Sunday, February 8, 2026

161. ஈழத்து முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியர் 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார்

 நினைவு தினம் - 2026.01.16 

(பன்னிரண்டாம் ஆண்டு நினைவுக் கட்டுரை)


ஈழத்து முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியர்

'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கல்வித் துறையிலும் கலை இலக்கியத் துறையிலும் புகழ் பெற்ற திக்கம் சிவயோகமலர் 1950.04.20 இல் சின்னத்தம்பியார் கணேஷ் - சின்னம்மா ஆகியோருக்கு சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்தார். 'திரவி' என்ற செல்லப் பெயர் கொண்டு எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டார். இவர் தரம் ஒன்று தொடக்கம் திக்கம் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், ஆறாம் வகுப்பு முதல் உயர்தர முதலாம் வருடம் வரை பருத்தித்துறை மெதடிஸ்ட் மகளிர் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சேர்ந்து உயர் தரக் கல்வியை முடித்தார். 

கல்லூரிக் காலத்திலேயே இவருக்கு இலக்கியத்தின் மீது அலாதியான ஈடுபாடு காணப்பட்டது. பல்வேறு வகையான இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்று தனது பாடசாலைக்கும், தனது ஊருக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தார். உயர் தரத்தில் சிறப்பாகத் தேறிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கலைத்துறைப் பட்டதாரியானார். பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி அரச பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள அல்வாய் மேற்கு 'திக்கம்' எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், தனது இறுதிக் காலத்தில் கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். 2014.01.16 இல் தனது 64 ஆம் வயதில் காலஞ் சென்றாலும் இவர் பற்றிய நினைவுகளும் அவருடைய இலக்கியப் படைப்புகளும் காலத்தால் அழியாதவை என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

இவருடைய குடும்பமே ஒரு இலக்கியக் குடும்பம். கணவர் எஸ்.ஜே. ஜெயக்குமார் அரச சேவையில் கணக்காளராகவும், உள்ளகக் கணக்காய்வாளராகவும் கடமையாற்றி, ஓய்வு பெற்றுள்ளார். கலாபூஷணம் விருது பெற்ற இவர் நாடறிந்த ஓர் எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார். இவரும் பல படைப்புகளை எழுதி ஊடகங்களில் களப்படுத்தி வந்துள்ளார். அதேபோல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருடைய ஒரே மகன் றுக்மாங்கதனும் இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பல்வேறு வகையான ஆக்கங்களை எழுதி வருகின்றார். ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவருடைய சிறுகதை ஒன்றும் பரிசுக்குரியதாய் தெரிவு செய்யப்பட்டு அந்தச் சிறுகதை, ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட 'செவ்வரத்தை' (2015) என்ற சிறுகதைத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

வாழும் காலத்தில் இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள், 1980களில் கவிதைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வந்துள்ளார். அதன் பின்னரே சிறுகதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பரவலாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், நாடகப் பிரதிகள் போன்ற எக்கச்சக்கமான இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். தான் பிறந்த ஊரை மறவாமல் 'திக்கம்' என்ற அடைமொழியைச் சேர்த்து 'திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார்' என்ற பெயரிலேயே எழுதிய படைப்புகளையும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைககளில் களப்படுத்தி வந்துள்ளார். இவற்றுள் பல ஆக்கங்களுக்காக பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்ற இவர், இலக்கியத் துறையில் கவிஞராக, கதாசிரியராக, நாவலாசிரியராக என்று பல துறைகளிலும் சிறந்த ஆளுமையாளராகப் பரிணமித்தார். குறிப்பாக எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவருடைய முதலாவது சிறுகதை 'மகன் தேடிய வீடு' 1984 ஆம் ஆண்டு சிந்தாமணியில் வெளிவந்துள்ளது. வானம் பொய்க்கவில்லை (1990), பிறந்த மண் (1997), பாவத்தின் சுவடுகள் (1998), அவள் அகதி இல்லை, மயங்குகிறாள் ஒரு மாது, மலர் தாவும் வண்டுகள், சாமேளம், சுயம், மண் வாசம் (2013) போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட இவரது சிறுகதைகளுக்கு பல்வேறு இலக்கிய அமைப்புகள் மூலம் பரிசில்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவருடைய பல ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, ஈழநாடு, வீரகேசரி, முரசொலி, ஈழமுரசு, சுடரொளி, தினமுரசு போன்ற பத்திரிகைகளிலும் லண்டன் தமிழ் உலகம், சிரித்திரன், கற்பகம், அருள் ஊற்று, நமதுதூது, ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக இவர் அமரத்துவமடைந்த பின்னரும் அதாவது 2014 மார்ச் மாதத்திலிருந்து 'காத்திருக்கப் போகிறாள்' என்ற இவருடைய தொடர்கதை ஒளி அரசி சஞ்சிகையில் பிரசுரமாகி வந்துள்ளது.

1999 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதி, 21 அத்தியாயங்களாக வெளிவந்துள்ள 'அடிமையின் காதலி' என்ற சரித்திர நாவல் 2023 ஆம் ஆண்டு இவருடைய கணவரான மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் எஸ்.ஜே. ஜெயக்குமாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 

ஒல்லாந்தரால்  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மலாய் வம்சத்தினரின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு, தனது கற்பனைக் குதிரையை தட்டி ஓடவிட்டு புனையப்பட்ட ஒரு சரித்திர நாவலே, 'அடிமையின் காதலி' என்ற நாவலாகும். இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றான காலியை பின்புலமாகக் கொண்ட கச்சேரியையும் அதை அண்டிய பகுதிகளிலும் நடைபெற்ற சில சம்பவங்களின் திரட்டாகவே இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளோடு இந்தச் சரித்திர நாவல் பின்னிப் பிணைந்துள்ளது. இது வரலாற்று நாவல் என்பதால் போர்த்துக்கீசர், டச்சு ஒல்லாந்தர், மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சில குறிப்புகளும் எமது நாட்டின் முக்கிய இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்லப்பா முதலி, கோமளவல்லி, லீலாவதி ஆகிய பாத்திரங்களோடு ஷூலர், கபொங், மாசோ, செயடங், டொன்பேதுரு, அமங்குராத், மஹதிர், யுரம்பதி ஏனைய இனங்களைச் சேர்ந்த பாத்திரங்களும், விலியற் சோக் பங்களாவும் நாவலில் இடம்பிடித்துள்ளது. 

வரலாற்றுச் சம்பவங்களுடன் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட ஒரு சரித்திர நாவலாகவே இந்நாவல் அமைந்துள்ளது. இந்த வரலாற்று நாவலின் மூலம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற கொடுமைகளை வாசகர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வைக்கிறார் நாவலாசிரியர். அதாவது அக்கால ஆட்சி முறையில் இடம் பெற்ற கொடூரங்கள், சித்திரவதைகள், துன்பங்கள், அடிமைக் கைதிகள் போன்றவற்றை நாவலாசிரியர் கண்முன் கொண்டு வருகின்றார். மொத்தத்தில் அம்பிகாபதி - அமராவதி, அனார்கலி - சலீம், லைலா - மஜ்னு ஆகிய அமர காவியங்கள் போன்றதொரு அருமையான காதல் காவியமாகவே 'அடிமையின் காதலி' என்ற இந்தச் சரித்திர நாவல் அமைந்துள்ளது. இச்சரித்திர வரலாற்று நாவலை எழுதி, இலங்கை இலக்கிய வரலாற்றில் முதல் பெண் சரித்திர நாவலாசிரியராக தனது பெயரைப் பதித்துள்ளார் 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள்.

'அடிமையின் காதலி' என்ற இவருடைய சரித்திர நாவல் பற்றி மூத்த எழுத்தாளர் தமிழ்மணி கலாபூஷணம் மானா மக்கீன் அவர்கள் 'எவரும் எழுதத் தோன்றாதது, எண்ணியும் பார்க்க முடியாதது' என்ற தலைப்பில், இச்சரித்திர நாவல் வடபுல சிவயோகமலர் வழங்கிய வரலாற்றுப் புதினம் என்று குறிப்பிட்டு எழுதிய அருமையானதொரு கட்டுரையை சுடரொளி பத்திரிகையில் பிரசுரித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தச் சரித்திர நாவல் ஈழத்தின் முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியை எழுதிய சாதனை படைத்த சரித்திர நாவல் என்ற வகையில் வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்றும், ஒரு வரலாற்று காலகட்டத்திற்கு உங்களையும் உள்ளீர்க்கும் என்றும் உறுதியாக நம்பலாம்.

சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்களின் நான்கு ஆண்டு கால முயற்சியின் பயனாகவே 'அடிமையின் காதலி' என்ற சரித்திர நாவல் வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. நாவலொன்றை அவ்வளவு இலேசாக எல்லோராலும் எழுதிவிட முடியாது. பெரும்பாலும் அதற்குப் பல வருடங்கள் தேவைப்படலாம். அதுவும் சரித்திர நாவல் ஒன்றை எழுத நிறைய பொறுமையும் தொடர்புடைய வரலாற்று தகவல்கள் மீதான போதிய அறிவும் இருக்க வேண்டும். இது சம்பந்தமாக ஆற்றலும் ஆளுமையும் உள்ள ஒருவராலேயே இதனை இலகுவாக மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில், அதுவும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் வரிசையில் தனித்துவமான ஒரு பெண் ஆளுமையாளராக இலக்கிய உலகில் தனது பெயரை நன்கு பதித்தவர் நாவலாசிரியரான அமரர் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார். 

நாடகத் துறையைப் பொறுத்தவரை 'புலம் பெயரும் பாசங்கள்' என்ற இவருடைய நாடகப் பிரதி முதற் பரிசைப் பெற்றுள்ளது. 'கல்லுக்குள் ஈரம்' என்ற இவருடைய குறு நாவலும் பரிசு பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டமும், திரு. எஸ். திருச்செல்வத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த முரசொலி பத்திரிகையும் இணைந்து நடாத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவருடைய 'தேட்டம்' என்ற குழந்தைப் பாடல்கள் அடங்கிய தொகுதியும் பரிசு பெற்றுள்ளது. அத்துடன் லண்டன் தமிழ் மாத சஞ்சிகையில் 2004 - 2005 காலப்பகுதிகளில் 'மலரும் மொட்டுக்கள்' என்ற என்ற தலைப்பில் 14 அங்கங்களை உள்ளடக்கியதாக தொடர்கதையும் பிரசுரமாகியுள்ளது.

இவருடைய 'சிறுவர் பாடல்கள்' (2023) அடங்கிய நூலொன்றும் வெளிவந்து சிறுவர் படைப்பிலக்கியத் துறையிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடும் ஆற்றலும் இருக்கின்றது என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது. சிறுவர்களது வாசிப்பின் மீது இவருக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த 'சிறுவர் பாடல்கள்' நூல் அமைந்துள்ளது. அழகானதொரு அட்டைப் படம் சிறுவர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த சிறுவர் பாடல் நூலில் கருத்தைக் கவரும் 36 சிறுவர் பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. 

இந்த நூலின் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ள நேர்மை, விரோதி, தகுதி, தகாத நட்பு, வீண் சண்டை, தண்டனை, தனிவழி, தன்னம்பிக்கை, பரீட்சை, அறிவு, புத்தி, ஈயார் தேட்டம், நண்பன், கோபம், பயன், பட்டம், எண்ணும் எழுத்தும், பொம்மை, ரயில் ஓடுது பார், ஏழு நிறங்கள், பலூன்கள், சின்னச் சின்ன பொம்மை, வண்ணப் பூச்சி, யானை, நிலவு, கப்பல், குட்டிப் பூனை, அணில், நல்ல வீடு, சுத்தமான நீர், தாய் சொல்லைத் தட்டாதே, தாலாட்டு, புன்னகை, ஒரு காலம், குட்டி முயல், விடிவெள்ளி போன்ற சிறுவர்களுடன் தொடர்புடைய அவர்களுக்கு விருப்பமான தலைப்புகள் என்னை ஆகர்ஷித்தன. இந்த சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. சிறுவர் பாடல்களில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பயன்படும் வகையிலேயே அமைந்துள்ளன. நல்ல பண்புகளை பாடல்களாக சொல்லிக் கொடுக்கும் போது அவற்றை சிறுவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். அத்துடன் அவர்களது தமிழ் மொழி ஆற்றலும் மேம்படும் என்பது திக்கம் சிவயோகமலரின் திடமான நம்பிக்கை. இவர் சிறுவர்களுக்காக எழுதியுள்ள படைப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒரு பகுதியாகவே 'சிறுவர் பாடல்கள்' என்ற இந்தத் தொகுதி வெளிவந்துள்ளது.

பிரபல மூத்த ஆளுமையாளர் செங்கையாழியான் கலாநிதி க. குணராசா அவர்கள் எழுதியுள்ள 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற ஆய்வு நூலில் 'ஈழத்தின் தரமான பெண் எழுத்தாளர்களில் ஒருவரான இவரது சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன' என்று பாராட்டிப் பதிவு செய்துள்ளார். அத்துடன் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவில் இவர் ஏழாந் தலைமுறைப் படைப்பாளியாக முத்திரையிடப்பட்டுள்ளார்.

 டொமினிக் ஜீவா அவர்களைப் பிரதம ஆசிரியராக கொண்டு அரை நூற்றாண்டு காலமாக வெளிவந்த மல்லிகை சஞ்சிகையின் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் (34 ஆவது ஆண்டு மலர்) அட்டை படத்தில் இவரது படத்தை பிரசுரித்து கௌரவித்துள்ளது. மல்லிகை 43 ஆவது ஆண்டு மலரிலும் (2008 ஜனவரி) இவரது படைப்புகள் பற்றி சிலாகிக்கப்பட்டுள்ளன. ஜீவநதி பெண் ஆளுமைச் சிறப்பிதழிலும் இவர் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவருடைய இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வானது சப்பிரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட மொழித்துறைப் பட்டதாரி மாணவியான மீராவினால் மேற்கொள்ளப்பட்டு சிறப்புப் பட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றதுடன் ஆய்வு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள் மறைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தாலும் அவரது நினைவுகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய கணவர் எஸ்.ஜே. ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த நினைவு நாளில் அவருடைய நினைவுகளை மீட்டி மனநிறைவு அடைவது போல இலக்கிய உலகமும் இத்தகைய ஆற்றலுள்ள ஒரு காத்திரமான பெண் படைப்பாளியை நினைவுகூரும் என்று நம்புகிறேன். மறைந்தாலும், கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் அவரது பரந்துபட்ட படைப்புகள் வழியாக நினைவுளில் வாழும் சரித்திர நாயகியாக 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் இலக்கிய உலகில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்!!!

குறிப்பு:- இவர் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எனது தேடலுக்குக் கிடைத்த சொற்பமாகும். இதனையும் தாண்டி இவரது படைப்புவெளி பரந்துபட்டது. இவர் பற்றியும், இவரது படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நினைவுக் கட்டுரை ஒரு தொடக்கப் புள்ளியாகவே அமையும் என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.


வெலிகம ரிம்ஸா முஹம்மத்