Sunday, July 12, 2026

162. 'என் சுவாசக் காற்றே' சிறுகதை நூல் தொடர்பான ஒரு பார்வை

 'என் சுவாசக் காற்றே' சிறுகதை நூல் தொடர்பான ஒரு பார்வை


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஈழத்தின் வட பகுதியிலுள்ள மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி கமலினி கதிர் அவர்கள். 2002 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றதிலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஆக்க இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு, பல படைப்புகளை வெளியீடு செய்து இலக்கிய உலகின் அவதானத்தைப் பெற்றுள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள இவர், அண்மையில் 'என் சுவாசக் காற்றே' என்ற சிறுகதை நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையையும் நூலின் பின்னட்டைக்கான குறிப்பையும் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும் எழுத்தாளருமான திருமதி பவானி சிவகுமாரன் எழுதியுள்ளார். அவரது உரையில், 'சமூகத்தின் மீது கரிசனையும் பற்றும் நூலாசிரியர் கமலினி கதிரின் கதைகளில் பிரதிபலிக்கின்றன என்பது மட்டுமல்லாமல் வலது கை கொடுப்பது இடது கை அறியாத வகையில் தனிநபராக இவர் செய்கின்ற சமூகப் பணிகள் பல. அவற்றுள் ஏழை மாணவரின் கல்வி, குழாய்க் கிணறு அமைத்தல், மருத்துவ உதவி, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவி என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. இப்படி சமூகத்தை நேசிக்கும் ஒருவரால்தான் நல்ல படைப்புகளையும் சமூகத்திற்குத் தர முடியும் என்று செயலில் காட்டுபவர் இவர். இனிவரும் காலங்களிலும் இவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை ஈழத்து இலக்கியம் எதிர்பார்க்கலாம்' என்று கமலினி கதிர் அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி, இலக்கியப் படைப்புகளை வரவேற்கின்றார்.

நூலாசிரியர் கமலினி கதிர் தனதுரையில் 'புத்தக வாசிப்பு என்ற அற்புதம் உலகை தெரிய வைத்து அடுத்தடுத்த இடம் நோக்கி நகரத் தூண்டும். புத்தக வாசிப்பின் மூலந்தான் காட்சிப்படுத்தல் என்ற அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். பறவைகளோடு எத்தனை வருடம் வாழ்ந்தாலும் பறவையாகிவிட முடியாது. ஆனால் பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள், பதினோராவது புத்தகமாக மாறிவிடுவீர்கள் என்று யாரோ கூறியதாக வாசித்தது ஞாபகத்துக்கு வருகிறது. எழுத்துகள் வலிமையானவை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். எழுத்து ஒருவரை அழ வைக்கவோ, கோபப்பட வைக்கவோ, சிரிக்க வைக்கவோ வேண்டும். அப்போதுதான் எழுத்தாளன் அங்கே வெற்றி பெறுகின்றான். ஆனால் தற்போது வாசிப்பு நலிந்து கொண்டு வருவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இளையவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வாசிப்பு பழக்கத்தினின்றும் விலகி சமூக ஊடகங்கள் வசம் தம்மை ஒப்படைத்து விடுகின்றார்கள்' என்று வாசிப்பின் அருமை பற்றிக் கூறி, இன்றைய உலகில் பலரும் சமூக ஊடகங்களில் மூழ்கி விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமையைக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

'என் சுவாசக் காற்றே' என்ற சிறுகதை நூலின் தலைப்பே வாசகர்களின் மனதில் ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த சிறுகதை நூல் 'அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள், ஓடும் வெண்முகிலாய், கரை தொடா அலைகள், இதுவும் கடந்து போகும், இழந்த காலங்கள், பூங்காற்று திரும்புமா?, அன்பு மகளுக்கு அம்மா எழுதும் மடல், கலைந்து போகும் கோலங்கள், நினைவிலிருந்து வழியும் விழிநீர்த் துளிகள், என் சுவாசக் காற்றே மன்னிப்பாயா?, அனாதையாக்கப்படும் அன்பு, மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள், எந்த நதியில் கரைப்பேன்?, அந்திமாலை, பொன்னாடை, தூறல் நிற்கட்டும்' ஆகிய 16 கதைகளை உள்ளடக்கி, 172 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  இந்த 16 சிறுகதைகளில்  எட்டுக் கதைகள்  புலம் பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்டுள்ளன. அத்துடன் ஈழத்தில் இடம்பெற்ற போர்க்கால நினைவுகளின் பாதிப்புகள் மற்றும் தாயகத்தைப் பிரிந்து வாழும் நினைவுகளின் வலிகள், ஏக்கம், தவிப்பு போன்றவற்றை பிரதிபலிப்பதாகவும் சில கதைகள் எழுதப்பட்டுள்ளன.

இனி இந்த நூலில் இடம்பிடித்துள்ள கதைகளில் ஒரு சில கதைகளை வாசகர்களின் இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

'அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள்' (பக்கம் 09) என்ற கதை, சுவிஸ் நாட்டின் குளிர்ச்சியான இலையுதிர் காலப் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற துவாரகா என்ற பெண்ணின் வாழ்வில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற வகையில் அமைந்துள்ளது. நடுத்தர வயதைக் கடந்து  தனியாக வாழும் துவாரகாவின் அலுவலக நட்பான, சுவிஸ் நாட்டுப் பெண் லியூகா, கால் உடைந்த நிலையில் வேலைக்கு வராமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள்.  லியூகாவைப் பார்க்க அடிக்கடி செல்வது துவாரகாவின் பழக்கமாக இருந்து வந்தது. கமரூன் நாட்டைச் சேர்ந்த அகதியாக சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்த, பதினாறு வயதான பெண் பிள்ளை மியாஞ்சா தன்னைக் கவனித்துப் பார்ப்பதாகவும் அத்துடன் பேர்ண்ணில் வேலை பார்க்கும் மகனும் இடைக்கிடையில் தன்னை வந்து பார்ப்பதாகவும் லியூகா சொல்லியிருப்பது துவாரகாவுக்கு சற்று ஆறுதல் தருவதாக இருக்கிறது. இந்தநிலையில் லியூகாவின் மகன் ஸ்ரிவ் மியாஞ்சாவுடன் பழகி, அவளைத் தாயாக்கிவிட்டு அவனுடைய தகப்பனைப் போலவே மியாஞ்சாவைக் கழற்றிவிட்டான் என்று ஒருநாள் லியூகா, துவாரகாவிடம் கூறுகின்றாள்.

லியூகாவின் சொந்த மகனே மியாஞ்சாவுக்கு துரோகஞ் செய்த போதும், தவறு செய்தவன் தன் மகன் என்றுகூடப் பார்க்காமல் பாதிக்கப்பட்ட மியாஞ்சாவுக்கு ஆதரவாக நிற்கின்றாள் லியூகா. அதாவது மியாஞ்சாவைத் தத்தெடுத்து லியூகாவின் வீடு, சொத்துக்கள் போன்றவற்றை அவளுக்குப் பின்னர் மியாஞ்சாவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிவிட்டாள். லியூகாவின் இந்தத் துணிச்சல் போற்றத்தக்கது. தாய் நாட்டைப் பிரிந்து வறுமையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தவிக்கும் ஒரு யுவதிக்கு, தாய்க்குத் தாய் போல ஆதரவு காட்டும் லியூகாவின் மூலம் கதையின் கனதியை கதாசிரியர் உயர்த்துகின்றார். பணம், அந்தஸ்த்து, சொத்து, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதத்தை நேசிக்க வைக்கும் இந்தச் சிறுகதை வாசகர்களின் மனதில் ஈரம் கசியச் செய்யும் ஒரு சிறந்த கதையாக அமைந்துள்ளது. 

அடுத்து 'ஓடும் வெண்முகிலாய்' (பக்கம் 14) என்ற கதையானது திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர் ஒரு கணவன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் விதத்தை கடிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது, அவர்களை கவனிக்காமல் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார் அந்தக் கணவன். அந்த மன உளைச்சளைத் தாங்க முடியாத மனைவி,  கணவனைப் பிரிந்து சென்று பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய் தனியாக வாழ்கிறாள். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த கணவன் இறுதியில் தன் தவறுகளை உணர்ந்து அவர்களின் அன்புக்காக ஏங்கித் தவிக்கின்றான். கணவன் என்கின்ற கதாபாத்திரத்தின் ஆதங்கம், தவிப்பு போன்றவை இந்தக் கதை முழுவதும் விரவிச் செல்வதைக் காணலாம். ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ கணவன் மனைவிக்கிடையில் காதல் என்ற உணர்வு நூல் போல ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்வது மிகவும் அருமையாக இருக்கின்றது.

'கலைந்து போகும் கோலங்கள்' (பக்கம் 78) என்ற கதையானது கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற விரிசல்களையும், குறிப்பாகப் மனைவியின் மனப்போராட்டங்களையும் பிள்ளைகளின் அசௌகரியமான மன உணர்வுகளையும் மிகவும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. கணவனின் தவறான போக்கைச் சகித்துக்கொள்ள முடியாமல் மனைவி லதா அவனிடமிருந்து தனது இலக்கியா, இலக்கியன் ஆகிய இரண்டு பிள்ளைகளுடன் துணிச்சலாகப் பிரிந்து செல்ல எடுக்கும் முயற்சியை நோக்கி இக்கதை நகர்ந்து செல்கின்றது. இக்காலச் சமூகத்தில் நிலவுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகளையும், அதன் விளைவாகக் குடும்ப அமைப்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் கதாசிரியர் தனது கூர்ந்த அவதானிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மணவாழ்வில் நீடித்திருக்க வேண்டும் என்ற மனைவியின் தவிப்பு ஒருபுறமிருக்க, விருப்பமில்லாத உறவில் தன்னைத் திணித்துக்கொள்ள விரும்பாத நிலை இன்னொரு புறமுமான தவிப்புடன் மனைவி லதாவின் இரட்டை மனப்பாங்கு கதை முழுவதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையின் ஆரம்பத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கணவனைப் பிரிய மறுத்த லதா, ஒரு கட்டத்துக்கு மேல் போலி வாழ்க்கையிலிருந்து விலகி தன் பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காகவே தன் கணவனைப் பிரிய வேண்டும் என்ற தீர்மானத்தோடு எடுக்கும் முடிவே கதையின் முடிவாக அமைகிறது. ஒரு சிலரின்  யதார்த்த வாழ்வைக் கலைந்து போகும் கோலங்களாக உருவகப்படுத்தி, உறவுகளின் நிலையற்ற தன்மையை கதாசிரியர் இந்தக் கதையில் பதிவுசெய்துள்ளார்.

'நினைவிலிருந்து வழியும் விழிநீர்த்துளிகள்' (பக்கம் 87) என்ற கதைக்கு 2024 இல் நடைபெற்ற எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது, பாராட்டுக்கள். இந்தக் கதையின் கருப்பொருள் அருமையாக அமைந்துள்ளது. குடும்பத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்து, தன் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்த தர்சினி என்ற கதாபாத்திரம் கடைசியில் மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றாள் என்பது வாசகரின் மனதில் ஒரு வகையான துயரத்தைத் தந்துவிடுகிறது.

'அந்திமாலை' (பக்கம் 133) என்ற கதை குறு நாவலாக அல்லது நாவலாக விரிக்கக் கூடிய கதைக் கருவைக் கொண்டுள்ளது. வாசகர்களுக்கு இந்தக் கதை மிகவும் நீண்டுவிட்டதே என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, ஒருவகையான சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயம் தோன்றுகின்றது.

'பொன்னாடை' (பக்கம் 149) என்ற கதை புத்தக வெளியீட்டு விழாக்களிலும் ஏனைய சில விழாக்களிலும் ஆளுமையாளர்களை கௌரவிக்க பொன்னாடைகளைப் போர்த்துவதற்குப் பதிலாக பெறுமதியான நல்ல சிறந்த புத்தகங்களை பரிசளிக்கலாம் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது. இந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். ஏனென்றால் அந்த ஒரு நிமிடம் போர்த்தப்படும் பொன்னாடைகள் பிறகு வேறு எதற்காகவும் பயன்படுத்த முடியாமல் வீட்டு அலுமாரிகளிலேயே பத்திரப்படுத்தி வைக்கப்படுகின்றன. எனவே இந்தப் பொன்னாடைக் கலாசாரம் தேவைதானா? என்ற நூலாசிரியரின்  நியாயமான கேள்வி பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது.

பொதுவாக நோக்கும் போது கமலினி கதிரின் எழுத்து நடை எளிமையாக அமைந்துள்ளது. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கின்ற மனிதர்களைப் போன்ற இயல்பான தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த நூலின் சிறப்பு அதன் உணர்ச்சி வெளிப்பாட்டிலேயே தங்கி இருக்கின்றது. சில கதைகள் மனதை நெகிழச் செய்கின்றன. சில கதைகள் சமூகத்தில் நடைபெறுகின்ற உண்மைகளை சிந்திக்க வைக்கின்றன. குறிப்பாக மனித நேயம், குடும்ப உறவுகள், பெண்களின் மனநிலைகள் போன்றவை கதைகளில் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அளவுக்கு அதிகமான வர்ணனைகளும் தேவைக்கு மேலதிகமான விளக்கங்களும் ஒரு சிறுகதையின் கனதித் தன்மையைக் குறைத்துவிடும் என்று கூறி, இனிவரும் சிறுகதைகளை மிகவும் காத்திரமான முறையில் எழுதி, கனதியான சிறுகதைத் தொகுதிகளாக தொடர்ந்தும் வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!


நூல்:- என் சுவாசக் காற்றே

நூல் வகை:- சிறுகதை

நூலாசிரியர்:- கமலினி கதிர்

விலை:- 300 ரூபாய்



நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


Sunday, February 8, 2026

161. ஈழத்து முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியர் 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார்

 நினைவு தினம் - 2026.01.16 

(பன்னிரண்டாம் ஆண்டு நினைவுக் கட்டுரை)


ஈழத்து முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியர்

'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கல்வித் துறையிலும் கலை இலக்கியத் துறையிலும் புகழ் பெற்ற திக்கம் சிவயோகமலர் 1950.04.20 இல் சின்னத்தம்பியார் கணேஷ் - சின்னம்மா ஆகியோருக்கு சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்தார். 'திரவி' என்ற செல்லப் பெயர் கொண்டு எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டார். இவர் தரம் ஒன்று தொடக்கம் திக்கம் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், ஆறாம் வகுப்பு முதல் உயர்தர முதலாம் வருடம் வரை பருத்தித்துறை மெதடிஸ்ட் மகளிர் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். பின்னர் மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சேர்ந்து உயர் தரக் கல்வியை முடித்தார். 

கல்லூரிக் காலத்திலேயே இவருக்கு இலக்கியத்தின் மீது அலாதியான ஈடுபாடு காணப்பட்டது. பல்வேறு வகையான இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்று தனது பாடசாலைக்கும், தனது ஊருக்கும், தனது குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்தார். உயர் தரத்தில் சிறப்பாகத் தேறிய இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கலைத்துறைப் பட்டதாரியானார். பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி அரச பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாணம், வடமராட்சியில் உள்ள அல்வாய் மேற்கு 'திக்கம்' எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், தனது இறுதிக் காலத்தில் கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். 2014.01.16 இல் தனது 64 ஆம் வயதில் காலஞ் சென்றாலும் இவர் பற்றிய நினைவுகளும் அவருடைய இலக்கியப் படைப்புகளும் காலத்தால் அழியாதவை என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.

இவருடைய குடும்பமே ஒரு இலக்கியக் குடும்பம். கணவர் எஸ்.ஜே. ஜெயக்குமார் அரச சேவையில் கணக்காளராகவும், உள்ளகக் கணக்காய்வாளராகவும் கடமையாற்றி, ஓய்வு பெற்றுள்ளார். கலாபூஷணம் விருது பெற்ற இவர் நாடறிந்த ஓர் எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார். இவரும் பல படைப்புகளை எழுதி ஊடகங்களில் களப்படுத்தி வந்துள்ளார். அதேபோல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இவருடைய ஒரே மகன் றுக்மாங்கதனும் இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பல்வேறு வகையான ஆக்கங்களை எழுதி வருகின்றார். ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவருடைய சிறுகதை ஒன்றும் பரிசுக்குரியதாய் தெரிவு செய்யப்பட்டு அந்தச் சிறுகதை, ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினால் தொகுத்து வெளியிடப்பட்ட 'செவ்வரத்தை' (2015) என்ற சிறுகதைத் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

வாழும் காலத்தில் இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள், 1980களில் கவிதைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வந்துள்ளார். அதன் பின்னரே சிறுகதைகளை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பரவலாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், நாடகப் பிரதிகள் போன்ற எக்கச்சக்கமான இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். தான் பிறந்த ஊரை மறவாமல் 'திக்கம்' என்ற அடைமொழியைச் சேர்த்து 'திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார்' என்ற பெயரிலேயே எழுதிய படைப்புகளையும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைககளில் களப்படுத்தி வந்துள்ளார். இவற்றுள் பல ஆக்கங்களுக்காக பரிசில்களையும் பாராட்டுகளையும் பெற்ற இவர், இலக்கியத் துறையில் கவிஞராக, கதாசிரியராக, நாவலாசிரியராக என்று பல துறைகளிலும் சிறந்த ஆளுமையாளராகப் பரிணமித்தார். குறிப்பாக எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவருடைய முதலாவது சிறுகதை 'மகன் தேடிய வீடு' 1984 ஆம் ஆண்டு சிந்தாமணியில் வெளிவந்துள்ளது. வானம் பொய்க்கவில்லை (1990), பிறந்த மண் (1997), பாவத்தின் சுவடுகள் (1998), அவள் அகதி இல்லை, மயங்குகிறாள் ஒரு மாது, மலர் தாவும் வண்டுகள், சாமேளம், சுயம், மண் வாசம் (2013) போன்ற தலைப்புகளில் எழுதப்பட்ட இவரது சிறுகதைகளுக்கு பல்வேறு இலக்கிய அமைப்புகள் மூலம் பரிசில்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவருடைய பல ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, ஈழநாடு, வீரகேசரி, முரசொலி, ஈழமுரசு, சுடரொளி, தினமுரசு போன்ற பத்திரிகைகளிலும் லண்டன் தமிழ் உலகம், சிரித்திரன், கற்பகம், அருள் ஊற்று, நமதுதூது, ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. குறிப்பாக இவர் அமரத்துவமடைந்த பின்னரும் அதாவது 2014 மார்ச் மாதத்திலிருந்து 'காத்திருக்கப் போகிறாள்' என்ற இவருடைய தொடர்கதை ஒளி அரசி சஞ்சிகையில் பிரசுரமாகி வந்துள்ளது.

1999 ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் தொடராக எழுதி, 21 அத்தியாயங்களாக வெளிவந்துள்ள 'அடிமையின் காதலி' என்ற சரித்திர நாவல் 2023 ஆம் ஆண்டு இவருடைய கணவரான மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் எஸ்.ஜே. ஜெயக்குமாரால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 

ஒல்லாந்தரால்  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மலாய் வம்சத்தினரின் சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்டு, தனது கற்பனைக் குதிரையை தட்டி ஓடவிட்டு புனையப்பட்ட ஒரு சரித்திர நாவலே, 'அடிமையின் காதலி' என்ற நாவலாகும். இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றான காலியை பின்புலமாகக் கொண்ட கச்சேரியையும் அதை அண்டிய பகுதிகளிலும் நடைபெற்ற சில சம்பவங்களின் திரட்டாகவே இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளோடு இந்தச் சரித்திர நாவல் பின்னிப் பிணைந்துள்ளது. இது வரலாற்று நாவல் என்பதால் போர்த்துக்கீசர், டச்சு ஒல்லாந்தர், மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் சில குறிப்புகளும் எமது நாட்டின் முக்கிய இனங்களான சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்லப்பா முதலி, கோமளவல்லி, லீலாவதி ஆகிய பாத்திரங்களோடு ஷூலர், கபொங், மாசோ, செயடங், டொன்பேதுரு, அமங்குராத், மஹதிர், யுரம்பதி ஏனைய இனங்களைச் சேர்ந்த பாத்திரங்களும், விலியற் சோக் பங்களாவும் நாவலில் இடம்பிடித்துள்ளது. 

வரலாற்றுச் சம்பவங்களுடன் கற்பனையும் கலந்து எழுதப்பட்ட ஒரு சரித்திர நாவலாகவே இந்நாவல் அமைந்துள்ளது. இந்த வரலாற்று நாவலின் மூலம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்ற கொடுமைகளை வாசகர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிய வைக்கிறார் நாவலாசிரியர். அதாவது அக்கால ஆட்சி முறையில் இடம் பெற்ற கொடூரங்கள், சித்திரவதைகள், துன்பங்கள், அடிமைக் கைதிகள் போன்றவற்றை நாவலாசிரியர் கண்முன் கொண்டு வருகின்றார். மொத்தத்தில் அம்பிகாபதி - அமராவதி, அனார்கலி - சலீம், லைலா - மஜ்னு ஆகிய அமர காவியங்கள் போன்றதொரு அருமையான காதல் காவியமாகவே 'அடிமையின் காதலி' என்ற இந்தச் சரித்திர நாவல் அமைந்துள்ளது. இச்சரித்திர வரலாற்று நாவலை எழுதி, இலங்கை இலக்கிய வரலாற்றில் முதல் பெண் சரித்திர நாவலாசிரியராக தனது பெயரைப் பதித்துள்ளார் 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள்.

'அடிமையின் காதலி' என்ற இவருடைய சரித்திர நாவல் பற்றி மூத்த எழுத்தாளர் தமிழ்மணி கலாபூஷணம் மானா மக்கீன் அவர்கள் 'எவரும் எழுதத் தோன்றாதது, எண்ணியும் பார்க்க முடியாதது' என்ற தலைப்பில், இச்சரித்திர நாவல் வடபுல சிவயோகமலர் வழங்கிய வரலாற்றுப் புதினம் என்று குறிப்பிட்டு எழுதிய அருமையானதொரு கட்டுரையை சுடரொளி பத்திரிகையில் பிரசுரித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். இந்தச் சரித்திர நாவல் ஈழத்தின் முதல் தமிழ் பெண் சரித்திர நாவலாசிரியை எழுதிய சாதனை படைத்த சரித்திர நாவல் என்ற வகையில் வாசகர்களின் வரவேற்பைப் பெறும் என்றும், ஒரு வரலாற்று காலகட்டத்திற்கு உங்களையும் உள்ளீர்க்கும் என்றும் உறுதியாக நம்பலாம்.

சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்களின் நான்கு ஆண்டு கால முயற்சியின் பயனாகவே 'அடிமையின் காதலி' என்ற சரித்திர நாவல் வாசகர்களுக்குக் கிடைத்துள்ளது. நாவலொன்றை அவ்வளவு இலேசாக எல்லோராலும் எழுதிவிட முடியாது. பெரும்பாலும் அதற்குப் பல வருடங்கள் தேவைப்படலாம். அதுவும் சரித்திர நாவல் ஒன்றை எழுத நிறைய பொறுமையும் தொடர்புடைய வரலாற்று தகவல்கள் மீதான போதிய அறிவும் இருக்க வேண்டும். இது சம்பந்தமாக ஆற்றலும் ஆளுமையும் உள்ள ஒருவராலேயே இதனை இலகுவாக மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில், அதுவும் குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் வரிசையில் தனித்துவமான ஒரு பெண் ஆளுமையாளராக இலக்கிய உலகில் தனது பெயரை நன்கு பதித்தவர் நாவலாசிரியரான அமரர் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார். 

நாடகத் துறையைப் பொறுத்தவரை 'புலம் பெயரும் பாசங்கள்' என்ற இவருடைய நாடகப் பிரதி முதற் பரிசைப் பெற்றுள்ளது. 'கல்லுக்குள் ஈரம்' என்ற இவருடைய குறு நாவலும் பரிசு பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டமும், திரு. எஸ். திருச்செல்வத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த முரசொலி பத்திரிகையும் இணைந்து நடாத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவருடைய 'தேட்டம்' என்ற குழந்தைப் பாடல்கள் அடங்கிய தொகுதியும் பரிசு பெற்றுள்ளது. அத்துடன் லண்டன் தமிழ் மாத சஞ்சிகையில் 2004 - 2005 காலப்பகுதிகளில் 'மலரும் மொட்டுக்கள்' என்ற என்ற தலைப்பில் 14 அங்கங்களை உள்ளடக்கியதாக தொடர்கதையும் பிரசுரமாகியுள்ளது.

இவருடைய 'சிறுவர் பாடல்கள்' (2023) அடங்கிய நூலொன்றும் வெளிவந்து சிறுவர் படைப்பிலக்கியத் துறையிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடும் ஆற்றலும் இருக்கின்றது என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது. சிறுவர்களது வாசிப்பின் மீது இவருக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாகவே இந்த 'சிறுவர் பாடல்கள்' நூல் அமைந்துள்ளது. அழகானதொரு அட்டைப் படம் சிறுவர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த சிறுவர் பாடல் நூலில் கருத்தைக் கவரும் 36 சிறுவர் பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. 

இந்த நூலின் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ள நேர்மை, விரோதி, தகுதி, தகாத நட்பு, வீண் சண்டை, தண்டனை, தனிவழி, தன்னம்பிக்கை, பரீட்சை, அறிவு, புத்தி, ஈயார் தேட்டம், நண்பன், கோபம், பயன், பட்டம், எண்ணும் எழுத்தும், பொம்மை, ரயில் ஓடுது பார், ஏழு நிறங்கள், பலூன்கள், சின்னச் சின்ன பொம்மை, வண்ணப் பூச்சி, யானை, நிலவு, கப்பல், குட்டிப் பூனை, அணில், நல்ல வீடு, சுத்தமான நீர், தாய் சொல்லைத் தட்டாதே, தாலாட்டு, புன்னகை, ஒரு காலம், குட்டி முயல், விடிவெள்ளி போன்ற சிறுவர்களுடன் தொடர்புடைய அவர்களுக்கு விருப்பமான தலைப்புகள் என்னை ஆகர்ஷித்தன. இந்த சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களுக்கு வாழ்க்கை நெறிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. சிறுவர் பாடல்களில் இடம்பெற்றுள்ள அறிவுரைகள் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பயன்படும் வகையிலேயே அமைந்துள்ளன. நல்ல பண்புகளை பாடல்களாக சொல்லிக் கொடுக்கும் போது அவற்றை சிறுவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்வார்கள். அத்துடன் அவர்களது தமிழ் மொழி ஆற்றலும் மேம்படும் என்பது திக்கம் சிவயோகமலரின் திடமான நம்பிக்கை. இவர் சிறுவர்களுக்காக எழுதியுள்ள படைப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒரு பகுதியாகவே 'சிறுவர் பாடல்கள்' என்ற இந்தத் தொகுதி வெளிவந்துள்ளது.

பிரபல மூத்த ஆளுமையாளர் செங்கையாழியான் கலாநிதி க. குணராசா அவர்கள் எழுதியுள்ள 'ஈழத்துச் சிறுகதை வரலாறு' என்ற ஆய்வு நூலில் 'ஈழத்தின் தரமான பெண் எழுத்தாளர்களில் ஒருவரான இவரது சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன' என்று பாராட்டிப் பதிவு செய்துள்ளார். அத்துடன் ஈழத்து இலக்கிய வரலாற்றுப் பதிவில் இவர் ஏழாந் தலைமுறைப் படைப்பாளியாக முத்திரையிடப்பட்டுள்ளார்.

 டொமினிக் ஜீவா அவர்களைப் பிரதம ஆசிரியராக கொண்டு அரை நூற்றாண்டு காலமாக வெளிவந்த மல்லிகை சஞ்சிகையின் 1999 ஆம் ஆண்டு ஜனவரி மாத இதழில் (34 ஆவது ஆண்டு மலர்) அட்டை படத்தில் இவரது படத்தை பிரசுரித்து கௌரவித்துள்ளது. மல்லிகை 43 ஆவது ஆண்டு மலரிலும் (2008 ஜனவரி) இவரது படைப்புகள் பற்றி சிலாகிக்கப்பட்டுள்ளன. ஜீவநதி பெண் ஆளுமைச் சிறப்பிதழிலும் இவர் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவருடைய இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வானது சப்பிரகமுவ பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட மொழித்துறைப் பட்டதாரி மாணவியான மீராவினால் மேற்கொள்ளப்பட்டு சிறப்புப் பட்டத்துக்கு அங்கீகாரம் பெற்றதுடன் ஆய்வு நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் அவர்கள் மறைந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தாலும் அவரது நினைவுகளுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய கணவர் எஸ்.ஜே. ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இந்த நினைவு நாளில் அவருடைய நினைவுகளை மீட்டி மனநிறைவு அடைவது போல இலக்கிய உலகமும் இத்தகைய ஆற்றலுள்ள ஒரு காத்திரமான பெண் படைப்பாளியை நினைவுகூரும் என்று நம்புகிறேன். மறைந்தாலும், கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் அவரது பரந்துபட்ட படைப்புகள் வழியாக நினைவுளில் வாழும் சரித்திர நாயகியாக 'திக்கம்' சிவயோகமலர் ஜெயக்குமார் இலக்கிய உலகில் என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்!!!

குறிப்பு:- இவர் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எனது தேடலுக்குக் கிடைத்த சொற்பமாகும். இதனையும் தாண்டி இவரது படைப்புவெளி பரந்துபட்டது. இவர் பற்றியும், இவரது படைப்புகள் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நினைவுக் கட்டுரை ஒரு தொடக்கப் புள்ளியாகவே அமையும் என்பதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.


வெலிகம ரிம்ஸா முஹம்மத்