Thursday, April 7, 2011

06. 'ஒரு யுகத்தின் சோகம்' - கவிதைத் தொகுப்பு

'ஒரு யுகத்தின் சோகம்' கவிதைத் தொகுப்பு மீதான ரசனைக் குறிப்பு

மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது மன்னூரான் என்ற புனைப் பெயரில் எழுதி வரும் ஷிஹார் அவர்களின் கவிதைத் தொகுப்பு. ஆங்கில ஆசிரியராக இவர் பணிபுரிந்தாலும் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கன்னி நூலை மிக அழகிய முறையில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஒரு யுகத்தின் சோகம் என்ற பெயரைத்தாங்கி மன்னார் எழுத்தாளர் பேரவையின் வெளியீடாக, 82 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 45 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'இன்று இலக்கிய உலகை புதுக்கவிதைகளே ஆட்சி செய்கின்றன. தமிழில் புதுக்கவிதைகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே மகாகவி பாரதியார் புதுக்கவிதையின் வரவுக்கு கட்டியம் கூறிவிட்டார். 'சுவை புதிது, வளம் புதிது, சோதி மிக்க நவகவிதை. எந்நாளும் அழியாத மகாகவிதை' என்பது பாரதியாரின் வார்த்தைகள். புதுக்கவிதை என்பது எதுகை மோனைகளுக்கோ யாப்பு வரையறைகளுக்கோ கட்டுப்பட்டதல்ல. மாறாக, கண்களால் காண்பதை, உள்ளத்தை உறுத்துகின்ற நிகழ்ச்சிகளை உணர்வுகளோடு வெளிக்கொண்டு வருவதாகும். கவிஞர் மு.மேத்தா புதுக்கவிதை பற்றிக் குறிப்பிடுகின்றபோது, 'இலக்கணச் செங்கோல், யாப்புச் சிம்மாசனம், எதுகைப் பல்லக்கு, மோனைத் தேர்கள், தனி மொழிச் சேனை, பண்டித பவனி இவை எதுவும் இல்லாத கருத்துக்கள் தம்மைத்தாமே ஆழக்கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை' என்கிறார். இந்தப் புதுக்கவிதைப் பாணியைப் பின்பற்றியே மன்னூரான் தனது பெரும்பாலான கவிதைகளை எழுதியுள்ளார்' என்று தனது வாழ்த்துரையில் மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் கூறுகின்றார்.

முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளரான கலைமதி யாஸீன் தனது கருத்துரையில் காலத்தோடு பொருந்துகின்ற கவிஞன் என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'தான் வாழும் சமூகத்தின் அவல நிலை கண்டு சகித்துக்கொள்ள முடியாது கொதிப்படைந்து தனது சக்திமிகுந்த எழுதுகோலெனும் ஆயுதத்தின் மூலம் எதிர்த்து நின்று உலகுக்கு அவைகளை வெளிச்சம் போட்டுக்காட்டி, சாதகமான சூழ்நிலையையும், மனிதகுல மேம்பாட்டையும் உருவாக்க முயல்கின்ற ஒரு தனித்துவமிக்க போராளியாகவே சமூக சிந்தனைமிக்க ஒவ்வொரு எழுத்தாளனும் எப்போதும் காணப்படுகின்றான். வாசகனின் சிந்தனைக் கிளரலுக்கு வழிவகுப்பதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அநியாயங்கள், அடக்குமுறைகள், அநீதிமிக்க உரிமை மீறல்கள் போன்றவற்றை எதிர்த்துக் குரல்கொடுக்கச் செய்வதே எழுதுகோலை ஏந்தி நிற்பவனின் இலட்சியமாய் இருக்க வேண்டும் என்பதையே எழுத்துலகம் எதிர்பார்த்து நிற்கிறது.

இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற முயல்கின்ற ஒரு காலத்துக்கேற்ற கவிஞனாக இவ்விளம் கவிஞர் மன்னூரான் தோற்றமளிக்கிறார். தனது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி அடிக்கடி அதுபற்றிச் சிந்திக்க வைக்கின்ற சமகால நிகழ்வுகளை பாடுபொருளாக்கி வெவ்வேறு கோணங்களில் அவற்றை வெளிப்படுத்துவனவாய் இவரது கவிதைகள் அமைந்துள்ள. தனது படைப்புக்களை அவசரமாய் அச்சுருவில் ஆவணப்படுத்திவிட வேண்டும் என்ற ஆவலை மேலோங்கிடாது நிதானமாகவும், நிதர்சனமாகவும் கவித்துவ இலக்கணங்களைக் கருத்திற்கொண்டும் கவிதைகள் புனையப்பட்டிருப்பதை பாராட்டியே ஆக வேண்டும். ஆர்வம்கொண்டு வாசிக்கும் எந்தவொரு வாசகனையும் திருப்தி கொள்ளச்செய்யும் வகையில் பொருத்தமான தலைப்புக்களுடனும், பொருட்செறிவுடனும் புனையப் பட்டிருக்கும் கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் புதுக்கவிதைகள் அதிகமானாலும் மரபு வடிவங்களும் இழையோடியிருப்பது இருவகைப் படைப்புக்களிலும் இவர் கொண்டுள்ள ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

'யுகச் சோகம் சொல்லும் இளைய கவி என்ற தலைப்பிலான தனது அணிந்துரையில் மேமன்கவி அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் எல்லோரும் காதலிக்கிறார்கள். இருக்கலாம். காதலிக்கும் எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள், இருக்கலாம். ஆனால் நான் அறிய அதிகமான இளைஞர்கள் கவிதையைக் காதலிக்கிறார்கள். காதலிக்கும் கவிதையிலோ இவர்கள் சமூகத்தைக் காதலிக்கிறார்கள். அதே வேளை காதலிக்கும் அதே சமூகத்தின் கன்னத்தில் ஓங்கி அறைபவர்களாகவும் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், அந்த இளைஞர்கள் இந்த யுகத்தின் அனுபவக் கரங்களால் கணிசமான முறையில் அடி வாங்குபவர்களாகவும் இருப்பதே. அப்படியானதோர் இளம் கவிதைப் படைப்பாளியாகவே மன்னூரான் எனக்கு அடையாளமாகிறார்.

மன்னார் மண்ணுக்கும் எனக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை. மன்னாரைச் சார்ந்த கணிசமான கவிதைக்காரர்களுடன் எனக்கு உறவு. அந்த உறவின் இன்னொரு வெளிப்பாடாக 'ஒரு யுகத்தின் சோகம்' எனும் இத்தொகுப்புக்கான இக்குறிப்பு. கைவரப்பெற்ற சுதந்திரத்தில், கவிதைச் சித்திரங்களில் ஒரு யுகத்தின் சோகத்தைத் தன்னுடனான சோகமாய் சொல்ல முயற்சிக்கும் மன்னூரான் இன்னும் அனுபவங்களைத் தேடவேண்டும். அந்தத் தேடலில் தான் ஹைக்கூவைப் பற்றிய, நவீனக் கவிதை பற்றிய மேலும் தெளிவான அனுபவங்களை அவர் அடைவார். அத்தகைய தரிசனம் இவருக்கு கிடைக்கும்பொழுது இவரிலிருந்து இயங்கும் இந்த யுகத்தின் ஓர் இளைய கவியின் முகம் தனித்துவ ஒளிவீசும் முகமாய் நமக்கு கிடைக்கும் என்பது நிச்சயம்.

மன்னூரான் ஷிஹார் தனது உரையில் 'பேனா தான் மனதின் நாக்கு என்ற சேர் வண்டஸ் இன் கருத்தை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறேன். மனத்தின் மலர்ச்சியாய் இருக்கட்டும். அன்றேல் அதன் ரணங்களாய் இருக்கட்டும். அனைத்தையும் பேனாவால பிரதிபலிக்கச்செய்ய முடிகிறதல்லவா? பேனாவின் அவதாரங்கள் பல. அதிலும் கவிதைகள் என்பவையோ மிக விசேடமானவை. வித்தியாசமானவையும் கூட. அவை பேனாவுக்கும் பேனா காரனுக்கும் பெருமை சேர்க்கும் ஆற்றல் கொண்டவை. வாசகரின் மனதை வசீகரிக்கும் வல்லமை கொண்டவை. இந்த நம்பிக்கையோடுதான் நானும் எனது வாழ்க்கைப் பாதையின் கசப்பான, இனிப்பான அனுபவங்கள் என்னுள் அவ்வப்போது உண்டாக்கிப்போன உணர்வுகளைக் கவிதையாக்கி அவற்றையொரு தொகுப்பாக்கி இருக்கிறேன்' என்கிறார்.

இவரது பெரும்பாலான கவிதைகள் எமது தாய் தேசத்தை உலுக்கிய கொடூர யுத்தத்தின் கோரத்iதையும் அது விளைவித்த சோகத்தையும் சொல்வதாக காணப்படுகிறது. என்று தணியுமிந்த...? என்ற தலைப்பிலான கவிதையில் கவிஞர் தனது ஆழ்மனப் பதிவுகளை இவ்வாறு முன்வைக்கிறார்.

வேர்விட்ட தலைமுறைகள்
போரிட்டு மாண்டதனால்
சீரற்றும் செழிப்பற்றும்
சிதறுண்ட குடும்பங்கள்
ஊர்விட்டு ஊர்சென்று
உறவிழந்து உருக்குலைந்து
பேர்கெட்டுப் போகின்ற
பேரிழப்பு ஏன் எமக்கு?

நாளைய விடியலில், பிரார்த்தனை, கலங்கரை விளக்கம், கருவறை, ஈதுல் பித்ர் - ஈகைத் திருநாள், வெற்றி நிச்சயம் போன்ற ஆன்மீகக் கவிதைகளையும் இந்தக் கவிதைத் தொகுப்பில் இவர் சேர்த்திருக்கிறார். இவற்றிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அரபுப் பதங்களுக்குரிய தமிழ் விளக்கத்தையும் அந்தந்த கவிதைகளுக்குக் கீழே இணைத்திருப்பதேயாகும். தமிழ் விளக்கமின்றி அரபுப் பதங்களில் மாத்திரம் கவிதை தரப்பட்டிருக்குமேயானால் சகோதர இன வாசகர்களினால் அதை புரிந்து கொள்வது சிரமமாகியிருக்கலாம். எனினும் இவ்வாறான விளக்கத்தை இணைத்திருப்பதினூடாக இஸ்லாமிய கொள்கைகளையும் ஐயமின்றி அறிந்து கொள்ள வழி சமைத்திருக்கின்றமை பாராட்டத்தக்கதாகும்.

இதில் கலங்கரை விளக்கம் என்ற கவிதையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றின விடயங்களும், அவர் மக்களுக்கு காட்டிச்சென்ற நல்வழியைப் பற்றியும் எடுத்தியம்பியிருக்கும் ஷிஹாரின் வரிகள் இப்படி விரிகிறது...

மார்க்கம் உரைத்ததையே
மாந்தர்க்கெடுத்துரைத்துத்
தீர்க்கமாய் வழிநடத்தித்
திருத்தூது செய்த நபி
நாதியற்ற ஏழையர்க்கும்
நளினமிகு வார்த்தை சொல்லி
வேதனையைத் தீர்த்து வைத்த
வேந்தரன்றோ எங்கள் நபி.

இயற்கையை வர்ணித்து எழுதாத கவிஞர்கள் இல்லை எனலாம். அந்த வகையில் ஷிஹாரும் அவரது மொழிநடையில் பூக்கள் என்ற கவிதையில் தென்றலோடு சேர்ந்து தெம்மாங்கு பாடும் தேவதைகள் என்று பூக்களை வர்ணிக்கின்றார். வானவில்லிடம் வர்ணம் வாங்கி வாசனையோடு நிற்கும் வசந்த குமாரிகள் என்று பூக்களைப் பற்றி கூறும் இரசனைப்பாங்கு என் மனதை ஈர்த்தது.

பொது(வுடை)மை என்ற கவிதையில் அமெரிக்காக்களின் அராஜகம் அதிகரித்துக்கொண்டே போனால் எத்தியோப்பியாக்களின் நிலை என்னாவது என்று கேட்டு நிற்கிறார். செல்வந்தச் சப்பாத்துக்களால் நித்தமும் வறுமையானவர்களை வாட்டுகின்ற பணத்திமிர் பிடித்தவர்களையும், அதிகாரத்தின் உச்சியில் ஆட்சி செய்பவர்களையும் பற்றி குறிப்பிடும் இவர், அத்தகையவர்கள் ஏழைகளை எட்டி உதைக்கும் யதார்த்தத்தை படம்பிடித்துக்காட்டுவதாக இக்கவிதையை யாத்துள்ளார்.

உலகத்தில் எம்மை உண்மையாக நேசிக்கும் ஒரே ஒரு உறவு தாய் மாத்திரம் தான். தாயைப் பற்றி ஷிஹார் எழுதியிருக்கும் என்னைப் பிரசவித்தவளுக்கு என்ற கவிதையில் வரும் கீழுள்ள வரிகள் லயிக்க வைக்கிறது.

உன் உதிரத்தை நீ
என் அதரம் வழியாய் ஊட்டியபோது
உன் உணர்வுகளையும் சேர்த்தே
உறிஞ்சிக்கொண்டேன்

இந்த ஒரேயொரு காரணத்தால் தான் இந்த இயந்திர உலகின் வாழ்க்கைக்குள்ளும் ஒவ்வொரு கணமும் தாயை நினைக்க முடிவதாக இதன் கரு அமைந்திருக்கிறது.

சமூக கருத்துக்கள், ஆன்மீக விடயங்கள், காதல், போர்ச்சூழல் போன்றவற்றை பெரும்பான்மையான கவிதைகளின் கருப்பொருளாகக் கையாண்டுள்ளார். இது இவரது கன்னி முயற்சியாகும். நிச்சயமாக எதிர்காலங்களில் இவர் கவிதைத்துறையில் இன்னுமின்னும் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - ஒரு யுகத்தின் சோகம் (கவிதைத் தொகுப்பு)
நூலாசிரியர் - மன்னூரான் ஷிஹார்
வெளியீடு - மன்னார் எழுத்தாளர் பேரவை
முகவரி - 653, Kashmeer Street, Uppukkulam, Mannar.
தொலைபேசி - 0714 500181
விலை - 180/=

05. அக்குரோணி - கவிதைத் தொகுப்பு

அக்குரோணி கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

மன்னார் அமுதன் எழுதிய அக்குரோணி என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதியாகும். ஏற்கனவே இவர் விட்டு விடுதலை காண் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். மன்னார் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவே மன்னார் எழுத்தாளர் பேரவை வெளியீடாக, 86 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 50 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தொகுதியில் தமிழ்மீது கொண்ட பற்று, மானிட நேயம், ஆன்மீகம், காதல், சமூகம், தனி மனித உணர்வுகள், போர்ச்சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன. கவிஞர் மன்னார் அமுதன் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் போன்ற இரு வடிவங்களிலும் தனது கவிதை உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன் ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஊரின் பெயரையும் இணைத்து மன்னார் அமுதன் என்ற பெயரில் எழுதி வருகின்றார். இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளர்கள் வரிசையில் மன்னார் அமுதனுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது.


'இலக்கிய வடிவங்களில் ஒரு மொழியின் உச்சத்தை உணர்த்தக் கூடியது கவிதையே. கவிதையைச் சிறப்பாகக் கையாளக் கூடிய கவிஞர்களும் உள்ளனர். கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரம் உள்ள கவிஞர்களும் உள்ளனர். கவிதையை முழு ஆக்கத்திறனோடு படைக்க முயலும்போது அம்முயற்சி வெற்றி பெறும். உள்ளார்ந்த ஆக்கத்திறனைக் கலைத்துவத்தோடு வெளிப்படுத்தும் போது சிறந்த இலக்கியப் படைப்புக்கள் உருவாகும். அதற்குப் பரந்த வாசிப்பும், பயிற்சியும் உறுதுணையாக அமையும்.

இலங்கையின் சிறந்த கவிஞர்களாக சுட்டக்கூடிய மஹாகவி, முருகையன், நீலாவணன் போன்றோர் மரபுக்குள் புதுமை செய்தவர்கள். அதே வேளை, புதுக் கவிதையைச் சிறப்பாகக் கையாளத்தக்க சிலரும் உள்ளனர். ஓசை பிழைக்காமல் எழுதிவிட்டால், அது மரபுக் கவிதையாகிவிடும் என்று நினைத்தலும் கூடாது. கவிஞனின் பாடுபொருள், அவனின் முழு எழுத்தாளுமை கலந்து, கலைத்துவத்துடன் வெளிவருதல் வேண்டும். மன்னார் அமுதனால் சாதிக்க முடியலாம் என்று கருதுகிறேன்' என்று கலாநிதி துரை மனோகரன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேமன்கவி அவர்கள் தனது உரையில் பின்வருமாறு கூறுகிறார். 'மன்னார் அமுதன் இன்று இலக்கியச் சூழலில் வேகமாய் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இளைய படைப்பாளி. இவரை இளைய தலைமுறையின் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவராகவே நான் பார்க்கிறேன். மன்னார் அமுதனின் விட்டுவிடுதலை காண் எனும் முதலாவது தொகுப்பிலிருந்து இரண்டாவது தொகுப்பான அக்குரோணி எனும் இத்தொகுப்பு வேறுபட்டு நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது. காலங்காலமாக... சொல்லப்பட்டு வரும் தமிழ்மொழி கொண்டிருக்கும் நெருக்கடியை மனங்கொண்டும் எழுத முனைந்த மன்னார் அமுதன் தமிழ் சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றியும், தமிழ்மொழி எதிர்கொண்ட ஆபத்தினைப் பற்றியும் விஷேடமாக பேசியிருக்கிறார் என்பதே அவரது அக்குரோணி கொண்டிருக்கும் கவனத்திற்குரியதொரு விடயமாகும்'.

மன்னார் அமுதனைப் பற்றி, எஸ்.ஏ. உதயனின் கருத்து பதிப்புரையில் கீழுள்ளவாறு அமைந்திருக்கிறது.

'மன்னார் அமுதன் தனது கவித்துவ வீச்சினை சற்று நீளமாகவே வீசியபடியால் தான் இன்று மன்னாரின் முகவரி தலைநகரிலும் வாசிக்கப்படுகிறது. பட்டதும், சுட்டதுமான ஓர் இனத்தின் வீழ்ச்சியோடு தன் கவித்துவ வேட்கையில் இந்த கவிஞரும் மரித்துவிடாது, மீண்டு எழுகின்ற தார்மீக உணர்வுகளைத் தமது அக்குரோணி கொண்டு ஆழமாகவே விதைத்திருக்கிறார்.'

மன்னார் அமுதன் தனது உரையில் 'இன்றுவரை வெளிவருகின்ற அனைத்து இலக்கிய நூல்களும் கலை வடிவங்களும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் விளிப்புணர்வூட்டக்கூடிய கருத்துக்களையே மையக்கருக்களாகக் கொண்டுள்ளன. அவற்றை நாம் படிக்கிறோமா? அவற்றின் படி நடக்கிறோமா? இலக்கியமென்பது நமது சமூகத்தை இருக்கும் நிலையில் இருந்து ஒருபடி உயர்த்துவதற்காகவே அன்றி தாழ்த்துவற்காக அல்ல. கலை இலக்கிய அமைப்புக்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர்கள் உருவாக்கும் புதிய இலக்கியக் கொள்கைகள் முழுமையான விளக்கத்துடன் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்படிச் சென்றடையாவிட்டால் இலக்கியமும் மேல் நாட்டு நாகரீக மோகம் போன்ற ஒரு பகட்டான போதையாகி விடும்...' என்கிறார்.

வரம் தா தேவி என்ற கவிதையில்

ஆழி தமிழ்மொழி - அதன்
அடி நுதல் அறியேன்
பாடிப் பரவசம் கண்டதால் நானும்
பாவினைத் தொழிலாய் ஆக்கினேன் தேவி

என்று குறிப்பிடுகிறார். மன்னார் அமுதன் தமிழ் மீது கொண்ட பற்றைத்தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது. வரம் தா தேவி, தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும், தமிழாய்... தமிழுக்காய்... போன்ற கவிதைகள் தமிழின் பெருமை பேசுவதாய் எழுதப்பட்டு வாசகரின் கூடுதல் கவனத்தை ஈர்த்து விடுகின்றன.

நான் மனம் பேசுகிறேன் என்ற கவிதையில் மனித மனம் பேசுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பலவித எண்ணங்களைக் மனது கொண்டிருந்தாலும் மனிதன் அதை நிறைவேற்ற விடுவதில்லை. இறுதியில் மனிதன் நல்லவனாகவே மரித்துப்போக, மனம் மாத்திரம் நிறைவேறாத ஆசைகளுடன் வலம் வருவதாகக் கூறுகிறார் அமுதன். அதை பின்வரும் கவி வரிகளில் காணலாம்.

அன்றும் அவன்
நல்லவனாகவே
இறந்து விடுவான்
நிறைவேறாத ஆசைகளுடன்
வெளியில் வலம் வருவேன்

கவித் துளிகளாக எழுதப்பட்டிருக்கும் சில கவிதைகளில் ஏழ்மை என்ற கவிதையானது, வர்க்கப் பேதத்தை சுட்டிக் காட்டுவதாகவும், உழைப்பின் பெருமை பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது. காசு தேவை என்ற காரணத்துக்காக வண்ணச் செருப்புக்களைக் கூவி விற்கும் சிறுவன், அவன் காலில் ஒரு செருப்பில்லை என்ற சிறிய விடயத்தைத்தான் அழகாக ஏழ்மை என்ற கவிதையில் இவ்வாறு தொட்டுக் காட்டியிருக்கிறார்.

வண்ண வண்ணச் செருப்புக்களைக்
கூவிக் கூவி விற்கிறான்
வெறுங் கால்களுடன்!

இது தான் காதலோ?, ஊரறியும்... உறவறியும்... நீயறியாய்... பெண்மனமே, கூதலும்... காதலும்..., இரவினில் பேசுகிறேன், சிரட்டையில மண் குழைத்து, உன் நினைவோடு... நானிங்கு..., மலரும் நம் காதல், காதல் கதை... இது மானிட வதை..., என் செல்லமே, பிரிவாற்றாமை, யாதுமாகி நிற்கின்றாய்..., போன்ற காதல் கவிதைகளும் இத்தொகுதியில் இடம்பிடித்துள்ளன. உதாரணமாக இது தான் காதலோ? என்ற கவிதையின் சில வரிகள் இதோ..

கோவப்படுகையில்
நீ அடிப்பாய்
வலிப்பதில்லை - இன்றோ
மௌனம் காக்கிறாய்
வலிக்கிறதே!!!

மேலும் சிரட்டையிலே மண் குழைத்து என்ற கவிதையில் காதல் அழகாக கூறப்பட்டிருக்கிறது. சிறுவயதில் இருவரும் ஒன்றாகத் திரிந்ததையும், மரவள்ளி இலைகளை மாலையாக்கி விளையாட்டாக தாலி கட்டியதையும் தாம் காதல் புரிந்த பிற்காலங்களையும் பற்றியே இக்கவிதையில் பேசப்படுகிறது. இறுதியில் காதல் முறிந்துபோக சிறுவயதில் கூட இருந்த கரும்பும், அடுப்பும், நெருப்பும் அப்படியே இருக்க, பெண்ணோ கணவனுடனும், குட்டி மகனுடனும் வாழ்வதாக இக்கவிதை நிறைவு செய்யப்ட்டிருக்கிறது.

சுவரின்றி வீடு கட்டி
நெருப்பின்றி அடுப்பு மூட்டி
சிறட்டையிலே மண்குழைத்து
சோறென்று உண்கையிலும்...

எனத் தொடர்ந்து இறுதியில் இன்னொரு சிறுவனும் தனது குட்டித் தோழியோடு மண் குழைப்பதைப் பார்த்து ஏங்குவது போல் அழகிய மொழிநடையில் கூறப்பட்டிருக்கிறது.
கரைகளுக்கப்பால் என்ற கவிதையில் அகதிகளின் வாழ்க்கைப் பற்றிய விடயம் சொல்லப்பட்டிருக்கிறது. யுத்தம் தந்து விட்டுப் போன எச்சங்களாக வாழும் அவர்களின் அவல வாழ்க்கை கவிஞரின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் இந்த வரிகளில் புரியக்கூடியதாக இருக்கிறது.

காத்திருக்கும் அகதிக்கு
ஒத்தடமாய் இதமளிக்க
இன்றாவது கரை தொடுமா
கட்டு மரங்கள்

நாகரீகம் எவ்வளவு தான் வளர்ச்சியடைந்தாலும் பழைமைவாதிகளின் சாதிய சிந்தனை இப்போதும் முற்றாக ஒழிந்து போகவில்லை. காலத்துக்கேற்ப மாறும் உலகினில் மாறாததொரு விடயமாக சாதியம் காணப்படுவது துரதிஷ்டமேயாகும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டினால் தத்மது இனங்களுக்குள்ளேயே எத்தனையெத்தனை பிரிவினைகள்? போராட்டங்கள்? அவற்றையெல்லாம் கண்டித்து எழுதியிருக்கும் அமுதனின் சாதீ.. தீ... தீ... என்ற கவிதையில் சாதியால் நாம் சாதித்ததென்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சாதி சாதி சாதியென்று
சாவ தேனடா - சாதிச்
சண்டையினால் நீயும் நானும்
சாதித்ததென்னடா?
குளிப்பதற்கும், கும்பிடவும்
தனியிடங்களா? - நீரைக்
குவளையிலே குடிப்பதற்கு
இருமுறைகளா?

இவ்வாறு மனித வாழ்வின் அனைத்து பக்கங்களிலிருந்தும் சிந்தித்து சமூகம் பற்றியும், காதல் பற்றியும், போர்ச்சூழல் மனதில் விதைத்துச் சென்ற காயங்கள் பற்றியும் இன்னும் பல விடயங்கள் பற்றியும் மிக அழகாகவும், காத்திரமாகவும் எழுதியிருக்கும் அமுதனின் தமிழ்தொண்டு சிறப்பாய் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - அக்குரோணி (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - மன்னார் அமுதன்
வெளியீடு - மன்னார் எழுத்தாளர் பேரவை
தொலைபேசி - 0714 442241
மின்னஞ்சல் முகவரி - amujo1984@gmail.com
விலை - 250/=




இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14012:2011-04-07-03-27-08&catid=4:reviews&Itemid=267

இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை நிலாப்பெண் வலைத்தளத்தில் பார்வையிட

http://nilapenn.com/index.php/நூலறிமுகமும்-ஆய்வும்/

Wednesday, April 6, 2011

04. 'கண்ணீர் வரைந்த கோடுகள்' - கவிதைத் தொகுதி

'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுதி மீதான விமர்சனப் பார்வை

கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் 'கண்ணீர் வரைந்த கோடுகள்' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து, வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'பொதுவாக இளைய கவிஞர்களின் தொகுதி என்றால் அதில் காதல் கவிதைகள் அதிகம் இருக்கும். அல்லது பள்ளி வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்தக் கருத்துருவத்தை மாற்றுகிறது கஹட்டோவிட்ட நிஹாஸாவின் கண்ணீர் வரைந்த கோடுகள். .... உள்ளே பல புதுமையான கவிதைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அநேகமான கவிதைகள் பெண்ணின் சுதந்திர வாழ்க்கைக்கான ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைச் சுட்டி நிற்கின்றன. ஏனையவற்றுள் இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சினை, அரசியல் உரிமைகள், நாட்டின் சமாதானம், தாய்மை என்று பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் மிகக் குறைவாக காதலும், காதல் தோல்வியும் பேசப்படுவது சிறப்பம்சமாகும். இன்னொரு சிறப்பம்சம்... இவர் இதுவரை பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர் அல்ல என்பது. அனாவசியமான படிமங்கள், குறியீடுகள் என்பவற்றைக் களைந்து மிக இயல்பான கவிதை மிடுக்கோடு இவரது கவிதைகள் வெளிக்கிளம்பியுள்ளன' என்று கெகிராவ சஹானா தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் பணிப்பாளரான அல்ஹாஜ். எம். இஸட். அஹ்மத் முனவ்வர், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ்.வை. ஸ்ரீPதர், கவிஞர் காவூர் ஜமால் ஆகியோர் இக்கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகளை வழங்கியுள்ளார்கள். பதிப்புரை வழங்கியிருக்கும் வேகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பஹமுன அஸாம் தனது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்....

'புது யுகம் காணும் வெற்றியின் பயணத்தில், வேகம் பதிப்பகமானது மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. அந்த விதத்தில் பத்திரிகைத் துறையில் ஒரு புதுத் தடம்பதித்துள்ள வேகம் பத்திரிகையானது புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் உற்சாகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ... நிஹாஸா நிஸாரின் ஆக்கங்களைப் பார்க்கும் போது ஒருவிதக் கவலைதான் குடிகொண்டது. காரணம் அழகான தமிழ் வளமும், சொற்கள் வசனங்கள் என்பவற்றை தனது ஆக்கங்களில் கையாளப்பட்டிருந்த அமைப்பும் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் இத்தனை காலமாக அவை தூசு தட்டப்படாது இருந்ததை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. ஆரம்பக் காலத்திலேயே இவரை இனங்கண்டு, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பட்டை தீட்டப்பட்டிருந்தால், இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளராக இருந்திருப்பார்'.

நிஹாஸா நிஸார் தனது முன்னுரையில் 'தெவிட்டாத தேன் சொரிக்கும் இக்கவிதா வனத்தில் சிறகசைக்க வந்ததொரு சிட்டுக்குருவி போல இச்சின்னத்தொகுதி உங்கள் கரங்களில் இன்று தவன்று கொண்டிருப்பது வெறும் கனவென்றே எண்ணத்தோன்றும். கவிதையின் ஆரம்ப நாதம் அடிமனதில் அலாரம் அடித்தது. மனதில் முகாமிடும் ரணங்களை மொழிபெயர்க்கத் தெரியாத கணங்களில் மனதை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் எனது யௌவனத் தேடல்களின் கண்களில் ஆங்காங்கே தட்டுப்படும் வரிகளில் மனம் லயிக்கும். அவ்வரிகளை என் டயரிக்குள் எழுதிப் பத்திரப்படுத்துவேன். இரவுகளின் ஏகாந்தத்தில் உள்ளம் வாசித்து அமைதி பெறும். கவிரசனையின் ஆரம்பச் சுவையை இருதயம் கொஞ்சம் கொஞ்சம் சுவைப்பது புரிந்தது. ... முதன் முதலில் பூமியில் கால் பதிக்கும் குழந்தையின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் குறை காணாது தப்புக்களைத் தண்டனைக்கு அப்பாற்படுத்தி கை தூக்கி விடுவது நற்பண்புகளின் உச்சம். அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் எனது முதல் பாதச் சுவடான இக்கன்னித் தொகுப்பை உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன்' என்கிறார்.

சாயம் போகும் நினைவுகள் என்ற கவிதையில்

ஆயிரம் முறை நீட்டும் மனப்புயலின்
தலை நீட்டலுக்கிடையில்
த்ரீஜீ போனுக்கு ரீலோட் ஏத்த
மாதம் தோறும் பணம் கேட்கையில்
அம்மாக்களின் இருதயங்களில்
ஆலமரம் சரியும் அரவம்....

என்று குறிப்பிடுகிறார். கையடக்கத் தொலைபேசி இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் சிறியோர், பெரியோர் அனைவரிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. எனினும் அதனால் ஏற்படும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அவசர யுகத்தில் அவசியமாகிப் போன கைத்தொலைபேசிகள் ரீலோட் என்ற பெயரில் காசை அழித்து விடுகின்றது. அந்த கருத்தைத் தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது.

இது அங்குல இடைவெளி என்ற கவிதையில் வெறுமை நிலை வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடும்போது ஏற்படும் மனவருத்தம் இந்த வரிகளில் இவ்வாறு எடுத்தாளப்பட்டிருக்கிறது.

அன்புகாட்டாத நேசங்கள்
முளைக்கப் பார்க்கும்
பெண்மையின் அபிலாஷைகள்
கண் முன்னே
கலையப்படும் போது - அது
தருகிற வழியும்... ரணமும்...
வேதனையாகி விரக்தியாகிறது...

மன உறுதிகள் குழைந்து
வீரம் தளர்ச்சியுற்று
உடம்பைக் கூறுபோடுகிறது...

இது என்ன தான் நவீன யுகம் என்றாலும் இன்றும் கூட பெண்களை அடக்கியாள எண்ணும் ஆண்கள் கிருமிகளாக ஆங்காங்கே காணப்படுகின்றமை துரதிருஷ்ட நிலையாகும். ஒடுக்கப்பட்டு அடுப்பங்கரைக்குள் அடைப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு 'தாகிக்கும் இதயம்' என்ற கவிதையில் இவ்வாறு சோகமிசைக்கிறது.

வாழ்வில்
அறியாத பக்கங்களை
தெரியாதென விட்டுவிட்டேன்...
அன்று அறியப்படாத - சில
பக்கங்களை அனுபவிக்கிறேன்
இன்று
அடுப்பங்கரையினுள்ளே
அடைபட்டுக்கொண்டு...

உரிக்கப்படும் உரிமைகள் என்ற கவிதையில் மானிட நேயம் வெளிப்படுகின்றது. செத்த பிணங்களாய் அனைத்து பிரச்சனைகளை சகித்த காலங்களும், இனவெறி அரக்கனின் அட்டகாச ஆட்சியின் அவலங்களும் போதும் என்று ஆவேசப்படும் நிஹாஸா அந்தக் கவிதையின் வரிகளை இவ்வாறு வடித்திருக்கிறார்.

பாழ்பட்ட மண்ணில்
கால்பதித்த மக்கள்
சீர்கெட்ட சனத்தால்
சீரழிந்தது போதும்...

வாள்பட்டு நித்தம்
சீர்கெட்ட மக்கள்
சிதைந்தொழிந்தது போதும்...

நூலின் 32வது பக்கத்தில் அமைந்திருக்கும் காத்திருப்பு என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை நாட்டார் பாடலின் சாயலில் அமைந்திருக்கிறது. சந்த ஒழுங்கு பேணப்பட்டு கவித்துவத்துடன் புனையப்பட்டிருக்கும் அந்தக்கவிதை கீழ்வருமாறு....

நெஞ்சில கைய வச்சா
சத்தமும் இல்ல
ஆனா நான்
சாகவும் இல்ல!

ஓடுதில்ல ஒருவேல
நெனப்பெல்லாம் உங்கமேல
நொந்து கிடக்கிறேன் நான்
நொடிப்பொழுதில் வாங்க..
தேய்ந்து போற என்ன
தேற்றிவிட்டுப் போங்க

அடுத்து முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் சீதனம் கேட்டு திருமணம் செய்யும் ஆண்வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைகிறது. அதற்கு உதாரணமாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்.

பெண்களை
வாழ வைக்க
வக்கில்லாதவன்
பெற்றுக் கொள்ளும்
பிச்சைக் காசு...

மஹர் கொடுத்து
மணம் முடிக்கத் துணியாத
நீங்களெல்லாம் - ஏன்
காற்சட்டை அணிந்த
ஆண்கள் என்று
சொல்லிக் கொள்கிறீர்

எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நிஹாஸா நிஸார் மிளிர வேண்டும். இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!!!


நூலின் பெயர் - கண்ணீர் வரைந்த கோடுகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார்
வெளியீடு - வேகம் பதிப்பகம்
முகவரி - Katupotha Road, Pahamune, Kurunegala.
தொலைபேசி - 077 4424604
விலை - 120/=




கீற்று வலைத்தளத்தில் இந்த விமர்சனத்தை பார்க்க இதை க்ளிக் செய்யவும்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13970:2011-04-04-14-14-36&catid=4:reviews&Itemid=267

இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை தமிழ் ஆதர்ஸ் வலைத்தளத்தில் பார்வையிட

http://www.tamilauthors.com/04/130.html

'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத்தொகுதி பற்றி 2011.04.10ம் திகதி தினகரன் பெண் பகுதியில் வெளிவந்த விமர்சனத்தைப் பார்க்க

http://thinakaran.lk/vaaramanjari/2011/04/10/?fn=g1104102

03. வான் அலைகளில் தேன் துளிகள்

வான் அலைகளில் தேன் துளிகள்



வான் அலைகளில் தேன் துளிகள் - விமர்சனப்பார்வை


வான் அலைகளில் தேன் துளிகள் ஒரு பாடல் தொகுப்பு. அல்ஹாஜ் N.M. நூர்தீன் தனது 05 தசாப்த கால படைப்புக்களை சிரமம் பாராது வாசகர் மனசை கொள்ளை கொள்ள வழங்கியிருக்கிறார்.

தனது திறமையால் உருவாகிய இனிமையான பாடல்களை பிறர் பாடிய போது அது தனக்கு எத்தனை பரவசமாக இருந்தது என்பதை `... அவர்கள் அன்று பாடிப் பரவசமூட்டிய, மறக்க முடியாத சொற்பிரவாகங்களை இசையோடு பிசைந்து இன்ப இனிப்புகளாய் நுகர்ந்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். அவற்றுள் சிலவற்றை, தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற இங்கே அடக்கியுள்ளேன்'என அவர் குறிப்பிடுவதிலிருந்து புலப்படுகிறது.




இப்புத்தகத்தின் முதல் பாடலாக காணப்படுகின்ற `வாழ்க நம் தாய்நாடு' என்பது இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இயற்றப்பட்டதாகும். யாப்பிலக்கணம் கற்றுத் தெளியாத பள்ளிப்பருவத்தில் தன் உள்ளத்தில் துள்ளி எழுந்த நாட்டின் மீதான அக்கறையில் பாடிய பாடல்கள் சக்கரையாய் இருப்பதில் வியப்புதான்.



நூர்தீனின் இளமைக்காலமானது, இலக்கிய வித்தகராக திகழ்ந்த தனது தந்தையான இஸ்லாமிய அறிஞரின் வாழ்வுச் சூழலின் பின்னணியாக அமைந்திருந்தமை அவர் பெற்ற வரம் என்றே கூறலாம்.



நூர்தீன் அவர்களின் பாடல் திறமையை தீனுல் இஸ்லாம், அருவி, தமிழன், தினகரன், சிந்தாமணி இத்தியாதி... போன்ற பத்திரிகைகள் நன்கறியும். இசையுடன் பாடுதல் பற்றின சர்ச்சையை நூர்தீன் பின்வருமாறு தீர்த்துச் செல்கிறார்.



`முஸ்லிம்களிடையே, பாடல்களை இசையுடன் பாடுதலில் பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அந்த வேற்றுக்கருத்துக்களை வெளியிடும் உள்ளங்களும் ஒரு தடவையாவது தனது எண்ணத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டே இருக்கும். இசை ரசனையுடன் பாடியே இருக்கும் என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பது எனது அபிப்பிராயம்'



இக்கருத்து இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் தர்க்கத்துக்கு உரியதாயிருந்த போதும் தனது பாடல்கள் மூலம் தன் கருத்தை எவ்வாறு நிலை நாட்ட முனைந்துள்ளார் என்பது சுவையான அம்சமாகும். இஸ்லாத்தின் மாண்புமிகு விழுமியங்களை உள்வாங்கி அவற்றை வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்பது தொழுகை, நோன்பு, ஸக்காத் போன்ற பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



நயந்து எழுதப்பட்ட இவர் பாடல்களை வியந்து பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன் வாழ்த்துரையில் `...பாடல்களைத் தாமே இயற்றி, அவற்றிற்கு மெட்டமைத்து, இசையமைத்து பல சந்தர்ப்பங்களில் சொந்தக் குரலிலேயே அவற்றை இசைத்து கேட்டு இன்புறுவோரை பரவசப்படுத்தும் இவரது ஆற்றலையிட்டு நான் வியப்படைவதுண்டு' என்றும்,



பாராளுமன்ற ஆலோசகர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் `...வாய்விட்டு வகுப்பறையில் பாடிய அவரை, பொன் பட்டுப் போர்த்தி வாழ்த்துவேன் என, அன்று நான் கனவு கண்டேனா? இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் நிகழ்ந்து விட்டது!' என்கிறார். மேலும் அல்ஹாஜ் என். எம். அமீன், யூ.எல். அலியார், மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ், எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரும் தத்தமது அணிந்துரைகளில் வாழ்த்துப் பா(பூ)க்களை தூவுகின்றனர்.



விசேடமாக பாடல்களின் முடிவில் திருநபி (ஸல்) அவர்களினால் மொழியப்பட்ட ஹதீஸ்கள் உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். இளம்பிறை இலக்கிய மன்றத்தினால் வெளியிடப்பட்ட வான் அலைகளில் தேன் துளிகள் என்ற இந்தப் புத்தகத்துடன் நிற்காமல் இன்னும் பலவற்றை வெளியிட வாழ்த்துகிறோம்!!!



நூலின் பெயர் - வான் அலைகளில் தேன் துளிகள் (பாடல்)
நூலாசிரியர் - அல்ஹாஜ் என்.எம். நூர்தீன்
வெளியீடு - இளம்பிறை இசை மன்றம்
முகவரி - A 58, Sir Henry De Mel Mw, Colombo - 02.
விலை – 150/=



.....................................................................................



இசைக்கோ நூர்தீன் பற்றிய சில குறிப்புக்கள்



மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசித்து வரும் நெய்னா முஹம்மது நூர்தீன் அவர்கள் சுமார் அரை நூற்றாண்டுகளாக இலக்கியப்பணிக்குள் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார். கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் M/S Noorsons (Pvt) Ltd, M/S Noorsons Furniture Hirers, Al Samit Interna’l ஆகிய நிறுவனங்களுக்கு தலைவராகவும் இருக்கிறார்.



ஊடல் கொண்ட இதயங்களுக்கு தன் பாடல் மூலம் ஆறுதல் தந்தவர். தேடல் உள்ள நெஞ்சங்களுக்காக தன் எழுத்து மூலம் மாறுதல் சொன்னவர். கடந்த ஐந்து தசாப்தங்களாக வீச்சுடன் கூடிய இலக்கியம் யாக்கும் நூர்தீன், கலைஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் போன்ற பன்முகங்கொண்டவர்.



இலங்கை திருநாடு சுதந்திரம் கண்டது முதல் இற்றை வரை ஏறத்தாழ 2000 பாடல்களை எழுதி மெட்டமைத்து பாடியும் உள்ளார். கலாபூஷணம் புன்னியாமீன் தொகுத்த இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 08லும் இவர் பற்றிய அறிமுகம் காணப்படுகிறது.



'வான் அலைகளில் தேன் துளிகள்' என்ற இவரது புத்தகம், பாடல் மீது இவர் கொண்டுள்ள ஈடுபாட்டை பறைசாற்றி நிற்கிறது. இலக்கிய அரங்குகள், முழுமையும் தெரிந்த ஒரு கலைஞனாகவே இவரை ஏற்றுக்கொண்டுள்ளது.



பாடல்கள் தவிர 30 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவை தீனுல் இஸ்லாம், அருவி, மாணவர் மலர், தமிழன், தினகரன், சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாகி உள்ளதுடன், சக்தி, மலேசிய, சிங்கப்பூர் வான் அலைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.



ஏழு இறுவட்டுக்களை (CD) வெளியிட்டுள்ளதுடன் சென்னை ரெக்கோடிங் கம்பனிக்காக பாடியுள்ள நூர்தீன் வெளிநாடுகளிலும், தாயகத்திலும் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்.



வானொலியில் இசைச்சித்திரம், நாடகம், கவிதை, இஸ்லாமிய கீதம், பொப்பிசை போன்ற நிகழ்ச்சிகளையும் தந்துள்ளார். மீலாத், ஹஜ், நோன்பு தினங்களில் இடம்பெறும் விசேட அரங்குகளில் பாடல்களை பாடியவர். டேன் (DAN) தெலைக்காட்சியிலும் இவரது பேட்டி இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



'வானலைகளில் தேன் துளிகள்' என்ற அவரது நூலில் '...அரசியல் கலப்பற்ற சமுதாய உணர்வோடு என் வாழ்நாளில் சில பகுதியை கலைச்சேவைக்கும், மதச்சேவைக்கும் தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற இந்த ஏழையின் குறிக்கோளை அல்லாஹூதஆலா பொருந்தச் செய்வானாக...' என்று கூறியதிலிருந்து அறநெறியில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்று புலப்புடுகிறது.



இவர் பெற்ற விருதுகள் சில...



1. இசைத்திலகம்
2. இசைக்கோ
3. மூஸிக்நூரி
4. சாமஸ்ரீ இசைவாணன்
5. இசைக்கலாநிதி
6. இசைப்பேராசிரியர்
7. கலாபூஷணம்

கொழும்பு இளம்பிறை இசை மன்றத்தின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் தலைவராகவும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளராகவும் இருந்து கலைச்சேவைகளை நல்கி வரும் இவரிடமிருந்து இன்னும் பல கலைச்சேவைகளை இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது!!!

02. உயிர்கசிவு - சிறுகதைத்தொகுதி

உயிர்கசிவு சிறுகதைத்தொகுதி பற்றிய விமர்சனம்


வாழ்க்கையினை பாடுகின்ற வானம்பாடி எழுத்தாளர் சுதாராஜ்!


இலக்கியம் மனித வாழ்க்கைக்கு இன்பத்தை தருகிறது. மனித உள்ளத்தில் புதுத்தெம்பையும், புத்துணர்ச்சியையும் ஒரு தெளிவையும் ஏற்படுத்துகின்றது. சிந்தனா சக்தி கொண்ட மனிதனின் வாழ்வில், தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை காத்திரமான முறையில் கருத்து ரீதியாக வெளிப்படுத்தும் முயற்சிக்கான ஊடகம், இந்த இலக்கியம் தான். இலக்கியம் காலத்தின் கண்ணாடி.


கற்பனை கலந்த யதார்த்தத்தை உணர்த்துவதுதான் இலக்கியம். எனவே ஒரு எழுத்தாளனின் எழுதுகோலுக்கு யதார்த்தங்களை படம்பிடித்துக் காட்டும் சக்தி உண்டு. தொலைந்து போன வாழ்வை தோண்டிக்கொடுப்பது இலக்கியம். எழுத்தாளனின் கண் ஒரு கெமரா.


கவிதைகளை விட சிறுகதைகளால், சொல்ல வந்த விடயங்களை நன்றாகவே சொல்ல முடிகிறது. அந்த வகையில் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் சுதாராஜ் பல சிறுகதைத் தொகுதிகளை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளார். 1970களில் எழுத்துலகத்துக்கு பிரவேசித்தவர் இவர். எழுத்தாளர் சுதாராஜ் அமைதியான தோற்றத்துடன் காணப்படும் ஆர்ப்பாட்டமில்லாத ஒருவர். அவரது நடத்தைகள் அவரது எழுத்துக்கு புறம்பாக இருக்காது. ஏனையவர்களின் துன்பங்களைக் கண்டு வருந்தும் மனமுடையவர் இவர். யதார்த்தத்தை பேசுகிற யாத்ரீகன், வாசிப்பவர்களை யோசிக்க, நேசிக்க வைக்கும் இந்த கதைஞருக்கு வார்த்தைகள் வாலாயப்பட்டதால் கருத்தானது கட்டிடங்கள் செய்வதற்கு கற்களைக் கொடுத்திருக்கிறது. கற்பனைகள் சொற்களைக் கொடுத்திருக்கிறது.

தனிமனித உயர்வுகளில் மட்டுமே நுழைந்திடாமல் சமூக அவலங்களை புடம் போட்டுக்காட்டும் இவரது கதைகள் மனதை செழுமைப்படுத்துவதுடன் மனநிலையையும் செதுக்குகின்றன. அருமையான, ஆழமான கருத்துக்களைக் கொண்டு அமைந்த நிஜங்களைப் படம் பிடித்துக்காட்டுகிறது இவரது சிறுகதைகள்.

ஒரு நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள், தெரியாத பக்கங்கள், கொடுத்தல், மனித தரிசனங்கள், மனைவி மகாத்மியம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், இளமைக் கோலங்கள் என்ற நாவலையும் ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ளார்.

703 பக்கங்களில் வெளிவந்துள்ள உயிர்க் கசிவு என்ற இவரது சிறுகதைகளின் தொகுப்பு நூல் 60 சிறுகதைகளை உள்ளடக்கியதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. `ஒரு தேவதையின் குரல்' (பக்கம் 22) என்ற சிறுகதை அற்புதமானது. சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய இந்தச் சிறிய இலங்கையில் இனவேற்றுமை தலைதூக்கி, சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதே இந்தக் கதை. இவ்வாறு ஒரு தேவதையின் குரல் அல்ல... ஓராயிரம் தேவதைகளின் குரல்கள் ஒலிக்க வேண்டும்.

`கால்கள்' (பக்கம் 256) என்ற கதை, வறுமையில் வாடும் குடும்பம் பற்றியது. சோற்றைக் கண்டு பத்து நாட்களுக்கும் மேலாகிற நிலையில் சோறு சாப்பிட வேண்டும் என்ற அந்த சிறுவனின் ஆசை, கண்ணீரை வரவைத்த உருக்கமான கதையாகும்.

ஆனந்த விகடனில் பரிசு பெற்ற `அடைக்கலம்' (பக்கம் 307) என்ற கதை ஜீவகாரூண்யம் பற்றி பேசுகிறது. இதே தொகுதியில் அமைந்திருக்கும் `மெய்ப்பொருள்' (பக்கம் 321) என்ற கதை ஏழ்மையின் காரணமாக இன்னும் மணமுடிக்காத மூன்று சகோதரிகள் பற்றியது. அகிலா (40 வயது), சாந்தா, அம்பிகா (35 வயது) என்ற வயதடிப்படையில் இருக்கும் சகோரிகளில் முதலாமவளை அவளது இருபதாவது வயதில் சதானந்தன் என்றொருவன் காதலிக்கிறான். ஆனால் அவன் பிரான்ஸிருந்து வந்த பிறகு 35 வயதுடைய அம்பிகாவை மணமுடிக்க விரும்புவதாய் கூறுகிறான். இது அகிலாவை மட்டுமல்ல. நம் எல்லோருடைய இதயத்திலும் தீ மூட்டுகிற, மனதை சுட்டெரிக்கிற ஒரு விடயம். நரை தட்டும் முடியை வைத்துக்கொண்டும் சில ஆண்வர்க்கத்துக்கு இளமையான பெண் கேட்கிறது என்று வைகிறார்.

எழுத்தாளர் சுதாராஜ் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், சவால்களும், அனுபவங்களும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சிறந்த ஆதர்சனங்களாகும். சமூகத்தில் ஏற்படுகிற அநீதிகளுக்கு சாட்டையடி கொடுத்து மனித நேயத்தைப் பாடுகிறது இந்த வானம்பாடி.

`சில யதார்த்தங்களைச் சொல்வது சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். எனினும் என்னால் சொல்லாமலே இருக்க முடியவில்லை' என்று சொல்லும் சுதாராஜ், நேரில் சந்திக்கும் மிகவும் பணிவாகக் கதைத்தார். பின்னர்தான் அவர் ஒரு பொறியியலாளர் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.

உண்மையில் மேடைப் பேச்சுக்களில் `மானிடத்தை நேசிக்கிறோம்' என கதையளப்பவர்கள் தம்மை மனிதநேயம் மிக்கவர்களாக இனங்காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். இவர்கள் சொற்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்விலும் மனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். மிக அடக்கமாக காட்சி தரும் சுதாராஜ் போன்றோர் மனிதர்களையும் இலக்கியத்தையும் மதிப்பவர்களாய் இருப்பது நிதர்சனம்.

கலைத்துறையில் கற்றவர்கள் ஷகளை|த்துறையில் நிற்கும் போது, கணிதத்துறையில் கற்ற இவரின் எழுத்துக்கள் சாதிக்கும். போதிக்கும். வாழ்வின் வசந்தங்களையும், வறுமையையும் காட்டி நெஞ்சை வருடி திருடி செல்கின்றன இவரது படைப்புக்கள்.

செல்லரித்த கருத்துக்களோடு கைகோர்க்காத இவரது கதைகளை படிக்கையில் நெஞ்சில் புல்லரிக்கிறது. இவரது கதைகளின் செழுமை மிக்க செய்நேர்த்தி இவரது தனித்துவத்தை பறைசாற்றுகிறது.

இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சுதாராஜ் போன்ற காத்திரமானவர்களின் படைப்புக்களைக் கற்காமல் எழுத்துத் துறையில் காலூன்றுவது கடினமே. கர்வமே இல்லாத இந்த கதைஞருக்கு காலத்தின் பொன்னாடை காத்துக்கொண்டிருக்கிறது. திரு சுதாராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உயிர்க்கசிவு (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - சுதாராஜ்
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மின்னஞ்சல் முகவரி - rajsiva50@gmail.com
விலை – 1500/=

01. நிழல் தேடும் கால்கள் - கவிதைத் தொகுதி

நிழல் தேடும் கால்கள் கவிதைத் தொகுதி மீதான விமர்சனப் பார்வை

தென்கிழக்கு பல்கலைக்கழகம், பல கவிஞர்களின் உருவாக்கத்திந்கு கருவாயிருந்து, மெல்ல வளர்கையிலே குருவாயிருந்து அவர்களை வேர்விட்டு பிரகாசிக்கச் செய்திருப்பதில் சந்தோஷமாக மார்தட்டிக்கொள்ளலாம். அந்தவகையில் கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் மூன்றாவது கவிதை நூலான நிழல் தேடும் கால்கள் கவிதை நூல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே விடியலின் விலாசம், நெஞ்சம் நிறைந்த மாமனிதர் அஷ்ரப் ஆகிய தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

வனிதைகளைப் பற்றியே யோசிக்கும் இளைஞர்கள் மத்தியில் மிக வித்தியாசமாக கவிதைகளை நேசிக்கும் இக்கவிஞரின் நிழல் தேடும் கால்களில் சமுத்திரம் சூழ்ந்த இலங்கைத் தீவில் தரித்திரமாய் இடம் பெற்று, சரித்திரம் படைத்திருக்கும் இன ரீதியான போராட்டத்தையும், அதனால் ஊற்றெடுக்கும் கண்களின் நீரோட்டத்தையும் அவலமாகிப் போன சமூகத்தையும், சுமுகமாய் இல்லாத நாட்டின் சூழ் நிலையையும், ஆங்காங்கே காதலையும் பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

``எம்மைச் சூழ்ந்த...'' என கவிஞர் என்னுரையில் எழுதியிருப்பதிலிருந்து அவை எத்தகைய தாக்கத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தி அவர் அவர் மனதைப் புரட்சி செய்தது மட்டுமன்றி வரட்சியாயிருக்கும் சில வாசகரின் மனசிலும் நர்த்தனம் செய்யும் என்பதை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

``இன்னும் வெழுக்கவில்லை'' என்ற கவிதையில் நினைவுகளில் நிழலாடும் சில துளி நம்பிக்கைகளால் மட்டுமே நீள்கின்றன எம் சுவாச நிமிஷங்கள்... எனும் வரிகள் மக்களது உள்ளத்திலே ஆழமாக ஊடுருவி, நீளமான வலி தந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. கவிதைகளிலே கற்கண்டு சொற்கொண்டு அவர் யாத்துள்ள வசனங்கள் இயல்பாகவே இதயத்தை தூண்டில் போட்டு இழுப்பதுடன், எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கின்றது.

ஒரு கருவை மனதில் விதைப்பதற்கு இலகுவான உத்திகளை, கத்தியால் சொருகுவது போல தடம் பதிக்க வேண்டும். அவை வாசகர்கள் உள்ளத்தில் இடம்பிடித்து மீண்டும், மீண்டும் வாசிக்க இதயம் அவர்களிடைமே அடம்பிடிக்க வேண்டும். நீயா பிரமையா என்ற கவிதையில் உள்ள வரிகளில் மேற்சொன்ன கருத்தை நிதர்சனமாகக் காணலாம்.

மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துன்பங்களையே சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் சிந்திப்புகள் எப்படிப்பட்டவை என்பதை நானும் ஒரு பெண், திசைகளின் வாசல்களில் தடுப்புகள் என்ற கவிதைகளில் சந்திக்கலாம். மோதல் தந்த காதல் பற்றி அர்த்தமில்லாத அவஸ்தை, அறுந்து போன சிறகுகள் என்பவற்றில் தரிசிக்கலாம். வார்த்தையாடல்களை அள்ளியெடுத்து ருசிக்கலாம்.

புதுக் கருத்துக்களையே கூற விளைவதன் மூலம் ஒருபோதும் வெறுத்துப் போகாமல், இளங்குருத்துப் போல் கவிதைகள் ஊஞ்சல் கட்டி உலா வருகிறது. அதனால் ஆசையோடு தழுவ வந்த தூக்கம் கூட துக்கத்துடன் விடைபெற்றுவிடுவதால் இன்பமாக (சு)வாசிக்க முடிகிறது.

படைப்பாளிகளின் இலக்கியத் தேடல்களுக்கு இவரின் முத்தான கவிதைகள் நிச்சயம் சத்தாக அமையும். ஷிப்லியின் முன்னோடிக் கவிவரிகளுக்குள் மூச்செடுத்தால் இளம் படைப்பாளிகளின் திறமைக்கு களம் அமைத்துத் தரக்கூடிய கண்ணாடியாகவும் அது இருக்கும்.

``தன் குழந்தை தன் மார்பில் முதந்பால் அருந்தும் போது தாய் அனுபவிக்கின்ற சுகமான வலிபோலவே ஒரு கவிஞன் தனது எழுத்தின் மீதான மோசமான முதல் விமர்சனத்தின் போதும் அடைந்துகொள்கின்றான். அதற்காக வலிக்கிறது என்று சொல்லி எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு பால்கொடுக்க மறுத்தது கிடையாது. இது போலத்தான் மற்றையதும்...'' என்ற தென் கிழக்கு பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். அஸாரினதும், மொழித்துறைத் தலைவர் அ.ப.மு. அஷ்ரப் அவர்கள் ஷஷதமது சமூகத்தின் பிறிதொரு முகத்தினை அவர் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு கவிஞர்களும் பலமுறை பேசிப் பேசி அலுத்த விடயங்களானாலும் ஷிப்லியின் கைகளில் அவை புதியதொரு பொலிவினைப் பெற்றிருக்கின்றன....'' மற்றும் வ.ஐ.ச. ஜெயபாலனின் ``தன்னைச் சூழ பிளவுண்டு மோதும் அச்சுறுத்தப்பட்ட ஒரு சூழலில் அன்றாட முரண்பாடுகளின் பாதிப்புகளுக்குள் அமிழ்ந்துவிடாமல் நிமிர்வதுதான் ஒரு கவிஞனுக்குப் பெருமை. அந்தப் பெருமை கவிஞர் ஷிப்லிக்கு நிறையவே வாய்த்திருக்கிறது...'' என்ற அணிந்துரைகளால் புத்தகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது.

எழுத்தை தன் கழுத்தாகவே கருதும் ஷிப்லி, சுமார் ஒரு தசாப்த காலமாக இலக்கியத்துக்குள் தன்னைத் தொலைத்தவர். தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி உட்பட இணையத்தளங்களிலும் எழுதிவருவதோடு, முகாமைத்துவத்தைவிஷேட பாடமாகப் பயிலும் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவர். எதிர்கால இலக்கிய உலகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர வேண்டும். காத்திரமான பல படைப்புக்களைத்தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும்!!!

நூலின் பெயர் - நிழல் தேடும் கால்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - நிந்தவூர் ஷிப்லி
வெளியீடு - தமிழ்ச் சங்கம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
முகவரி - 50, Hajiyar Road, Ninthavur - 18.
தொலைபேசி - 071 6035903, 067 2250404
விலை – 120/=