Wednesday, May 13, 2020

144. திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் நூல் பற்றிய கண்ணோட்டம்

திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் நூல் பற்றிய கண்ணோட்டம்

நாடறிந்த எழுத்தாளர் கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சினிமா தொடர்பான நூலே ''திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்'' என்ற நூலாகும். இந்த நூலானது சென்னை மணிமேகலைப் பிரசுர வெளியீடாக 196 பக்கங்களில் வெளிவந்துள்ளது. உலக சினிமா பற்றிய நூலாசிரியரின் மனப்பதிவுகள், துணுக்குகள், தகவல்கள், உலகத் திரைப்பட செல்நெறி, சர்வதேச ரீதியில் திரைப்படக் கலையின் போக்கும் வளர்ச்சியும் போன்ற பல்வேறு விடயங்களை கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இந்த நூலில் விரிவாகப் பதிகிறார்.

பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஊடகம் என்ற பொதுத் தலைப்பில் கற்கும் மாணவர்கள் திரைப்படத்துறை சம்பந்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. அத்துடன் பல்கலைக்கழகங்களின் இதழியல் துறையில் கற்கும் மாணவர்களும் இத்துறைபற்றி கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நான் அறிந்த வகையில் தம்பி ஐயா தேவதாஸ் இத்துறையில் பல நூல்களை வெளியிட்டு இத்துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.

இலங்கை வானொலியில் பல்லாண்டு காலம் பணிபுரிந்த சிறந்த ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த இவர், தனியார் ஆங்கிலப் பாடசாலைகளில் தனது ஆசிரியப் பணியை செவ்வனே செய்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தைப் பெற்றுள்ளார். தற்போது முழு நேர எழுத்தாளராக தேசிய பத்திரிகைகள் யாவற்றிலும் பல்வேறு தலைப்புக்களில் மிகவும் பெறுமதியான விடயங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.

1953களில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்து, மொழிபெயர்ப்பு, வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகள், செய்தித்துறை, தூதரக தொடர்பாடல், விளம்பர பிரதி எழுதுதல், பத்திரிகை ஆசிரியத் துறை, கல்லூரி ஆசிரியம் ஆகியவற்றில் நிறையவே அனுபவங்கொண்ட இவர் இந்நூலை எழுதுவதற்கு தனது அவதானிப்புக்களையும் அறிவையும் செவ்வனே பயன்படுத்தி சிறப்பாக எழுதியுள்ளார்.

''திரைப்படத் திறனாய்வு'' என்ற முதலாவது கட்டுரையில் ''திரைப்படம் என்பது நெறியாளர் ஒருவரின் படைப்பு. அதனை நுகர, பார்வையாளர் முனைகிறார். தொடர்பாடலில் இவ்விரு தரப்பினரும் முக்கியமான பங்காளிகள். திரைப்படத் திறனாய்வாளரும் ஒரு பார்வையாளர்தான். ஆயினும் அவர் ஏனைய பார்வையாளரைவிடச் சிறிது வேறுபட்டவர். திரைப்பட விமர்சகரின் குறிப்புரைகளினால் ஏனைய பார்வையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் பயனடைகின்றனர். திரைப்படத் திறனாய்வு மூலம் திரைப்படம் ஒரு கலைச் சாதனமாக வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது'' என்று தனது பார்வையை ஆழமாகப் பதிகின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

''டொக்யூமென்டரி என்றால் என்ன?'' (பக்கம் 09) என்ற கட்டுரையில் ''திரைப்படத் திறனாய்வுத் துறையில் பயன்படுத்தப்படும் பதங்களில் ஒன்று டொக்யூமென்டரி (னுழஉரஅநவெயசல) இந்த ஆங்கிலச் சொல். ஒரு ரக திரைப்படத்தைக் குறிக்கும். தமிழில் இதனை நாம் மொட்டையாக விவரணப் படங்கள் என்று கூறி வந்தோம். ஆனால் இது இந்தத் துறைப் படங்களைக் குறிப்பிடப் பொருத்தமான சொல் அல்ல என்பதைப் பின்னர் உணர்ந்துகொண்டோம். விவரணம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் (யேசசயவழைn) அல்லது (யேசசயவiஎந) என்பார்கள். இலக்கியத் திறனாய்வுத் துறையில் யேசசயவiஎந போல னுநளஉசipவiஎந என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். விவரணம் யேசசயவiஎந என்றால் கதை, ஓவியம், திரைப்படம் போன்றவற்றில் நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல் என்பார்கள்'' என்று விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

''இரு சிங்கள நெறியாளர்கள்'' (பக்கம் 35) என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் பிரசன்ன விதானகே மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோர் பற்றிய தகவல்களை முன்வைத்துள்ளார். சிங்களத் திரையுலகில் இந்த நெறியாளர்கள் குறிப்பிடத்தக்க படங்களைத் தந்துள்ளனர். இப்படங்களில் சில அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

திரைப்படத் திறனாய்வு, டொக்யூமென்டரி என்றால் என்ன?, திரைப்படக் கலை பற்றித் தமிழில் ஓர் அருமையான நூல், தென்னிந்தியத் திரைப்படங்கள், கல்கத்தா திரைப்பட விழாவில் குறிப்பிடத்தக்க படங்கள், இரு சிங்கள நெறியாளர்கள், மெல்லெனக் காமத்தைத் தீண்டும் ஐரோப்பியப் படங்கள் இரண்டு, மேலை இசை விற்பன்னர், கன்னட சினிமா, மலையாள சினிமா, நான்கு மலையாளத் திரைப்படங்கள், அஸ்ஸாமிலிருந்து ஓர் அழகிய பெண்ணியப் படம், ஹிந்தி சினிமா பிக்ரம் சிங்கின் படம், தமிழ் சினிமா பூமணியின் படம், சிங்கள சினிமா எச்.டி. பிரேமரத்னவின் படம், சமஸ்கிருத மொழி சினிமா, இந்திய சினிமா, பம்பாய் பட விழா, பல மொழி நடிகை, குறுந்திரைப்படங்கள், பிரிட்டிஷ் சினிமா, கனேடிய சினிமா, உலக சினிமா, தமிழ் சினிமா ஆகிய தலைப்புக்களிலான பல்வேறு கட்டுரைகள் இந்த நூலை அலங்கரித்;துள்ளன. ஈழத் தமிழ் இலக்கிய வெளியில் திரைப்படத்துறை சார்ந்த நூல்கள் மிகவும் அரிதாகவே வெளிவந்துள்ளன. அந்தவகையில் சினிமாப் பிரியர்களுக்கும் இதுதொடர்பான ஆர்வலர்களுக்கும் இந்த நூல் வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம். இந்த நூல் தவிர நூலாசிரியர் முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், அசையும் படிமங்கள் ஆகிய நூல்களையும் இதற்கு முன்னர் இத்துறையில் வெளியிட்டிருப்பது இங்கு குறிப்பிட்டுக்கூறப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கையிலும் இந்தியாவிலும் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழப் பிரார்த்திப்பதுடன் அவரது எழுத்துப் பணியை செவ்வனே தொடர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன். இன்னும் பல காத்திரமான நூல்களை தமிழுலகுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - திரைப்பட விழாக்களின் படங்களும் 
அவை தொடர்பான சுவையான செய்திகளும்
நூலின் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 0112587617
ஈமெயில் - sivakumaran.ks@gmail.com
வெளியீடு; - மணிமேகலைப் பிரசுரம்
விலை; - 300 ரூபாய்

143. தாய் நிலம் சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம் (03 மொழிபெயர்ப்புகளுடன்)

தாய் நிலம் சிறுகதை நூல் பற்றிய கண்ணோட்டம்
(03 மொழிபெயர்ப்புகளுடன்)

தாய் நிலம் என்ற நான்கு மொழிகளில் வெளிவந்துள்ள நூலின் ஆசிரியர் முல்லைதிவ்யன். இந்த நூல் இவரது ஆறாவது நூல் வெளியீடாகும். முல்லைதிவ்யன் யுத்தம் விட்டுச் சென்ற வடுக்களை நெஞ்சில் சுமந்தவராக படைப்புக்களை எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர். சிறுவயதிலிருந்தே யுத்தம் எனும் அரக்கனுக்குப் பயந்து பயந்து வாழ்ந்ததில் அவருக்குள் ஊடுறுவிட்ட அந்த வலி, ஏக்கம், பயம், விரக்தி போன்றவை அவரது எழுத்துக்களில் பிரவாகிப்பதை நன்கு உணர முடிகின்றது.

இவர் நல்லதோர் கனவும் அந்தரிப் போரும் (கவிதை) 2011, கவியின் ஏக்கம் (கவிதை) 2012, அம்மா காத்திருக்கக்கூடும் (கவிதை) 2013, அக்காவுக்கு எழுதிய கடிதம் (கவிதை) 2014, தாய் நிலம் (சிறுகதை) 2016 ஆகிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார். 2016 இல் வெளியிட்ட தாய் நிலம் என்ற சிறுகதை நூலில் உள்ள மகுடச் சிறுகதையையே இவர் பிரெஞ்சு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழியெர்ப்புச் செய்து யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகத்தின் மூலம் இறுதியாக வெளியிட்டுள்ள நூலாகும்.

தாய் மண்ணை நேசிப்பவர்களுக்கு அதைவிட்டும் பிரியும் நிலை வந்தால் அது உயிர் போவதை விடவும் வேதனை தரும் விடயமாகும். தன் மண்ணை, மக்களை, கூடவே வளர்ந்த ஆடு மாடுகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஏக்கம் தாய் நிலம் என்ற நூலில் உள்ள சிறு சம்பவம் மூலம் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 74 பக்கங்களில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் உள்ள கதைச் சம்பவமானது தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தக் கதையானது பிரெஞ்சு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல சித்திரக் காட்சிகளையும் உள்ளடக்கப்பட்டு இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

யாழ் மொழி, மான் விழி ஆகிய இரு தோழிகளின் உரையாடலாக இந்தக் கதை பின்னப்பட்டுள்ளது. யாழ் மொழி, தன் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக தன்னிடமிருந்த நகையெல்லாம் விற்கிறாள். அப்படி மிகவும் கஷ்டப்பட்டு வெளிநாடு சென்றாலும் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியாக அங்கு நல்ல தொழில் கிடைக்கவில்லை. தன் சிறுவயது மகனை வைத்துக்கொண்டு இருக்கும் யாழ் மொழி தானே வெளிநாட்டுக்குச் செல்ல முடிவெடுத்துவிட்டு அதை மான் விழியிடம் தெரிவிக்கின்றாள்.

யாழ் மொழியின் வாழ்க்கை எனும் படகு நல்ல படியாக கரை சேர வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறாள் மான் விழி. அவர்கள் இருவரும் பள்ளிக் காலத்திலிருந்து நல்ல நண்பிகளாகத் திகழ்ந்து யுத்த நெருக்கடியிலும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டதையும் இந்தக் கதையில் பதிவுசெய்திருக்கிறார் முல்லைதிவ்யன்.

யதார்த்தமான விடயங்கள் எழுத்துக்கூடாக பார்க்கப்படும்போது அந்தந்த சூழ்நிலைகளில் மக்கள் அடைந்த துன்பத்தை கண்கூடாக அறிய முடிகின்றது. அந்த எழுத்தாற்றல் முல்லைதிவ்யனுக்கு வாய்த்திருக்கின்றது. தான் எடுத்துச் செல்லும் கதை நகர்வுக்குள் வாசகரையும் இழுத்துச் செல்வதோடு வாசகரின் மனதையும் கலங்க வைக்கின்றார். வாசகனுக்குள் ஏற்படும் அந்த வேதனை உணர்வானது திவ்யனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

படைப்புகளுக்கூடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி இலங்கையில் பெருமளவில் நடைபெற்று வந்திருக்கிறது. வருகிறது. பிற இனத்தவர்களும் இந்தத் துயரத்தை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் இனிவரும் காலங்களில் இன மத மொழி பேதம் மறந்து அனைவரும் இலங்கையர் என்ற உணர்வோடு செயற்படுவதற்கான வழிவகையாக தாய் நிலம் என்ற நூல் திகழ்கின்றது.

சமூகத்தில் நிகழும் ஏனைய பிரச்சினைகளையும் முல்லைதிவ்யன் தன் எழுத்துக்களில் புகுத்தி சமூகத்துக்குள் ஊடுறுவச் செய்ய வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அதை வாசிப்பவர்களில் சிலராவது அதிலிருந்து தவிர்ந்து நல்ல விதமாக நடப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும்.  நூலாசிரியர் முல்லைதிவ்யனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - தாய் நிலம்
நூல் வகை - சிறுகதை (03 மொழிபெயர்ப்புகளுடன்)
நூலாசிரியர் - ஆ. முல்லை திவ்யன்
தொலைபேசி - 0775446584
வெளியீடு - யாழ். பிரெஞ்சு நட்புறவுக் கழகம்

142. தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள்

தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தயாரித்து  வழங்கப்படும் இரு வானொலி நிகழ்ச்சிகள்

தாய்மொழியை பேசுவதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு ஆங்கில மோகத்தில் டாம்பீகமாக வாழ்ந்து வருபவர்கள் அதிகம். அந்நிய நாடுகளுக்குச் சென்ற சிலருக்கு தனது சொந்த நாட்டின் பெயரை சொல்தற்கே வெட்கம். அப்படிச் சென்று அங்கு தொழில் புரிபவர்கள் மத்தியில் ஒரு சிலர் சொந்த பந்தங்களை அனுசரித்துப் போவதும் அரிது.

இதையெல்லாம் தாண்டி, நாடுவிட்டு நாடு சென்றாலும் தமிழ் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகளைத் தயாரித்து, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியாக அதை மெருகேற்றி, உள்நாட்டுக் கலைஞர்கள் பலருக்கும் களம் அமைத்து உதவி செய்து வருகின்றார் அவுஸ்திரேலியாவிலிருந்து தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய தமிழ் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவு வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ''வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி''யை தொகுத்து வழங்கி வருகின்றது. இந்நிகழ்ச்சியானது கடந்த மூன்று வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி நேயர்களது மனம் கவரும் வகையில் அமைந்திருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். 

கலை இலக்கியம் சார்ந்த விடயங்களும், சமூக அக்கறை சார்ந்த விடயங்களும் நிகழ்ச்சியை அலங்கரித்து மேலும் வலு சேர்க்கின்றன. தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சியில் நம் நாட்டிலுள்ள பலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஜனாப். முஹம்மது எஸ். முஹ்ஸீன், வானொலிக் கலைஞர்களான ஏ.ஜே. ஷஹிம், பாத்திமா ரிஸ்வானா, மரீனா இல்யாஸ் சாபி, சைபா அப்துல் மலீக், பஸ்மினா அன்ஸார், பாத்திமா பர்ஸானா ஆகியோரின் அயராத உழைப்பில் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக தொடர்ந்தும் இடம்பெற வேண்டுமென்பதே நேயர்களது பேரவா.

''ஆக்கங்கள் தரமானதாகவும் எந்தவொரு சமயத்தையோ ஓர் இனத்தினையோ அனுவளவேனும் தாக்காமல் இருப்பதும் மிக முக்கியமானது என்பதே அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் அதன் முஸ்லிம் நிகழ்ச்சிப் பிரிவின் நோக்கமாகும். வளர்பிறை நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம் இஸ்லாமிய சகோதரத்துவ மற்றும் இனங்களுக்கும் சமயங்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகும். அதுவே இஸ்லாம் கூறும் வழிமுறை மற்றும் வாழ்க்கை முறையுமாகும். இந்த வரம்புகளுக்குள்ளிருந்து எழுதப்படும் ஆக்கங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் என்றும் எந்தவொரு தனிமனிதனையோ அல்லது சமூகத்தினையோ நிந்திப்பதோ புண்படுத்துவதோ எமது நோக்கமல்ல'' என்று நிகழ்ச்சியாக்கம் பற்றிய நேயர்களுக்கான கருத்தாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஏ.ஜே. சஹிம் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

தற்போது இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் பல இலக்கியவாதிகளாலும், ஆர்வலர்களாலும், பல நேயர்களாலும் விரும்பிக் கேட்கப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சியின் இடையிடையே வரும் இஸ்லாமிய கீதங்கள் தொடர்ந்து கேட்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகின்றதெனலாம். 

இன்று நாடகங்கள் அருகிப் போய்விட்ட நிலையில் 161 ஆவது வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சியில் மரீனா இல்யாஸ் சாபி அவர்களால் எழுதப்பட்ட ''கடிவாளமில்லாத குதிரைகள்'' என்ற நாடகத்தை செவிமடுக்க முடிந்தமை மகிழ்வூட்டியது.

நாம் இஸ்லாமிய கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்ந்து வந்தாலும் நமது சமூகத்தின் ஒரு பகுதியினர் மேலைத்தேய கலாசாரங்களில் மூழ்கி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய கருப்பொருளை சுமந்ததொரு நாடகம் இதுவாகும். அதில் ஸெய்த்தூன் என்ற பெண் தன் மகனான ஜவ்பரை மிகவும் செல்லமாக வளர்க்கின்றாள். ஸெய்தூனின் கணவர் இவற்றை மிகவும் கண்டிக்கின்றார். நாம் வாழும் சூழலுக்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது தவறில்லை என்ற எண்ணப்பாட்டில் வாழும் ஸெய்த்தூன், ஜவ்பர் ஒரு ஆங்கிலப் பெண்ணை திருமணம் முடிப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றாள். அவளை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றினால் சரியென நினைக்கிறாள். ஆனால் அந்த ஆங்கிலப் பெண்ணோ ஒரு நாத்திகவாதி என ஜவ்பர் சொல்லும்போது அதை கேட்டுக்கொண்டிருந்த ஸெய்தூனின் கணவருக்கு ஏற்படும் அதிர்ச்சி, நேயர்களான எமக்கும் தொற்றிவிடுகின்றது.

இன்று இலங்கையில் வாழும் பலரும் மேலைத்தேய கலாசாரங்களைப் பின்பற்றி தமது வாழ்க்கைப் பாதையைத் திசைமாற்றிக் கொண்டிருப்பது கண்கூடு. அத்தகையவர்களுக்கு இந்த நாடகம் வழிகாட்டியாக அமையும் என்று ஆணித்தரமாகச் சொல்லாம்.

கவிதைகள் பொதுவாக எல்லா தலைப்புகளிலும் உள்ளடக்கபட்டுள்ளதோடு முக்கியமான நூல் விமர்சனங்களையும் வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சியில் செவிமடுக்கக் கூடியதாக இருக்கின்றது. நூல் விமர்சனங்களைப் பொறுத்தமட்டில் நமது தமிழ் சகோதரர்களின் நூல்கள் பலவற்றையும் இந்நிகழ்ச்சிகளில் கேட்கக் கூடியதாக இருந்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோல வரலாற்றுச் சம்பவங்கள் அழகிய முறையில் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இஸ்லாமிய நிகழ்ச்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது வளர்பிறை முஸ்லிம் சஞ்சிகை நிகழ்ச்சி. மேலும் இதில் கிராத், நபிமொழி, குர்ஆன் விளக்கம், சிறுகதை, அனுபவப் பகிர்வு, படித்ததும் சுவைத்ததும், உரைச் சித்திரம், கவியரங்கு ஆகிய விடயங்களும் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியை செவிமடுக்க விரும்புபவர்கள் http://www.atbc.net.au/ என்ற இணையத்தள முகவரியினூடாக கேட்டு மகிழலாம்.

தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் தொகுத்து வழங்கப்படும் மற்றுமொரு நிகழ்ச்சி ''வளர் பிறை லண்டன் முஸ்லிம் குரல்'' என்ற  வானொலி நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியையும் அல்ஹாஜ் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்கள் தயாரித்து வழங்க, பாத்திமா ரிஸ்வானா மற்றும் மரீனா இல்யாஸ் சாபி ஆகியோர் தொகுத்து வழங்குகின்றார்கள். பல இலக்கியவாதிகளின் ஆக்கங்கள் இந்த நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன. கடந்த மூன்று வாரங்களாக ஒலிபரப்பப்பட்டு வரும் ''வளர் பிறை லண்டன் முஸ்லிம் குரல்'' என்ற நிகழ்ச்சியும் பெருந்திரளான நேயர்களைக் கவர்ந்ததொரு நிகழ்ச்சியாகக் காணப்படுகின்றது. இதில் முக்கியமான துறைகளில் சாதனை புரிந்த ஆளுமைகளின் நேர்காணல்கள் ''சந்திப்பு'' என்ற பெயரில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வழமை போன்று இதிலும் கவிதைகள், ஹதீஸ்கள், சொற்பொழிவுகள், நூல் விமர்சனங்கள், இஸ்லாமிய கீதங்கள் இடம்பெற்று வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்துகொண்டு தமிழ் பேசும் இஸ்லாமியர்களால் ஒலிபரப்பாகும் இவ்விரு வானொலி நிகழ்ச்சிகள் மென்மேலும் சிறப்பாக இடம்பெறுவதற்கு வாழ்த்துவதோடு, உள்நாட்டுக் கலைஞர்களுக்கு களம்கொடுத்து உதவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முஹ்ஸீன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன்!!!

141. சிறகு முளைத்த சிந்துகள் பாடல்கள் தொகுதி மீதான சிறப்புக் கண்ணோட்டம்

சிறகு முளைத்த சிந்துகள் பாடல்கள் தொகுதி மீதான சிறப்புக் கண்ணோட்டம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வெளிவந்திருக்கிறது மூத்த எழுத்தாளர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்களின் ''சிறகு முளைத்த சிந்துகள்'' எனும் பாடல்களடங்கிய தொகுதி. 98 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் 87 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலானது அப்துல் குத்தூஸ் அவர்களின் ஐந்தாவது நூல் வெளியீடாகும். ஏற்கனவே ஸ்ருதி தேடும் சந்தங்கள் (பாடல்) 1999, சம்மதமில்லாத மௌனம் (கவிதை) 2000, தேறாத தேர்வு நாடி (கவிதை) 2001, வெற்றுக் கண் (கவிதை) 2016 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

''சிறகு முளைத்த சிந்துகள்'' நூலானது பாடல் துறையில் ஆர்வங்காட்டும் பாடலாசிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. உள்நாட்டுப் பாடலாசிரியர்களின் பாடல்களுக்கு முக்கியங்கொடுத்துவந்த 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளிலிலிருந்து இலங்கை வானொலியில் இந்த நூலாசிரியரின் பல பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு பிரபல இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டு வௌ;வேறு முன்னணிப் பாடகர்களால் பாடப்பட்டுள்ளன. இசையை இரசிக்காத உள்ளங்கள் இல்லை என்று சொல்லலாம். இசைப் பாடல்கள் இரசிகர்களின் மனதைக் கட்டிப்போடக் கூடியவை. ஏனைய துறைப் படைப்புகளைவிட இசைப் பாடல்களே வாசகர்களின் அல்லது நேயர்களின் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சில பாடல்கள் காலத்தால் அழியாதவையாக நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.

நூலாசிரியர் தனதுரையில் ''தூரமாகிப் போன நம் இடைவெளியை ஓரமாக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்டதே இந்நூல். இதுவரையில் வானலை வழியே வந்து, உங்கள் வாசற் கதவுகளைத் திறந்து, செவிகளை ஊடறுத்து, இதயங்களை ஈர்த்த எனது பாடல்களைக் கோவையாக்கி சிறகு முளைத்த சிந்துகளாய் உங்கள் வாசிப்புக்காக இத்தால் வழங்கி வைக்கின்றேன். ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்கு முன்பதாக என் கற்பனைக்கு முளைத்த சிறகுகள், கன்னித் தமிழைப் புணர்ந்தபோது கருத்தரித்த கவிதைகள் இலங்கை வானொலி, இலங்கை ரூபவாஹினி வழங்கிய இறக்கைகளைக் கட்டிக் கொண்டு உங்கள் வாழ்விடம் தேடி வலம் வந்திருக்கின்றன பல தடவைகள். அதற்காக அடியேன் நான் தாண்ட வேண்டியிருந்தது பல கடவைகள். ஆம். அது நம் நாட்டுக் கலையகங்களின் பண்பாட்டோடு சம்பந்தப்பட்ட சமாச்சாரம், இசைப் பாடல்களை நூலாக்கும் முயற்சி எமது நாட்டைப் பொறுத்தவரையில் இன்னும் வளர்ச்சியடையாத வாய்ப்பாடாகவே இருந்துகொண்டிருக்கிறது. இலக்கியத் துறையின் ஏனைய வடிவங்களான சிறுகதை, கவிதை, நாவல், நாடகம், விமர்சனம் சார்ந்த நூற்களோடு ஒப்பிடும் போது இசைப் பாடல் நூற்களின் வெளியீடானது விசையோடு பேசக்கூடிய விடயமாக இல்லை'' என்று பாடல்கள் நூல் வெளியீட்டின் சிரமம் பற்றிக் குறிப்பிடுகின்றார். 

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம், விமர்சனம், சிறுவர் படைப்புக்கள் போன்ற ஏனைய துறைகளுடன் ஒப்பிடும் போது பாடல்களடங்கிய நூல்களின் வெளியீடு மிகவும் குறைவே. இளந் தலைமுறைப் படைப்பாளியான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ''மெல்லிசைத் தூறல்கள்'' என்ற பாடல்களடங்கிய நூல் 2015 இல் வெளிவந்துள்ளது என்ற தகவல் நினைவுக்கு வருகிறது. அத்துடன் மர்கூம் இசைக்கோ நூர்தீன் அவர்களின் ''வானலைகளில் தேன் துளிகள்'', மருதூர் ஜமால்தீனின் ''இஸ்லாமிய கீதங்கள்'', மலரன்பனின் ''மாவலியே மாநதியே'' இப்படியாக வெளிவந்துள்ள ஒரு சில பாடல்களடங்கிய தொகுதியானது புதிதாக பாடல் துறைக்குள் வருபவர்களுக்கு நிச்சயமாக பெரும் துணை புரியும். 

இசைப் பாடல் நூல் வரிசையில் நூலாசிரியரின் ''சிறகு முளைத்த சிந்துகள்'' என்ற இரண்டாவது நூலே ஸ்ருதி சேர்க்கப்பட்ட சந்தங்களாக இருப்பது அவதானிக்கத்தக்கது. இந்த நூலில் உள்ள அனைத்துப் பாடல்களும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அரங்கேற்றம், மெல்லிசைப் பாடல்கள், சந்தனமேடை, ஒலிமஞ்சரி நம் நாட்டுப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகளிலும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கலையரங்கம், காதம்பரி, உதயகீதம், மின்னும் தாரகை போன்ற நிகழ்ச்சிகளிலும், உள்ளுர் வீடியோ திரைப் படங்களான அன்புள்ள அவள், முதல் வார்த்தை, மலரே மௌனமா போன்ற திரைப்படங்களிலும் ஒலி, ஒளிபரப்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. ''சிறகு முளைத்த சிந்துகள்'' நூலில் அன்பு, காதல், சோகம், தாய்மை, தத்துவம், மழலை, நட்பு, இயற்கை போன்ற பல கருப்பொருட்களை மையப்படுத்தியதாகவே பாடல்கள் பாடலாசிரியர் அப்துல் குத்தூஸ் அவர்களினால் யாக்கப்பட்டுள்ள பாடல்களே உள்ளடங்கியுள்ளது. வாசகர்களின் இரசனைக்காக சில பாடல்களை இங்கு எடுத்து நோக்குவோம். 

இசையமைப்பாளர் ஆர். முத்;துசாமி என்பவரால் இசையமைக்கப்பட்டு ரோகினி சகோதரிகளால் பாடப்பட்ட இறை துதி (பக்கம் 12) என்ற பாடல் இறைவன் துதி பாடும் பாடலாக அமைந்திருக்கின்றது. நமக்குள் இருக்கும் ஆற்றல், திறமை எல்லாம் தந்தது இறைவன். இறைவனின் அருள் கொண்டு ஒரு சிறந்த படைப்பாளியாகத் திகழும் நூலாசிரியர் இறைவனை எண்ணி எழுதியிருக்கும் பாடலில் அவரது மார்க்கப் பற்றையும் அவதானிக்க முடிகின்றது. எதுவுமே தானாகக் கிடைப்பதில்லை. கடவுளின் கடாட்சமே தலையாயது என்பதை இப்பாடல் மூலம் உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர்.

கவிபாடக் குரல் தந்த இறைவா - உனை
துதி பாட நான் வந்தேன் தலைவா
கலை வாழ்விலே புகழ் கோடியே
புகழ் யாவும் நீ செய்த அருள் கூடியே

தினந்தோறு முன் துணை வேண்டினேன்
இசை பாடினேன் ஓர் இடம் தேடினேன் - அவ்
இடம் என்றும் எனக்கில்லை உனக்காகுமே
கலை வாழ்விலே புகழ் கோடியே
புகழ் யாவும் நீ செய்த அருள் கோடியே

கண்ணன் நேசம் என்ற இசையமைப்பாளரினால் இசையமைக்கப்பட்டு திலக நாயகம் போல் என்ற பாடகரால் பாடப்பட்ட தாயே உனக்காக... (பக்கம் 15) என்ற பாடல் தாயின் பெருமையை உணர்த்தி நிற்கின்றது. பாசம் என்ற சொல்லுக்கு பாத்திரமானவள் தாய்தான். தாயின் அன்பும் அரவணைப்பும் இன்றி ஒருவன் தரணியில் மிக நல்லவனாக இருக்க முடியாது. தாயின் நிழலில் வளரும் குழந்தை மென் மனது படைத்தாக இருக்கும். கவிஞரின் மெல்லிய மனதை இப்பாடலினூடாக இனங் காணலாம்.

என் தாயே உனக்காக நான் பாடுவேன்
என்னாளும் உனை எண்ணி நான் வாழுவேன்
தந்தாயே எனக்காக உன் வாழ்வையே
தவித்தாயே எனைக் காக்க தினம் நீயுமே

கண்ணாகக் காப்பாயே எனை நாளுமே
காணாமல் துடிப்பாயே மனம் வாடியே
பொன்னாக நினைத்தாயே எனை நீயுமே
புகழ் சேர வளர்த்தாயே புவி மீதிலே

பயாஸ் ரட்ணம் என்ற இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்டு எம்.ஜே. அன்சார் என்ற பாடகரால் பாடப்பட்ட காற்றின் காதல் (பக்கம் 19) என்ற பாடல் ரசிக்கத் தக்கதாக அமைந்திருக்கின்றது. சொற் சேர்க்கைகள் புதுமை சேர்க்கின்றன. இப்பாடலை செவி வழி கேட்காவிட்டாலும் வார்த்தைகளின் வர்ண ஜாலத்தில் நமக்கே ஒரு மெட்டு பிறந்து வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றது. தென்றல் உண்ண வேண்டும் என்று பூவானது தேனைச் சிந்துகிறதோ? என்ற கற்பனை அபாரமானது.

கன்னிப் பூவைப்
பின்னிக் கொள்ள
காற்று வந்ததோ - பூங்
காற்று வந்ததோ

காதின் ஓரம்
வந்து காதல்
சேதி தந்ததோ - புது
சேதி தந்ததோ

தென்றல் தொட்ட போது பூவும்
நாணம் கொண்டதோ - அதை
வானம் கண்டதோ
தென்றல் உண்ண வேண்டு மென்று
தேனைச் சிந்துதோ - பூ
தேனைச் சிந்துதோ

ஆர். முத்துசாமியால் இசையமைக்கப்பட்டு கமலோஜினி என்ற பாடகியால் பாடப்பட்ட செல்லக் குழந்தை (பக்கம் 29) என்ற பாடல் அருகிலேயே சிறு குழந்தை ஒன்றை பார்க்கும் பிரமையை ஏற்படுத்துகின்றது. குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது? குழந்தைகளோடு இருப்பவர்களும் ஒரு குழந்தையாக மாறித் தம் கவலைகளை மறந்து விடுவார்கள். குழந்தையின் மென் கன்னங்கள் உலகிலுள்ள அனைத்தையும் விட அழகானதல்லவா? பிரிதொரு பாடலில் கூட குழந்தையின் கன்னத்தை சீன நகரப் பட்டே என்று பாடலாசிரியர் வர்ணித்திருக்கும் கற்பனை பிரமாதம். அந்தப் பிஞ்சுக் குழந்தை பற்றிக் கவிஞனின் பார்வை கீழுள்ள வரிகளில் இவ்வாறு அமைந்திருக்கின்றது.

செல்லக் குழந்தை ஒன்று
மெல்லத் தவழ்ந்து வந்து
என்னை அணைத்துக் கொள்ளுதே
சொல்லத் தெரியாமல்
சொல்லிப் புரியாமல்
கண்ணைச் சிமிட்டுகின்றதே

முத்துச் சிரிப்போடு நித்தம் துடிப்போடும்
முத்தம் எனக்குத் தருகுதே
கொஞ்சும் கிளி போலும் கூவும் குயில் போலும் 
பிஞ்சாய் மழலை சொல்லுதே
சொல்லித் தெரியாமல்
சொல்லப் புரியாமல்
கண்ணைச் சிமிட்டுகின்றதே

இசையமைப்பாளர் ஆர். முத்துசாமியால் இசையமைக்கப்பட்டு பாடகி உதயராணியால் பாடப்பட்ட சிறகில்லாப் பறவை (பக்கம் 65) என்ற பாடல் காதல் பிரிவை எடுத்துக் கூறுகின்றது. காதல் என்ற ஒன்றால்தான் உலகம் இயங்குகின்றது. மானிடம் தழைக்கின்றது. பார்வைகள் மோதி இதயங்கள் பரிமாறப்படும் போது காதல் பிறக்கிறது. அவ்வாறு பிறந்த காதல் பிரிந்து போனால் ஏற்படும் ஏக்கம், கலக்கம், துயரம் எல்லாவற்றையும் இப் பாடல் கொண்டுள்ளமை அவதானிப்புக்குரியது.

பறவை போல சிறகிருக்கும்
பிறவியாக நான் இருந்தால் 
உறவை நாளும் வளர்த்திருப்பேன்
பிரிவை நானும் மறந்திருப்பேன்
தூதனுப்ப ஆளுமின்றி
காதிரெண்டில் சேதியின்றி
மாது நானும் மயங்குகிறேன் இங்கே - என்
மன்னவனும் போன இடம் எங்கே

நீயில்லாது வாழும் மங்கை
நீரில்லாத ஓடம் இங்கே
வேரில்லாத மரம் எனக்கு
வேண்டியவன் இல்லை இங்கே
தூதனுப்ப ஆளுமின்றி
காதிரெண்டில் சேதியின்றி
மாது நானும் மயங்குகிறேன் இங்கே - என்
மன்னவனும் போன இடம் எங்கே

பாடல் என்பது, நினைத்த மாத்திரத்தில் எழுத முடியாது. சூழ்நிலைகளை, சந்தங்களை, இசையை மனதிலிருத்தி அதற்கேற்ற விதத்தில் புதுமையைப் புகுத்தி, காலத்துக்கேற்றாற் போல் எழுத வேண்டும் என்பதே அதற்கான காரணம். அதனால் நிறைய மினக்கெட்டே எழுத வேண்டியிருக்கிறது. அவ்வாறான முயற்சியில் நூலாசிரியர் பெரும் வெற்றி பெற்றதாகவே உணர்கிறேன். கவிதைகள் மீது அதீத ஈடுபாடு உடைய கவிஞருக்கு பாடல்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டமை ஒன்றும் வியப்பல்ல. அவ்வாறு அவர் எழுதிய பாடல்கள் இசையமைக்கப்பட்டிருப்பதானது அவரது எழுத்துக்குக் கிடைத்த அங்கீகரமாகும். இவரது ''சம்மதமில்லாத மௌனம்'' என்ற சந்தக் கவிதை நூலை அந்நாட்களில் வாசித்த நான் எனது கவித்திறனை வளர்த்துக்கொள்ள அந்த நூல் பெரும் வாய்ப்பாக அமைந்தது என்று முழு சம்மதத்துடன் சொல்லியே ஆகவேண்டும். மென்மேலும் அவரது முயற்சிகள் சிறந்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - சிறகு முளைத்த சிந்துகள்
நூலின் வகை - பாடல்
நூலாசிரியர் - அக்கரையூர் அப்துல் குத்தூஸ்
வெளியீடு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
தொலைபேசி - 0772040919

140. முக்கோண முக்குளிப்பு கட்டுரை நூல் பற்றிய கண்ணோட்டம்

முக்கோண முக்குளிப்பு கட்டுரை நூல் பற்றிய கண்ணோட்டம்

சந்திரகௌரி சிவபாலன் எழுதிய முக்கோண முக்குளிப்பு நூல் ஜேர்மன் எழுத்தாளர் சங்கத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. 57 கட்டுரைகளை உள்ளடக்கி 194 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்நூல் இலக்கிய இன்பம், அறிந்ததும் புரிந்ததும், சிந்தனையின் தேனூற்று ஆகிய மூன்று விடயங்களின் கீழ் பிரித்து நோக்கப் படுகின்றது.

வாழ்ந்துவிட்டோம் என்பது முக்கியமல்ல. வாழும் வரை எதை சாதித்தோம் என்பதுதான் முக்கியமானது. வெறுமனே பிறந்தேன்.. வாழ்ந்தேன்.. இறந்தேன் என்ற எண்ணப்பாடு உள்ளவனால் ஒருபோதும் வாழ்க்கையில் உயர முடியாது. அவ்வாறு முன்னெறுவதற்கு நல்ல விடயங்களை அவன் கடைப்பிடித்து ஒழுக வேண்டும்.

நல்ல விடயங்கள எவை? தீய விடயங்கள் எவை? என்பதை நாம் பலவாறு அறிந்துகொள்கின்றோம். ஆயினும் பல சிறந்த புத்தகங்களை வாசித்து அறிவதினூடாக நாம் அறியாத பல விடயங்களைப் பற்றி அறியக் கிடைக்கின்றது.

அத்தகைய வாசிப்புக்கு ஏற்ற ஒரு நூலாகக் காணப்படும் முக்கோண முக்குளிப்பு பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும்.

நூலாசிரியர் பகுத்தறிவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். பகுத்தறிவு என்றால் ஒரு விடயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதன் சாதக, பாதக நிலைமைகளை உணர்ந்து செயற்படுவதைக் குறிக்கின்றது.

இன்று கடவுள் கோட்பாட்டை மறுப்பவர்கள் பகுத்தறிவுவாதிகள் என்று தம்மை கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் எதுவுமே தானாக தோன்றாது. அதை தோற்றுவிக்க ஒரு சக்தி இருக்க வேண்டும். அந்த சக்தி இறைவன் என்பதை புரிந்துகொள்ள முடியும். எனவே பகுத்தறிவு என்பது எதையும் முழுமையாக ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும் என்பதை சுட்டி நிற்கின்றது.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எவர் சொன்னாலும் அதன் உண்மைப் பொருளை காண வேண்டும். அதுவே அறிவு என்ற கருத்துடைய குறள் மூலம் இந்த விடயம் நன்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.

தமிழர் கலாசாரத்தில் தாலி என்ற கட்டுரை தாலியின் மகத்துவத்தை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.

'கணவன் வாழும் வரை மனைவியின் மார்பில் எப்போதும் இத்தாலி தவழ வேண்டும். அதை நெஞ்சோடு தாங்கி வாழும் தன்மையை காலம் முழுவதும் அப்பெண் எடுத்துக்காட்ட வேண்டும்.  மார்பிலே உயிரோட்டம் உள்ள இடத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபஞ்சர் முறை போல தொழிற்படுகிற்னதாம். எனவே தாலி பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரமன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்ல வேண்டும்' என்கிறார் நூலாசிரியர்.

எழுத்தாளனை ஏளனம் செய்யும் சமுதாயம் என்ற கட்டுரையினூடாக யதார்த்த சிக்கல்கள் பேசப்பட்டிருக்கின்றன. 

ஒரு திரைப்படமோ, பாடலோ எழுத்தாளன் இல்லாமல் உருவாக முடியாது அடிப்படையை விட்டுவிட்டு வெளிப்படையை மாத்திரம் பார்த்து ரசிப்பவர்கள் எழுத்தாளனின் சிரமங்களை உணர்வதில்லை. கற்பனை என்பது மிக இலகுவாகக் கிடைத்து விடுகின்றது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அந்தக் கற்பனைக்கு உயிர் கொடுத்து கருவாக்கி அதை படைப்பாக பிரசவித்து அது மக்கள் மத்தியில் சென்றடையும் வரை ஒரு எழுத்தாளன் அயராது உழைக்கின்றான். காதில் ஹெட்ஃபோன் மாட்டிக்கொண்டு பாடலை ரசிப்பவர்கள் அப்பாடலை எழுதிய எழுத்தாளனை மறந்து விடுவது வேதனைக்குரியது.

'கோல் எடுக்கும் மன்னன் மக்களுக்காய் மக்களை ஆட்சி செய்கின்றான். எழுதுகோல் எடுக்கும் எழுத்தாளன் மக்களுக்காய்த் தன் அறிவை விதைக்கிறான்' என்று நூலாசிரியர் மிக ஆத்மார்த்தமாக எழுத்தளர்கள் பற்றி குறிப்பிடுகின்றார்.

சமூக சிந்தனையுடன் இலக்கியம் படைக்கும் நூலாசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

நூல் - முக்கோண முக்குளிப்பு 
நூலின் வகை - கட்டுரை
நூலாசிரியர் - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
வெளியீடு - ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்
தொலைபேசி - 00491718001955
மின்னஞ்சல் முகவரி - c.gowry@yahoo.de  
வலைத்தளம் - www.gowsy.com  
FB - Gowry Sivapalan

139. சின்னப் பாப்பா சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

சின்னப் பாப்பா சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

இலக்கியம் தோற்றம் பெற்ற காலம் முதல் சிறுவர் இலக்கியமும் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது என்பது இத்துறை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்கின்ற போது அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துதல், விளையாடச் செய்தல், அவர்களின் நற்பண்புகளை வளர்த்தல் போன்ற இன்னும் பல துறைகளில் இவ்விலக்கியம் தமது வகிபாகத்தினை பெருமளவில் வழங்கி வந்துள்ளது. அதனால் சிறுவர் இலக்கியம் இன்றைய காலம் வரை அழிவு, சிதைவு எனும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து அதில் பெற்ற வெற்றிகளின் உந்துதலினால் எழுச்சி கண்டு வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

எந்த சமூகத்தில் நாகரிக, பண்பாடுகள் உயர்ந்து காணப்படுகிறதோ அந்த சமூகம் உலகிற்கு பல முன்மாதிரிகளை வழங்கத் தொடங்குவதோடு நாளைய தலைமைத்துவத்திற்கான பண்பியல்புகளைச் சொல்லுகின்ற தகுதியினையும் பெற்றுக் கொள்கிறது.

இன்றைய உலகில் அமைதியின்மை, ஒழுக்க, மனித நேய மீறல்கள் என்பன பல்கிப் பெருகி வியாபிப்பதற்கு கவனிப்பாரற்று தான்தோன்றித்தனமாக வாழத் தலைப்படுகின்ற சிறார்களின் பங்களிப்பு காரணமாக இருக்கின்றது. இத்தகைய ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுவதற்கும், சிறுவர் சமுதாயம் சிறந்த முறையில் வாழத் துணிவதற்கும் நம்மிலிருந்து பாரிய முயற்சிகள் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது பிள்ளைகளில் அதிக அக்கறை செலுத்த முற்படுகின்ற போது அங்கே அமைதியும் சந்தோசமும் தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிறுவர் இலக்கியங்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்து வருகின்றன. சிறுவர் இலக்கியங்களின் மூல நோக்கமே சிறந்த சிறுவர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவதேயாகும்.

அந்தவகையில் கலாபூஷணம் இலக்கிய வித்தகர் பீ.ரீ. அஸீஸ் அவர்களின் சிறுவர் இலக்கியப் பங்களிப்பு மிகக் காத்திரமானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். அவர்களை நல்வழிப்படுத்துவது மிக முக்கியமானதொன்றாகும். கலாசாரம், பண்பாடு, ஒழுக்க விழுமியம் என்பவற்றைப் பேணுகின்ற சிறுவர் சமுதாயம் உருவாவதோடு சட்ட விரோத செயல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சிறுவர்களுக்காக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் பீ.ரீ. அஸீஸ். அவற்றில் ஷஷசின்னப் பாப்பா|| எனும் நூல் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் சிறுவர்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய இரசனை மிகுந்த பல்வேறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றும் அன்பு, இரக்கம், ஈகை, ஆன்மீகம், சகோரத்துவம் போன்றவற்றைப் போதிப்பதாக அமைந்துள்ளன.

அழகிய அட்டைப்படத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூல் 12 பாடல்களை உள்ளடக்கி 32 பக்கங்களைக் கொண்டதாக வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு பாடலுக்கும் பொருத்தமான வர்ணப் படங்கள் சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சிறபப்பளிக்கிறது.

''பசுவே பசுவே'' (பக்கம் 13) எனும் பாடலில் ஜீவகாருண்யம் இழையோடுவதையும் சின்னச் சின்ன வசனங்கள் மூலம் சிறப்பாக அவை விளங்கப்படுத்தப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

பசுவே பசுவே
பால் தரும் பசுவே
பசும் புல் மேய்ந்திட
வருவாய் பசுவே!

பச்சைத் தளிர்கள்
இருக்குது பசுவே
பசியாற உணக்கு
தருவேண் பசுவே!


''ஒற்றுமையாய் வாழ்வோம்'' (பக்கம் 17) எனும் பாடலில் ஒற்றுமையின் உயர்வு பற்றி கவிஞர் குறிப்பிட்டுள்ளார். எச்சந்தர்ப்பத்திலும் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.


சின்னஞ்சிறு பாலர் நாங்கள்
சிறகடித்து மகிழுவோம்
வண்ண வண்ண பூச்சிகளாய்
பறந்து திரிந்து பாடுவோம்!

உள்ளமெல்லாம் ஒன்றுபட்டு
உற்ற நண்பர்களாய் ஆகுவோம்
நல்லதையே செய்து நிதம்
நாணயமாய் பழகுவோம்!

''சிறப்படைவோம்''  (பக்கம் 21) எனும் பாடல் அன்னை தந்தையரை மதித்து அவர்களை கண்களைப் போல் பாதுகாப்பதோடு அவர்களுக்கான பணிவிடைகளையும் செய்ய வேண்டும் என்ற கருத்தைத் தொனிப்பொருளாகக் கொண்டு அமைந்துள்ளது.

அன்பு நிறைந்த பிள்ளைகளே
அழகாய் வாழும் பிள்ளைகளே
பண்பு நிறைந்த வாழ்க்கையினை
படித்துக் கொள்வோம் நாங்களுமே!

அன்னை தந்தையிடம் பணிவோம்
அனுதினமும் அவர்கள் சொல் நடப்போம்
கண்ணைப் போல காத்து நிதம்
கருணை மழையை  நாம் பொழிவோம்!

இவ்வாறு பல படிப்பினைகள் நிறைந்த பாடல்களை தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் சின்னப் பாப்பா யாவரும் படித்து பயன்பெறக்கூடிய நூலாகும். கவிஞருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - சின்னப் பாப்பா
வகை - சிறுவர் பாடல்;
நூலாசிரியர் - பி.ரீ. அஸீஸ்
தொலைபேசி  - 0772902042
ஈமெயில் - azeesphfo@gmail.com
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 210 ரூபாய்

138. துணிந்து நில் சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

துணிந்து நில் சிறுவர் பாடல் நூல் பற்றிய கண்ணோட்டம்

கவிஞர் பீ.ரீ. அஸீஸின் 11 ஆவது நூல் துணிந்து நில் என்ற சிறுவர் பாடல் நூலாகும்.  சிறுவர் இலக்கியத் தொகுதியாக வர்ணப் படங்களை உள்ளடக்கி 28 பக்கங்களில் சிறுவர் விரும்பும் பாடல்களைக் கொண்டு அழகாக அமைந்திருக்கின்றது இந்த நூல்.

சிறுவர்களின் போக்குக்கு ஏற்ப பாடல்களை எழுதி அதை சிறுவர்கள் வாசிக்கும் அந்தத் தருணம் ஒரு எழுத்தாளனுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிடுகின்றது. சிறுவர்களுக்கு சொல்ல விரும்பும் நற் செய்திகளை, அவர்களுக்குள் விதைக்க நினைக்கும் நல்ல பழக்கங்களை காட்சிப்படுத்தல்களுடன் கூடிய பாடல்களாக சொல்லும்போது அதை சிறுவர்கள் மிகவும் விரும்புவார்கள். அந்த யுக்தியை நூலாசிரியர் இந்நூலில் கையாண்டிருப்பது சிறப்புக்குரியதெனலாம்.

துணிந்து நில் என்ற அறிவுரை கூறும் தலைப்பு இந்நூலுக்கு சூட்டப் பட்டிருப்பதானது எந்நேரமும் உறுதியாக நின்று கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதை சிறுவர்களுக்கு உணர்த்துவதாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் இது அவசியமானதொரு அறிவுறுத்தலாகக் காணப்படுகின்றது. இதை நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'சிறுவர்கள் மீது துஷ்பிரயோகங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவது நாளாந்த செய்திகளில் முக்கிய பங்கினை வகித்து நிற்பது குறித்து நாம் எல்லோரும் கவலையும் வெட்கமும் அடையக் கூடிய நிலையில் இருக்கின்றோம். இத்துஷ்பிரயோகங்கள் சமூகத்தை விட்டும், நாட்டை விட்டும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அவை ஒழிக்கப்பட வேண்டுமானால் சிறுவர்களின் மனோ நிலையிலும் அதற்கெதிரான நிலைப்பாடு இருக்க வேண்டும். இதனை முன்வைத்தே அவர்களைப் பார்த்து துணிந்து நில் என்று சொல்லி ஒரு தைரியத்தை வரவழைக்க முயற்சித்துள்ளேன். இம்முயற்சி வெற்றி பெறும்போது சிறுவர்களுக்கெதிரான  செயற்பாடுகளில் ஒரு தளர்வு நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் மகிழ்;ச்சியும் சந்தோசமும் கொண்ட சுதந்திர சிறுவர் சமுதாயம் தோற்றம் பெறும்'.

தலைப்புக்கான காரணம் வாசகரை மிகவும் மகிழ்விக்கின்றது. காரணம் இன்றைய சிறுவர்கள் தான் நாளைய சமுதாயத்தின் தூண்(தலைவர்)களாவர். அவர்களின் மனோநிலை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், செயற்பாடுகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுடன் கல்வியிலும் அவர்களை நிலைத்து நிற்க வழியமைக்க வேண்டும். நிறைய நல்ல நூல்களை வாசிப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல நூல்கள், நல்ல நண்பர்கள் என்பதை அவர்கள் மனதில் பதிக்க வேண்டும். அவ்வாறு பதிப்பதற்கு இத்தகைய சிறுவர்களுக்கு ஏற்ற நூல்களை சிறுவர்களின் வாசிப்புக்காக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறு வயது ஞாபகங்கள் மிகவும் பசுமையானவை. அந்த பசுமையை நாம் எமது சிறுவர்களுக்கும் வழங்குவதற்கான நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவர்கள் நிலவை அதிகம் விரும்புவார்கள். நிலா நிலா வா வா (பக்கம் 09) என்ற முதல் பாடல் பின்வருமாறு அமைந்திருக்கின்றது.

நிலா நிலா வா வா
நீல வானில் நீந்தி வா
பாலர் எம்மைக் காண வா
பார்த்திருக்கோம் ஓடி வா

வான வெளி மீதிலே
தவழ்ந்து வரும் குழந்தை நீ
உன் பூரிப்பில் பூ மலரும்
பூப்பறிக்க ஓடி வா!

மலரும் மொட்டுக்கள் (பக்கம் 11) என்ற பாடல் சிறுவர்களின் மனதில் உள்ள வலிகளை அழகாக படம்பிடித்துக் காட்டுகின்றது. வெளியில் சொல்ல பயந்துகொண்டு சில சிறுவர்கள் தமக்கு நடந்த கொடுமைகளை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்பார்கள். அவர்களின் வலியை கீழுள்ள வரிகளில் காணலாம்.

மலரும் மொட்டுக்கள் நாங்கள்
எம்மை சிதைக்காதீர்கள்
புலரும் பொழுதுகள் நாங்கள்
எம்மைத் தடுக்காதீர்கள்

வளரும் அரும்புகள் நாங்கள்
எங்களைக் கொய்யாதீர்கள்
வதைத்து எம்மைக் கொடுமைப்படுத்தும்
செயலையும் செய்யாதீர்கள்

துணிந்து நில் (பக்கம் 15) என்ற மகுடத் தலைப்பு முன்னர் குறிப்பிட்டது போல சிறுவர்களிடம் துணிவையும் தைரியத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளன. சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் அவர்களின் வாழ்க்கையைச் சிதைக்கின்ற அரக்கர்கள் வாழும் உலகம் இது. அத்தகைய கொடியவர்களிடமிருந்து பிஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை. அந்த வகையில் ஒரு எழுத்தாளனின் பங்களிப்பாக இவ்வரிகள்...

துணிவிருக்கும் உனக்குள் - அதை
துணையாய் கொள்ளு நீயும்
அடங்கிப் போகும் எண்ணம் - உன்னை
அடக்கியாளும் திண்ணம்!

சிறுவர் உம்மைச் சிதைக்க
சிறுத்தை பின்னால் தொடரும் - நீ
உறுமிக் கொண்டு பாய்ந்தால் - அது
ஓடி ஒழிந்து கொள்ளும்!

பாரில் அழிவே மிஞ்சும் (பக்கம் 20) என்ற பாடல் நற் சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக அமைந்துள்ளது.  நற்குணங்களைப் பேணி நடக்காவிட்டால் பாரில் அழிவே மிஞ்சும் என்கிறார் கவிஞர்.

உண்மை பேசி உத்தமராய்
நன்மைசெய்து வாழுவோம்
அன்பை மனதில் இருத்தியே
அறங்கள் செய்து உயருவோம்

இன்பம் பொங்கும் வாழ்வை
இணைந்து நாமும் பெறுவோம்
துன்பம் செய்யும் எண்ணம்
தொடர்ந்தால் துடைத்து எறிவோம்

சிறுவர்களுக்காக குரல் கொடுக்கும் படைப்பாளிகள் வரிசையில் கவிஞர் பீ.ரீ அஸீஸும் சிறந்த பங்களிப்புக்களை நல்கி வருகின்றார். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - துணிந்து நில்
நூலின் வகை - சிறுவர் பாடல்கள்
நூலாசிரியர் - பி.ரீ. அஸீஸ்
தொலைபேசி - 0772902042
ஈமெயில் - azeesphfo@gmail.com
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 200 ரூபாய்

137. கோதுமைக்கனி நாவல் மீதான ஒரு கண்ணோட்டம்

கோதுமைக்கனி நாவல் மீதான ஒரு கண்ணோட்டம்

இலங்கையின் நாவல் இலக்கியத் துறையில் முஸ்லிம்களின் பங்கு அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் மாவனல்லை உ. நிசார் அவர்களின் கோதுமைக்கனி என்ற நாவல் வெளிவந்திருக்கின்றது.

இஸ்லாமிய வரைமுறைகளை மீறி வாழும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இந்த நாவல் சித்தரித்திருக்கும் விதம் சிறப்பாக இருக்கின்றது. அல்லாஹ் தடுத்தவற்றின் பால் மனம் நாட்டம் கொள்ளும்போது அது வாழ்வில் எத்தகைய துன்பங்களை எல்லாம் ஏற்படுத்தும் என்பதற்கு ஆதம் - ஹவ்வா அலைஹி மஸ்ஸலாம் ஆகியோரின் சம்பவம் சிறந்த உதாரணமாகும்.

ஆதம் - ஹவ்வா அலைஹி மஸ்ஸலாம் ஆகியோரை காலம் முழுக்க சுவனத்தில் வாழ்வதற்கு ஆசீர்வதித்த அல்லாஹ், குறித்த கனியை மட்டும் சாப்பிட்டு விட வேண்டாம் என்பதாகத் தடுக்கின்றான். எல்லாவித சொகுசையும் அனுபவித்து ஆள முடிந்த சுவர்க்கத்தில் என்றென்றும் தங்குவதற்கு அந்தக் கனியைச் சாப்பிடுமாறு ஷைத்தான் அவர்களை ஆசை காட்டுகின்றான். அல்லாஹ் சொன்னவற்றை கேட்காமல் அதைப் புசித்த இருவருக்கும் அல்லாஹ் தண்டனை வழங்குமுகமாக அவர்களைப் பூமிக்கு அனுப்புகின்றான். பிறகு அவர்கள் தம் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு விமோசனம் பெற்றார்கள். அந்தவகையில் இந்த நாவலின் பிரதான பாத்திரமாக வரக்கூடிய ஹம்தூன் இறை கட்டளைக்கு மாறு செய்து இறுதியில் கைசேதப்படுவதை ஆதம் - ஹவ்வா அலைஹி மஸ்ஸலாம் சம்பவத்துக்கு ஒப்பீடு செய்கின்றார் நூலாசிரியர் உ. நிசார்.

ஹம்தூன் ஊரில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர். அனைவரது அன்புக்கும் பாராட்டுக்கும் உரித்தானவர். அவரது வலது கையாக அவரை வளர்த்தவர் ஓடியார் என்று அழைக்கப்படக்கூடிய ஹம்தூனின் மாமா. ஹம்தூனின் மனைவி ஆரிபா. ஆரிபாவின் தாயான நாச்சியாவும் ஆரிபாவின் சகோதரியான ஆராவும் ஹம்தூனின் வீட்டுக்கு வந்திருக்கின்றார்கள். அப்போது எதிர்பாராத விதமாக குறி சொல்பவள் அவ்விடத்திற்கு வருகின்றாள். அவள் வந்ததும் நாச்சியா அவளுக்கு சாப்பாடு, பணம் எல்லாம் கொடுத்ததும் அவள் ஆரிபாவையும் ஆராவையும் பார்த்துவிட்டு இப்படிச் சொல்கின்றாள்.

'இவங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் தள்ளி ஒதச்சிக்கொண்டு ஒரு மரத்துல படர்ந்து செல்லும் கொடிகளாட்டம் இருப்பாங்க'

இதைக் கேட்டு நாச்சியாவுக்கு அதிர்ச்சியாகவும் மனவேதனையாகவும் இருந்தது. அவள் சொல்வதெல்லாம் நடந்திடவே கூடாது என்று நாச்சியா இறைவனை வேண்டிக் கொள்கின்றாள். இதை அவதானித்துக் கொண்டிருந்த ஓடியார், ஹம்தூன் வந்ததும் அவரிடம் சொல்கின்றார். அதாவது ஓடியார்தான் குறி சொல்பவளை அவ்வாறு சொல்லச் சொன்னதையும், அதற்குக் காரணம் ஹம்தூன் ஆராவையும் விரும்பியதுதான் என்பதையும் வாசகர்கள் அப்போது உணர்ந்து கொள்கின்றார்கள்.

ஆராவுக்கு வேறொரு திருமணம் பேசுகின்றார்கள். ஆனால் ஹம்;தூன் ஆராவை தான் மணமுடிப்பதாக அவர்களை மிரட்டுகின்றான். நாச்சியாவும் அவளது கணவனும் தன் இளைய மகனை ஹம்தூனிடமிருந்து மீட்டெடுக்க படாதபாடு படுகின்றார்கள். ஆனால் இறுதியில் ஹம்தூன் மற்றும் ஓடியாரின் சதி வென்று ஆரா ஹம்தூனுக்கு இரண்டாம் தாரமாகின்றாள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரண்டு சகோதரிகளை ஏக காலத்தில் திருமணம் முடிப்பது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹராமான (தடுக்கப்பட்ட) இந்தக் காரியத்தைச் செய்த ஹம்தூனை ஊர் மக்களும் பின்னாலிருந்து திட்டித் தீர்க்கின்றார்கள். ஹம்தூனுடன் நேடியாகக் கதைத்து தெளிவுபடுத்த முடியாமல் அவர்களும் விக்கித்துப் போகின்றார்கள். காலம் தன் பாட்டுக்கு கடந்து போகிறது.

ஆரிபாவும் ஆராவும் அதன் பிறகு மனமுறிவு கொள்கின்றார்கள். இரு சகோதரிகளுக்குள்ளும் சதாவும் சண்டை ஏற்படுகின்றது. ஹம்தூனுக்கு இது பெரிய தலை வலியாக இருக்கின்றது. காலப் போக்கில் ஹம்தூனின் இரு மனைவியருக்கும் குழந்தைகளும் பிறக்கின்றனர். அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகின்றனர்.

அவர்கள் வளர, வளர தமது தந்தை செய்த பாவ காரியம் அவர்களுக்கும் நன்கு விளங்குகின்றது. அவர்கள் தனது தந்தையை வெறுக்கின்றார்கள். ஊரில் முகம்காட்ட முடியவில்லை என்று தாய்மாரிடம் முறையிடுகின்றார்கள். ஆராவின் சம்மதமின்றியே இத்;திருமணத்தை பலவந்தமாக ஹம்தூன் நடத்திக் கொண்டார் என்பதை அறிந்து பிள்ளைகள் தந்தையான ஹம்தூனை எதிரியைப் போலப் பார்க்கின்றார்கள்.

வருடங்கள் கடந்தோடி விடுகின்றன. ஹம்தூனின் மகளுக்கு திருமணப் பேச்சு வார்த்தை நடக்கின்றது. ஆனால் ஹம்தூன் ஆராவை மணமுடித்த குற்றத்தால் யாரும் பெண்ணெடுக்காமல் திருமணம் தடைப்படுகின்றது. நாவலின் இறுதியில் ஹம்தூனின் மகளுக்கு பல தடைகளுக்குப் பின்பு திருமணமாகின்றது. ஆனால் அவ்வாறு அவள் மணமுடித்த மாப்பிள்ளை குறித்த சம்பந்தியின் வேலைக்காரப் பெண்ணான சிங்களப் பெண்ணின் மகன் என்று அறியக் கிடைக்கின்றது. அச்சமயம் ஆராவின் தந்தை தன்னால் என்ன பாடுபட்டிருப்பார் என்பதை ஹம்தூன் எண்ணி வருந்துகின்றான்.

ஆசை என்பது யாருக்கும் ஆபத்தில்லாததாக அமையும்போதே அந்த ஆசை நிறைவேறுகையில் சந்தோசம் கிடைக்கும். ஆனால் ஹம்தூன் ஆசைப்பட்டதை ஓடியார் நிறைவேற்றிக் கொடுப்பதானது இஸ்லாத்தின் வரம்பை மீறும் ஒரு செயலாக நாவலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மார்க்கத்துக்கு முரணான இவ்வாறான காரியங்களைச் செய்தால் இறுதியில் என்ன தண்டனையை அல்லாஹ் தருவான் என்பதை துல்லியாமாகச் சொல்லியிருக்கின்றார் நாவலாசிரியர் உ. நிசார். கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், சிறுவர்கதைகள் ஆகிய துறைகளில் பல நூல்களை வெளியிட்டிருக்கும் உ. நிசார் அவர்களின் முதலாவது நாவலே இந்த கோதுமைக்கனி என்ற நாவலாகும். தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் வெளிவந்துள்ள இந்த நூலானது உ. நிசாரின் 25 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - கோதுமைக்கனி
நூலின் வகை - நாவல்
நூலாசிரியர் - உ. நிசார்
தொலைபேசி - 0778216281
வெளியீடு - பானு வெளியீட்டகம்
விலை - 400 ரூபாய்

136. சிறகொடிந்த வண்ணக்கிளி நாவல் மீதான ஒரு பார்வை

சிறகொடிந்த வண்ணக்கிளி நாவல் மீதான ஒரு பார்வை

ஆர். ராஜலிங்கம் எழுதிய சிறகொடிந்த வண்ணக்கிளி என்ற நாவல் 22 அத்தியாயங்களை உள்ளடக்கியதாக 194 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தால் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே காதலி தேடிக் கொடுத்த மனைவி (2005) எனும் நாவலை வெளியிட்டிருக்கின்றார். சிறகொடிந்த வண்ணக்கிளி என்ற நாவல் இவரது இரண்டாவது நாவலாகும்.

பண்டாரவளை சென் மேரிஸ் தமிழ்க் கலவன் பாடசாலையின் பழைய மாணவரான இவர், சித்திரா, சித்திரக் கதைப் பத்திரிகை, ஹரே கிருஷ்ணா ஆன்மீக ஏடு ஆகியவற்றின் ஆசிரியராகவும், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, மித்திரன், விஜய் ஆகிய பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தனது சொந்தப் பெயரிலும் நவசீலன், நரசிம்மன், ராஜா அண்ணா ஆகிய புனைப் பெயர்களிலும் இவர் தனது ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

சிறகொடிந்த வண்ணக்கிளி என்ற இந்நாவலின் பிரதான கதா பாத்திரங்களாக விமல், ரம்யா, வேணி ஆகியோர் சித்திரிக்கப்படுகின்றார்கள். அழகிய, மெல்லிய காதலை கருவாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டிருக்கின்றது. அத்துடன் தூய நட்பும் மிக ஆழமாக இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றது.

வாசகரை கட்டிப் போடும் விதமாக இயல்பான எழுத்து நடையுடன் கூடிய இந்நாவலில் அத்தியாயங்களுக்குள் பொருத்தமான சித்திரங்களும் இடம்பெற்றிருக்கின்றமை வாசிப்பின் பால் ஈர்த்து விடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விமலுக்கு பதவி உயர்வுக்கான கடிதம் கிடைத்த சந்தோசத்தில் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றான். அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஜெனரல் மனேஜராக அவன் பதவி உயர்வு பெற்றிருப்பது சாதனைக்குரிய விடயம். ஆனால் இந்த வெற்றிக்கெல்லாம் சொந்தக்காரி அவனது தோழி ரம்யாதான்.

விமலுக்கு தாய் தந்தையர் இல்லை. அண்ணனின் பராமரிப்பில்தான் விமல் வளர்கின்றான். ஆனால் அண்ணன் திருமணம் செய்த பிறகு அண்ணி விமலை வேறுபடுத்திப் பார்த்தாள். மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அண்ணனும் விமலை கண்டுகொள்ளாமல் இருக்க கல்வி கற்பதற்குக் கூட யோசிக்க வேண்டிய நிலைமை விமலுக்கு ஏற்படுகின்றது. எனவே பூங்காக்களில் பொழுதைப் போக்கிவிட்டு வீட்டுக்கு செல்லும் பழக்கத்தை ஆரம்பித்த விமலை ரம்யாவின் திடீர் வருகை தடுத்து விடுகின்றது.

அவள் வசதிக்காரி. ஆனால் ஆடம்பரமில்லாமல் பழகக் கூடியவள். அரசாங்கப் பாடசாலையில் படிப்பதனால் பெரிய செலவுகள் இல்லையென்றும் தனக்கு கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தை விமலின் படிப்புச் செலவுக்கு தருவதாகவும், மேலதிக பணத் தேவை ஏற்பட்டால் தன் தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்வதாகவும் ரம்யா உறுதிமொழி கூறுகின்றாள். ரம்யாவின் வழிகாட்டுதலால் விமலின் கல்வி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளப்படுகின்றது.

காலங்கள் உருண்டோட இருவரது நட்பும் விருட்சமாய் வளர்கின்றது. ரம்யாவுக்கு விமல் மீது தீராத காதல் உண்டாகின்றது. ஆனால் அதை அவனுக்கு வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பால் உணர்த்த முற்படுகின்றாள். அவள் அவனிடம் பலமுறை தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்த நினைத்தாள். எனினும் விமலோ ரம்யாவை மிக மரியாதையான எண்ணத்துடன் மாத்திரம் பார்த்தால் அவனுக்குள் அவ்வாறான எண்ணங்கள் ஏற்படவில்லை.

ரம்யாவுக்கு எந்த விடயமாயினும் சஸ்பென்ஸ் வைத்துப் பேசும் பழக்கம் இருந்தது. அதனால் அவள் தன் காதலை வெளிப்படுத்தாமல் நாணத்துடன் இருந்துவிடுவாள்.

இதற்கிடையில் நிலைமை எல்லை மீறிப் போகின்றது. விமல் திடீரென ஒருநாள் வந்து, ரம்யாவின் உயிர் தோழியான வேணியை திருமணம் செய்யப் போவதாகக் கூறியதும் வானமே இடிந்து தன் தலையில் விழுந்ததாய் உணர்கின்றாள் ரம்யா. தன் உயிர் தோழியான ரம்யாவிடம் வேணி தன் திருமணத்தைப் பற்றிப் பேசுகின்றாள். ரம்யா அதற்கு பட்டும் படாமலும் பதில் சொல்கின்றாள். சில நாட்களில் ரம்யாவின் நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை உணர்ந்த வேணி வற்புறுத்தி காரணம் கேட்டதும் விமலைத்தான் விரும்பிய உண்மையை கூறுகின்றாள். வேணி தன் காதலனை ரம்யாவுக்காக விட்டுக்கொடுக்க எண்ணுகின்றாள். ஆனால் விமலின் மனதில் வேணி இருப்பதால் ரம்யா வேணியை ஆறுதல்படுத்தி யதார்த்தத்தை உணர்த்துகின்றாள்.

இந்நாவலில் இன்னொரு பாத்திரமாக சித்திரிக்கப்பட்டிருக்கும் முகுந்தன் என்பவன் வேறொரு கல்லூரியின் மாணவன். அவன் அடிதடிகளுக்கு பேர்பெற்ற முரடன் அவன் ரம்யாவின் தோழியை கிண்டல் செய்ததால் ரம்யாவின் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகின்றான். முகுந்தன் ரம்யாவையும், விமலையும் பற்றி தவறாகப் பேசுகின்றான். இதனால் விமலுக்கும் முகுந்தனுக்குமிடையில் அடிதடி நிகழ்கின்றது.

விமல் - வேணி திருமணம் இனிதே நிறைவடைகின்றது. மனதுக்குள் ஆயிரம் கவலைகள் இருந்தாலும் தோழியின் நல்வாழ்வுக்காக தன் காதலை தியாகம் செய்துவிடுகின்றாள் ரம்யா. மூவரும் எப்போதும் போல நண்பர்களாகவே இருக்கின்றார்கள். வேணியின் வற்புறுத்தலால் ரம்யா சேகர் என்பவனைத் திருமணம் செய்கின்றாள். மிகவும் நல்லவனான அவன் ரம்யாவின் மீதும் அதிக அன்பைப் பொழிகின்றான்.

சேகருடன் நட்புறவாடி, முகுந்தன் ரம்யாவை மிரட்டுகின்றான். விமலையும் ரம்யாவையும் பற்றி சேகரிடம் இல்லாத பொல்லாதவற்றைக் கூறி குடும்ப வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்தி விடுகின்றான். ரம்யா தான் தாய்மையடைந்த விடயத்தைக் கூறியபோது கூட அது தன் பிள்ளையில்லை என்று சேகர் கூறுவதினூடாக ரம்யாவின் குடும்ப வாழ்வில் ஏற்பட்டுள்ள இடைவெளி வாசகர்களுக்கு அச்சொட்டாக விளங்குகின்றது. இந்நிலையில் ரம்யாவின் தந்தையும் இறந்துவிட, கணவனும் கைவிட கர்ப்பிணியாக தான் எங்கிருக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியப்படுத்தாமல் தன் வாழ்வை மிகவும் துயரத்தோடு கடத்துகின்றாள். வேணிக்கும் விமலுக்கும் என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் ரம்யாவின் வீட்டு வேலைக்காரியை சந்தித்து அவள் பற்றிய தகவல்களை அறிகின்றனர்.

பிரசவ நேரத்தில் ரம்யா இறந்து விடுவதாகவும், விமல் - வேணி தம்பதியர் ரம்யாவின் குழந்தையை வளர்த்து ஆளாக்கப் போவதாகவும் நாவல் நிறைவடைகின்றது. சொல்லாத காதலும் - தூய நட்பும் என்ற இரு விடயங்களில் நாவல் நகர்ந்திருக்கின்றது.

நூலாசிரியர் இன்னும் பல காத்திரமான படைப்புகளை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் அவரது இலக்கியப் பணி தொடர  வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - சிறகொடிந்த வண்ணக்கிளி
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - ஆர். ராஜலிங்கம்
தொலைபேசி - 0778900871
வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம்
விலை - 200 ரூபாய்

135. பதுமராகம் நாவல் மீதான ஒரு பார்வை

பதுமராகம் நாவல் மீதான  ஒரு பார்வை

இறக்காமம் பர்ஸானா ரியாஸ் எழுதியுள்ள பதுமராகம் என்ற நாவல் 195 பக்கங்களில் 16 அத்தியாயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கின்றது. இவரது நாடகங்கள் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒலி, ஒலி பரப்பாகியுள்ளதுடன் எங்கள் தேசம் பத்திரிகையில் இவரது கவிதைகள், சிறுகதைககள் களம் கண்டுள்ளன.

சமூகத்தில் நடக்கின்ன்ற பிரச்சினைகளை முன்னிருத்தி இவரது கன்னி நூலான பதுமராகம் நாவல் படைக்கப்பட்டிருப்பதானது இலங்கை நாவல் துறையில் பெண்களின் வகிபாகத்தை சுட்டி நிற்கின்றது. இந்நாவலில் வருகின்ற பிரதான பாத்திரமாக சாச்சா (ஒருவரின் பெயர்) என்பவர் இரண்டாம் தாரமாக சாமிலா எனும் பெண்ணை திருமணம் செய்ததிலிருந்து நடக்கின்ற சம்பவங்களை இந்நாவல் சித்திரிக்கின்றது.

சாச்சாவின் மகள் ஹஸ்னா தாய்ப் பாசத்திற்காக
மிகவும் ஏங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளுக்கு சதாவும் தாயின் ஞாபகம் வந்து அலை மோதுகின்றது. தந்தை சாச்சாவோ தன் மகளை கண்ணுங் கருத்துமாக வளர்ப்பதில் அதிக பிரயத்தனப்படுகின்றார். தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக அவள் மகளைப் பார்த்துக்கொண்ட போதிலும் ஹஸ்னாவுக்கு தாய் இல்லாத பெருங்குறை மனதில் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது.

அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவன் ஹரீஸ். கவிதைகளின் மீது அதிக நாட்டம் கொண்டவன். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் இணைந்து இலக்கியம் பற்றி பேசுவதில் அலாதி இன்பம் அவனுக்கு. அவன் ஹஸ்னா மனதளவினால் அனுபவிக்கும் துயரத்தைக் கண்டு சாச்சாவுக்கு மறுமணம் செய்கின்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றான்.

முதலில் சாச்சா மறுமணம் செய்வதற்கு மறுத்து விடுகின்றார். மனைவியாக வருகின்றவள் ஹஸ்னாவைத் தாயாக நின்று பார்த்துக் கொள்வாளா? என்ற அவரது ஐயம் நியாயமாக இருந்தாலும் ஹஸ்னாவின் ஏக்கத்தைப் போக்கும் அருமருந்தும் அதுவாகவே இருப்பதாகக் கூறி ஹரீஸ் அவரை சமாதானப்படுத்துகின்றான். இவ்வாறிருக்க ஹஸ்னாவும் தனது தோழிகளின் தாய்மார்களை ஏக்கத்துடனும் ஏமாற்றத்துடனும் கவனிப்பதை அவதானித்த சாச்சா மறுமணம் செய்வதற்கு ஒப்புக்கொள்கின்றார்.

மனைவியாக வந்த சாமிலாவைச் சுற்றி சின்னக் குழந்தைகள் உட்கார்ந்து அவளை ரசித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த பிஞ்சு ஹஸ்னாவும் தனக்குத் தாயாக வந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாள். சிறிது நேரத்தில் குழந்தைகள் எல்லாரும் சென்றுவிட ஹஸ்னா மாத்திரம் அந்த அறையில் இருந்துவிடுகின்றாள். சாமிலா அவளிடம்,

'எல்லாரும் போறாங்களே நீ போகலையாம்மா?' என்றதற்கு,

'இல்லம்மா வாப்பா வார வரைக்கும் இங்க இருந்து உங்க பார்த்துக் கொள்ளச் சொன்னாங்க' என்கின்றாள்.

அப்போது அவ்விடத்துக்கு வந்த பெண்ணிடம் சாமிலா,

'யார் இந்தப் புள்ள.. இவவ கூட்டிற்றுப் போங்க' என்று சொல்கின்றாள்,

அந்தப் பெண், 'இவ ஹஸ்னா. ஒங்கட ஹஸ்பன்ர மகள் இவதான்' என்று சொன்னதும் சாமிலாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

அதன் பிறகு அந்த வீட்டில் அதிகமான நேரம் சண்டையிலேயே கழிகின்றது. சாச்சாவுக்கு, சாமிலாவுக்கு, ஹஸ்னாவுக்கு வீடே நரகமாகிப் போகின்றது.

தன்னிடம் பொய் சொல்லி திருமணம் செய்து விட்டதாகவும், தனது சகோதரன் தன்னை நன்றாக வாழ வைக்கவில்லை என்றும் சாமிலா தன் விதியை நொந்துகொள்கின்றாள்.

எதற்காக திருமணம் செய்தோம் என்ற ஆதங்கத்தில் சாச்சா குடிப் பழக்கத்துக்கு ஆளாகின்றார்.

அவர்களின் வாழ்க்கை இவ்வாறு கழிய ஹரீஸ் என்பவனின்  கதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் கூறப்பட்டிருக்கின்றது.

தான் எழுதிய கவிதைகளை எல்லாம் பஸ்ஸில் தொலைத்து விடுகின்றான் ஹரீஸ். அவனது 'பேக்'கிற்கு பதிலாக அதே போன்ற இன்னுமொரு பேக் அவனைப் பார்த்து நகைக்கின்றது. அதில் குறித்த வாசிகசாலையின் முத்திரை பதிந்த சில புத்தகங்கள் காணப்படுகின்றன. காலப் போக்கில் ஹரீஸின் கவிதைகள் தலைப்பு மாற்றப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாக அதை ஜீரணிக்க முடியாத ஹரீஸ் மற்றும் அவனது நண்பன் முஜீப் வாசிகசாலையைத் தேடி விரைகின்றனர்.

அந்த புத்தகத்துக்கு சொந்தக்காரி நூர்ஜஹான் என்ற பெண் என அறிந்து அவளது விட்டுக்கு ஹரீஸும், முஜீபும் செல்கின்றனர். அதி உச்ச கோபத்தில் இருந்த ஹரீஸ் நூர்ஜஹானைப் பார்த்ததும் காதலில் விழுந்துவிடுகின்றான்.

நூர்ஜஹானின் தந்தை ஹரீஸிடம் விசாரித்துப் பார்த்ததில் சாமிலா ஹரீஸின் ஊரிலேயே இருப்பதாக அறிகின்றார். சாமிலாவும் நூர்ஜஹானும் இணைபிரியா தோழிகள் என்றும் மணமுடித்தில் இருந்து சாமிலா தன்னிடம் பேசவில்லை என்றும் நூர்ஜஹான் கூறுகின்றாள். பக்கத்து வீடான சாமிலாவின் தொலைபேசி இலக்கத்தை சாச்சாவின் மூலம் பெற்றுக்கொடுத்த ஹரீஸ் நூர்ஜஹான் பற்றி மனதில் ஆயிரம் கனவுகளுடன் அங்கிருந்து விடை பெறுகின்றாள்.

ஹஸ்னா தனது தந்தையின் தலை வலி போக்கும் மருந்தாக மதுபானத்தை நினைத்திருந்ததால் அவருக்கு அதை வாங்கிக் கொடுக்க தீர்மானிக்கின்றாள். எனவே காலை சாப்பாட்டுக்கு தந்தையினால் தரப்படும் காசை சேகரித்து மதுபான போத்தலை போன்றிருக்கும் ஆயுர்வேத மருந்து போத்தலை வாங்கி வீதியை கடக்கையில் விபத்துக்குள்ளாகின்றாள். இதனால் சாச்சா மதுப் பழக்கத்தை கைவிடுவதுடன், நூர்ஜஹானின் தொடர்பால் அறிவுறுத்தப்பட்டு சாமிலாவும் தன் தவறை உணர்ந்து ஹஸ்னாவுக்கு நல்லதொரு தாயாக மாறிவிடுகின்றாள்.

ஹரீஸினதும் நூர்ஜஹானினதும் திருமணப் பேச்சு வார்த்தை இடம்பெறுகின்றது. ஆனால் அதற்கிடையில் ஹரீஸின் மூத்த சகோதரியின் கணவன் றாசிக் வீசாவுடன் வந்து ஹரீஸின் தங்கையின் திருமணத்தைக் காரணம் காட்டி அவனை கட்டாருக்கு அனுப்பி விடுகின்றார். ஹரீஸிடமிருந்த காணியையும் அவர் தன் பெயருக்கு மாற்றி எடுக்கின்றார்.

தொழிலும் இல்லாத, காணியும் இல்லாத நிலையில் இருக்கும் ஹரீஸுக்கு நூர்ஜஹானை எப்படி திருமணம் செய்து கொடுப்பது என அவளின் தந்தை யோசிக்கின்றார். ஹரீஸோ தன் இளைய சகோதரிக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்காக வெளிநாட்டுக்குச் சென்றுவிட, நூர்ஜஹானின் நிலைமை பரிதாபமாக மாறிவிடுகின்றது.

ஹரீஸுக்கும் அவளது எண்ணம் வந்து வாட்டினாலும் தனது குடும்பத்துக்காக பொறுத்துக் கொள்கின்றான். ஆனால் றாசிக்கோ ஹரீஸுக்கு அடிக்கடி கடிதம் எழுதிப் போட்டு தனக்குத் தேவையான பணத்தை அவனிடமிருந்து அடிக்கடி பெற்றுக் கொள்கின்றான். நாட்டுக்கு வரவிருக்கும் ஹரீஸை றாசிக்கின் இன்னொரு கடிதம் மீண்டும் தடுத்து விடுகின்றது. காரணம் மூளை சரியில்லாத றாசிக்கின் தம்பிக்கு ஹரீஸின் தங்கையை மணமுடித்து வைக்கப் போவதாக றாசிக் அறிவித்திருந்தான். அதன் மூலம் தம்பிக்கு வரும் சொத்தை அனுபவிக்கலாம் என்பது அவனது அடுத்த திட்டமாக இருப்பதை அறிந்த ஹரீஸ், கட்டாரிலிருந்து வீட்டுக்கு வராமல் அங்கிருந்து  மலேசியாவுக்குச் சென்று நன்கு உழைத்து அங்கிருந்த படியே தங்கைக்கு டாக்டர் மாப்பிள்ளையைத் தேடி திருமணம் செய்து வைக்கின்றான்.

இதற்கிடையில் நூர்ஜஹானும் திருமணம் செய்து அவளது கணவனுடன் சந்தோசமாக வாழ்கின்றாள். ஹரீஸ் நாட்டுக்கு வந்து எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தனக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக் கொள்கின்றான். இப்போது அவனை மாப்பிள்ளைக் கேட்டு பலர் வரிசையில் காத்திருக்க அவனது சகோதரிகள், தாய், மச்சினன் மார் எல்லாரும் பெரிய சீதனத்துடன் பெண்ணை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஹரீஸின் எண்ணமோ ஏழைப் பெண்ணொருத்திக்கு வாழ்வளிக்க வேண்டும் என்றிருந்ததனால் இடியப்பம் விற்று தன் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு ஏழைக் குமரியை அவன் மணமுடிக்கப் போகின்றான் என்பதாக நாவல் நிறைவடைகின்றது.

சமூக நாவலினூடாக சிறந்த கதையம்சத்தைத் தந்த நூலாசிரியரான பர்ஸானா றியாஸ் இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தர வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூலின் பெயர் - பதுமராகம்
நூல் வகை - நாவல்
நூலாசிரியர் - இறக்காமம் பர்ஸானா றியாஸ்
மின்னஞ்சல் முகவரி - farsana.ba@gmail.com 
விலை - 700 ரூபாய்

134. உரிமைக் குரல் சிறுதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

உரிமைக் குரல் சிறுதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

சிறுகதைகள் ஒருசமூகத்தின் நிலையை யதார்த்தமாக எடுத்துக் காட்டுகின்றன. சிறுகதை மூலமாக குறித்ததொரு விடயத்தை செறிவாகவும், தெளிவாகவும் வெளியிட முடிகின்றது. சங்க காலத்தில் செய்யுள் வடிவில் வெளியிடப்பட்டஉள்ளுணர்வுகள் - காலமாற்றத்தில் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் பரிணாமம் பெற்றன. பாத்திரப் படைப்பு, தேர்ந்தமொழிநடை, பின்னகர்வு (FLASH BACK), உரையாடல் பாங்கு, ஆசிரியரே கதைசொல்லியாக இருத்தல் போன்ற நுட்பங்களில் சிறுகதைகளை எழுத முடிகின்றது.

இலங்கையில் சிறுகதைகள் எழுதுவோர் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். அதில் கினியம இக்ராம் தாஹாவும் இணைந்து, ''உரிமைக் குரல்'' என்ற சிறுகதை நூலை தனது கன்னிப் படைப்பாக வெளியீடு செய்துள்ளார். சீர்திருத்தக் கருத்துக்கள் மூலம் கதைகளை எழுதும் இக்ராம் தாஹா, 144 பக்கங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் ''உரிமைக் குரல்'' என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியினூடாக 20 சிறுகதைகளைத் தந்திருக்கின்றார். 

சிறுகதைகளை எழுதுகையில் இவர் பாத்திரங்களைக் கையாளும் விதம் பாராட்டுக்குரியது. அதேபோல சில சிறுகதைகளின் முடிவுகள் மனதை ரணப்படுத்தி சிந்தனையில் சிறைப்பட்டு விடுகின்றமை அச்சிறுகதைகளின் சிறப்பம்சமாகும். நியமனம் என்ற சிறுகதை அத்தகையதொரு சிறுகதையாகும். அதேபோல் எதிர்பாராத முடிவுகள் மூலம் வாசகர்களான எம்மை ஆச்சரியப்பட வைக்கும் திறன் இக்ராமின் சிறுகதைகளுகளில் நிறையவே காணப்படுகின்றன. இலட்சியக் கனவு என்ற சிறுகதையும் ஆரம்பத்தில் வாசிக்கும் போது திகிலாகத் தொடங்கி ஒரு சுவாரசியத் தன்மையை ஏற்படுத்தி, இறுதியில் நகைச்சுவையாக நிறைவடைகிறது.மொத்தத்தில் வாசிப்பவர்களுக்கு ஒரு ஆர்வத்தையே தூண்டி நிற்கின்றது.

சமூகத்தின் பிரச்சினைகளை மிகத் தத்ரூபமாகக் கூறி அதற்கான தீர்வுகளையும், பல சந்தர்ப்பங்களில் வாசகர்களின் முடிவுகளோடு ஒத்துப் போகும் விதமாகவும் இவரது பல சிறுகதைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. திருந்திய உள்ளங்கள், தர்மம், தீர்வு, வழிகாட்டி போன்ற சிறுகதைகள் நான் மேலே குறிப்பிட்ட கருத்துக்களோடு பொருந்திப் போவதை வாசகர்கள் வாசிக்கும்போது அவதானிக்க முடியும். அதேபோல இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள உரையாடல்களும் ரசிக்கத்தக்கதாகக் காணப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டிலிருந்து காலாண்டு சஞ்சிகையாக வெளிவரும் எமது ''பூங்காவனம்'' சஞ்சிகையில் 13 சிறுகதைகளை இவர் எழுதியுள்ளமை இங்கே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவிடயமாகும். 2011 மார்ச்சில் வெளியிடப்பட்டபூங்காவனம் இதழ் நான்கில் இவரது 'அன்றும் இன்றும்' என்ற சிறுகதை வெளிவந்தது. அதுபோல் 2018 மார்ச்சில் வெளியிடப்பட்ட பூங்காவனம் இதழ் 32 இல் இவரது 'மனிதம்'என்ற சிறுகதை வெளிவந்தது. 

இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் உரிமைக் குரல், இரண்டு பக்கம், திருந்திய உள்ளங்கள், வழிகாட்டி, முயற்சி, திருப்பம், தர்மம், தீர்வு, காலம் மாறிவிட்ட போதிலும், புலமைப் பரீட்சை, நியமனம் ஆகிய தலைப்புக்களிலான சிறுகதைகளை எழுதியுள்ளார். ஆகவே மொத்தமாகப் பார்க்கும் போது இவரது13 சிறுகதைகள் எமதுபூங்காவன இதழ்களை அலங்கரித்துள்ளன என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கலாம்.இவரது சிறுகதைகள் பூங்காவனம் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்தப் 13 சிறுகதைகளுடன் வாப்பாவின் வார்த்தைகள், நோன்பு வந்தாச்சு, வேலை நிறுத்தம்,நட்புக்காக ஒரு ஈமெயில், இலட்சியக் கனவு,கதைக்குள் கதை, காட்டில் ஒருஅவசர மாநாடு ஆகிய 07 கதைகளையும் சேர்த்தே நூலாசிரியரினால் ''உரிமைக் குரல்'' என்ற இந்த நூல் தொகுதியாகி, உங்கள் கரங்களில் தவழவிடப்பட்டுள்ளன. இவைதவிர இந்த நூலாசிரியரினால் எழுதப்பட்டுள்ள சிறுகதைகள் ஏராளம் என்பதை நான் நன்கு அறிவேன். அவையாவும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் நூலாக வெளியிடப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கின்றது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு படுத்துகின்றேன்.

இவர் பாடசாலைக் காலத்திலிருந்தே சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரது மாணவப் பருவத்திலேயே மாவட்ட, தேசிய ரீதியான போட்டிகளில் பங்குபற்றி பல பரிசில்களைப் பெற்றுள்ளார் என்பதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயமே. எம்.ரி.எம். இக்ராம், கினியம எம். இக்ராம், இக்ராம் தாஹா ஆகிய பெயர்களில் இவருடைய பல்வேறு வகையான ஆங்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. 

இவரதுமுதல் ஆக்கம் 1992 ஆம் ஆண்டு தினகரனில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 2000 ஆண்டுவரை தினகரன், மித்திரன், நவமணி, தினமுரசு, சூடாமணி போன்ற பல பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இடைக்காலத்தில் இலக்கியத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் 2010 ஆம் ஆண்டுமுதல் இக்ராம் தாஹா மீண்டும் தீவிரமாக எழுதத் தொடங்கியுள்ளார்.

அதேபோல் மொழிபெயர்ப்புத் துறையிலும் இவரது ஈடுபாடு அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. பாடாசாலைக் காலத்தில் சிங்களப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவரதுஅதிகமான மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் நவமணி மற்றும் தினகரன் சாளரம் பகுதியிலும் தொடர்ந்து பிரசுரமாகியுள்ளன.

இரசனைக்காக சில சிறுகதைகளை இங்கே எடுத்து நோக்குவோம்.

இந்த நூலின் மகுடத் தலைப்பைத் தாங்கி பக்கம் 29 இல் அமைந்துள்ள உரிமைக் குரல் என்ற 03 ஆவது சிறுகதையானது பெண்களின் குரலாகவே ஒலிக்கின்றது.இதிலுள்ள பின்வரும் சம்பாஷனை அதனை துள்ளியமாகப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

''உம்மா! உம்மா!'' ஹாஜராவின் குரல் கேட்டு கிணற்றடியிலிருந்து பேகம் அவசரமாக வந்தார். தன் நானாவைக் கண்டதும்,

''நானா சொகமா இருக்கீங்களா?'' எனக் குசலம் விசாரித்தார்.

''ம்..அல்லாஹ்வின் கிருபயால சொகம்.'' என்றார் நாசிக்.

''மகள் நீ மாமாக்கு டீ ஊத்தி வா' என பேகம் மகளைப் பார்த்துச் சொல்ல, ஹாஜராவும் தாயின் கட்டளைக்கு செவி சாய்த்தவளாய் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

''என்ன நானா சுபஹிலே அவசரமா இந்தப் பக்கம் வந்திருக்கீங்க?''

''தங்கச்சி.. நீ சென்ன விசயம் பத்தி விசாரிச்சு பாத்தேன். பக்கத்தூரில ஒரு பொடியனப்பத்தி தெரிஞ்ச ஒருத்தர் சென்னாரு. நீ சரின்னு சென்னா இப்போஅந்த ஊர்ப் பக்கம் போறதால பேசிட்டு வரத்தான் உங்கிட்டஒரு வார்த்த கேட்டு போக வந்தன்.''

''எங்கிட்ட எனத்தியன் கேக்கிறதுக்கு. எனக்கு இவள கரசேக்கும் வர நிம்மதியில்ல. அவள் இன்னம் படிச்சணும்னு செல்றா''

''இங்க பாரு தங்கச்சி. அவள் படிச்சு கிழிச்சது போதும். பொம்புள புள்ளகள் ஆக்கவும் தைக்கவும் பழகிக்கொண்டா போதும். இதுக்கு மேல படிச்சு என்ன செய்ய?''

''அதத்தான் நானா நானும் செல்றன். அவள்ட வாப்பா மவுத்தான பொறவு நானும் 9 ஆம் ஆண்டிலே ஸ்கூல் போறத நிப்பாட்டி கல்யாணம் பண்ணதானே பாத்தேன். ஒங்களுக்கே தெரியும் தானே.. அவள் புடிவாதம் புடிச்சதால ஓ.எல். வர படிச்ச வெச்சன். இனி படிச்சது போதும். அவசரமா தாருக்குச் சரி கட்டிக் கொடுத்தா ஏன்ட கடமயும் முடியும்.''

இந்தச் சம்பாஷனை பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள கல்வி கற்கும் உரிமையை மறுப்பதாக அமைந்துள்ளது. ஆனால் கதையின் இறுதியில் ஹாஜராவுக்கு கல்வி கற்கும் உரிமையை சில யதார்த்த சம்பவங்களோடு ஒப்பிட்டு அனுமதி வழங்கப்படுவதானது சமூகத்தின் வெற்றியாகக் கொள்ளப்படலாம். 

வாசகர்கள் இந்த நூலைக் கட்டாயம் வாங்கி மேலதிக விடயங்களைத் தெரிந்துகொள்வார்கள் என்று எண்ணுகின்றேன்.

அதேபோல தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகத்தையும் அதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் எடுத்துக் காட்டுவதாக பக்கம் 41 இல் உள்ள ''இரண்டு பக்கம்'' என்ற சிறுகதை அமைந்துள்ளது. தொலைந்த நட்பைதேடித் தருவதில் தொழில் நுட்பத்தின் நன்மையான பக்கத்தையும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி தொழில் நுட்பத்தின் தீமையான பக்கத்தையும் இந்தச் சிறுகதையை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

பக்கம் 126 இல் அமைந்துள்ள புலமைப் பரீட்சை என்ற சிறுகதையானது இன்றைய பெற்றோர்கள் மத்தியில் வேரூன்றியுள்ள பாரிய பிரச்சினையை எடுத்துக் காட்டுகின்றது. தரம் ஐந்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் இருக்கும் பெற்றோர்கள் சதாவும் மன உளைச்சலுடன் இருப்பதோடு குழந்தைகள் மத்தியிலும் அந்த நிலையை உருவாக்கி விடுகின்றார்கள். குழந்தைகளுக்கே உரிய குறும்புத் தனங்கள் இல்லாமல் இயந்திரமாக எப்போது பார்த்தாலும் டியுஷன்.. டியுஷன்.. என்று சொல்லிக் கொண்டு ஓடித் திரியும் குழந்தைகள் ஒருகட்டத்தில் பெற்றோரையும் படிப்பையும் வீட்டையும் ஆசிரியர்களையும் வெறுத்துவிட்டு வெறிச்சோடி விடுகின்றார்கள். இத்தகைய நிலைமைகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுக்கும் முகமாகவும் பெற்றோருக்கு அறிவுரைகள் சொல்வதாகவும் புலமைப் பரீட்சை என்ற சிறுகதை அமைந்துள்ளது.

இறுதியாகபக்கம் 137 இல் உள்ள காட்டில் ஒரு அவசர மாநாடு என்ற சிறுகதையானது மிருகங்கள்  ஒன்றுகூடி மனிதர்கள் மிருகங்களுக்கு இழைக்கும் அநியாயங்களை அம்பலப்படுத்துவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. இந்தக் கதையில் ஒவ்வொரு மிருகமும் தன் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் போது அதை வாசிக்கும் நமக்கு கன்னத்தில் அறைவதாக உணர முடிகின்றது. கட்டாயமாக இக்கதை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நூலாசிரியர் தன்னைப் பெற்றெடுத்த அன்புத் தாய் ஏ.எச். சம்சுன் நிஹாயா அவர்களுக்கும், தனதுஅன்புத் தந்தை மர்ஹூம் எம்.எம்.  தாஹா மற்றும் அன்புச் சகோதரன் மர்ஹூம் எம்.ரி.எம். நளீம் அவர்களுக்கும் நூலை சமர்ப்பணம் செய்திருப்பதானது நூலாசிரியரின் இரக்க சிந்தையையும் நன்றி மறவாத உணர்வையும் இயம்பி நிற்பதோடு எங்களையும் நெகிழ்வடையச் செய்துவிடுகின்றது. 

ஒரு சிறுகதைக்குச் சிறப்பூட்டும் அம்சங்களான மகிழ்ச்சி, துயரம், ஆச்சர்யம் போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு, நகைச்சுவைப் பாங்கு ஆகியவற்றைக் கோர்த்து இயன்றவரை சிறப்பாக இந்தச் சிறுகதைகளை நூலாசிரியர் இக்ராம் நகர்த்தியுள்ளார். அத்தோடு "உயிர்த் துடிப்புள்ள பாத்திரப் படைப்புகளைக் கொண்டும், இலகுவான மொழிநடையைக் கொண்டும் சிறுகதைகளை நகர்த்திச் செல்லும் பாங்கு, இவரது சிறுகதைகளின் வெற்றி எனலாம். சமூக நோக்கோடு எழுதப்பட்டுள்ள இக்ராமின் கதைகள் இலக்கிய உலகில் நிச்சயம் பேசப்படும்" என்று நூலின் பின்னட்டைக் குறிப்பில் தியத்தலாவஎச்.எப். ரிஸ்னா குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர், நண்பர் இக்ராமின் இந்தச் சிறுகதைகள் இனிமையாகவும் நிறைவாகவும் இருப்பதால் வாசகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமேயில்லை. எதிர்காலத்திலும் பல காத்திரமான சமூகம் சார்ந்த சிறுகதைகளை எழுதி ஒரு சிறந்த கதாசிரியராக இலக்கிய உலகில் பரிணமிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இவருக்கு நிறையவே காணப்படுகின்றன. தன் எழுத்து முயற்சிகளைக் கைவிடாது மென் மேலும் இலக்கியப் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

''உரிமைக் குரல்''என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து இன்னும் பல காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்று ஆழ் மனதால் பிரார்த்தித்து எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!

நூல் - உரிமைக் குரல்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - இக்ராம் தாஹா
தொலைபேசி - 0775009222
வெளியீடு - கானெம் கினியம குளோபல் சொசைடி
விலை - 400 ரூபாய்