Sunday, July 12, 2026

162. 'என் சுவாசக் காற்றே' சிறுகதை நூல் தொடர்பான ஒரு பார்வை

 'என் சுவாசக் காற்றே' சிறுகதை நூல் தொடர்பான ஒரு பார்வை


நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


ஈழத்தின் வட பகுதியிலுள்ள மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திருமதி கமலினி கதிர் அவர்கள். 2002 ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றதிலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வலுச் சேர்க்கும் முகமாக ஆக்க இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு, பல படைப்புகளை வெளியீடு செய்து இலக்கிய உலகின் அவதானத்தைப் பெற்றுள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள இவர், அண்மையில் 'என் சுவாசக் காற்றே' என்ற சிறுகதை நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூலுக்கான அணிந்துரையையும் நூலின் பின்னட்டைக்கான குறிப்பையும் ஓய்வு பெற்ற பாடசாலை அதிபரும் எழுத்தாளருமான திருமதி பவானி சிவகுமாரன் எழுதியுள்ளார். அவரது உரையில், 'சமூகத்தின் மீது கரிசனையும் பற்றும் நூலாசிரியர் கமலினி கதிரின் கதைகளில் பிரதிபலிக்கின்றன என்பது மட்டுமல்லாமல் வலது கை கொடுப்பது இடது கை அறியாத வகையில் தனிநபராக இவர் செய்கின்ற சமூகப் பணிகள் பல. அவற்றுள் ஏழை மாணவரின் கல்வி, குழாய்க் கிணறு அமைத்தல், மருத்துவ உதவி, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான உதவி என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. இப்படி சமூகத்தை நேசிக்கும் ஒருவரால்தான் நல்ல படைப்புகளையும் சமூகத்திற்குத் தர முடியும் என்று செயலில் காட்டுபவர் இவர். இனிவரும் காலங்களிலும் இவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை ஈழத்து இலக்கியம் எதிர்பார்க்கலாம்' என்று கமலினி கதிர் அவர்களின் சமூகப் பணிகளைப் பாராட்டி, இலக்கியப் படைப்புகளை வரவேற்கின்றார்.

நூலாசிரியர் கமலினி கதிர் தனதுரையில் 'புத்தக வாசிப்பு என்ற அற்புதம் உலகை தெரிய வைத்து அடுத்தடுத்த இடம் நோக்கி நகரத் தூண்டும். புத்தக வாசிப்பின் மூலந்தான் காட்சிப்படுத்தல் என்ற அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். பறவைகளோடு எத்தனை வருடம் வாழ்ந்தாலும் பறவையாகிவிட முடியாது. ஆனால் பத்து புத்தகங்களோடு பழகிப் பாருங்கள், பதினோராவது புத்தகமாக மாறிவிடுவீர்கள் என்று யாரோ கூறியதாக வாசித்தது ஞாபகத்துக்கு வருகிறது. எழுத்துகள் வலிமையானவை என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். எழுத்து ஒருவரை அழ வைக்கவோ, கோபப்பட வைக்கவோ, சிரிக்க வைக்கவோ வேண்டும். அப்போதுதான் எழுத்தாளன் அங்கே வெற்றி பெறுகின்றான். ஆனால் தற்போது வாசிப்பு நலிந்து கொண்டு வருவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இளையவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வாசிப்பு பழக்கத்தினின்றும் விலகி சமூக ஊடகங்கள் வசம் தம்மை ஒப்படைத்து விடுகின்றார்கள்' என்று வாசிப்பின் அருமை பற்றிக் கூறி, இன்றைய உலகில் பலரும் சமூக ஊடகங்களில் மூழ்கி விடுகின்ற துர்ப்பாக்கிய நிலைமையைக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

'என் சுவாசக் காற்றே' என்ற சிறுகதை நூலின் தலைப்பே வாசகர்களின் மனதில் ஒரு மென்மையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த சிறுகதை நூல் 'அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள், ஓடும் வெண்முகிலாய், கரை தொடா அலைகள், இதுவும் கடந்து போகும், இழந்த காலங்கள், பூங்காற்று திரும்புமா?, அன்பு மகளுக்கு அம்மா எழுதும் மடல், கலைந்து போகும் கோலங்கள், நினைவிலிருந்து வழியும் விழிநீர்த் துளிகள், என் சுவாசக் காற்றே மன்னிப்பாயா?, அனாதையாக்கப்படும் அன்பு, மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுள், எந்த நதியில் கரைப்பேன்?, அந்திமாலை, பொன்னாடை, தூறல் நிற்கட்டும்' ஆகிய 16 கதைகளை உள்ளடக்கி, 172 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  இந்த 16 சிறுகதைகளில்  எட்டுக் கதைகள்  புலம் பெயர் நாடுகளில் நடைபெறுகின்ற சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்டுள்ளன. அத்துடன் ஈழத்தில் இடம்பெற்ற போர்க்கால நினைவுகளின் பாதிப்புகள் மற்றும் தாயகத்தைப் பிரிந்து வாழும் நினைவுகளின் வலிகள், ஏக்கம், தவிப்பு போன்றவற்றை பிரதிபலிப்பதாகவும் சில கதைகள் எழுதப்பட்டுள்ளன.

இனி இந்த நூலில் இடம்பிடித்துள்ள கதைகளில் ஒரு சில கதைகளை வாசகர்களின் இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

'அன்புக்குமுண்டோ அடைக்குந்தாள்' (பக்கம் 09) என்ற கதை, சுவிஸ் நாட்டின் குளிர்ச்சியான இலையுதிர் காலப் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற துவாரகா என்ற பெண்ணின் வாழ்வில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்ற வகையில் அமைந்துள்ளது. நடுத்தர வயதைக் கடந்து  தனியாக வாழும் துவாரகாவின் அலுவலக நட்பான, சுவிஸ் நாட்டுப் பெண் லியூகா, கால் உடைந்த நிலையில் வேலைக்கு வராமல் வீட்டில் முடங்கிக் கிடக்கிறாள்.  லியூகாவைப் பார்க்க அடிக்கடி செல்வது துவாரகாவின் பழக்கமாக இருந்து வந்தது. கமரூன் நாட்டைச் சேர்ந்த அகதியாக சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்த, பதினாறு வயதான பெண் பிள்ளை மியாஞ்சா தன்னைக் கவனித்துப் பார்ப்பதாகவும் அத்துடன் பேர்ண்ணில் வேலை பார்க்கும் மகனும் இடைக்கிடையில் தன்னை வந்து பார்ப்பதாகவும் லியூகா சொல்லியிருப்பது துவாரகாவுக்கு சற்று ஆறுதல் தருவதாக இருக்கிறது. இந்தநிலையில் லியூகாவின் மகன் ஸ்ரிவ் மியாஞ்சாவுடன் பழகி, அவளைத் தாயாக்கிவிட்டு அவனுடைய தகப்பனைப் போலவே மியாஞ்சாவைக் கழற்றிவிட்டான் என்று ஒருநாள் லியூகா, துவாரகாவிடம் கூறுகின்றாள்.

லியூகாவின் சொந்த மகனே மியாஞ்சாவுக்கு துரோகஞ் செய்த போதும், தவறு செய்தவன் தன் மகன் என்றுகூடப் பார்க்காமல் பாதிக்கப்பட்ட மியாஞ்சாவுக்கு ஆதரவாக நிற்கின்றாள் லியூகா. அதாவது மியாஞ்சாவைத் தத்தெடுத்து லியூகாவின் வீடு, சொத்துக்கள் போன்றவற்றை அவளுக்குப் பின்னர் மியாஞ்சாவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று உயில் எழுதிவிட்டாள். லியூகாவின் இந்தத் துணிச்சல் போற்றத்தக்கது. தாய் நாட்டைப் பிரிந்து வறுமையிலும் பாதுகாப்பற்ற சூழலிலும் தவிக்கும் ஒரு யுவதிக்கு, தாய்க்குத் தாய் போல ஆதரவு காட்டும் லியூகாவின் மூலம் கதையின் கனதியை கதாசிரியர் உயர்த்துகின்றார். பணம், அந்தஸ்த்து, சொத்து, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதத்தை நேசிக்க வைக்கும் இந்தச் சிறுகதை வாசகர்களின் மனதில் ஈரம் கசியச் செய்யும் ஒரு சிறந்த கதையாக அமைந்துள்ளது. 

அடுத்து 'ஓடும் வெண்முகிலாய்' (பக்கம் 14) என்ற கதையானது திருமணம் முடித்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர் ஒரு கணவன் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் விதத்தை கடிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மனைவி, பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காது, அவர்களை கவனிக்காமல் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறார் அந்தக் கணவன். அந்த மன உளைச்சளைத் தாங்க முடியாத மனைவி,  கணவனைப் பிரிந்து சென்று பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போய் தனியாக வாழ்கிறாள். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த கணவன் இறுதியில் தன் தவறுகளை உணர்ந்து அவர்களின் அன்புக்காக ஏங்கித் தவிக்கின்றான். கணவன் என்கின்ற கதாபாத்திரத்தின் ஆதங்கம், தவிப்பு போன்றவை இந்தக் கதை முழுவதும் விரவிச் செல்வதைக் காணலாம். ஒரு குடும்பம் சந்தோசமாக வாழ கணவன் மனைவிக்கிடையில் காதல் என்ற உணர்வு நூல் போல ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்வது மிகவும் அருமையாக இருக்கின்றது.

'கலைந்து போகும் கோலங்கள்' (பக்கம் 78) என்ற கதையானது கணவன் மனைவிக்கிடையில் ஏற்படுகின்ற விரிசல்களையும், குறிப்பாகப் மனைவியின் மனப்போராட்டங்களையும் பிள்ளைகளின் அசௌகரியமான மன உணர்வுகளையும் மிகவும் நுணுக்கமாகச் சித்தரிக்கிறது. கணவனின் தவறான போக்கைச் சகித்துக்கொள்ள முடியாமல் மனைவி லதா அவனிடமிருந்து தனது இலக்கியா, இலக்கியன் ஆகிய இரண்டு பிள்ளைகளுடன் துணிச்சலாகப் பிரிந்து செல்ல எடுக்கும் முயற்சியை நோக்கி இக்கதை நகர்ந்து செல்கின்றது. இக்காலச் சமூகத்தில் நிலவுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைகளையும், அதன் விளைவாகக் குடும்ப அமைப்பில் ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் கதாசிரியர் தனது கூர்ந்த அவதானிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மணவாழ்வில் நீடித்திருக்க வேண்டும் என்ற மனைவியின் தவிப்பு ஒருபுறமிருக்க, விருப்பமில்லாத உறவில் தன்னைத் திணித்துக்கொள்ள விரும்பாத நிலை இன்னொரு புறமுமான தவிப்புடன் மனைவி லதாவின் இரட்டை மனப்பாங்கு கதை முழுவதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கதையின் ஆரம்பத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கணவனைப் பிரிய மறுத்த லதா, ஒரு கட்டத்துக்கு மேல் போலி வாழ்க்கையிலிருந்து விலகி தன் பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காகவே தன் கணவனைப் பிரிய வேண்டும் என்ற தீர்மானத்தோடு எடுக்கும் முடிவே கதையின் முடிவாக அமைகிறது. ஒரு சிலரின்  யதார்த்த வாழ்வைக் கலைந்து போகும் கோலங்களாக உருவகப்படுத்தி, உறவுகளின் நிலையற்ற தன்மையை கதாசிரியர் இந்தக் கதையில் பதிவுசெய்துள்ளார்.

'நினைவிலிருந்து வழியும் விழிநீர்த்துளிகள்' (பக்கம் 87) என்ற கதைக்கு 2024 இல் நடைபெற்ற எழுத்தாளர் லலிதா நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது, பாராட்டுக்கள். இந்தக் கதையின் கருப்பொருள் அருமையாக அமைந்துள்ளது. குடும்பத்திற்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்து, தன் கணவனுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்த தர்சினி என்ற கதாபாத்திரம் கடைசியில் மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்படுகின்றாள் என்பது வாசகரின் மனதில் ஒரு வகையான துயரத்தைத் தந்துவிடுகிறது.

'அந்திமாலை' (பக்கம் 133) என்ற கதை குறு நாவலாக அல்லது நாவலாக விரிக்கக் கூடிய கதைக் கருவைக் கொண்டுள்ளது. வாசகர்களுக்கு இந்தக் கதை மிகவும் நீண்டுவிட்டதே என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து, ஒருவகையான சலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயம் தோன்றுகின்றது.

'பொன்னாடை' (பக்கம் 149) என்ற கதை புத்தக வெளியீட்டு விழாக்களிலும் ஏனைய சில விழாக்களிலும் ஆளுமையாளர்களை கௌரவிக்க பொன்னாடைகளைப் போர்த்துவதற்குப் பதிலாக பெறுமதியான நல்ல சிறந்த புத்தகங்களை பரிசளிக்கலாம் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது. இந்தக் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். ஏனென்றால் அந்த ஒரு நிமிடம் போர்த்தப்படும் பொன்னாடைகள் பிறகு வேறு எதற்காகவும் பயன்படுத்த முடியாமல் வீட்டு அலுமாரிகளிலேயே பத்திரப்படுத்தி வைக்கப்படுகின்றன. எனவே இந்தப் பொன்னாடைக் கலாசாரம் தேவைதானா? என்ற நூலாசிரியரின்  நியாயமான கேள்வி பாராட்டத்தக்கது, வரவேற்கத்தக்கது.

பொதுவாக நோக்கும் போது கமலினி கதிரின் எழுத்து நடை எளிமையாக அமைந்துள்ளது. கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கின்ற மனிதர்களைப் போன்ற இயல்பான தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த நூலின் சிறப்பு அதன் உணர்ச்சி வெளிப்பாட்டிலேயே தங்கி இருக்கின்றது. சில கதைகள் மனதை நெகிழச் செய்கின்றன. சில கதைகள் சமூகத்தில் நடைபெறுகின்ற உண்மைகளை சிந்திக்க வைக்கின்றன. குறிப்பாக மனித நேயம், குடும்ப உறவுகள், பெண்களின் மனநிலைகள் போன்றவை கதைகளில் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அளவுக்கு அதிகமான வர்ணனைகளும் தேவைக்கு மேலதிகமான விளக்கங்களும் ஒரு சிறுகதையின் கனதித் தன்மையைக் குறைத்துவிடும் என்று கூறி, இனிவரும் சிறுகதைகளை மிகவும் காத்திரமான முறையில் எழுதி, கனதியான சிறுகதைத் தொகுதிகளாக தொடர்ந்தும் வெளியிடுவார் என்ற நம்பிக்கையோடு நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!


நூல்:- என் சுவாசக் காற்றே

நூல் வகை:- சிறுகதை

நூலாசிரியர்:- கமலினி கதிர்

விலை:- 300 ரூபாய்



நூலாய்வு:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்


No comments:

Post a Comment