Saturday, December 25, 2021

147. "மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு

 "மொட்டுக்களின் மெட்டுக்கள்" சிறுவர் பாடல்கள் நூல் திறன் நோக்கு

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட ஒருவர். இவர் எழுதியுள்ள "மொட்டுக்களின் மெட்டுக்கள்" என்ற சிறுவர் பாடல்கள் அடங்கிய நூல் 70 பக்கங்களில் வெளிவந்துள்ளது. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த நூலை வெளியீடு செய்துள்ளது. கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் ஏற்கனவே 2015 இல் மௌனத்தின் சத்தங்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டு இலக்கிய உலகில் தனக்கான சிறந்த ஒரு இடத்தைத் தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் தனது மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதத் தொடங்கியுள்ளார். தொடர்ந்து பிரதேச போட்டிகள் தொடக்கம் பல்கலையில் நடைபெறும் இலக்கியப் போட்டிகள் வரை இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் விருதுகளையும் வென்றுள்ளார்;. அத்துடன் 2017 இல் ஏறாவூர்ப் பிரதேச செயலக கலாசார பேரவையின் கலாசார கீதம் இயற்றியமைக்காக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு இவருக்கு இளங்கலைஞர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் கே. நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "சிறந்த புரட்சிக் கவிஞராக மிளிர்ந்த புரட்சிக் கமால் பிறந்த ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், புரட்சிக் கமால் பரம்பரையின் இன்றைய கால கட்டத்து இளந்தலைமுறைக் கவிஞர்" என்று இவருக்கு மகுடம் சூட்டியுள்ளார். அத்துடன் ஏறாவூரைச் சேர்ந்த மறைந்த கவிஞர் அனலக்தர் அவர்கள் நௌஷாத் பற்றி எழுதிய குறிப்பொன்றில் "அப்பழுக்கில்லாமல் என் அடிச் சுவட்டைப் பின்பற்றி, மாணவரை சமூக மயப்படுத்தும் மகத்தான சேவையை நௌஷாத் செய்து வருகின்றார். அத்துடன் கலையிலக்கியப் போட்டிகளில் மாணவரை வழிப்படுத்தி, மாகாண - தேசிய மட்டங்களில் துலங்கச் செய்துள்ளமையும் பாராட்டுக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த சிறுவர் பாடல்கள் நூலில் 55 சிறுவர் பாடல்கள்  உள்ளடங்கியுள்ளன. இந்தப் பாடல்களுக்குப் பொருத்தமான சித்தரங்களையும் இந்த நூலில் சேர்த்துள்ளார். சிறுவர் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களின் மனதைக் கவரும் வகையில் எளிய நடையில் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதானது சிறுவர்களுடன் இவருக்குள்ள ஈடுபாட்டையும் இத்துறையில் இவருக்குள்ள புலமைத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. இத்துறையில் இவருக்குள்ள விரிந்த சிந்தனை, பரந்த அறிவு, மொழியாற்றல், வாசிப்பு மூலமான தேடல் போன்றவையே இவ்வகையான சிறந்த பாடல்களை இவர் எழுதக் காரணமாக அமைந்துள்ளன என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அத்துடன் இவரது தந்தையும் ஒரு கவிஞராக இருந்;துள்ளார். 

சிறுவர் படைப்புகளை இலக்கியவாதிகள் எல்லோராலும் இலகுவாக எழுத முடியாது. ஏனென்றால் இதற்கென்று சிறுவர்களின் மனப்பாங்குகளையும் விருப்பங்களையும் நன்கு தெரிந்து வைத்துள்ள ஒரு அலாதியான, மிகவும் மென்மையான மனம் இருக்க வேண்டும். அவை இந்த நூலாசிரியருக்கு வாய்த்திருக்கிறது. இவர் கலைமானிப் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரி மட்டுமல்லாமல் தமிழ்ப் பாடம் கற்பிக்கும் ஓர் ஆசிரியருமாவார். மாணவர்களுக்கு மத்தியில் சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ்ப் பாடத்தைச் சிறப்பாகக் கற்பித்து நற்பெயரைப் பெற்றுள்ளார். எனவேதான் இவரால் அழகிய தமிழில், சிறந்த சொற்றொடர்களைப் பயன்படுத்தி சிறந்த படைப்புகளை சர்வ சாதாரணமாக முன்வைக்க முடிகிறது. 2019 ஃ 2020 ஆம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருது வழங்கல் விழாவில் மொட்டுக்களின் மெட்டுக்கள் என்ற இந்த நூலுக்கு சான்றிதழ் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியான ஒரு செய்தியாகும். 

இந்த நூலில் உள்ளடங்கியுள்ள சிறுவர் பாடல்களைப் பொருத்தமட்டில் சிறுவர்களுடன் மிகவும் தொடர்பான தலைப்புகளில் அமைந்த பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பொம்மை, மலர்த் தோட்டம், மரம் நடுவோம், ஓடி விளையாடு, காலைக் காட்சி, காக்கை, உண்டியல், பூனை, அப்பா, புகைவண்டிப் பயணம், வானவில் ஜாலம், ஆசான் ஆகிய தலைப்புக்களில் அமைந்துள்ள பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

இனி நூலில் உள்ள சில பாடல்களை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

புத்தகம் படிப்போம் (பக்கம் 15) என்ற பாடல் புத்தகம் வாசிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசுகிறது. கால மாற்றங்களுக்கு ஏற்ப இன்று வாழ்க்கையும் மாறிவிட்டது. புதுமைகளோடு பயணித்துக் கொண்டு பழமையானவற்றைக் கைவிடும் இச்சூழலில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அருகிப் போய்விட்டது. ஆனாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தராத வாசிப்பின் இரசனையை புத்தகங்களே நிறைவாகத் தந்துவிடுகின்றன. புத்தகத்தை ஏந்திய படியும் புத்தகத்துக்கு மாத்திரமே உரித்தான வாசனையுடனும் வாசிக்கின்ற போதுதான் வாசிக்கும் விடயங்கள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துவிடுகின்றன என்று பின்வரும் வரிகள் மூலம் கவிஞர் நௌஷாத் வாசிப்பின் அவசியத்தை முன் வைக்கின்றார். 


தினம் தினம் புத்தகம் படிப்பதனால்

சிறந்த அறிவும் ஆற்றலும் பெருகிடுமே

நினைவில் அதனை நிலையாய் பதிப்பதனால் 

நல்ல பழக்கங்கமும் வாழ்வில் வந்திடுமே


புவி மெச்ச கணிப்பொறி இலக்கியங்கள் 

புத்தம் புதிதாய் வளர் அறிவியல்கள்

கவி தரும் ஆற்றல் சிறுகதைகள்

கலந்து பருக்கும் நல்ல நூல்கள்


இயற்கையின் அழகியலோடும் வனப்போடும் மிக நெருங்கியது மலர்களே ஆகும். பூக்களின் அழகு யாரையும் கட்டிப் போட்டுவிடும். வர்ண ஜாலங்கள் மனதை வசீகரிக்கும். பூக்களைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை. சிறுவர்களை மிகக் கவர்ந்த பூக்களாலும் பூக்களோடு கொஞ்சிக்குலாவும் வண்ணத்துப் பூச்சிகளாலும் அழகுறுகிறது மலர்த் தோட்டம். அவ்வாறான மலர்களின் அழைகைப்பற்றி மலர்த் தோட்டம் (பக்கம் 18) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 


அழகு மலர்கள் சிரித்து

மகிழும் கூட்டம்

உலகு விரும்பும் நிறங்கள்

நிறைந்த தோட்டம்


புலர்ந்த பொழுதில் வண்டின்

இசை பாட்டும்

இழந்த இன்பம் எல்லாம்

இணைந்து கூட்டும்


இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான் என்பதற்கு புத்திமதி (பக்கம் 30) என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு. அதாவது கைகள் இல்லாத குருவி தன் கூட்டினை எவ்வளவு அழகாகக் கட்டிவிடுகிறது? சிறுவயதில் இரசித்த இத்தகைய விடயங்கள் இப்பொழுது நினைக்கையில் மிக மிக வியப்பாக இருக்கின்றது. குருவியின் புத்திமதியை ஏற்று குரங்கு தனக்கான இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளப் புறப்படுவதாக நிறைவுறுகிறது புத்திமதி என்ற பின்வரும் பாடல். 

குருவி ஒன்று மரத்திலே.. கூடு கட்டி வாழ்ந்தது.. குடும்பமாக குஞ்சுகள்.. கூட்டினுள்ளே இருந்தன.. மழையில் நனைந்த குரங்கு ஒன்று.. மரத்தின் அடியில் நின்றது.. மரத்தின் கூட்டில் குருவிகள்.. மகிழ்ந்து வாழக் கண்டது.. அலகினாலே அருமைக் கூடு.. அமைத்து நாங்கள் வாழ்கிறோம்.. அதேபோல நீயும் உனக்கு.. கூடு கட்டி வாழுவாய்.. கையில்லாத நாங்களோ.. களிப்புடனே இருக்கிறோம்.. கையிருந்தும் கவலை ஏன்.. என்று குரங்கைக் கேட்டது.. குருவி சொன்ன யோசனைகள்.. குரங்கின் உள்ளம் தாக்கவே.. உருகி தலை நிமிராமல் வீடமைக்கப் போனது.

உண்டியல் (பக்கம் 38) என்ற பாடல் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கின்றது. சேமிப்பின் ஸ்திரத் தன்மையை குழந்தைகளிடம் ஏற்படுத்துவதற்கு உண்டியல் மிகப் பிரதானமாக உள்ளது. சிறுவயதில் இருந்தே சேமிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உண்டியல் மிகச் சிறந்த உதாரணம். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதற்கேற்ப வளர்ந்த பிறகும் கையிருப்பை சேமிப்பதற்கான வழி வகையைக் கூறுவதாக கீழுள்ள பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.


உண்டியலாம் உண்டியல்

உடைபடாத உண்டியல்

உண்டு குடித்து மிகுதி போக

சேர்த்து வைக்கும் உண்டியல்


வாழ்க்கையில் எத்தகைய உயரத்துக்குப் போனாலும் அதைக் கண்டு பொறாமைப்படாத ஒரே ஜீவன் ஆசிரியர்கள்தான். நம்மையெல்லாம் ஏற்றிவிட்ட ஏணியாகி, நம்மை ஆளாக்கிய அவர்களை வாழ்வின் கடைசி எல்லைவரை மறந்து விடவே கூடாது. ஆசிரியர்களின் ஆசியால் உயர்ந்த பல மாணவச் செல்வங்கள் இருக்கிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்ற கூற்றுக்கிணங்க ஆசிரியர்கள் எம் வாழ்வு எனும் மரத்தின் மிக முக்கியமான வேர்கள்.; ஆசிரியர்கள் பற்றி ஆசான் (பக்கம் 58) என்ற பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.


அன்னை தந்தை இருவரும்

இறைவன் தந்த அருளதாம்

அடுத்ததாக ஆசானும்

ஆண்டவனின் வரமதாம்


அறிவுக் கண்ணைத் திறக்கவே

அரிச்சுவடி தந்தவர்

விரிவுபட்ட உலகத்தை

விளங்கிக் கொள்ளச் செய்தவர்


கைத் தொலைபேசிக்கு அடிமையாகியுள்ள குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களது வாசிப்பு ஆற்றலை மேம்படுத்த இவ்வகையான காத்திரமான நூல்களை சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது இக்காலத்தின் தேவையாகவே உள்ளது. கவிஞர் கே. நௌஷாத்துக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!!


நூல் - மொட்டுக்களின் மெட்டுக்கள்

நூல் வகை - சிறுவர் பாடல்கள்;

நூலாசிரியர் - ஏரூர் கே. நௌஷாத்

தொலைபேசி - 0778205177

முதற் பதிப்பு - 2019

வெளியீடு - கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்


வெலிகம ரிம்ஸா முஹம்மத்

146. "அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு

"அடிமன அதிர்வுகள்" கவிதை நூல் ஒரு விமர்சன நோக்கு


ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரே கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் அவர்கள். டிப்ளோமா முடித்து, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியரான இவர் பல வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவத்தைக் கொண்டவர். 

இளமைப் பருவத்திலிருந்தே இலக்கியத் துறையில் அதிக ஈடுபாடு காட்டிவந்த எழுத்தாளர் கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம் கல்வி, மொழிப் பற்று, அரசியல், ஆன்மீகம், இலக்கியம் போன்ற விடயப் பரப்புகளில் எழுதி வந்த தனது ஆக்கங்களை தேசிய பத்திரிகைகளில் பல வருடங்களாக களப்படுத்தி வந்துள்ளார். பல்வேறு அமைப்புக்களின் மூலம் இதற்காகப் பல விருதுகளையும் பெற்று, பலரது பாராட்டுக்களையும் குறைவில்லாமல் பெற்றுள்ளார். தனது படைப்புககளை நூலாக வெளியிடும் முயற்சிகளில் அண்மைக் காலமாக இவர் ஈடுபட்டு வருகிறார். இந்தவகையில் இவரது மூன்றாவது நூலாக வெளிவந்திருப்பது அடிமன அதிர்வுகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதியாகும். 58 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்த நூலை காதியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 

தனது உடன்பிறப்பான மர்ஹும் எம்.எச்.ஏ. செய்னுலாப்தீன் அதிபர் அவர்களுக்கு இந்த நூலை நூலாசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். மண்ணறையில் வாழும் தனது சகோதரனுக்காக நூலாசிரியர் அடிமன அதிர்வுகள் என்ற இந்த நூலில் எழுதியுள்ள சமர்ப்பணக் கவிதை மனதை ரணப்படுத்திச் செல்கிறது. 

அடிமன அதிர்வுகள் என்ற கவிதைத் தொகுதிக்கான அணிந்துரையை பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில் "அடிமன அதிர்வுகள்" என்ற கவிதைத் தொகுதி பேசு பொருள்கள் பலவற்றையும் பேசாப் பொருள்கள் சிலவற்றையும் கொண்டு அமைந்துள்ளது. பேசு பொருள்கள் என்ற விதத்திலே தமிழ் மொழி, இயற்கை, முதியோர் நிலை, காதல் முதலியன சார்ந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். பேசு பொருள்களாயிருப்பினும் அவற்றினூடே சில புதுமைகளை வெளிப்படுத்தியுமுள்ளார். தமிழ் மொழி பற்றி அமைந்த கவிதைகளுடாக தமிழிலக்கிய வரலாறு - முக்கியமான நூல்கள் பலவும் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் நவீன கவிதைத் தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் பற்றிப் பாடாதவரில்லை என்றே குறிப்பிடலாம். கிழக்கிலங்கையைப் பொறுத்தளவிலே நீலாவணன், திமிலைத்துமிலன், அண்ணல் போன்ற மேலும் பலரும் தமிழ்மொழி பற்றிப் பாடியிருப்பினும் அவற்றினூடே இவ்வாறு தமிழிலக்கிய வரலாறு பேசப்படவில்லை..|| என்று குறிப்பிட்டுள்ளார். நூலுக்கான காத்திரமானதொரு பின்னட்டைக் குறிப்பை கிழக்குப் பல்கலைக்கழக, சிரேஷ்ட விரிவுiராளர் ஏ. ஜாபர் ஹுசைன் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

ஆன்மீகம் சார்ந்தவை, மொழிப் பற்று, இயற்கை மீதான காதல், வறுமையின் கொடுமை, முதியோர் நிலை, சமூக நிலை, காதல் கவிதைகள் ஆகிய கருப்பொருட்களில் கவிஞருக்கான கவிதை வெளி, நூலெங்கும் பறந்து விரிந்து செல்கின்றன. 

நூலிலுள்ள என் இறைவன் (பக்கம் 01) என்ற முதலாவது கவிதை உலகத்தைப் படைத்துப் பரிபாலித்து இயங்கச் செய்யும் இறைவனின் வல்லமை பற்றிப் பேசுகின்றது. கோள் மண்டலத்தைப் படைத்து அவற்றை நேரம் பிசகாமல் சீராக இயக்குபவன் இறைவன். நாம் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து எமக்கும், கண்ணுக்குப் புலப்படாத ஏனைய உயிரினங்களுக்கும் உணவளிக்கக் கூடியவன் இறைவன். மிக அழகாக எழுதப்பட்டுள்ள இக்கவிதையின் சில வரிகள் பின்வருமாறு:


அந்தரத்திற் கோள்களினை

எந்தவோர் இணைப்புமின்றி

பந்து போற் சுழல வைத்து

பாலனம் செய்கிறவன்


அற்பத் திரவத்தால்

ஆண் பெண்ணை உருவாக்கி

அரவணைத்து இரட்சிக்கும்

அன்பின் வடிவமவன்


கல்லிடைத் தேரை முதல்

கருப்பைச் சிசு வரையில்

எல்லாவுயிர்களுக்கும்

இரணம் கொடுக்கிறவன்


எம்மையெல்லாம் வாழ்த்தி வாழ வைத்திருக்கிறது நம் தமிழ் மொழி. சங்க கால இலக்கியம் தொட்டு இக்காலம் வரை எத்தனையெத்தனை எழுத்தாளர்கள் பல்வேறு விதமான படைப்புகளைத் தந்தாலும் எதிலும் புதுமையோடு இயைந்திருக்கக் கூடியது தமிழ் மொழி. இயல், இசை, நாடகம் என்று மூன்று துறைகளிலும் மாயாஜாலம் செய்து எம்மை மெய் சிலிர்க்க வைக்கும் தமிழைப் பற்றியே கன்னித் தமிழ் மொழி (பக்கம் 05) என்ற கவிதை பேசுகிறது.


கல்தோன்றி மண்தோன்றாக்

காலத்தின் முன்தோன்றி

முதல் இடை கடையென

முச்சங்க மமைத்து

இயலிசை நாடகமாய்

இனிதே வளர்ந்த மொழி

செந்தமிழாம் நாம் பேசும்

கன்னித் தமிழ் மொழி


பெண்ணழகைப் பற்றிப் பாடாத ஆண் கவிஞர்கள் யாரும் இருக்க முடியாது. பெண்களின் விழிகள், வதனம், பற்கள், இதழ்கள் என்று எத்தனைப் பேர் எவ்வாறு எழுதினாலும் பெண்ணின் அழகை ஒவ்வொரு கவிஞரும் தத்தமது இரசனைக்கு ஏற்ப சொல்வதில் பெண்ணின் பெருமை அதிகரிக்கிறது. சுந்தரத் தமிழணங்கு (பக்கம் 11) என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் இதழோரப் புன்னகையைத் தோற்றுவிக்கிறது. 


பாளை பிளந்து பளிச்சிடும்

பல்லழகுப் பாவையவள்

சொல்லாடச் செல்வோர்க்கு

கல்லாடங் கற்பிப்பாள்


வேல் விழியிரண்டும்

வில் வளைவுப் புருவங்களும்

ஏகலைவன் விரல் கொடுத்த 

மா பாரதக் கதை கூறும்


சங்குக் கழுத்துடன்

அங்கந் தழுவிச்

சங்கமமாகி விட்டால்

சங்க காலப் பெருந்திணையாம்


இவர் ஏற்கனவே சுவனத்து மலர்கள் (சிறுகதைத் தொகுதி), பெண்ணியம் (கவிதைத் தொகுதி), ஆகிய இரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏறாவூர்ப் பிரதேச செயலகம் இந்த நூலாசிரியரைப் பாராட்டி கௌரவித்துள்ளது. தனது கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளுக்காக பிரதேச, மாவட்ட, மாகாண மட்டங்களில் பல பரிசில்களையும் பெற்றுள்ள இவருக்கு நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம். இவரது இலக்கியப் பணிகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!


நூல் - அடிமன அதிர்வுகள்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - கலாபூஷணம் எம்.எச்.ஏ. அப்துல் ஹலீம்
தொலைபேசி - 0775150127
வெளியீடு - காதியார் பதிப்பகம்
விலை - 200 ரூபாய்

145. 2021.01.19 இல் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம்

2021.01.19 இல் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாரந்தோறும் செல்வாய்க் கிழமை இரவு 8.15 மணிக்கு பாரம்பரியம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினோஸியா தயாரித்து வழங்க, சிரேஷ்ட கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா மிகவும் அருமையாகத் தொகுத்து வழங்குகின்றார். முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்பினை நல்கிய கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியாகவே இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி தொடர்ந்தும் ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


2021.01.19 ஆம் திகதியில் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சியில் முஸ்லிம் சேவையின் இலக்கிய பாரம்பரியம் என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும், கவிஞருமான கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களும், முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சி பற்றிய தன் கண்ணோட்டம் என்ற தலைப்பில் சிரேஷ்ட வானொலிக் கலைஞர், நடிகர், சின்னத்திரை சினிமா புகழ், கலாபூஷணம் கே. சந்திரசேகரன் அவர்களும், முஸ்லிம் சேவையின் நாடக பாரம்பரியம் என்ற தலைப்பில் கவிஞரும் கலைஞருமான எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்களும் உரையாற்றினார்கள்.

உண்மையில் இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி இலக்கிய நெஞ்சங்களையும் நாடக இரசிகர்களையும் மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் நாடகங்களுக்காக குரல் கொடுத்தும் பிரதிகளைத் தயாரித்து வழங்கியும் தாங்களது பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார்கள். இந்த பாரம்பரியம் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடமளவில் ஒலிபரப்பப்பட்ட ஒரு நாடகத்தின் சிறு பகுதியைக் கேட்க முடிந்தது. அந்த நாடகத்தை முழுமையாகக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை அந்த நாடகத்தின் வரிகள் ஏற்படுத்தின.

ஆரம்ப காலங்களில் இலக்கிய மஞ்சரி, இளைஞர் இதயம், கவியரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் குரல் வளத்தாலும் எழுத்துக்களாலும் அளப்பெரும் பங்காற்றி நேயர் நெஞ்சங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டவர். இந்த நிகழ்ச்சியில் ஷஷமுஸ்லிம் சேவையின் கலை இலக்கியம் தொடர்பான பாரம்பரியம்|| தொடர்பாக தனது ஞாபகங்களை மீட்டிப் பல கருத்துக்களை அவர் முன்வைத்தார். 

ஜவாத் மரைக்கார் அவர்கள் முன்வைத்த கருத்துக்களைப் பார்க்கும் போது, மார்க்கம் சம்பந்தமானவை, சமூகம் தொடர்பான பொது விடயங்கள், கலை இலக்கியம் சார்ந்தவை ஆகிய முன்று தலைப்புக்களில் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டார். அதாவது முழுக்க முழுக்க முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் பலவற்றின் விரிவான பார்வையாகவே அவரது உரை இருந்தது. 

அன்றைய நாட்களில் தென்னிந்தியா வரை புகழ் பெற்றிருந்த இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தற்காலங்களில் நவீன தொழில் நுட்ப வசதிகளின் காரணமாக சர்வதேச மட்டத்தில், பரவலான அமைப்பில் தமிழ் பேசும் மக்களைச் சென்றடைந்துள்ளது. கலை இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் உள்நாட்டுப் பாடகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பாடகர்களால் பாடப்பட்ட இஸ்லாமிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன. தமிழ் மொழி தவிர அறபு, உருது, ஹிந்துஸ்தானி, மலாய் மொழிப் பாடல்களையும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பியுள்ளது. அவ்வாறே கஸல், நாத், கவ்வாலிப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. 

பிற நாட்டு இசைக் கலைஞர்கள் வருகை தந்த போது அவர்களின் இசைத் திறனைக் கேட்பதற்கு அவர்களை நேர்காணல் செய்து அதனையும் ஒலிபரப்புச் செய்துள்ளார்கள். முஸ்லிம் சேவையில் தயாரித்து, ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் நாடு கடந்து, மதங் கடந்து அனைவராலும் இரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றுள்ளன. ஆற்றல் மிக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நாடக எழுத்தாளர்கள் ஆகியோரின் பங்களிப்பே இவ்வகையான நாடகங்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. வாரத்தில் ஒரு நாள் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் நேயர்களின் நெஞ்சங்களில் நிலைத்தன. இந்த நிகழ்ச்சி வானொலி நாடக எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கவியரங்கங்கள், இசைச் சித்திரம், உரைச் சித்திரம் போன்ற நிகழ்;ச்சிகளும் அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டுள்ளன. முன்னோர் அளித்துச் சென்ற பழம்பெரும் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக முதிசம் என்ற பெயரில் வாரந்தோரும் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இலக்கிய அலசல்களை உள்ளடக்கியதாக இலக்கிய மஞ்சரி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றுவரை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. இன்றைய நாட்களில் கவிஞரும் எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார். இது ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாகும். அத்துடன் கவிதை தொடர்பாக கவிதைச் சுடர், கவிதைச் சரம், கவிஞர் மன்றம், கவிதா சாளரம், கவிதைக் களம் போன்ற நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்ட பக்கீர் பைத் நிகழ்ச்சி பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

கிராமிய இலக்கியமான நாட்டுப் பாடல்களின் தொடர் நிகழ்ச்சி கிராமத்து இதயம் என்ற பெயரில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. முத்தாரம் என்ற பெயரில் ஒரு பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சியும் வாராந்தம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. சதுரச் சங்கமம் என்ற பெயரில் வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றும் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் நேர்காணல்களும் அவ்வப்போது ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. நிலா முற்றம் என்ற பெயரிலும் சில நேர்காணல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. 

புனைகதைகள் தொடர்பாக கதை கேளீர் என்ற நிகழ்ச்சி மற்றும் சிறுகதை என்ற வாராந்த நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. முஸ்லிம்களால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கிய நூல்கள் பற்றி நூல் உலா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் என்ற ஒரு நிகழ்ச்சியும் அந்நாட்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. மகரந்தம் என்ற பெயரில் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி ஒன்றும் வாராந்தம் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அருட்சுணை என்ற நிகழ்ச்சி முஸ்லிம்களால் ஆக்கப்பட்ட பக்தி இரசம் கொண்ட இலக்கியங்களின் சிறப்பை நயந்து அறிமுகம் செய்வதாக ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. ஊடுருவல் என்ற சமூகச் சித்திரம், சமுதாயம் தொடர்பான விமர்சனங்களை இலக்கிய நயத்துடனும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கும் சுவையான நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டுள்ளன என்றவாறு ஜவாத் மரைக்கார் அவர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் பற்றிய தனது பதிவை மீட்டிச் சென்றார்.

வாரா வாரம் சுமார் 05 வருடங்களாகத் தொடர்ந்தும் சனிக் கிழமை காலை 8.40 மணிக்கு ஒலிபரப்பப்பட்டு வருகின்ற ஜனரஞ்சகமான கலை இலக்கிய நிகழ்ச்சியே சஞ்சாரம் என்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிடப்படாமை ஒரு குறையாகும். இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்கி வருபவர்களுக்கு அதுபெருங்கவலையான விடயமாக அமைந்துள்ளது. அத்துடன் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சி பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான சில குறைபாடுகளைத் தவிர்த்துக்கொண்டால் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளைப்பற்றி ஆய்வு செய்ய வருபவர்களுக்கு அது முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்பதையும் கருத்தில்கொள்வது நல்லது.

அடுத்து உரையாற்றிய முஸ்லிம் சேவையின் பேரபிமாணி கே. சந்திரசேகரன் அவர்கள் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் பற்றிய தனது கண்ணோட்டத்தை மிகவும் சிறப்பாகவும் சுவையாகவும் முன்வைத்தார். அவர் தனதுரையில், பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது அந்நாட்களில் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டியவர்களை நேர்காணல் செய்து அவர்களது அநுபவங்களை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் அருமையான நிகழ்ச்சியே இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். நாடக நடிகர்கள் மற்றும் நாடகப் பிரதி எழுத்தாளர்கள் என்று பலரது பெரைப் பட்டியலிட்டு முன்வைத்த அவர், முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழ் பேசும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். சமுதாயச் சீரழிவுகளை எடுத்துச் நகைச் சுவையாகச் சொல்லும் நாடகத் தொடர்களாக சுவைக் கதம்பம் நிகழ்ச்சியை மஹ்தி ஹஸன் இப்றாஹீம் எழுதி, ஸில்மியா ஹாதியுடன் இணைந்து நடித்து வழங்கி பலரது மனங்களையும் கவர்ந்தார் என்றும் குறிப்பிட்டார். 

1992 ஆம் ஆண்டு குரல் தெரிவில் இலங்கை வானொலி, முஸ்லிம் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராகத் தெரிவாகியவரே கலைஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள். தொடர்ந்து உரையாற்றிய அவர், முஸ்லிம் சேவையின் நாடகப் பாரம்பரியம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை முன்வைத்தார். 

முஸ்லிம் நிகழ்ச்சியின் ஆரம்ப காலங்களில் நாடகங்கள், உரைச் சித்திரங்கள், நடைச் சித்திரங்கள் ஒலிபரப்பாகவில்லை. அக்காலத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆசிரியராக இருந்த கலாநிதி அல்லாமா ஏ.எம். உவைஸ் அவர்கள், எழுதி என்ற புனைப் பெயரில் நடைச் சித்திரங்களையும் உரைச் சித்திரங்களையும் எழுதியுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியர் புத்தளத்தைச் சேர்ந்த ஓ.எச். ஆப்தீன் அவர்களும் தொடர்ந்து நாடகங்களை எழுதியுள்ளார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியர் திக்குவல்லையைச் சேர்ந்த எம்.ஏ. முஹம்மத் அவர்களும் பல நாடகங்களை எழுதியுள்ளார். இவரது புயல் என்ற நாடகமே தமிழ் தேசிய ஒலிபரப்புச் சேவையில் முதன் முதலாக ஒலிபரப்பாகியுள்ளது. பின்னாட்களில் சூறாவளி என்ற பெயரில் இந்த நாடகம் முஸ்லிம் சேவையிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. பல புனைப் பெயர்களில் பல நாடகங்களை இவர் எழுதி, நாடகத் துறையில் ஒரு தனித்துவமான பெயரைத் தனதாக்கிக் கொண்டார். தொடர் நாடகங்கள் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யுமுகமாக முஹம்மது மாஸ்டர் எழுதி, 50 வாரங்கள் வரை ஒலிபரப்பான இவரது பௌஸியா தொடர் என்ற நாடகம் இங்கு குறிப்பிடத்தக்கது. 

சுரையா என்ற புனைப் பெயரில் எழுதிய மானா மக்கீனின் பாத்திமா மன்ஸில், எம்.ஏ. றஹ்மான் எழுதிய தாஜ்மகால் நிழலில், இளங்கீரன் சுபைர் எழுதிய வாழப் பிறந்தவர்கள், கல்பிட்டி எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பாரின் தொடர் நாடகம், தீன்ஷா என்ற புனைப் பெயரில் ஆர்.எம். சைபுதீன் சாஹிப் எழுதிய நினைத்ததும் நிகழ்ந்ததும், எம். அஷ்ரப்கானின் சக்கரங்கள், தாய்மைக்கு என்ன விலை, காலச் சக்கரம், திக்குவல்லை கமாலின் மண்ணில் விழுந்த நிலவு, புர்கான் பீ இப்திகாரின் நிஜங்களின் நிழல்கள் போன்ற நாடகங்களை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களாகக் குறிப்பிடலாம். முஹம்மது மாஸ்டரைத் தொடர்ந்து நாடகம் எழுதியவர்களில் கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த எம்.எம். சாகுல் ஹமீத், பொல்கஹவெல யூ.எல்.எம். தாஹா, கொழும்பைச் சேர்ந்த மானா மக்கீன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். 

எம். தாலிபின் விசித்திரப் பிறவி என்ற நாடகமும், ஸீ.பீ.எம். காஸிமின் கண்ணீரே காணிக்கை என்ற நாடகமும், எஸ். முத்துமீரானின் காதலும் கருணையும் என்ற நாடகமும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கே.எம்.ஏ. மொகிதீன் அவர்களின் நாடகப் பிரதிகளும் ஒவிபரப்பாகியுள்ளன.  

கவிதை நாடகம் இல்லாத குறையைத் தீர்க்கும் முகமாக எம்.ஏ. கபூர் என்ற பொத்துவில் யுவன் அழாதே சிரி என்ற நாடகத்தை எழுதியிருந்தார். கல்ஹின்னை எம்.ஸீ.எம். சுபைர், பஸீல் காரியப்பர் ஆகியோரும் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார்கள். திக்குவல்லை எம்.எச்.எம். ஷம்ஸின் அன்பின் பரிசு, அஷ்ரப் சிஹாப்தீனின் திப்பு சுல்தானின் மனிதாபிமானம் ஆகிய நாடகப் பிரதிகள் ஒலிபரப்பப்பட்டன. நாவலாசிரியர்களும் வானொலி நாடகங்களுக்கான தனது பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள். அந்தவகையில் அக்கரைப்பற்று அ.ஸ. அப்துஸ் ஸமத், யாழ்ப்பாணம் இளங்கீரன் சுபைர் ஆகியோரின் பங்களிப்புக்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

 1967 க்குப் பின்னர் நாடகங்கள் எழுதியவர்கள் வரிசையில் மன்னார் எச்.எம். சரீப், எம்.எச். பௌசுல் அமீர், எம். அஷ்ரப் கான், ரைத்தலாவளை எம்.என்.ஏ. அஸீஸ், போர்வையூர் ஜிப்ரி, ஏத்தாளை மொகிதீன் ஏ. றஸ்ஸாக், மன்னாரைச் சேர்ந்தவர்களான எஸ்.எச். நிஃமத் மற்றும் கலைவாதி கலீல், வாழைத்தோட்டம் எஸ்.ஐ. நாகூர்கனி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதன் பின்னரான காலப் பகுதிகளில் நயீமா சித்தீக், ஜுனைதா ஷெரீப், எஸ்.ஏ.எம்.எம். அஷ்ரப், புத்தளம் எம்.எச்.எம். ஹஸன், கல்ஹின்னை சலீம், சோலைக்கிளி யூ.எல்.எம். அதீக், புர்கான் பீ இப்திகார், மஹ்தி ஹஸன் இப்ராஹீம், எஸ்.ஏ.ஸீ.எம். பிர்தௌஸி, தீரன் ஆர்.எம். நௌஷாத், மரீனா இல்யாஸ், ஹாஜா அலாவுதீன், எச்.ஐ.எம். ஹுஸைன், அஷ்ரப் சிஹாப்தீன், எம்.எஸ்.எம்.எஸ். நகீப், யாழ். பரீத் ஜாபிர், பௌஸியா யாஸீன், நஸீலா ஆதம், திக்குவல்லையைச் சேர்ந்தவர்களான கமால், ஸப்வான், ஸும்ரி, எம். அஸ்மி சாலி, அபுக்காகம பழீல் ஏ. கபூர், இர்சாத் கமால்தீன், பாலையூற்று அஷ்ரபா நூர்தீன், ஸில்மியா ஹாதி, சபானா ஜுனைதீன் ஆகிய பலரும் வானொலி நாடகங்களை எழுதியுள்ளதாக ஒரு பெரிய பெயர்ப் பட்டிலை முன்வைத்தார். 

முஸ்லிம் நாடகங்களை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் ஏனைய சமயத்தவர்களும் அந்நாட்களில் விரும்பிக் கேட்டு வந்துள்ளார்கள். அருமையான கருத்துக்களும் இஸ்லாமிய கலாசார விழுமியங்கள், மரபுகள் சார்ந்த விடயங்களும் இந்த நாடகங்களில் பிரதிபலித்துள்ளன. சமூகக் குறைபாடுகளும் இந்த நாடகங்களினூடாக சுட்டிக் காட்டப்பட்டு, இதற்கான தீர்வுகளும் இந்த நாடகங்கள் மூலமாக முன்வைக்கப்பட்டன. பெண் கல்வி, சீதனம், விதவை மறுமணம், ஆலிம்கள் முஅஸ்ஸின்களின் கண்ணியம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, கல்வியின் முக்கியத்துவம், ஸக்காத், ரமழான், ஹஜ் ஆகிய கடமைகளின் சிறப்பு, வாழ்வில் ஹராம் ஹலால் பேணல், பல்கலைக்கழக பகிடிவதை போன்ற சமுதாயச் சீர்திருத்த விடயங்கள் இந்த நாடகங்களினூடாக முன்வைக்கப்பட்டன. இந்த நாடகங்கள்; சமூகத்தில் பல தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. சமூக மேம்பாட்டக்கான நாடகங்களின் பங்களிப்புக்கள் மகத்தானவை. இலங்கையில் மட்டுமல்லாது கடல் கடந்த பல நாடுகளிலும் இந்த நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

மௌலவி ஆர்.எம். சைபுதீன் சாஹிப், மௌலவி யூ.எல். தாஸிம் போன்ற மார்க்க அறிஞர்களும் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார்கள். மௌலவி ஆர்.எம். சைபுதீன் சாஹிப் எழுதிய பணமா பாசமா என்ற நாடகம், நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது. இவரது ஆயிரத்தொரு இரவுகள் என்ற தொடர் நாடகம் அந்நாட்களில் சிலாகித்துப் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்களில் நாடகத் துறையில் பல பரீட்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தவகையில் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களின் தனிநபர் நாடகத்தைக் குறிப்பிடலாம். எம். அஸ்வத் கான் எழுதிய பயணம் என்ற நாடகம் ஒரு புகையிரதத்தில் பயணம் செய்யும் போதே நடிக்கப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பான நாடகம் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். 

நாடகத் தயாரிப்புத் துறையில் ஏ.எம். காமில் மரிக்கார், எம்.எச். குத்தூஸ், குலாம் ரஷீத், எம்.எம். இர்பான், ரஷீத் எம். ஹபீல், எம். அஷ்ரப் கான் ஆகியோருடன் ஏ.எல். ஜபீரும் இணைந்துள்ளார்கள். 

சிலாபத்தைச் சேர்ந்த எம். அஷ்ரப் கான் எழுதிய எது தியாகம் (1958) என்ற தனது முதல் நாடகத்தைத் தொடர்ந்து பல சமூக நாடகங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் ஆக்ராவின் கண்ணீர், முஹம்மது பின் துக்லத், மாமன்னர் பாபர் போன்ற பல சரித்திர நாடகங்களையும் எம். அஷ்ரப் கான்; எழுதியுள்ளார். இவரது இந்த நாடகங்களை நேயர்கள் இன்றும் மறக்கவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். பரதேசி என்ற இவரது நாடகம் பல தடவை முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. 

நாடகத் துறையில் பங்களிப்புச் செய்த வானொலி முஸ்லிம் நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என்ற வகையில் பலரது பெயர்களைக் குறிப்பிட்டு மிகவும் நீண்ட பெயர்ப் பட்டியலொன்றும் எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. 

எம் நெஞ்சங்களில் தனியான ஒரு இடம்பிடித்து நிலைத்து நிற்கும் எமது முஸ்லிம் சேவையின் தனித்துவம் நிறைந்த நிகழ்ச்சி பாரம்பரியம் நிகழ்ச்சியாகும் என்பது மிகையான கூற்று அல்ல. முஸ்லிம் சேவையின் சமூகம் தொடர்பான கலை இலக்கிய நிகழ்ச்சிகளின் பாரம்பரியத்தினை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் பாரம்பரியம் நிகழ்ச்சி தங்கு தடைகளில்லாமல் தொடர்ந்தும் ஒலிபரப்பாக வேண்டும் என்று பிரார்த்தித்தவளாக, இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வானொலிக் கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்!!!