Wednesday, February 24, 2016

95. இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை

இவன்தான் மனிதன் சிறுகதைத் தொகுதி பற்றிய பார்வை

சூசை எட்வேட் என்பவர் நாடறிந்த எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளன. பத்திரிகைகளில் அவரது படைப்புக்கள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு வருவதும் அவரது எழுத்துத் திறமையை வெளிக் காட்டுகின்றது.

கருத்துக் கலசம் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம் மிக அருமையானது. திருக்குறள் இரண்டு அடிகளில் எழுதப்பட்டிருப்பது போல அன்றாட வாழ்வில் நடக்கும் விடயங்களை மையப்படுத்து இரு அடிகளில் அவர் கூறும் நற்சிந்தனைகள் மிகப் பிரபலமானவை.

அஸ்ரா பிரிண்டர்ஸ் மூலம் 216 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவன்தான் மனிதன் என்ற அவரது சிறுகதைத் தொகுதியில் பதினைந்து சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

மகுடத் தலைப்பான முதல் கதை (பக்கம் 11) அருமை நாயகம் என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தனித்துவ வாழ்க்கை குறித்தும் பேசியிருக்கின்றது. பெயருக்கு ஏற்றாற்போன்ற நல்ல குணங்களை உடைய மனிதர் அவர். நேரத்துக்கு வேலை என்ற கட்டுப்பாடான மனிதர். கண் விழித்தவுடனேயே சாமி படத்தருகில் போய் நின்று ஆண்டவா எல்லோருக்கும் நல்லறிவைக் கொடு என்று பிரார்த்திப்பார். நல்லறிவு கிடைத்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும் என்பது அவரது நம்பிக்கை. அப்புறமாக அருகில் இருக்கும் சிறிய அறைக்குப் போய் வயதான தன் தாய் தந்தையை முதல் காட்சியாக கண்டால்தான் அன்றைய பொழுது இனியதாக அமையும் என்பது அவரது மனிதநேயத்தை குறித்து நிற்கின்றது. இன்று தாய் தகப்பனைப் பாரமாகக் கருதும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறிருக்க தாய் தந்தை மீது அதிகளவு பரிவும் பாசமும் காட்டும் அருமை நாயகத்தின் செயல் சந்தோசமாகயிருக்கின்றது.

ஐந்தரை மணிக்கு தனது பிள்ளைகள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்ற அவர், வீட்டு வேலைகளைச் செய்வதிலும் அதிகமாக மனைவிக்கு ஒத்தாசை புரிவார். அதுபோல மாதச் சஞ்சிகைகளுக்கு சந்தா செலுத்தி அவற்றை வாசிக்கும் அவரின் பழக்கத்துக்கு, மனைவியிடமிருந்து எந்த ஆதரவும் இருக்கவில்லை. இது எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சின்ன வயது யுவதி அவருடன் தனியாகப் பேச வேண்டும் என்றும், அவருக்கு மாத்திரமே தன் பிறந்த நாள் விருந்து தருவதாகவும் கூறி ஒரு பார்சலை கொடுக்கின்றாள். ஆனால் அவர் அந்த கடிதத்தை கிழித்து வெள்ளைப் பூக்களை சமாதியின் மேல் வைத்தபோல அவளிடம் கொடுக்கின்றார். தீய எண்ணங்களுக்கு அடிமையாகாத மனிதரான அருமை நாயகத்தைப் போல் ஒரு கணவர் அமையும் பெண்கள் பாக்கியம் செய்தவர்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

எது மனித சாதி (பக்கம் 42) என்ற சிறுகதையில் சாதி வெறி தத்துவார்த்தமாக முன்வைக்கப்படுகின்றது. கண்மணி - கந்தசாமி தம்பதியர் வசிக்கும் அந்தப் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாக நிலவுகின்றது. குறிப்பிட்ட தூரத்துக்கு சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்ற நிலை கண்மணிக்கு.

அங்கிருந்த வெள்ளாம் பகுதியில் வசிக்கும் பசுபதியின் வீட்டில் கிணறு இருக்கின்றது. அதில் தூய நீர். அதிலிருந்து குடத்துக்கு நீர் நிரப்பி வர கண்மணி சென்றிருந்த சமயம் பசுபதிக்கு புத்தி தடுமாறுகின்றது. கண்மணியை வளைத்துப் போடும் நோக்கில் அவரே கிணற்றிலிருந்து நீரை வார்த்துக் கொடுக்கின்றார். வலிய குரக்கன் வேண்டுமா என்கிறார். கண்மணி தன்னிடம் காசு இல்லை என்றபோதும் பிறகு தருமாறு சொல்லிவிட்டு குரக்கனை உரப்பையில் போடுவதற்கு உதவி செய்கின்றார். கண்மணி இரு கையையும் மேல் உயர்த்தி தாங்கிப் பிடிக்க முயன்றபோது அவர் கண்மணியைத் தொடுகின்றார். அதிர்ச்சியடைந்த கண்மணி அவரைத் தள்ளிவிட்டு உரப்பையையும் வீசிவிட்டுச் செல்கின்றாள்.

கந்தசாமிக்கும் கண்மணிக்கும் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. காரணம் கண்மணி வீட்டில் ஒரு விசேடம் நடக்கும்போது வெள்ளாம் பகுதியிலிருந்து வெகு நேரம் கடந்து ஆட்கள் வருகின்றார்கள். அவர்களுக்கு சிற்றுண்டிகள், பலகாரங்கள், தேநீர் என்பவை வழங்கப்பட்டும் அவர்கள் அவற்றை மறுத்து, கடையிலிருந்து சோடா வாங்கி வரச் சொல்கின்றார்கள். சோடா கம்பனியில் வேலை செய்பவர்கள் என்ன சாதி என்று யாருக்குத் தெரியும்? பனங்கட்டி வேண்டும் போது பனங்கட்டி தயாரிப்பவர் யார் என்று புரியாமலா இருக்கும்? என்று கதாசிரியர் கேட்டு நிற்கும் கேள்வி நியாயமானது. அது மாத்திரமன்றி கந்தசாமிக்கு இன்னொரு கசப்பான சம்பவமும் நடக்கிறது. முருகேசு என்பவரின் தலைமயிர் வழிப்பதற்காக கந்தசாமி, அவர் வீட்டுக்குச் செல்கின்றார். அவர் மலசல கூடத்துக்கு அருகாமையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொள்கின்றார். கந்தசாமி உயரமானவன் என்பதால் அவனுக்கு குனிந்து குனிந்து வேலை செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் முருகேசர் எண்ணிப் பார்க்கவில்லை. திடீரென வான மண்டலம் அதிர்ந்தது. கூக்குரல்கள் கேட்டன. முருகேசர் ஓடிப்போய் பதுங்குக் குழிக்குள் பதுங்கிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தவரும் பதுங்குக் குழிக்குள் தஞ்சம் புகுகின்றனர். ஆனால் ஒருவர் கூட கந்தசாமியைக் கூப்பிடவில்லை. இதிலிருந்து ஒரு ஆபத்தில் கூட சாதியத்தைத் தான் பார்க்கின்றனரே தவிர மனிதத்தை அல்ல உன்பது புலனாகின்றது.

தாழ்வு மனச்சிக்கலால்... (பக்கம் 82) என்ற கதை கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் சிறு சிறு பிணக்குகள் பற்றி பேசியிருக்கின்றது. சத்தியமூர்த்தி ஒரு முறை கமலா என்பவளின் கடைக்குப் போய் நீண்ட நேரம் அவளுடன் கதை;ததை அவரது மனைவி மனோண்மணியிடம் வந்து சிலர் முறையிடுகின்றனர். அன்றிலிருந்து சத்தியமூர்த்தி எதைச் செய்தாலும் அவரை மாலாவுடன் இணைத்து திட்டிவிடுவாள் மனோண்மணி. மனோண்மணியின் இயல்புகள் சத்தியமூர்த்திக்கு ஒத்துப்போவதைவிட கமலாவின் இயல்புகள் ஒத்துப்போயின. எனவே அவர் சாதாரணமாகத்தான் கமலாவோடு கதைத்துவிட்டு வருவார். ஆனால் மனோண்மணிக்கு இது அடியோடு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மனோண்மணி பிறந்த வீட்டுக்குச் சென்றுவிடுகின்றாள்.

மனோண்மணியின் சகோதரியின் கணவன் வீட்டு வளவிலேயே பட்டறை போட்டு தன் தொழிலை நடத்தி வருகின்றாள். அவரது உதவிக்கு நான்கு அடியாட்கள் வேறு. சகோதரி ஆசிரியை. அவர்களின் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமானது. ஆத்மார்த்தமானது என்று மனோண்மணி எண்ணி கவலைப்படுவாள். அவளுக்கு அமைந்த வாழ்க்கை போல தனக்கும் நல்ல புருஷன் அமைந்திருக்கக் கூடாதா என்று அவள் ஏங்குவாள். சில நாட்களின் பின்னர்தான் மனோண்மணிக்கு தன் சகோதரியின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள புரிந்தன. அவளது கணவன் சந்தேகக் குணம் பிடித்தவன். அவள் பாடசாலைவிட்டு ஒருநாள் நேரம் பிந்தி வீட்டுக்கு வந்தவுடன் அவன் போட்ட கூச்சலும் அதற்கு அவள் மறுத்துப் பேசுவதும் கேட்டது. பாடசாலையில் உள்ள இன்னொரு சக ஆசிரியருடன் மனோண்மணியின் சகோதரியை தொடர்புபடுத்தி அவன் பேசி விடுகின்றான். பின்பு அவளை அடி அடியென்று அடிக்கின்றான். இவை மனோண்மணிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனது கணவன் சாதாரணமாக ஒரு பெண்ணுடன் பேசியதைத்தான், தான் தப்பாக நினைத்துள்ளேன் என்ற உண்மை மனோண்மணிக்குப் புரிவதாக கதை நிறைவுசெய்யப்பட்டிருக்கின்றது.

சின்னச் சின்ன சிக்கல்கள் ஒரு குடும்பத்தையே அழித்துவிடும். நம்மைச் சூழ நடக்கின்ற பிரச்சினைகள் பற்றி தெரிந்து கொள்கின்றபோது அவற்றிலிருந்து நாம் எவ்வாறு நம்மை காத்துக்கொள்ள முடியும் என்று அறிய முடிகின்றது. அவ்வாறான பிரச்சினைகளை தனது கதைக்குள் கருவாக்கி அவற்றிற்கான தீர்வையும் தரும் வலிமை கதாசிரியர் சூசை எட்வேட்டுக்கு இருக்கின்றது. அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இவன் தான் மனிதன்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - சூசை எட்வேட்
வெளியீடு - அஸ்ரா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

94. ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை

ஒரே பூமியில் நானும் நீயும் கவிதைத் தொகுதி மீதான பார்வை

1979 இல் தினகரன் பத்திரிகையில் உலக சாதனை எனும் கவிதையை எழுதியதையடுத்து இன்று வரை கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியத் துறைகளில் அதிக முனைப்புடன் செயற்படுபட்டு வருபவர் எழுத்தாளர் மாவனெல்லை உ. நிசார் அவர்கள். 18 நூல்களை இதுவரை வெளியிட்டிருக்கும் இவர் ஒரே பூமியில் நானும் நீயும் என்ற இந்த நூலை தனது 19 ஆவது நூலாக தற்போது வெளியிட்டிருக்கின்றார்.

கவிதைகளைக் காதலிப்பவர்களுக்கு இலக்கியத்தின் மறு வடிவங்களையும் ரசிக்கும் திறன் இயல்பிலேயே வாய்த்து விடுகின்றது. தீவிரமாக ஏனைய துறைகளில் ஈடுபட முடியாவிட்டாலும் கூட, இலக்கியத்தின் பரிணாமங்களை ஆராயும் மனம் இயல்பாகவே தோன்றி விடுகின்றது.

கவிதை, சிறுகதை, நாவல் என்ற தளத்தில் ஈடுபட்டவர்களில் பலர் சிறுவர்களுக்கான இலக்கியங்களை முன்வைக்கும்போது திக்குமுக்காடுவது கண்கூடு. ஆனால் உ. நிசார் அவர்களுக்கு அவை கைவந்த கலையாகிவிட்டது. அவர் வெளியிட்டுள்ள 19 நூல்களில் 13 நூல்கள் சிறுவர்களுக்கானவை.

ஒரே பூமியில் நானும் நீயும் என்ற கவிதைத் தொகுதி பானு வெளியீடாக 68 பக்கங்களில் 49 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது.

செடியில் பூத்திருக்கும் அழகிய பூவை ரசிக்கும் யாருக்கும் செடியைத் தாங்கும் வேர் பற்றிய அக்கறை இருப்பதில்லை. மலரின் வாசத்தை, மென்மையை வர்ணிப்பவர்கள் வேரின் தியாகத்தை வர்ணிப்பதில்லை. அது மனிதனின் இயல்பு. அதை ஓவியம் (பக்கம் 03) என்ற கவிதையினூடா கவிஞர் உ. நிசார் சொல்லியிருக்கும் விதம் அலாதியானது.

வானவில்லின்
வர்ணங்களிலெல்லாம்
வந்து குவியும்
ஓவியமொன்று அது

.. வரிசை வரிசையாக
வருவோர் போவோர்
வர்ணிக்கிறார்கள் ஓவியத்தை
அதை வரைந்த
கலைஞனை மறந்துவிட்டு!

நாம் என்றும் பெரியவர்கள் (பக்கம் 14) என்ற கவிதை சம காலத்துக்கு வெகுவாகப் பொருந்தும் கவிதையாக அமைந்திருக்கின்றது. சிறுவர்கள், வயோதிபர்கள் என்று பேதமில்லாமல் கற்பழிக்கப்படும் ஒரு புதுமையான யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதர்கள் மனிதத்தையெல்லாம் தொலைத்துவிட்டு இருட்டு வாழ்க்கைக்குள் தம்மை அடைத்துக் கொண்டுள்ளார்கள். இரக்க குணம் என்பது துளியளவுமின்றி பிஞ்சுகளைக் கூட முகர்ந்து பார்த்துவிட்டு கொன்றுவிட்டு தப்பிவிடுகின்றார்கள். வீடு, பாடசாலை, உறவினர் வீடுகள் என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் பிள்ளைகளை அனுமதித்துவிட்டு அவர்களை முறையாகக் கண்கானிக்காமல் பின்னாளில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால் அழுது துடிக்கிறார்கள். நம்மில் எத்தனைப் பேர் நம் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அலசி ஆராய்கிறோம்? அவர்களிடம் பிறர் தவறாக நடக்கின்றார்களா என்பதை எத்தனைப் பேர் பரிசீலனை செய்திருக்கின்றோம்.

ஒரு பிள்ளை வீட்டைவிட்டு காலையில் சென்றால் மாலை வீடு திரும்பும் வரை பல பிரச்சினைகளை எதிர்நோக்கலாம். அவற்றை வீட்டில் சொல்ல பயந்து கொண்டு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கலாம். அவற்றை அறிந்து அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் பூக்காத மொட்டுக்கள் கூட கருகிப் போய்விடும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை கீழுள்ள கவிஞரின் வரிகள் நிதர்சனமாக்குகின்றன.

எட்டிப் பார்த்து உட்புகும்
கட்டவிழ்த்து விடப்பட்ட
விகாரப் பேய்களின்
குரூர காம சேஷ்டைகளினால்
குஞ்சு வீடுகள் உடைந்து
கூட்டாஞ் சோறு சிதறி
பொம்மைகளின்
கழுத்துக்கள் திருகப்படும்

பெண்கள் இறைவனின் அற்புத படைப்புக்கள். பெண்ணின் அன்புக்கு எந்த ஆணும் அடிமையாகிவிடுவான். இயற்கையிலே பெண்ணுக்கு மிருதுவான குணமும், உடலும் அமையப் பெற்றிருக்கின்றது. அந்த அழகைப் பற்றி பாடாத கவிஞர்களே இல்லை. கவிஞர் உ. நிசார் பெண் (பக்கம் 22) என்ற கவிதையில் பெண்களைப் பற்றி பின்வருமாறு வர்ணிக்கின்றார்.

மலைகளின் உறுதி
அலைகளின் சலனம்
பூமியின் பொறுமை
தாமரையின் புனிதம்
ரோஜாவின் மென்மை
வைரத்தின் கடினம்....

இவற்றை சிறிது சிறிதாக எடுத்து
அமுதை விடத்தை இட்டு
குழைத்துக் குழைத்து
பக்குவமாக
ஊட்டி வளர்க்கப்பட்ட
அற்புதப் படைப்பு

வெற்றி என்பது இலகுவில் கிடைக்கக் கூடியதல்ல. இலகுவில் கிடைத்துவிட்டால் அது வெற்றியும் அல்ல. ஆனால் வெற்றியை அடைந்து கொள்வதற்கு நாம் மிகவும் பாடுபட வேண்டியிருக்கின்றது. போராட்டத்துக்குபின் தான் நல்ல வெகுமதி காத்திருக்கின்றது. சிறு சிறு தோல்விகளை நம்மை நாமே புடம்போட்டுக்கொள்ள இறைவனால் அமைத்துத் தரப்பட்ட சந்தர்ப்பங்கள். வெற்றி (பக்கம் 43) என்ற கவிதை வரிகள் வெற்றின் தத்துவத்தை அழகாக கூறி நிற்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

சுடராகி மின்மினியின்
உடல் ஒளிருது – தன்
மடல் விரிய வலி கொண்டு
மலர் பூக்குது

வீழ்ந்தாலும் அருவிகள்
எழுந்தோடுது – சகதி
தாழ்ந்தாலும் தாமரைகள்
தரம் பேணுது

இத்தகைய அழகிய அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி இலக்கியப் பணியாற்றி வரும் கவிஞர் உ. நிசார் இலங்கை இலக்கிய வரலாற்றில் நற்பெயரைப் பதித்துக்கொண்டவர். இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - ஒரே பூமியில் நானும் நீயும்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - உ. நிசார்
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை - 300 ரூபாய்

93. வண்ண வண்ணப் பூக்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

வண்ண வண்ணப் பூக்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் இலக்கியங்களுக்கான பங்களிப்புக்கள் படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தாலும், பொதுவாக நோக்குமிடத்து ஏனையை துறைகளுடன் ஒப்பிடுகையில் சிறுவர் இலக்கியத் துறை இன்னும் வளர்ச்சியடைய வேண்டுமென்பது நிதர்சனமாகும்.


சிறுவர்கள் ஆர்வமாக நூலை வாசிக்கத் தக்கதாகவும், குழந்தை உலகத்துக்குள் வாசகர்களை அழைத்துச் செல்லும் விதமாகவும் அவற்றை எழுதுவதில் பல யதார்த்த சிக்கல்கள் காணப்படுகின்றன. இலக்கிய ஜாம்பவானகள் என்று அறியப்படும் பலரால் சிறுவர் இலக்கியத் துறையில் பிரவேசித்து தனது பங்களிப்புக்களைச் செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. விதிவிலக்காக சிலர் பல தடைகளைத் தாண்டி சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாகவும், அவர்களது வாசிப்பைத் தூண்டும் விதமாகவும் சிறுவர் படைப்புக்கள் எழுதுவோரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

அந்த வகையில் கவிஞர் ஷெல்லிதாசன் அவர்கள் ஈழத்துக் கவிஞர்களுள் முக்கியமான ஒருவர். செம்மாதுளம் பூ, நகர வீதிகளில் நதிப் பிரவாகம் ஆகிய காத்திரமான கவிதைத் தொகுதிகளை அவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். மூன்றாவது தொகுதியாக வண்ண வண்ணப் பூக்கள் என்ற தலைப்பில் அமைந்த தனது சிறுவர் இலக்கிய நூலை இலக்கிய உலகுக்குத் தந்திருக்கின்றார்.

இந்நூல் மகுடம் வெளியீடாக 42 பக்கங்களில் வண்ணச் சித்திரங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கின்றது. பேராசிரியர் செ. யோகராசா, செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன், மைக்கல் கொலின் போன்றவர்கள் நூல் பற்றிய உரைகளை எழுதியுள்ளனர்.

மாண்பு தரும் கல்வி, பலூன் சிறுவன், தூங்காத சின்ன முயல், எல்லாமே நீதான் அம்மா, பாற் கஞ்சி, வண்ண வண்ணப் பூக்கள், சின்னக் கண்மணி, பள்ளிப் பருவம், ஈடில்லா என் அன்னை, விடிகாலை விழிப்பு, அன்பான அண்ணன் தம்பி, சுகந்தரும் சுத்தம், வீட்டில் ஒரு தோட்டம், கைத் தொலைபேசி, கரணம் போடும் குரங்குக் குட்டி, மகத்துவமானது வாசிப்பு, தாய்மொழிக் கல்வி, ஆடுவோம் பள்ளுப் பாடுவோம், சுவை மாங்கனிகள், அம்மாவின் ஆசை, பச்சைக் கிளியும் பள்ளிச் சிறுவனும், நல்லோராய் நாம், தன்னை நம்பும் சின்னக் குருவி, கைகொடுக்கும் கற்பகதகடு, மதிக்கக் கற்று மதிப்பை உனதாக்கு, பாரதியின் உறவுக் குயில், ஓடி விளையாடு தம்பி, முக்குளித்து முத்தெடுப்போம், கள்ள நரி குள்ள நரி, மாற்றத் திறன் மகிமை, தங்கத் தாத்தா அழைக்கிறார், வளரிளம் பருவம், அம்மாவுக்கு உதவலாம் வா, சின்னத் தம்பியின் செல்லக் குறும்பு ஆகிய தலைப்புக்களில் 34 சிறுவர் பாடல்கள் நூலில் இடம்பிடித்துள்ளன.

கல்விச் செல்லவமானது பிறரால் திருடப்பட முடியாதது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு காத்திருக்கும். இன்றைய யுகத்தில் கல்வி இல்லாமல் யாராலும் காலூன்றியிருக்க முடியாது. கல்வியின் பெருமை சொல்லி மாளாதது. கல்வி கற்காதவர்கள் பிற்காலத்தில் அதற்காக எவ்வளவு வருத்தமடைந்தாலும் பயனிருக்காது. அத்தகைய கல்வியின் சிறப்பை மாண்பு தரும் கல்வி  (பக்கம் 01) என்ற பாடல் குறிப்பிட்டிருக்கின்றது.

அறிவுக் கண்ணைத் திறக்கும்
ஆற்றல் தன்னை வளர்க்கும்
பெருமை அனைத்தும் கொடுக்கும்
பெரியோராக உயர்த்தும்

உண்மை பொய்யை உணர்த்தும்
உலகை அறிய உதவும்
விண்ணை அளக்க துணியும்
வியக்கும் செயல்க ளாற்றும்

பலூன் சிறுவன் (பக்கம் 03) என்ற கவிதை சிறுவன் தன் கதையைக் கூறும் பாடலாக அமைந்திருக்கின்றது. குடிகாரராக இருக்கும் அவனது அப்பாவால் அந்த குடும்பம் படும் கஷ்டம் பாடலில் தொனிக்கிறது.

குடித்துவிட்டு எங்களப்பா
ஊரைச் சுற்றுறார்
குடிக்கக் காசு வேணுமென்று
என்னை அடிக்கிறார்

அம்மா பாவம் அப்பாவிடம்
அடியை வாங்கியே
அகலாத நோயில் வீழ்ந்து
பாயிற் கிடக்கிறாள்

பள்ளிப் பருவம் (பக்கம் 12) என்ற பாடல் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டியதொன்றாகும். அன்றாடம் கற்பவை மனதில் பதிய வேண்டுமென்றால் அவற்றை அதே தினம் இரவில் மீட்டிப் பார்க்க வேண்டும். படிக்காமல் சோம்பேறியாக இருந்துவிட்டு பரீட்சைக் காலத்தில் படிக்க நினைப்பது முட்டாள் தனமாகும். இவற்றைக் கீழுள்ள வரிகளில் கவிஞர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பள்ளி சென்று நீ நித்தம்
படிக்கும் புதிய பாடங்களை
அன்று இரவே நீ மீட்டால்
அதுவே உனக்கு கைகொடுக்கும்

பரீட்சை வந்த பின்னாலே
படிப்போம் என்று உறங்காதே
நன்றாய் படிக்க நினைத்தாலும்
ஒன்றும் புரியாது அவ்வேளை

இன்று தொலைக் காட்சித் தொடர்கள் எல்லோரையும் ஆக்கிரமித்திருக்கின்றன. பல பெண்கள் அதற்கு அடிமையாகியிருக்கின்றார்கள். கணவனை, குழந்தையை, வீட்டு வேலைகளை கவனிப்பதற்கு அவர்களுக்கு விளம்பர இடைவேளைகள்தான் கிடைக்கின்றன. பிள்ளைகளுக்கான தாய்ப் பாசம் அரிதாகின்றது. அந்நியோன்னியம் குறைகின்றது. ஈடில்லா என் அன்னை (பக்கம் 13) என்ற பாடலில் வரும் அம்மா, தாய்க் குலத்துக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறாள்.

ஆயா ஊட்ட அவளிருந்து
அழகாய் தொடர்கள் பார்த்ததில்லை
அப்பா வுடனே ஊர் சுற்றி
அழவும் தனியே விட்டதில்லை

விரும்பும் பண்டம் அத்தனையும்
வீட்டிலேயே அவள் செய்வாள்
எதையும் தெருவில் வாங்கியுண்ண
எங்க ளம்மா விட்டதில்லை

சிறுவர் பாடல்களுக்கு கனதி சேர்க்கும் விதமாக இந்நூலில் பொருத்தமான சித்திரங்கள் காணப்படுகின்றன. குழந்தைகள் விரும்பிப் படிக்க இது முக்கிய காரணியாக அமையும். ஓசை நயத்துடன் சிறுவர் பாடல்கள் அமைந்திருப்பது நூலின் கூடுதல் சிறப்பு. ஷெல்லிதாசனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - வண்ண வண்ணப் பூக்கள்
நூல் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
வெளியீடு - மகுடம்
விலை - 200 ரூபாய்

92. சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதி மீதான பார்வை

சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதி மீதான பார்வை

இலங்கையைப் பொருத்தளவில் கவிதைகளுக்கான பங்களிப்பு கணிசமான முறையில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இளங்கவிஞர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளுடனும், வீச்சுடனும் குறிப்பிடத்தக்க சிலர் தோன்றுகின்றார்கள். புதியவர்களின் வருகை இலக்கியத்துக்கு அணி சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்களே இலக்கிய உலகில் தொடர்ந்தும் காத்திரமான பணிகளைப் புரிந்து நிலைத்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் புலவூரான் ரிஷி இளங் கவிஞர்களுள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர். சிறகு தரித்த சிலுவைகள் என்ற அவரது கன்னிக் கவிதைத் தொகுதி செந்தணல் வெளியீட்டகத்தால் 120 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கின்றது.

எழுத்தாளர் மைதிலி தயாபரன் அவர்கள் இந்த நூலுக்கு வழங்கிய அணிந்துரையில் கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

கவிதைகள் இதுதான் என்று ஒரு வரையறையை யாருமே செய்துவிடாது இருப்பதால் யாரும் அதைக் கையாண்டு உருவாக்க முடியும் என்ற எண்ணத்தை இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ளனர். இதனால் இலக்கியத்திற்குள் நுழைவதற்கு ஒரு திறவுகோலாகவே கவிதை என்ற வடிவத்தைப் பாவிக்கின்றனர். எமது தலைமுறையினர் அடுத்தடுத்து சந்தித்த பொருளாதார, அரசியல், சமுதாய நெருக்கடிகள் இளம் சமுதாயத்தினரை வெகுண்டெழச் செய்து தங்களது தாக்கங்களை உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகின்றன. அவற்றால் உந்தபப்பட்ட எமது இளந் தலைமுறையினர் தங்களுடைய ஆதங்கங்களை வெளிப்படுத்துவதற்கு முக்கியமாகக் கவிதை வடிவத்தைப் பாவிக்க முனைகின்றனர். 

இனி புலவூரான் ரிஷியின் சிறகு தரித்த சிலுவைகள் கவிதைத் தொகுதியிலுள்ள 37 கவிதைகளில் சில கவிதைகளைப் பார்ப்போம்.

கனவு மெய்ப்பட வேண்டும் (பக்கம் 15) என்ற கவிதை உலகம் எப்படி மாறுவதை கவிஞரின் மனம் விரும்புகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. ஒற்றுமை இதில் வலியுறுத்தப்படுகின்றது. ஒற்றுமை என்ற ஒன்று இல்லாததால்தான் இன்று உலகத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன.

மசூதியும் கோயிலும்
கூடிக்குலவுகின்றது
பௌத்தம் கிறிஸ்துவை
பற்றுகின்றது

.......
சீதனக் கொடுமை இன்றி
மங்கைக்கெல்லாம் மணமாயிற்று

காதலர்களின் தற்கொலை
அறவே இல்லை
அணுவுலைகளின் கொதிப்பு
அழிந்தே போயிற்று

பணத்துக்குள் பாசம் (பக்கம் 33) என்ற கவிதை வெளிநாட்டில் வசிப்பவர்களின் இதயத் தவிப்பை, மனக் குமறலை, ஆதங்கங்களை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. தாய் தந்தையை, சொந்த நாட்டை, மனைவி மக்களை விட்டுப் பிரிந்து பாலைவன பூமியிலும், குளிர் வாட்டும் தேசங்களிலும் வசித்து தம் குடும்பத்தின் நினைவுகளுடன் காலத்தைக் கடத்தும் நம்மில் பலர் தொலைபேசியினூடாகத் தான் தமது வாழ்வைக் கொண்டு நடத்துகின்றனர். குறுஞ்செய்திகளும், தொலைபேசி அழைப்புக்களும்தான் அன்பை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஊடகங்களாக அவர்களுக்கு அமைந்துவிட்டன.

சாம பொழுதொன்றில்
அலைகளை கிழித்துக்கொண்டு
தொலைபேசித் திரையில்
வந்து விழுகிறது
குறுஞ்செய்தி

.....
கண்ணீர் விழுந்த 
திரையில் கலங்கல் 
காட்சிக்குள்
இன்னும் சிலதும்

சொப்பனம் (பக்கம் 86) கவிதை காதலை சுமந்திருக்கின்றது. காதல் வயப்பட்ட ஒரு கவிஞனின் நினைவுகள் எவ்வாறிருக்கும் என்பதை இக்கவிதை நிதர்சனப்படுத்துகின்றது.

வாடைக் காற்று 
வண்ணம் தெளிக்க
உன் முகம் பார்த்து 
வெட்கிப் போன செவ்வானம்

உன் வாசத்தை முகர்வதற்காய்
ஈர மண்ணில் ரகசியமாய்
புதைந்து போன நண்டுகள்

பசுமையின் மீட்டல் (பக்கம் 110) என்ற கவிதை கடந்த கால ஞாபகங்களை மீட்டிச் செல்கின்றது. குழந்தைப் பருவத்தில் ஒவ்வொருவக்கும் ஒவ்வொரு விதமான சுவாரஷ்யமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். இன்றுகளில் அவற்றை நினைத்துப் பார்த்தால் பசுமையான நினைவுகளில் நெஞ்சம் நிம்மதியடைகின்றது. தற்காலத்தில் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை முழுவதுமாக சாப்பிட்டிருக்கும் தொலைக்காட்சி, கணிணி, தொலைபேசிகளிலிருந்து சிறுவர்களை மீட்டெடுக்க வேண்டும். குழந்தைப் பருவத்தின் சௌந்தரியத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

சிரட்டையும் ரின்களும் 
அடுக்கிய புளிச்சல் விளையாட்டு
.....
காட்டு மரவள்ளியின் செத்த காயில்
ஈக்கு கொழுவி பள்ளி மேசையில்
சுத்தி விட்ட பம்பரம்

அப்பாவின் தொப்பையில்
சறுக்கிய மகிழ்வு
அம்மாவின் சேலைத் தவிப்பை
சப்பிக்கொண்டே படுத்த இராக்கள்

யதார்த்தமான படைப்புக்கள் வாசகர் மனதில் நிலைத்து விடுகின்றன. கற்பனையான படைப்புக்கள் வாசகனை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. கவிஞனின் சொல்லாடலில்தான் கவிதையின் உயிர் தங்கியிருக்கின்றது. புலவூரான் ரிஷி இன்னுமின்னும் வாசிப்பில் முனைப்புக் காட்டி இன்னும்  பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்.

நூல் - சிறகு தரித்த சிலுவைகள் 
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - புலவூரான் ரிஷி
வெளியீடு - செந்தணல் வெளியீட்டகம்
விலை - 250 ரூபாய்