Wednesday, June 12, 2013

45. பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

1987 இல் தினகரன் சிறுவர் பகுதியில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரை எழுத்துப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி பாயிஸா அலி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஆவார். இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் படைப்புக்கள், நூல் விமர்சனங்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்துள்ள இவர் சிகரம் தொடவா, தங்க மீன் குஞ்சுகள் ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இவரது கவிதைத் தொகுதி கிண்ணியா நெட்டினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 45 கவிதைகளை உள்ளடக்கியதாக 90 பக்கங்கில் அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது தேசிய நூலபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு அழகொளிரும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு காத்திரமானதொரு முன்னுரையை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் வழங்கியுள்ளார். 

ஒரு கவிதை அது சொல்லப்படும் மொழி விதம் பொருள் ஆகியவற்றால் அழகும் உயிரும் பெறுகிறது. அவற்றை வாசிக்கும் போதெல்லாம் நமது உள்ளம் ஏதோ ஒரு உணர்வுத் தாக்கத்துக்கு உள்ளாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் செதுக்கப்படும் ஒரு கவிதை நம்மை கிளர்ச்சியூட்டுகிறது. மகிழ்விக்கிறது. ஓர் இளம் பெண்ணின் நளினத்தை, ஒரு குழந்தையின் சிரிப்பை, ஒரு மலரின் மெண்மையை, ஒரு வாளின் கூர்மையை, இரத்தத் துளி ஒன்றின் கனதியை, கண்ணீர்த்துளி ஒன்றின் கவிதையை, வியர்வைத் துளி ஒன்றின் உழைப்பை நம்மீது படரவிட்டு பாடாய்ப் படுத்துகிறது. நவீன கவிதைகளில் அழகொளிரும் எழுத்துப் போக்கை சகோதரி பாயிஸா அலியின் கவிதைகளில் நான் பார்க்கிறேன். அவர் பேசும் கவிதை மொழி என்னை அசத்திவிட்டிருக்கிறது இன்று வெளிவரும் நவீன கவிதைகளில் இதுவரை நான் கண்டிராத அழகு அது என்று அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். 

நூலாசிரியர் பாயிஸா அலி அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'குடும்பம் வீட்டு வேலை பாடசாலை பத்திரிகைப் பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என் போன்றதோர் இல்லத்தரசிக்கு எல்லாம் கவிதை என்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணரடிக்கும் பாரச் சுமையாகவோ தான் அமைந்துவிடுகிறது. ஆனாலும் கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதானால் தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோன்றுகிறது. எனினும் இவ்வாறான மிகக் குறுகிய கணங்களுக்குள்ளே மிகப் பெரிய படைப்பாளியாக வெல்லாம் மாறிவிட முடியாதெனும் யதார்த்தம் உணர்ந்து சில கனங்களே உணர்வுகளுக்குள் உரைந்து கரையும் அக புற அனுபவங்களின் வெளிப்பாடாய் விரியும் சின்னச் சின்னப் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்'

கவிதை என்றாலே காதல் என்றாயிருந்தது. பிறகு ஒரு காலத்தில் யுத்தம் பற்றியே கவிதைகளில் பேசப்பட்டது. பாயிஸா அலியின் கவிதைகளில் அழகியல் சார்ந்த விடயங்கள் மிகையாக பேசப்பட்டுள்ளமை மனதுக்கு ரம்மியமாக இருக்கின்றது. வண்ணாத்தி, அணில் பிள்ளை, சிட்டுக்குருவி, கால் முளைத்த வெண் பஞ்சு மேகங்கள், தும்பி, பசுஞ் சோலை போன்ற சின்னச்சின்ன அழகியல் வசனங்களால் வாசகரை கட்டிப் போடுகின்றார். கனவுப் பூக்களும் கண்ணாடிக் கண்களும் (பக்கம் 20) என்ற கவிதையின் முதல் ஒரு சில வரிகளிலேயே அதை நாம் உணரலாம்.  

அது 
கனவுப் பூக்கள் மகரம் சிந்திய
கார்காலம்.
இலட்சியத் தேடல்களைத் 
தேசியக் கொடியாய் உயர்த்தி
நூலேந்திய வேளையிலே
ஈரத் தென்றலாய் கேசம் தழுவினாய்
விசாலித்த வான் பரப்பில்
உதிர்ந்து வீழும் விண்கற்களிடையே 
ஒற்றைச் சூரியனாய் ஜொலித்தாய்.

பொதுவாக யாருக்கும் தோன்றாத விடயங்கள் கூட நூலாசிரியரின் பார்வையில் கவிதையாக உருக்கொள்வது வியப்புத்தான். அயல்வீட்டு பீர்க்கங்கொடியையும், உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்கறியையும் இணைத்து எப்படியொரு கவிதையை யாத்திருக்கின்றார் என்று ரசியுங்கள்.  அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி (பக்கம் 22)

அந்தரத்தில் நடனமிடும்
பச்சைத் தேவதையாயும்
அணில் பிள்ளைகள் ஆடிமகிழும்
ஊஞ்சலாயும் 
பூ பிஞ்சுகளை அள்ளிச் சுமந்தவாறே
மெலிந்த தத்துக் கரங்கள் வீசியபடி
பிரிசுவர் தாண்டியும் மிகமென்மையாய்
நடைபயிலுது அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி.

நாவூறச் செய்கிறது
சின்ன வெங்காயமும் குடுகும் தாளித்த மணம்
கூரைக்கு மேலாயும் வழிந்தோட
வற்றாளையும் வெள்ளிறாலும்
சேர்த்தாக்கிய 
உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்க்கறிதான்

தனது தொடர் பயணத்தின்போது தினமும் காண்கின்ற சிறு சிறு விடயங்கள் கூட பாயிஸா அலி அவர்களின் கண்களில் பட்டுத் தெறித்துவிடுகின்றன. இலைக்குள் மறைந்து காணப்படுகின்ற ஒரு பூவைக்கூட அவரது கண்கள் அல்லது கவிதை மனம் விட்டு வைக்கவில்லை. மற்றவர்களின் வளர்ச்சியைக் காட்டாதிருக்க சிலர் தம்மை மாத்திரம் வெளிக்காட்டிக் கொள்வார்கள்.  சிலரோ எத்தகைய பெருமையும் இன்றி தம்பாட்டில் வாழ்ந்து பிறருக்கு உதவி செய்வார்கள். ஒளி விசிறும் சிறு பூ... (பக்கம் 32) என்ற கவிதை, வாழ்வின் அத்தகையதொரு தாற்பரியத்தை உணர்த்துவதற்காகத்தான்  எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றுகின்றது. 

தூரத்து வளைவில்
புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாச இதழ்களை 
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறு பூ...
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை 
என் வழிப் பயணத்தின் 
கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான்...

மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் கவிதையாக இனியும் மொழியேன்... (பக்கம் 42) என்ற கவிதை காணப்படுகின்றது. ஆழ் மனக் காயங்களுக்கு மருந்தாவதும், அந்த காதலே வாழ்க்கையில் தழும்பாவதும் அவரவர் விதியைப் பொறுத்தது. புறக்கணிப்புக்களால் புண்பட்டுப்போன ஒரு ஆன்மாவின் சோகம்.. விரக்தி இந்த வரிகளினூடே வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது.

கத்தி முனையில் நடப்பதாகவும்
நொறுங்கும் மெலிதான 
கண்ணாடி இருக்கையில் அமர்வதுமான
நுண்ணிதானங்களோடும்
எச்சரிக்கையோடும்
அலுவலகத்தில் வேணுமென்றால்
தொடர்பாடலாம்.
ஆனாலும் உன்னோடுமா?

பகலவன் வெம்மையில் 
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புகளால்..

மிக மிக முக்கியமானதொரு அம்சத்தை உனக்கே உனக்காய்... (பக்கம் 65) என்ற கவிதை சொல்லி நிற்கின்றது. கல்விப் பெறுபேறுகள் போதாமையால் மனமுடைந்து தம் வாழ்க்கையை அழித்த எத்தனை மாணவர்களை பற்றி அறிந்திருக்கிறோம். பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.  பெற்றோரின் வசை பாடல், நண்பர்களின் கேலிப்பேச்சு, உறவினர்களின் ஏளனப் பார்வை போன்றவற்றை எல்லாம் தாங்க முடியாத பிஞ்சு மனங்களுக்கு ஒரு ஒத்தடமாக, காயத்தை போக்கும் மூலிகையாக இந்தக் கவிதை இருக்கின்றது. சமுதாயப் பிரச்சனை பற்றி பேசி விளிப்பூட்டியிருக்கின்றது.

இந்தப் பெறுபேறும் பொய்த்துப் போனதற்காய் வருத்திக் கொள்ளாதே உன்னுணர்வுகளை. கல்வித்தரம் வேண்டுமென்றால் உறுதிப்படுத்தப்படலாம் பெறுபேறுகளால் ஆனாலும் ஒருபோதும் தீர்மானித்து விடுவதில்லை. பெறுபேறு மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை. வடிந்து போகா வெள்ளமொன்றை வரலாறு சொல்லவில்லை. இந்தப் பாதை முடிந்தாலென்ன திரும்பிப் பார்
இன்னமும் ஆயிரம் பாதைகள் வாசல் கதவு திறந்து வைத்தே வழிபார்த்துக் காத்திருக்கு மாலைகளோடு உனக்கே உனக்காய்..

ஒரு ஆசிரியராகவிருந்து எப்படி தலைமைத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்குகின்றாரோ அதே போல் கவிதை வழி நின்றும் நிறைய சாதித்து நல்ல புத்திஜீவிகளை உலகுக்குத்தர வேண்டுமென்று பாயிஸா அலி அவர்களை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - எஸ். பாயிஸா அலி கவிதைகள் 
நூலாசிரியர் - எஸ். பாயிஸா அலி 
முகவரி - முனைச்சேனை வீதி, குறிஞ்சாகேணி - 03, கிண்ணியா.
ஈமெயில் - sfmali@kinniyans.net , www.faiza.kinniya.net
வெளியீடு - கிண்ணியா நெட்
விலை - 250 ரூபாய்

44. எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்

எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... நவீன குறுங்காவியம்



கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு... என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். 

இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி  போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது. 


இந்த நூலுக்கு கனதியை சேர்க்கும் முகமாக தனது நேரத்தை ஒதுக்கி சிரமம் பாராது பாலமுனை பாறூக் அவர்களின் எல்லாப் படைப்புக்களையும் முழுமையாக அவதானித்து 17 பக்கங்களில் தனது அணிந்துரை ஒன்றை முதுநிலைப் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் வழங்கியுள்ளார். அவர் தனதுரையில்,


``பாலமுனை பாறூக் 1970 களின் தொடக்கத்தில் கவிதைத் துறையில் காலடி வைத்தவர். இலங்கை இலக்கிய உலகில் முற்போக்குச் சிந்தனை முனைப்பாக இருந்த காலகட்டம் அது. பாலமுனை பாறூக்கும் அச்சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர் என்பதில் ஐயமில்லை. இஸ்லாமியப் பற்றும், சமூக உணர்வும் மிக்க ஓர் இடதுசாரியாக இவரை நாம் அடையாளங் காணலாம். இக்காவியத்தில் வரும் பிரதான பாத்திரத்துக்குப் பெயர் இல்லை. அவன், இவன் என்ற படர்க்கைப் பெயலாலேயே அவன் குறிப்பிடப்படுகிறான்'' என்கிறார். 

எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு, பாம்பை நோக்கிய பயணம், சிறகுப் பட்டை சிலுப்பிய சேவல், காலைத் தைத்த வேலிக்கு வைத்தமுள், பூட்டி இருந்த உறவினர் வீடு, எல்லை வீதி சொந்த வீதி, உறைந்து போய் இருந்த ஊர், கோழிக் காக்கா குஞ்சு முகம்மது, மாசிலா மணி மேசன், எடுபிடிகளும் கெடுபிடிகளும், வேலி போட முடியாத நட்பு, சமாதான சகவாழ்வு,  விழித்துக் கொண்ட பஸ் தரிப்பு நிலையம் ஆகிய பதின்மூன்று தலைப்புக்களில் இக்காவியம் விரிவடைந்து செல்கின்றது. 

பிரார்த்தனை மட்டுமே எஞ்சியிருந்தது
பேச்சு ஏனோ
அடைபட்டிருந்தது..

சொந்த வீட்டைப் பார்க்க வந்தவன்
சுற்றி வளைப்பில் 
அகப்பட்டிருந்தான்.. (பக்கம் 25)

என்று இந்தக் காவியம் தொடங்குகிறது. தனது சொந்த ஊருக்கு வரும் அவன் தன்னுடைய குடும்பத்தினரைக் காணாது அல்லாடுகின்றான். இலங்கையில் பிறந்தமையா அல்லது இலங்கையின் கிழக்குப் பகுதியில் பிறந்தமையா அவனை இவ்வாறு அல்லல்பட வைக்கிறது? சொந்தங்களும் இல்லாமல் சொந்த மண்ணும் அந்நியப்பட்டு கிடக்கும் அவனுக்கு ஆறுதல் என்ன என்ற கேள்வியை கவிஞர் முதலிலேயே நமக்குள் உருவாக்கி விடுகின்றார்.

நாலா பக்கமும் 
கடலாய்ச் சூழ்ந்துள 
இலங்கைத் தீவில் 
இவனொரு பொதுமகன் 

எப்பிழை செய்தான்?
எதனைக் கேட்டான்?
கிழக்கில் பிறந்தான்
இது பிழை யாகுமா? (பக்கம் 34)

வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளின்போது நாம் இறைவனிடமே முறையிடுகிறோம். அதாவது நமது துன்பத்தை, பிரச்சினைகளை நீக்கித்தருமாறு இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அந்த ஒரு பிரார்த்தனையைத் தவிர அவனிடம் இன்று எதுவுமே இல்லை. ஒரு ஜடம் போல அவனது நிலைமை ஆகிவிட்டது என்பதைக் கீழுள்ள வரிகள் உணர்த்துகின்றமையை அவதானிக்கலாம். 

எஞ்சி யிருந்தது
பிரார்த்தனை மட்டுமே
எங்குதான் செல்வான்?

எல்லை வீதி, சொந்த வீடு
வந்து சேர்ந்தான் 
நடைப் பிணமாக! (பக்கம் 40)

அவ்வாறு ஊருக்குள் வந்தவனை திடீரென கண்ணுற்ற பார்வதி அக்கா அவனை எழுப்புகிறாள். அவனது நிலையறிந்து உண்ணக்கொடுத்து, ஆறுதல் படுத்துகின்றாள். அந்தப் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவள். சகோதரர்கள் போன்று பழகியவர்கள் யுத்த வெறியனின் கண்பட்டதால் இன்று திக்குத் திசை தெரியாமல் மருளுகின்றனர். பார்வதி அக்காவின் மன வேதனை இவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது.

என்னடா தம்பி இப்புடிக் கிடக்க கண்ணீர் மல்கிக் கசிந்து கரைந்தாள். ஷஇன்னடா தம்பி ஒழும்பு ஒழும்பு| என்று அவனைப் பிடித்து எழுப்பி உண்ணக் கொடுத்தாள். கண்பட்டுப் பெய்த்திடா தம்பி என்னமா இருந்தம் ஒரு தாய்
வகுத்துப் புள்ளைகள் போல.. (பக்கம் 41)

தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து ஒன்றாகவே சேர்ந்து தொழில் செய்து தமது வணக்கஸ்தலங்களை உருவாக்கியதையும், ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்பு காட்டி வாழ்ந்தததையும் கவிஞர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

வண்டிக்கார முஸ்லீம்கள் தமிழர் ஒன்றாய்ச் சேர்ந்து ஒற்றுமையாகவே காட்டினிற் சென்று கம்புகள் வெட்டி கோயிலைப் பள்ளியைக் கட்டிக் கொண்டதை.. ஒருவருக்கொருவர் உதவி வாழ்ந்ததை இவ்வூர் கோயிற் பள்ளிக் குறிப்புகள் சொல்வதால் அப்பொழு தவரோ அடிக்கடி சொல்வார்.. (பக்கம் 42) 

ஆண்களை எல்லாம் படைக்கு அழைத்துச் செல்லும் நிலமை அன்று காணப்பட்டது. அவ்வாறு கோழிக் காக்கா குஞ்சு முகம்மதும், மேசன் மாசிலாமணியும். பலவந்தமாக ஏற்றிச் செல்லப்படுகின்றனர். பணயக் கைதிகளாய் அவர்கள் பிடிபட்டிருக்கின்றமையை வாசகர்கள் உணரலாம். அப்பாவி மக்கள் இவ்வாறு அடிக்கடி காணாமல் போவதைக்கண்டு உள்ளங்கள் துடித்துப் போவதைக் காவியத்தில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதனை வாசிக்கையில் வாசகர்களின் மனதும் ஒருவித அச்சத்துக்கும், வேதனைக்கும் உட்படுவதை மறுக்க முடியாது.   

வடக்குத் திசையில் ஒரு கிலே மீற்றர் ஓடி முடித்தவன் வங்கி வளைவில் வாகை நிழலில் நின்று பார்த்தான். கூட்டம் இருந்தது பேச்சடிபட்டது. அந்தப் பக்கம் நேற்று கோழி வாங்கச் சென்ற முகம்மது காக்கா ஊரை வந்து சேரவில்லயாம். இந்தப் பக்கம் மேசன் வேலையாய் வந்த இருவர் பணயக் கைதியாய் பிடிபட்டிருப்பதாய் காற்று வந்து காதில் சொன்னது. கேட்டு மனசு துடியாய்த் துடித்தது. அப்பாவிகளும் தொழிலாளர்களும் அடிக்கடி இப்படி அமுங்கிப் போவதை அகதியாவதை எண்ணிப் பார்த்து மனசு துவண்டது.. (பக்கம் 49)

இவ்வாறு மனசை உலுக்கும் சம்பவங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு..
நூல் வகை - நவீன குறுங்காவியம்
நூலாசிரியர் - கவிஞர் பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0775367712
விலை - 200 ரூபாய்