்றான். அந்த சம்பவம் வாசகரின்
உள்ளத்தை அப்படியே கசியச் செய்துவிடுகின்றது.

கருவோடு கருகிய தாலி (பக்கம் 29) என்ற சிறுகதை இல்லாமல் போன நமது
கலாசாரத்தை பறைசாற்றுகின்றது. அதாவது ஒருவரின் மனது என்ன பாடுபடுகிறது
என்பதைப் புரிந்துகொள்ளாமல் பலர் அடுத்தவரை புண்படுத்துகின்றனர். அவர்களை
கண்டவாறு பேசி இதயத்தை துளைத்து அதில் அலாதி இன்பம் அடைகின்றனர். அதிலும்
குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் என்றால் அதனைச் சொல்லவும் தேவையில்லை.
அவ்வாறானதொரு சமூகப் பிரச்சனையை கதாசிரியர் இந்தக் கதையில்
வெளிப்படுத்தியிருக்கின்றார். காலப்போக்கில் அவள் கருத்தரிக்கின்றாள்.
அந்தச் சந்தோஷமான செய்தியை கணவனுக்கு தொலைபேசி வழியாக சொல்கின்றாள்.
அவளைப் பார்க்க ஆவலுடன் வரும் கணவன் விபத்துக்குள்ளாகிறான். அந்தச்
செய்தியை அறிந்த அவள் மயங்கி கீழே வீழுந்து வயிறு அடிபடுகின்றது. அதனால்
கருவும் கலைகின்றது. தற்போது இருவரும் இன்றி அவள் படும் துயரை இந்தக்
கதையிலே துல்லியமாக பதிய வைத்திருக்கின்றார்.

நூலாசிரியர் ஹனீபா சஹீலாவின் முயற்சிகளுக்கு கைகொடுத்து உதவ வேண்டியது
ஏனைய எழுத்தாளர்களின் கடமையாகும். இளம் வயதிலேயே பல திறமைகளைக் கொண்டுள்ள நூலாசிரியர் சஹீலாவை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - விதி வரைந்த பாதை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஹனீபா சஹீலா
விலை - 200 ரூபாய்