Tuesday, April 18, 2017

116. உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் நூல் பற்றிய குறிப்புக்கள்

உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் நூல் பற்றிய குறிப்புக்கள்

வெலிகம மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் என்ற நூல். இந்நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார் வெலிகமையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள். இவர் ஏற்கனவே கணிதப் பயிற்சி (வெள்ளி மலர்), வெலிகாமத்தில் கல்வியில் சாதனை புரிந்த மாணவர்களைப் பாராட்டும் சிறப்பு மலர், மண்ணூருக்கு மாண்பு சேர்த்த மன்னர்கள் (மறைந்த உலமாக்களின் விபரம்), பாலைவனத்தில் ஒரு சோலைவனம், அல்குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சொத்துப் பங்கீடு, மண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர், நெஞ்சைவிட்டும் நீங்காத நினைவலைகள் (மர்ஹும் ஏ.ஆர்.எம். ஹுஸைன் நினைவு மலர்), அருள் மழை பொழியும் ரமழான் ஆகிய நூல்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள் என்ற இந்த நூலானது, தப்ஸீர் இப்னு கஸீர் என்ற நூலில் காணப்படுகின்ற பலரது கவிதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட பெருமதிவாய்ந்த நூலாகும். இறைவனின் வல்லமை, இறையச்சம், இறைவனின் கருணை, முஹம்மது நபியின் முன்மாதிரி, வாழ்க்கை, மரணம், நீதி, நிதானம், நன்மை – தீமை ஆகிய பல்வேறு கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கவிதைகளையே நூலாசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார்.

கவிதைகள் இதயத்துக்கு உற்சாகமளிக்கக் கூடியவை. ஆன்மாவுக்கு உயிரூட்டக்கூடியவை. சிறிய கவிதைகள் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். அவ்வாறான கவிதைகள் வாசிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் இலகுவாகக் காணப்படுவதால் அவற்றை வாசிப்பவர்களின் தொகையும் அதிகமாகும்.

இத்தொகுப்பில் காணப்படும் கவிதைகளும் அத்தகையவை தாம். சிற்சில வரிகளினூடாக ஆழமான விடயங்களைக் கூற விழைந்துள்ளன. இறையச்சத்தையும், வாழ்வியல் யதார்த்தத்தையும் ஆணித்தரமாக மனதில் விதைக்கக் கூடியன.

நீ உடைத்த எலும்பை
ஒட்டுவார் யாருமில்லை
நீ இணைத்த எலும்பை
உடைப்பவரும் யாருமில்லை

என்ற வரிகள் இறைவனின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இறைவன் நாடினால் மாத்திரமே இலைகூட அசையும் என்பது நாம் அறிந்த விடயம். அதே போல வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நிகழ்கின்ற சகல விடயங்களும் இறைவனின் தீர்ப்பே அன்றி வேறெதும் கிடையாது என்பது இதனால் புலனாகின்றது.

அகத்திலுள்ளதை மறைக்காதீர்
அல்லாஹ் அறியக் கூடாது என்பதற்காக
எப்படி மறைத்தாலும்
அல்லாஹ் அறியவே செய்வான்

மனிதர்களிடம் நாம் வேண்டியதை மறைத்து ஏமாற்றிவிடலாம். ஆனால் அல்லாஹ்வை ஏமாற்றவே முடியாது. எமது உள்ளத்தில் நாம் நினைக்கின்ற விடயங்களைக்கூட அல்லாஹ் நன்கறிந்தவனாகக் காணப்படுகின்றான். எனவே அவனது தண்டனைக்குப் பயந்துகொள்ள வேண்டும். அவனது அருளுக்காய் பாடுபட வேண்டும் என்ற சிந்தனையை மேலுள்ள கவி வரிகள் ஏற்படுத்துகின்றன.

நாம் இரவில் கண்ணயர்ந்து உறங்குகின்றோம். காலையில் எழுந்து குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக இருக்கின்றோம். ஆனால் மரணம் என்பது எமது செருப்புக்களின் வாருகளைவிட எம் அருகே இருக்கின்றது. அந்த மரணத்தை நாம் ஒருபோதும் விரட்டியடிக்க முடியாது. எமக்கான தவணை வந்தால் நாம் இறைவன்பால் மீண்டுவிட வேண்டும். இதனை கீழுள்ள வரிகளில் காணலாம்.

காலை விடியலுடன்
குடும்பத்தாரோடு
விடியலை அடைகிறேன்..
செருப்புவாரைவிட
அருகில் இருக்கிறது மரணம்

இஸ்லாமிய மணம் கமழக்
கூடிய இச்சிறு கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கும் நூலாசிரியர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. நூலாசிரியரின் இந்த முயற்சியை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! மேலும் பல காத்திரமான நூல்களை வெளியிட்டு தமிழ்ப்பணி மற்றும் ஆன்மீகப் பணியாற்ற என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்!!!

நூல் - உள்ளத்துக்கு உணர்வூட்டும் கவிதைகள்
நூலாசிரியர் - கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
தொலைபேசி -  0776929711