Wednesday, January 4, 2012

16. நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.

'எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை மையமாக வைத்து இலகு நடையில் கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத்தை நோக்கிப் பற்றுக்கொண்டு வளர்ந்து வர 'நல்வழி' என்னும் இக் கவிதை நூல் பெருமளவில் உதவும் என நம்புகின்றேன். சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள், வாராய் வலம் வருவோம் போன்ற கவிதைகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவதற்காகவும், இயல்பு நிலையில் சிறிது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடையிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன' என்று திரு. சபாரெத்தினம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நிலாச்சோறு சாப்பிட்டிராத குழந்தைகள் இல்லை என்று சொல்லலாம். சிறுவர்களுக்கான கதையிலும் சரி, கவிஞர்களின் கற்பனையிலும் சரி, பெண்களை உவமிப்பதிலும் சரி நிலா பிரதான இடத்தை வகிக்கின்றது. நிலாவை உவமித்து எழுதப்பட்ட பாடல்களும் நிறைய இருக்கின்றன. இந்நூலாசிரியரும் நிலவே இறங்கி ஓடிவா (பக்கம் 02) என்ற கவிதையில் நிலா பற்றி கூறியமை பின்வருமாறு அமைகிறது.

வட்ட நிலா வானத்திலே
எட்ட நின்று தோணுது பார்
கிட்ட வரும் நாளினிலே
எட்டி அதைப் பிடித்திடுவேன்

மனிதன் தீயவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்து நல்வழியில் வாழ வேண்டும். தான் உழைப்பது தொடக்கம் அனைத்திலும் நேர்மை இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள், பெரியோர்கள் நல்வழிகாட்டிகளாக இருந்தால்தான் குழந்தைகளும் நிச்சயமாக சிறந்தவர்களாக காணப்படுவார்கள். பிள்ளைகள் நன்கு கல்வி கற்று நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதை நல்வழி (பக்கம் 03) என்ற கவிதை சுட்டி நிற்கிகிறது.

பற்பல அற்புதம் கற்பிக்கும் விஞ்ஞானம்
பாலகரே நாம் பயின்றிட வேண்டும்
நல்லவை நாடியும் தீயவை போக்கியும்
நற்பணி புரிந்து உயர்ந்திடுவோமே

ஒருவனுக்கு எவ்வளவுதான் பொருள், செல்வம் இருந்தாலும் கல்விச் செல்வம்தான் அவனை மதிப்புடையவனாக ஆக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதும் இதனால்தான். கல்வியை சரியாக பெறாதவர்கள் நிராதரவான நிலையில் இருப்பார்கள். கல்வியை முறைப்படி பெற்றவர்கள் என்றும் நிம்மதியாக இருப்பார்கள். ஆகவே கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்வியை மறக்காதிரு (பக்கம் 07) என்ற கவிதையை தந்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சபாரெத்தினம் அவர்கள்.

அன்பும் அறனும் நம் சொத்து
அறிவு ஒளியே எம் பேறு
என்றும் எதையும் இழந்தாலும்
நன்றே கல்வி மறக்காதிரு

உலக மக்களில் அநேகர் போலி முகத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பிறரை ஏமாற்றி பிழைப்பதற்காக பசுத்தோல் போர்த்திய புலிகள் எம்மத்தியில் நிறையவே உலா வருகின்றன. அவர்களை கண்டு கொள்வது கூட கஷ்டமான காரியம். அருகிலேயே இருந்துவிட்டு ஆபத்தில் சிக்க வைத்துவிடும் சந்தரப்பவாதிகள் பற்றி சுயரூபம் (பக்கம் 13) என்ற கவிதை பின்வருமாறு சொல்கிறது.

எட்ட நின்றால் இனிப்பிருக்கும்
தொட்டு ரசிக்க மனமிருக்கும்
கிட்ட வந்தால் கசப்பிருக்கும்
பட்டு நொந்தால் பலன் தெரியும்

நல்லோர் போலத் தெரிகின்றார்
நம்பும் படியே பழகுகின்றார்
சூது வாது வஞ்சனையால்
சுயரூபம் காட்டுகின்றார்

சிறுவர் இலக்கியம், சிறுகதை போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் திரு. சபாரெத்தினம் அவர்கள் இன்னும் பல காத்திரமான இலக்கிய நூல்களைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நல்வழி 
நூல் வகை - சிறுவர் கவிதை
நூலாசிரியர் - ஆரையம்பதி க. சபாரெத்தினம்
வெளியீடு - வனசிங்க பிரிண்டர்ஸ்
தொலைபேசி - 0652246781
விலை - 70/=

No comments:

Post a Comment