Tuesday, March 27, 2018

121. உன்னோடு வந்த மழை கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

 உன்னோடு வந்த மழை கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

அடை மழை நேரத்தில் சூடாக அருந்தும் தேநீர் போன்ற இன்பத்தைத் தருவது கவிதை. கவிதை மனம் கொண்டுள்ளவர்கள் கனிவுடையவர்கள். இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையோடு உறவாடி நிலாச் சோறுண்டு தன்னைப் புதுப்பித்துக்கொள்பவர்கள்.

''உன்னோடு வந்த மழை'' என்ற அழகிய நாமம் கொண்ட கவிதை நூலை வெளியிட்டிருக்கும் மருதமுனையைச் சேர்ந்த கவிஞர் விஜிலி 1990 ஆம் ஆண்டு முதல் இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். அநேக பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் களம் கண்டுள்ளன.
ஒரு மனிதனின் குணாதிசயங்களைத் தீர்மானிப்பதில் அவன் பிறந்து வாழ்ந்த மண்ணும் தாக்கம் செலுத்துகின்றது. அத்தகைய சொந்த ஊரின் நினைவுகள் ஊரைவிட்டு வேறிடங்களில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி மரண வேதனையைத் தருவதுண்டு. ஊரோடு வாழுதல் என்பது எல்லாருக்கும் கிடைக்கும் பாக்கியமல்ல. எனது மண் (பக்கம் 01) என்ற கவிதையும் அத்தகைய ஒரு மன வெளிப்பாட்டுடன் எழுதப்பட்டுள்ளது. சொந்த நிலங்கள் பறிபோனதால் சோகங்களோடு வாழும் பலர் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடைசிக் காலத்தை ஊர் மண்ணோடு கழித்துவிட வேண்டும் என்ற அவா, தவிப்பு எல்லோருக்கும் இருக்கின்றது. கவிதையின் சில வரிகள் இதோ:-

வாசலில் தவழ்ந்து
புழுதி மண் விளையாடுகையில்
உம்மா கையைத் தட்டிவிட்ட
அந்த மண்
தவறிப்போய் விடுமோ என
அச்சமாயுள்ளது..

முன்னரான பொழுதொன்றில்
மண்ணோடு பேசினோம்
இப்போது நம்மோடு பேசுகின்றது மண்

''பேய்கள் ஆடிய நடனம்'' (பக்கம் 7) என்ற கவிதை மனிதர்களை பேய்களோடு உவமித்து எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றியது. இன்று நம் மத்தியில் வாழ்பவர்களில் சிலர்  பேய்களை விடவும் பயங்கரமானவர்கள். இவர்கள் முகமூடிகளோடு வாழ்ந்து முதுகில் குத்துபவர்கள். அத்தகையவர்களை பேய்களாக சித்திரித்து எழுதப்படுள்ள இக்கவிதை சிறப்புக்குரியது.

எங்கும் பேய்கள்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தன
...............
தேவதைப் பேய்கள்
அற்புதப் பேய்கள்
பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும்
அவலட்சணமான பேய்கள்

அழகான பேய்களும்
அரங்கை அலங்கரித்தன
பொய்களைத் தலையில் வைத்து
ஆடின சில பேய்கள்

உலகிலுள்ள பெரிய இன்பம் காதலிக்கப்படுவது என்று சொல்வார்கள். அத்தகைய காதல் வந்தால் ஒரு மனிதனின் வாழ்க்கையே திசை மாறும். சிலருக்கு சுகந்தமாகவும், சிலருக்கு சுடுவதாகவும் தோன்றும். ''உன்னோடு வந்த மழை'' (பக்கம் 11) என்ற கவிதை சுகந்தமான காதலொன்றை எம் கண்முன்னே தோற்றுவிக்கின்றது.

குடை விரிக்கும் மெல்லிய சத்தமாய்
அடித்துக் கொண்டது
எனக்குள் இதயம்
செவ்வானத்தையும் கடந்து
பஞ்சுப் பொதிகளாய் கறுத்து
ஊடறுத்து டிசன்றது மேகம்
உன் முகத்துள் புதையும்
கோபத்தைப் போல

உடல் மேனி தொட்டுச் செல்லும்
ஈரக்காற்றின் சுகந்தம்
என்னை ஸ்பரிசம் கொள்ள
நான் நினைத்துக் கொண்டேன்
நீதான் என்னை
கடந்து செல்கிறாய் என்று

ஜன்னலோரப் பேரூந்துப் பயணங்கள் இனிமையானவை. நமக்கான நதிகளை நாமே உருவாக்கி அதில் நீந்திச் செல்லக்கூடிய சுகானுபவத்தைத் தருபவவை. ஆனால் நெரிசல் மிகுந்த பயணங்கள் வாழ்க்கையை வெறுத்துவிடக் கூடிய சூழ்நிலையை உருவாக்குபவை. பஸ்களில் நெரிசல் மிகுதியினால் ஆண்கள் தொங்கிக் கொண்டு செல்கின்ற விதம் ஆச்சரியத்தையும் அலுப்பையும் ஏற்படுத்த வல்லவை. அத்தகைய துயர் அனுபவத்தை ''நேற்றைய என் பேரூந்துப் பயணம்'' (பக்கம் 17) என்ற கவிதையினூடாக பகிர்ந்துகொள்கின்றார் கவிஞர் விஜிலி.

நேற்று நான் தொற்றிக் கொண்ட
பேரூந்து
போதை ஏற்றியிருந்ததா?
அவ்வளவு ஆட்டமும் தள்ளாட்டமுமாய்

வியர்வைப் புழுக்கத்தினுள்
வீதியை அரைத்து
ஊர்ந்து கடகடத்தது வண்டி

சிறுசுகள் ஈனக் குரல் எழுப்ப
எறும்புக் கூட்டமாய்த் தொங்கின
மனிதத் தலைகள்

மூட நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப் போட்டதொரு காலமிருந்தது. இன்று அவை பாரியளவில் மாற்றம் கண்டு மனிதன் முன்னேற்றத்தின் திசையில் பயணிக்கின்றான். காகம் கத்தினால் கடிதம் வரும், பூனை குறுக்கே வந்தால் போகும் காரியம் பிழைக்கும் போன்ற நம்பிக்கைகள் இன்றும்கூட நம்பப்பட்டு வருகின்றன. ஆறறிவுள்ள மனிதன் ஐயறிவு ஜீவன்களுக்குள் அடங்கியிருக்கின்றான் என்பதாக எழுதப்பட்டிருக்கின்றது ''வெட்கமில்லாத மனிதன்'' (பக்கம் 29) என்ற கவிதை.

ஆக்காட்டிப் பறவை
ஆகாயத்தில் வட்டமிட்டு
குரல் எழுப்புகையில்
மழையை அது அள்ளி வருவதாய்
பூரிப்படைகிறான்

சொறி நாய் ஒன்று
வால் குழைந்து இவன் பாதங்களை
நாக்கால் நக்குகையில்
நன்றியுணர்வு என்றும்
வாய் பிளக்கின்றான்

இச்சந்தர்ப்பத்தில் சமூக வலைத்தளத்தில் நான் வாசித்த ஒரு வாசகம் ஞாபகத்துக்கு வருகின்றது ஷநாம்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம் மற்ற உயிரினங்களுக்கு ஐந்தறிவு என்று.. மனிதனுக்கே அறிவே இல்லை என்று அவை நினைத்துக் கொண்டிருக்கலாம்|

மனப் புழுக்கத்தால் வாடுபவர்களுக்கு, கவிதைப் பூக்களால் சாமரம் வீசிக்கொண்டிருக்கும் கவிஞர் விஜிலி இன்னும் பல நூல்களை வெளியிட்டு இலக்கிய உலகில் பிரகாசிக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - உன்னோடு வந்த மழை
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதமுனை விஜிலி
தொலைபேசி - 0779797210
வெளியீடு - அலிஸ் ஊடக கலை இலக்கிய சமூக சேவை வலையமைப்பு
விலை - 400 ரூபாய்



No comments:

Post a Comment