Tuesday, September 9, 2014

65. சடலத்தின் வேண்டுதல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சடலத்தின் வேண்டுதல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

மிகிந்தலை மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இளந் தலைமுறை எழுத்தாளரான மிகிந்தலை ஏ. பாரிஸின் சடலத்தின் வேண்டுதல் என்ற கன்னிக் கவிதைத் தொகுதி. படிகள் பதிப்பகத்தினூடாக 78 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில் சமூக நோக்குடைய 29 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. காதல் கவிதைகளை இந்த நூலில் சேர்க்காமல் இந்த நூல் வெளியிடப்பட்டிருப்பது இங்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

மிகிந்தலை ஏ. பாரிஸ் தினமுரசு, மித்திரன், உதயசூரியன், மெட்ரோ நியூஸ், சுடர் ஒளி, தினக்குரல், தினகரன், விடிவெள்ளி போன்ற பத்திரிகைகளிலும், ஞானம், ஜீவநதி, பூங்காவனம், படிகள் போன்ற சஞ்சிகைகளிலும் கவிதைகளை களப்படுத்தி வந்துள்ளதுடன் சூரியன், வசந்தம், வர்ணம், சக்தி, தமிழ், தென்றல் போன்ற வானலைகளிலும் தனது கவிதைகளை வாசகர்களுக்கு தனது குரலிலேயே வழங்கியுமுள்ளார். மிகிந்தலை ஏ. பாரிஸ் தனது நூலை தமிழ் பேசும் மக்களுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார்.

இராணுவ வீரனின் இதயக் கைச்சாத்து என்ற தலைப்பில் தனது கருத்தை பின்வருமாறு பாரிஸ் முன்வைத்துள்ளார். 'எனக்குள் எழுந்த உள்ளுணர்வுகளை ஊமையாக்கிவிடாமல் எனக்கு தெரிந்த மொழி வடிவில் கவிதையாக மொழி பெயர்த்தேன். அவற்றை தூங்கவிட்டு விடாமல் உடனுக்குடன் வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் பறக்கவிட்டு பரவசம் அடைந்தேன். பறந்த என் கவிக் குஞ்சுகளின் இறக்கைகளை துண்டித்துவிடாமல் சிலவற்றை தேடிப்பிடித்து ஒருங்கிணைத்து ஒற்றை ஏட்டில் பதித்து பங்கிட்டளிப்பதில் பன்மடங்கு பரவசமடைகிறேன். நான் சற்று உயரப் பறந்தாலும் என்னிதயத்தை கவலை ஒன்று இரைகொள்கிறது. அது என்னைக் கண்டு அஞ்சிய மக்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுடன் என் உபதேசம் இப்படி உரையாடுகிறது. என் தொழில் இராணுவம். நான் அணிவது என் கடமை நேரச் சீருடை மட்டும்தான். எனக்குள்ளும் இதயம் இருக்கிறது. நீங்கள் மேலோட்டமாய் நோக்குவது என் இதயமல்ல என் சீருடை என்று மட்டும் திடமாகக் கூறுகிறேன்'' என்கிறார்.

இந்த நூலுக்காக ஷஉள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு உள்ளதை உணர்ந்தவாறு கூறுவது இலக்கியம்| என்ற தலைப்பிட்டு தனது கருத்துரையை முன்வைத்துள்ளார் கிழக்குப் பல்கலைக் கழக இஸ்லாமிய கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேக் எம்.டி.எம். றிஸ்வி அவர்கள். அவரது கருத்துரையின் சில பகுதி.. ''இலக்கியப் பிரசவங்களுள் ஒன்றே கவிதைகளால் கருத்துக்கள் வெளிப்படுவது. கால மாற்றம், சமூக எழுச்சி, அறிவியல் முன்னேற்றம் போன்ற காரணிகள், மனித சிந்தனைகளின் மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. 21 ஆம் நூற்றாண்டு மாற்றங்களை நோக்கிய பயணத்திற்கான நூற்றாண்டு எனலாம். அம்மாற்றங்கள் இலட்சிய கவிதைகளால் ஏற்படுத்தப்படமுடியும் என்பதை உணர்ந்து அநுராதபுரக் கவிஞர் பாரிஸ் சிறந்த இலட்சியக் கவிதைகள் படைத்துள்ளார். அருமையான கருத்துணர்த்தும் கவிதைகள் அவை. உணர்வுகள் உறங்கிக் கிடந்த மனிதர்களை இலட்சியக் கவிஞர் அல்லாமா இக்பாலின் கவிதைகள் உசுப்பிவிட்டது போல, இலட்சியத் துடிப்புள்ள இளைஞன் பாரிஸ் போன்ற இளம் தலைமுறையிளரின் கவிதைப் படைப்புகளும் சமூக மாற்றத்திற்கான ஆரம்பமாக அமையும்.''

அடுத்து இது ஊன மனங்களின் ஊமை ரணங்கள் என்ற தலைப்பிட்டு கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள் நூலுக்கான உரையொன்றை வழங்கியுள்ளார். அவர் அதில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ''அடிப்படையில் மனித நேயம் மிகுந்தவர்கள் எப்படையில் இருந்தாலும் எதையாவது படைக்கத்தான் செய்வர். இயல்பாக சமூகத்தை நேசிக்கும் உள்ளத்தில்தான் இசையாக வந்திணைகிறது கவிதை. நாடக மாந்தர் தம் நடைமுறைச் சிக்கலைச் சித்தரிக்க வேண்டும் என்ற சிந்தனைத் தூண்டுதல் கவிஞர், ஏ. பாரிஸ் அவர்களது சடலத்தின் வேண்டுதல்.. நீ எழுதும் கவிதை உன்னைக் காட்டிக் கொடுக்கும் என்பார்கள். கண்டு கொண்டேன். போர்காலச் சூழல் இவரை ஒரு கவிஞராக மாற்றியிருக்கிறது. கவியூறும் உள்ளம் பிறரின் ஈனநிலை கண்டு துள்ளும் என்ற பாரதியின் பாட்டு, இதற்கு பாரிஸின் பாட்டு ஓர் எடுத்துக்காட்டு. போதும் என்ற மனம், போதாது என்று போர் தொடுக்கும் காலத்து, மோதும் பிரச்சினைகளை முன் வைக்கின்றார். அதற்கான தீர்வுகளையும் பின்வைக்கின்றார். சதாகாலமும் சமூகத்தின் மீதே கண் வைக்கிறார். இதனால் இவர் முன் நிற்கிறார். மூன்று தசாப்தத்தின் மூச்சுத்திணறலைக் கவிதைகளாக்கி மூர்ச்சையற்றுக் கிடக்கும் சமூகத்தின் முனங்களைப் பதிவாக்கித் தருகிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி நூலில் இடம்பிடித்துள்ள 29 கவிதைகளில் சில கவிதைகளை இரசனைக்காக உற்று நோக்குவோம்.

வீட்டை எரிக்கும் நிலா (பக்கம் 10) என்ற கவிதை ஒரு ஏழை மீனவத் தந்தையின் இதயத்தை பறைசாற்றியிருக்கிறது. கடன்பட்டு, கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்கள் நல்லதொரு நிலையை அடைந்தால்தான் பெற்றவர்களுக்குப் பெருமை. அதைவிடுத்து வீணாhன காரியங்களில் ஈடுபட்டு கல்வியை குழப்பிக்கொள்வது தன் பெற்றோருக்கும் ஏன் நாட்டுக்கும் செய்கின்ற துரோகமாகும். அத்தகையதொரு பெற்றோரின் மனப்பதிவு இக்கவிதையில் பின்வருமாறு...

தணல் மணலில் பாதணி இல்லாமல் நடைப் பயணம் செய்து கட்டு மரம் ஏறுவேன்.. கடல் கொந்தளித்தால் கடன்காரனாய் வீடு சேருவேன்.. மணலில் தணல் உருவாக்கும் சூரியனுக்கும் தெரியாது சொந்தக் கதை.. எனக்கு பாதணி வாங்காமல் என் மகனின் கல்விக்கு செலவிடுவது.. பாதம் சுடும் மணலுக்கும் தெரியாது பரிதாப நிலை.. கடல் கொந்தளித்ததால் கடன் சுமக்கிறேன் என்பது கடலுக்கு தெரியாதது நியாயம்தான்.. அத்தனையும் தெரிந்திருந்தும் பெத்த மகன் பல்கலைக் கழகம் சென்றதும் படிப்பை நிறுத்திவிட்டு பகிஸ்கரிப்பில் குதித்து அரசியல்வாதிக்கு இலாபம் கொடுக்கிறான்.. அப்பன் நெஞ்சில் அடுப்பு எரிக்கிறான்!!

மகுடக் கவிதையான சடலத்தின் வேண்டுதல் (பக்கம் 12) என்ற கவிதை கடல் மாதாவிடம் ஒரு சடலம் கதை கூறுவது போன்ற பாணியில் அமைந்திருக்கின்றது. மீனவத் தொழிலாளிகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமானது. கடலுக்குச் சென்றால் வீடு திரும்புவோமா என்று உறுதியாகச் சொல்ல முடியாத வாழ்க்கை. அத்தகைய ஒரு சூழ்நிலையில் இறந்து போன ஒரு தந்தை.. தன் குடும்பத்தாரின் எதிர்கால நலன் கருதி கீழ்வருமாறு கடலிடம் வேண்டுகோள் விடுக்கின்ற முறை வாசகர் மனதில் அதிர்ச்சியையும், மீனவர்கள் பற்றிய இரக்கத்தையும் தோற்றுவிக்கின்றதெனலாம்.

சமுத்திரமே..! சமூக சேவையின் சிகரம் நீ! எங்கள் செவிலித் தாயும் நீ தான்! எங்கள் உடல் உன்னுடையதுதான்! நீ போடும் பிச்சையில் தான் எங்கள் பசி போக்குகிறோம்.. நேற்று உன்னிடம் வந்தேன்.. நீ பிச்சை போடுவாய் எனும் திட நம்பிக்கையில் என் குடும்பமும் உன்னை நம்பியிருக்கிறார்கள்.. என்னைவிட அதிகம் நம்பிக்கை வைத்தவர்களாய்.. எங்கள் நம்பிக்கையில் என்னிடமில்லை இப்போது என் குருதி குடித்ததால் நான் சடலமானேன்.. என் உறவுகள் காத்திருப்பார்கள் என் வரவுக்கும் உன் பிச்சைக்கும்!!

விவசாயியின் விசும்பல் (பக்கம் 15) என்ற கவிதை, வானம் பொய்த்துப் போனதால் வாழ்க்கை சூன்யமாகிப் போனதைப்பற்றி கவலையாய் பேசியிருக்கின்றது. பருவகால மழை பெய்யாததால் வயல்கள் காய்ந்து வயிற்றுக்கு வஞ்சகம் நேர்ந்ததை கவிஞர் சுட்டிக்காட்டியிருக்கும் பாங்கு அர்த்தபூர்வமானது.

எங்கள் கிராமம் சிரமத்தில் சிக்கிவிட்டது.. செழிப்புகள் செத்துவிட்டன.. தேசமும் கூடத்தான்.. வானம் அழும் காலத்தில் சிரித்து எங்கள் வாழ்க்கையை சுவைத்துவிட்டன.. மேல் நோக்கி நகைக்கும் பச்சைப் பயிர்கள்தான் எங்கள் வாழ்க்கைச் சக்கரம் வானம் கண்ணீர் சிந்தாததால் நாங்கள் சிந்துகிறோம்.. எங்கள் கண்ணீரால் எந்த விவசாயி வாழப்போகிறான்? எவர் வாழ்வு மீளும்? ...மழை இருந்திருந்தால் வலை வீசியிருப்பார்கள்.. வானமே ஏமாற்றிவிட்ட போது மனிதன் ஏற்றுக்கொள்வானா? இப்போதெல்லாம் வயல் முழுவதும் பொருக்கு வெடித்து கிடக்கு புற்களும் சருகு முட்களும் சண்டித்தனம் காட்டுகிறது!!

எம்மை விட்டுப் பிரிந்து சென்ற ரிசானா நபீக்கை இன்று பலரும் மறந்திருக்கக்கூடும். அவருக்கு அவ்வாறானதொரு முடிவு வருவதற்குக் காரணம் வறுமைதான். வறுமையினால் வாடிய, வாடுகின்ற பல குடும்பங்கள் இன்றும் உள்ளன. ஆனாலும் ஈகை எனும் பண்பு இன்று எம்மவர்களுக்கு இல்லாமலே போயிருப்பதுதான் மனவருத்தம் தருகின்ற விடயமாகும். சமூக சீர்த்திருத்தம், சமூக அக்கறை என்று பேசுபவர்களில் சிலர் வெறும் எழுத்துக்குள்தான் தன் கருத்தைச் சுருக்குகின்றனரே தவிர, நடைமுறை வாழ்வில் அவர்களும் பூச்சியம்தான். எனவே இந்த அவலநிலை மாறி அனைவரும் அனைவருக்காகவும் வாழவேண்டும் என்ற எண்ணத்தைத் தருகின்றது வறுமையின் வலியும் நிறமும் (பக்கம் 22) என்ற கீழுள்ள கவிதை வரிகள்.

நம்பிக் காத்திருந்தோம் நல்லதோர் தீரமானம் கரணமடித்த வழக்கு மரணம் கொடுத்துவிட்டதே! எஜமான் கண் திறக்கும் வரை காத்திருந்தோம் குருடன் என்று தெரியாமல்! இதயம் இருக்கும் மனிதனாய் நினைத்தோம் இரும்பால் உருவான மிருகம் என்று தெரியாமல்! வறுமை வாழவிடவில்லை கழுத்தை அறுத்தே கொடூரம் செய்துவிட்டது! வறுமையின் வலி நிறம் தெரியாதவர்கள் றிசானா நபீக்கின் கொலையிலிருந்து அறிந்திருப்பார்கள்! குடும்பம் வாழ குஞ்சு சிறகடிக்க நினைத்தது இருளுக்கு ஒளி கொடுக்கலாம் எனும் நப்பாசையில்...!!

தொடரும் (பக்கம் 33) என்ற கவிதை விலையேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. எவ்வளவுதான் உழைத்தாலும் இன்றைய விலையேற்றத்தில் அனைத்துப் பணமும் கரைந்து போய்விடுகின்றது. மலை போன்ற விலை அதிகரிப்பால் பல குடும்பங்கள் திக்கித் திணறுகின்றன. குடும்பச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, வாழ்க்கைச் செலவு என்று இருக்கையில் திடீரென விலையேற்றம் செய்வது மக்களின் வாழ்வு குறித்த பீதியை ஏற்படுத்திவிடுகின்றது. அதை வைத்து பின்னப்பட்ட கவிதையின் சில வரிகள் இதோ...

வறுமை அஞ்சுகிறது உழைப்பைக் கண்டு.. உழைப்பை மிஞ்சுகிறது விலையேற்றம்.. இப்படித்தான் எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை போக்க உழைப்பும் உழைப்பை வெல்ல விலையேற்றமும் போட்டி போட்டுக்கொள்கிறது.. ஒரு பொருள் வாங்குவதற்கு விலை விசாரித்தேன் பன்மடங்கு விலையேறிவிட்டு.. மீண்டும் சேமிக்கிறேன் அதுவும் நிராசையாக போகலாம் ஆனாலும் என் நம்பிக்கை என்றும் மாறாது!!

மூவரும் சகோதரர்கள்தான் (பக்கம் 46) என்ற கவிதை சமகாலத்தில் நிகழும் நாட்டு நடப்புகளைப் பற்றி எடுத்தியம்பியிருக்கின்றது. மூவினங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என்று பாடசாலை பிள்ளைகளில் இருந்து பெரியோர் வரைக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். வெறும் மேடைப் பேச்சுக்களில் முழங்குவதை விட்டுவிட்டு அதை யதார்த்த வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். அவரவர்க்கு அவரரவர் மதம் பெரிது. அதை கடைப்பிடிப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனதும் மனித உரிமையாகும். அதில் கைவைப்பது யாருக்கும் முடியாது என்ற கருத்தைத் தருகின்றது கீழுள்ள கவிதை வரிகள்..

உன் புழுக்கையாகவே நான் இருக்கவேண்டுமென நீ விருப்பம் கொண்டுள்ளாய் சில வேலைகளில் காற்றுச் சுமந்து வந்து உன் வீட்டுக்குள் அடையும் தூசியாய் காண்கிறாய் என்னையும் அவனையும்.. கடதாசியில் மேடை அமைத்து விழா நடத்தி மகிழ்கிறாய் மேகம் இருள்கிறது மழை வந்துவிடும் கவனத்திர் கொள்.. தாயிடம் இருக்கும் உரிமை மூவருக்கும் சமம்.. நாம் மூவரும் ஒரு தாய்க் குழந்தைகள் என்பதால் எனக்கு மதம் மாறும் உரிமை உண்டு.. என் வணக்கஸ்தலம் உடைக்கும் உரிமை உனக்கெப்படி வந்தது? எத்தனை வணக்கஸ்தலம் அமைத்தாலும் நானும் நீயும் அவனும் சகோதரர்களே!!

வாழ்க்கை என்பதன் பெறுமதி தெரியாமல் இன்று சின்ன விடயத்துக்கும் மரணத்தின் கதவைத் தட்டும் பலர் பற்றி அறிந்திருக்கிறோம். காதல் தோல்வி, பரீட்சைத் தோல்வி, பேஸ்புக் காதல், பெற்றோர் - பிள்ளை பிரச்சனை, கணவன் - மனைவி சண்டை, நட்பின் துரோகம் போன்ற காரணங்களுக்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன. வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து எதிர்நீச்சல் போடாமல் சாவின் கைகளுக்குள் தஞ்சம் புகுவது உண்மையில் கோழைத்தனமாகும். சாகத்துணிந்த துணச்சலை வாழ்வதற்காக காட்டியிருந்தால் சாதனைiயின் உச்சத்தைத் தொட்டிருக்கலாம். இது பற்றி தற்கொலைகள் மரணிக்கட்டும் (பக்கம் 63) என்ற கவிதை சொல்லியிருக்கிறது.

இப்போதெல்லாம் இளையோர்களின் மனம் திடமாக இல்லை.. திண்டாடுகிறது தெளிவில்லாமல்.. காதலால் தோல்வி அடைந்தால் வாழ்க்கையில் தோல்வியுற்றவனாய் நினைத்து வாழ்க்கை துறந்து மரணம் தேடுகிறார்கள்.. குடும்பத்தில் பிணக்கு வந்தால் குழந்தைகளுக்கும் தனக்கும் தரமற்ற மரணம் கொடுத்து தற்கொலை தீர்;வு வழங்கும் கோழைகளாய் மாறிவிடுகிறார்கள்.. பரீட்சையில் தோல்லியுற்றால் அடுத்த நகர்வை ஆரம்பிக்காமல் இறுதித் தீர்வு இதுதான் என்று மாணவர் சமூகம் மரணம் தேட முயல்கிறது!!

இவ்வாறு சமூக தளங்களில் நின்று தனது படைப்புக்களை எழுதும் மிகிந்தலை ஏ பாரிஸ், எதிர்காலத்தில் இன்னும் பல காத்திரமான படைப்புகளை தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - சடலத்தின் வேண்டுதல்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மிகிந்தலை ஏ. பாரிஸ்
மின்னஞ்சல் - mihinthalefaariz@gmail.com
வெளியீடு - படிகள் பதிப்பகம்
விலை - 280 ரூபாய்