Friday, March 30, 2012

19. நினைவுப் பொழுதின் நினைவலைகள் - கவிதைத் தொகுதி

நினைவுப் பொழுதின் நினைவலைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

வவுனியாவைச் சேர்ந்த திருமதி சந்திரமோகன் சுகந்தினி எழுதிய நிலவுப் பொழுதின் நினைவலைகள் என்ற கவிதைத்தொகுதி வவுனியா தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. இதில் 53 பக்கங்களை உள்ளடக்கியதாக 27 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தொகுதி சுகந்தினியின் கன்னிக் கவிதைத் தொகுதியாகும். சில கவிதைத் துளிகளும் இதில் உள்ளடங்குகின்றன. அன்னையின் பெருமை, அன்பு, காதல், உறவு, மது, சீதனம், சேமிப்பு, பெண்ணியம், ஆசிரிய மாண்பு ஆகிய கருப்பொருளை மையமாகக் கொண்டு இக்கவிதைகள் புனையப்பட்டுள்ளன. கவிதைக்குப் பொய்யழகு என்று கவிப்பேரரசே சொல்லியுள்ள போதும், பொய்களைப் புறந்தள்ளி வைத்து அன்றாட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் சந்தித்த, சந்தத்துக்கொண்டிருக்கும், சந்திக்க இருக்கும் சவால்கள், வாழ்வின் யதார்த்தங்கள் என்பவற்றை இலகு நடையில் எவரும் விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் என் சிந்தைக்கெட்டிய உள்ளத்து உணர்வுகளை கவிதைக்கு உண்மையும் அழகே என்று நீங்கள் யாவரும் உணரும் வகையிலான கவிதைகளாகத் தந்துள்ளேன் என்று நூலாசிரியர் தனதுரையில் குறிப்பிடுகிறார்.

உலகத்தில் தாயன்பைவிட புனிதமானதொரு உறவு இருக்க முடியாது. தாயின் அன்புக்கு வேறு யாருடைய அன்பும் ஈடாகாது. அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதில்கூட அன்னைதான் முதன் முதலாக விளித்துக் கூறப்பட்டிருக்கின்றாள். என் அன்னையே என்ற கவிதையில் அன்னையின் பெருமை பற்றி நூலாசிரியர் தனது கருத்தை இப்படி முன்வைக்கிறார்.

ஜயிரண்டு மாதம் கருவறையில்
எனை சுமந்து
அகிலத்தை நான்
அறியவைத்த என் அன்னையே!

ரத்தத்தை பாலாக்கி
முத்தத்தை அன்பு பரிசாக்கி
இன்பமாய் நான் வாழ்வதற்காய்
நீ சுமந்த துன்பங்கள் எத்தனையோ? (பக்கம் 03)

உலகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், விஞ்ஞானம் விதைந்துரைக்கச் செய்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம உரிமைப் போராட்டம் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. பெண்களின் சமத்துவத்தை சிலரால் அங்கீகரிக்க முடியவில்லை. அதற்கு காரணமாக சொல்லப்படுவது அடுப்பூதுவதற்கு படிப்பெதற்கு என்ற ஆற்றாமையால் உருவான வாசகம்;தான். அவ்வாறான கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது என்பதை காட்டியிருக்கிறது பெண்ணே உன் சிந்தனைக்கு என்ற இந்தக் கவிதை.

பெண்ணே!
கற்கும் வயதில் காதல் வரும்
கடந்து செல்
கல்வி ஒன்றே வேதமென்று
ஓதிச் செல்

அடுப்பூதும் பெண்களுக்கு
படிப்பெதற்கு என்றால்
விண் ஆண்ட கல்பனாவையும்
மண்ணாளும் கிளரியையும்
ஆதாரம் காட்டிச்செல்... (பக்கம் 05)

விந்தை என்ன? என்ற கவிதை இன்றைய வாழ்வியலை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இன்றைய விலைவாசி மக்களின் கழுத்தை இறுக்குவதாக மாறியுள்ளது. தினமும் பொருட்களின் விலை ஏறிச் செல்வதனால் ஏழைக் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையையே போராட்டத்துடன் கழித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு குடும்பத்தின் தலைவிதி பொருளாதாரத்தைக் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. அவ்வகையில் ஏழையாக பிறந்துவிட்ட காரணத்துக்காக பாடசாலை வாழ்க்கையே பறிபோகுமளவுக்கு சிலரின் வாழ்வு மாறியிருக்கின்றது. அத்தகையதொரு நிலையிலிருந்து மக்களை மீட்க எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் பொது மக்களுக்கு அதற்கான தீர்வுகள் இல்லை.

தீர்வுதேடி தேர்வெழுதினோம்
சுற்றமிழந்து சுயமிழந்து சுமைகளை
தினம் சுமக்கிறோம்..

வட்டமேசை மாநாடுகள் எத்தனையோ
திட்டமிட்டபடி நடந்த போதும்
தீர்க்கப்பட்ட நம் தேவைகள்
எவையேனும் உண்டோ? (பக்கம் 17)

மதுவென்ற அரக்கன் ஆண்களை நன்றாகவே தன் வலைக்குள் வீழ்த்திக்கொண்டுவிட்டான். உடல் அலுப்பாக குடிக்கப் பழகியவர்களும், உல்லாசத்துக்காக குடியை விரும்பியவர்களும் தமது தலையில் தாமே மண்ணள்ளிப் போட்டதற்கு சமானமாகும். ஒரேயடியாக உயிர் கொல்வது விஷம் என்றால், கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் கொல்லும் ஒரு வஸ்து மது என்றால் பிழையில்லை. சாராயம் குடித்த பின்பு ஆராய்வதற்கான புத்தியின்றி அல்லல்படுகின்றனர். குடும்பத்துக்குள் பெரிய பிரச்சனைகள் பூதாகாரமாக கிளம்பிவிடுகின்றன. இதுபற்றி உயிர்க்கொல்லி என்ற கவிதையில் கீழுள்ளவாறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

உற்றதுணை உயிராய் வந்த பிள்ளைகள்
உடன்பிறப்புக்கள் என்று
உன்னதமான உறவுகள்
ஆயிரமாய் இருக்க
உயிர் குடிக்கும் மதுவை அல்லவா
மகத்துவமென்று நாடுகிறீர் (பக்கம் 23)

சேமிப்பு என்ற கவிதையில் சேமிப்பின் முக்கியத்துவம் பற்றி கூறும் நூலாசிரியர் அதை சேமிப்பது மனிதர்களின் கையில் உள்ள விடயம்தான் என்பதை அழகிய தொனியில் பின்வருமாறு எடுத்துச் சொல்கின்றார்.

வருவாயில் செலவிடப்படாத தொகை சேமிப்பென்பது பொருளியல். சேமிக்கும் கலைதனை சிறுவயது முதல் பழகிடனும் என்பது உளவியல். சேமித்திட சிறந்த இடமாக வைப்பகத்தை தந்தது உலகியல். சேமிப்புக் கணக்கைப் பேணுவது நிதியியல். சேமிப்பு மீளப்பெறுதலை இலகுவாக்கியது இலத்திரனியல். சேமித்தால்தான் செல்வம் சேருமென்பது வாழ்வியல். சேமிப்பது யார் கையில்? அது உன் கையில். (பக்கம் 37)

ஆரம்பத் தொகுப்பென்றாலும் கூட பல விடயங்களையும் தொட்டுக்காட்டியிருக்கின்றார் நூலாசிரியர். அவரது முயற்சியை பாராட்ட வேண்டும். எதிர்காலத்தில் இன்னும் சிறந்த தொகுதிகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - நிலவுப் பொழுதின் நினைவலைகள் (கவிதை)
நூலாசிரியர் - வவுனியா சுகந்தினி
தொலைபேசி - 0776753874
மின்னஞ்சல் - suganthiny83Shgmail.com
வெளியீடு - வவுனியா சுகந்தினி
விலை - 250/=