அன்ன யாவினும் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

எழுச்சியின் நிழல் (பக்கம் 16) என்ற கவிதை வாழ்வின் இரு பக்கங்களான இன்பம் துன்பம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. வாழ்க்கையிடம் தோற்றுப் போனவர்கள் அதிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். அவ்வாறு எழுந்தவன் கூட மற்றவர்களை ஏளனப்படுத்தும் நிலை தோன்றும். தன்னைவிட தாழ்ந்தவனையும் தாண்டிக்கொண்டு, தான் மட்டும் முன்னேறிவிட வேண்டும் என்ற மனப்போக்குள்ள மனிதன் பற்றி இக்கவிதை உணர்த்தி நிற்கின்றது.
எத்தனை எழுதியும்
எழுந்து நிற்க முடியவதில்லை
ஏதோ ஒரு பொழுதில்
எழுந்து நின்றுவிட்டால்
ஏறிட்டும் பார்ப்பதில்லை
வீழ்ந்தவர்களை..
வீழ்வதிலும்
எழுவதிலும் தான்
தீர்மானிக்கின்றோம்
தோல்விகளையும்
வெற்றிகளையும்
நிசப்தம் (பக்கம் 21) என்ற கவிதை அழகிய உவமானங்களையும் படிமங்களையும் கொண்ட கவிதையாகக்; காணப்படுகின்றது. நாம் அன்றாடம் கேட்கும் சத்தங்களிலிருந்து கவிஞனின் பார்வையில் சப்தம் நிசப்தமாக ஒலிக்கின்றது.
மழைக்கால நாயின்
முனகலைப் போலவும்
தனியறைக் கிழவியின்
இருமலைப் போலவும்
கேட்கிறது சப்தம்
அகரம் பறை ஆயுதம் மறை (பக்கம் 23) என்ற கவிதை நம்பிக்கை விதைகளைத் தூவும் கவிதையாக மலர்ந்திருக்கின்றது. இன்றைய காலத்தில் மன அழுத்தம் கொண்டவர்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றார்கள். வாழ்க்கையை வெறுத்து, உறவுகளை வெறுத்து, செய்யும் தொழிலை வெறுத்து ஏன் வாழ்கின்றோம் என்ற எண்ணப்பாட்டில் தன்போக்கில் வாழ்கின்றார்கள். அவ்வாறு மனதளவில் சோர்ந்திருப்பவர்களைத் தட்டிக்கொடுக்கும் இந்தக் கவிதையின் சில வரிகள் இதோ
முட்டிப் பாரு முடியுமே உன்னால்
மோதிப் பாரு உடையுமே தன்னால்
தட்டிப் பாரு தடைகளே எரியும்
தாண்டிப் பறக்க வானமே விரியும்
வாடா தோழா - நாம்
வாழ்வை வெல்வோம்
கூடா எண்ணம் - அதை
விதையில் கொல்வோம்
சுனாமியின் சுவடுகள் இன்றும் அழியாமல் கிடந்து மீண்டும் மீண்டும் கடல் பற்றிய பயத்தை அவ்வப்போது ஏற்படுத்துவது உண்மை. மழைக் காலத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இன்னொரு சுனாமி வந்திடுமோ என்ற அச்சம் இன்னும் இருக்கின்றது. அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மீள் குடியேறாமல் அவதிப்படுவது மனதுக்கு வேதனை தரக்கூடியதாகவும் உள்ளது. ஓ என் கடல் மாதா என்ற கவிதையில் கடல் மாதாவுக்காக, கவிஞன் மனதில் எழும் கவிதையின் வரிகள் இவ்வாறு துயரத்தை சுமந்திருக்கின்றது.
ஓய்வெடு என் கடல் மாதா
ஓய்ந்து விட்டாயா
ஓய்வெடு போதும் பகை ஓய்வெடு
விண் முட்ட அலைகள்
விழி நிறைய உடல்கள்
கண்ட காட்சிகளில்
கதறத்தான் முடியவில்லை
யார் அழுவது
யாருக்காய் அழுவது
ஆண்டுகள் கழிந்தும்
அழுகை நிற்கவில்லை
நீதி (பக்கம் 43) என்ற கவிதை நீ மரித்த உலகம் பற்றி வாசகரிடம் பேசுகின்றது. நீதியைவிட பணத்துக்குத்தான் மதிப்பதிகம். நீதியை பணம் கொடுத்து தனதாக்கும் முயற்சிகள் கண்கூடாக நடந்து வருகின்றன. ஏழைகளுக்கு ஒரு சட்டம் - பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்றாகிவிட்ட நிலை இன்று பரவிக் காணப்படுகின்றது.
கஞ்சிக்கும் கூழுக்கும்
நீதியொன்று - பணம்
காய்த்த நல் மரத்திற்கு
நீதி வேறு - என
நெஞ்சினைக் கல்லாக்கி
நீதி சொல்லும் - அந்த
நீதிமான்களைக்
காலம் வெல்லும்
கவிதைகளை மிக நேர்த்தியாக எழுதிவரும் மன்னார் அமுதன் இன்னும் பல இலக்கியப் படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!
நூல் - அன்ன யாவினும்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - மன்னார் அமுதன்
வெளியீடு - மன்னார் தமிழ்ச் சங்கம்
மின்னஞ்சல் - amujo1984@gmail.com, amujo1984@yahoo.com
விலை - 200 ரூபாய்
No comments:
Post a Comment