Saturday, October 6, 2012

33. குருத்துமணல் - கவிதைத் தொகுதி

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் `கன்னிக் கவிதை' என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் புரியும் போது உலா, பயணம் ஆகிய நூல்களை வெளியீடு செய்துள்ளார்.

குருத்துமணல் பரப்புகளால் நிரம்பி வளியும் என் முற்றம் என்ற தலைப்பிட்டு இப்றாஹீம் எம். றபீக் அவர்கள் தனதுரையில் ஷஅன்றைய காலப் பகுதியில் மரபுக் கவிதை என்றால் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தாற் போல் சுவையாக இருந்தது. அப்போது புதுக் கவிதையில் எனக்கு நாட்டம் குறைவாக இருந்தது. அது மாறி, இன்றைய நிலையில் பல கோணங்களிலும் புதுக் கவிதைகள் ஆலம் விருட்சம் போல் வளர்ந்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்ப என்னையும், எனது நடைமுறையையும் மாற்றிக் கொண்டேன். எனக்கு தெரிந்த வகையில் இதில் புதுக் கவிதைகளை எழுதியுள்ளேன். இதிலுள்ள அநேகமான கவிதைகள் இலங்கை வானொலியான பிறை எப்.எம். இல் ஒலிபரப்பாகியவை| என்கிறார்.

பாவாணர் அக்கரைப் பாக்கியன் குருத்துமணலில் ஒரு நண்டாக உலாவுதல் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ஷஉணர்ச்சியின் வெளிப்பாடு கவிதை என்பார்கள். உள்ளத்தில் உள்ளது கவிதை என்றும் சொல்வார்கள். அவ்வாறெனில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி உண்டுதானே. உள்ளம் இருக்கின்றது தானே. ஏன் எல்லோரும் கவிதை எழுதுவதில்லை? என்பதெல்லாம் எமக்குள் எழும் வினாக்கள். கவிதை எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், அதனால் உந்தப்பட்டவர்கள் கவிதைகளைப் படிக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையாகத் தன்னிடமிருந்து பிரசவிக்கிறார்கள். இதனைத்தான் கவியரசு கண்ணதாசனும் படிக்க படிக்க வரும் கவிபோலே தினம் பழகப் பழக வரும் இசை போலே என்றும், ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா. இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா என எமக்குத் தந்த பாடல்களின் வரிகளிலே துல்லியமாகச் சொல்லி இருக்கிறார். இவ்வாறு தான் எமது கவிஞரிடமிருந்து வெளிப்பட்டது குருத்துமணல் கவிதைகள். கவிதைகளுக்குரிய படிமச் சிறப்பும், ஓசை நயமும் இவற்றில் உள்ளதை நாம் உணர்வோம் என்கிறார்.

இனி இப்றாஹீம் எம் றபீக் அவர்களின் கவிதைகளைச் சுவைத்துப் பார்போம்.

ஒரு பெண்ணாணவள் தாய்மையடைவதில் தான் பூரணமாகிறாள். பூரிப்பாகிறாள். குழந்தைச் செல்வம் இல்லாது போனால் வாழ்வே இருண்டது போல் ஆகிவிடும். மற்றவரிகளின் கேளிப் பேச்சுக்களாலும் முனசுடைந்து விடக் கூடிய சூழ்நிலை உருவாகும். அவ்வாறு உடைந்த ஒரு மனசின் ஓலம் (பக்கம் 17) பிரார்த்தனை என்ற முதலாவது கவிதையின் பின்வரும் வரிகளில் புலப்படுகிறது.

என் வாழ்வை எண்ணியெண்ணி
என்றும் நான் கலங்குகிறேன்
என் ஆசைக்கோர் குழந்தையின்றி
எந்நாளும் அழுகின்றேன்.

மாதர்கள் கூடி நின்று
மலடி யென் றழைக்கிறார்கள்.
அன்பிலோர் வார்த்தையின்றி
அனுதினமும் வதைக்கிறார்கள்..

ஆண்டவா எனக்கோர் மகவை
மடிதனில் நீ தர வேண்டும்.
அடியேன் குறைகள் தீர்த்து
அவனியில் வாழ வேண்டும்.

நித்தமும் சுத்தமாய் இரு (பக்கம் 27) என்ற தலைப்பில் அமைந்த கவிதை சுகாதாரம் பற்றி பேசுகின்றது. இன்று பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் சுகாதாரம் சுத்தம் இன்மையேயாகும். அதனால் டெங்கு, மலேரியா போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படுகின்றன. உடல் சுத்தம், உடை சுத்தம் எவ்வாறு முக்கியமோ அதே போல் சூழல் சுத்தமாக இருப்பதும் அவசியம். அதை வழியுறுத்தும் கவிதை வரிகள் இதோ..

சுற்றுச் சூழலை
சுத்தமாக வைத்திரு
மா மனிதா - அச்
சூழல் உன்னை
சுத்தமாக வைத்திருக்கும்
மிக இனிதா
..........
டெங்கு வருவதை
தடுப்போம் மனிதா
அது சில நேரம் உயிரையும்
காவு கொள்ளும் பெரிதா

தண்ணீர் மனிதனுக்கு உயிர் போன்றது. ஆகாரம் இன்றி ஓரிரு நாட்கள் இருக்க முடியுமாக இருந்தாலும், நீர் இன்றி ஒரு மனிதனால் வாழ்வது மிக மிகக் கடினம். ஒரு சொட்டு நீருக்காக பல சண்டை சச்சரவுகள் நிகழ்வதைக் கூட கண்கூடாக காண இயலுமான காலகட்டம் இது. தண்ணீரின் பெருமை பற்றி பேசுகிறது தண்ணீர் (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த கவிதை.

இயற்கையின் அருட்கொடைதான்
தண்ணீர்
அதை மாசுபடுத்தினால்
பொது நலவாதிகள்
விடுகின்றனர் கண்ணீர்
....................
அழுக்கான அத்தனையும்
தூய்மை செய்யும் தண்ணீர்
உன்னையும் என்னையும்
உயிர்வாழ வைப்பதும் தண்ணீர்

மக்கள் மனதில் மனதில் அன்பு ஊற்று வற்றிவிட்டதால் முதியோர்கள் அவசியமில்லை என்ற எண்ணம் தொற்றிவிட்டது. பெற்ற தாய் தந்தையர்களை வைத்து பார்க்க மனமில்லாததால் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன. கண் போல் காத்துவந்த பெற்றோரை நாம், கண் இமைக்குள் வைத்து காக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை சொல்லி நிற்கும் கவிதையாக முதியோர் இல்லங்கள் தேவையில்லை (பக்கம் 41) என்ற கவிதையைக் கொள்ளலாம்.

உன் கால்களால்
நீ உதைக்க
பாதங்களை
முத்தமிட்டாள் தாய்

இனிப்பூட்டிய
உன் தாய்க்கு - நீ
கசப்பூட்ட எண்ணாதே

உன் இதயக் கதவை
திறந்து கொள்
தாயை அதனுள் வைத்து
தாலாட்டப் பழகிக் கொள்

..........................
உன் தாயை முதியோர்
இல்லத்திற்கு அனுப்புவதை
நிறுத்திக்கொள்..

ஏனென்றால் உன்னை
உன் பிள்ளைகள்
அனுப்பத் தயங்காது...

கொடுத்த காசுக்கு மதிப்பாக இன்று பொருள் கிடைப்பது முயற்கொம்பாக இருக்கிறது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம். பாலில் நீரைக் கலக்கிறார்கள். அரிசியில் கல்லைக் கலக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவை இக்கலப்படங்கள். இவை தவிர இன்னும் எதிலெல்லாம் எதைக் கலக்கிறார்கள் என்பதை கலப்படக்காரன் (பக்கம் 47) என்ற கவிதை மூலமாக அறியலாம்.

பாலுக்குக்குள் நீரை
ஊற்றுகின்றோய்..
அதைப் பாடிப் பாடி விற்று
பையிலே பணத்தைப்
போடுகின்றாய்

சீனிப் பாகை தேன் என்று
சில மனிதர்களை
ஏமாற்றிப் பிழைக்கின்றாய்..

குரக்கனுக்குள் தவிட்டைக்
கலக்கிறாய்..

இவ்வாறான பல விடயங்களையும் தனது கவிதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியர் இப்றாஹீம் எம். றபீக் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூலின் பெயர் - குருத்துமணல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இப்றாஹீம் எம். றபீக்
வெளியீடு - புதுப்புனைவு இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0715675585
விலை - 250 ரூபாய்

32. தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம்

தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம் பற்றிய இரசனைக் குறிப்பு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது கவிதைப் பங்களிப்புக்களை இலக்கிய உலகில் செய்துவரும் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதி பர்ஹா வெளியீட்டகத்தின் வெளியீடாக 87 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இது நூலாசிரியரின் நான்காவது நூல் வெளியீடாகும். இந்த நூலாசிரியர் ஏற்கனவே பதம் (கவிதை 1987), சந்தனப் பொய்கை (கவிதை 2009), கொந்தளிப்பு (குறுங்காவியம் 2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மரபு சார்ந்த கவிதைகளில் தன்னை அடையாளப்படுத்திக் காட்டிக் கொண்டாலும், நவீன கவிதைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். 

தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்)சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு என்ற தலைப்பிட்டு பேராசிரியர் சே. யோகராசா அவர்கள் இந்நூலுக்கு சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அவர் மிகவும் சுருக்கமாக இந்நக் காவியத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

நீண்டகாலமாக நிலவி வரும் சமூகப் பிரச்சினை என்ற விதத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப் பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களும், விவாகரத்தினை மேற்கொள்வதும் பின்னர் தந்தையின் முயற்சியினால் ஏர்வை வண்டி இசுமாயிலை மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதும், ஊருக்கு உதவுவதும், கணவர் மறைந்த பின்னர் அநாதரவான நிலையில் வாழ்ந்து இறுதியில் மரணிப்பதுமே இக்காவியத்தின் உள்ளடக்கமாகிறது என்று குறிப்பிடுகிறார்.

பன்னூலாசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் தனதுரையில் இந்நூல் பற்றி பின்வருமாறு சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். சுமார் நூறு வருடங்களுக்கு முந்திய அதற்கு முன் பல நூறு வருடங்களாக உருவாகி வந்த நமது சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை, அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை, அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக் குறுங்காவியம் பதிவு செய்கிறது. செவ்வியல் பிரதித் தன்மையைப் பெறுவதற்கான அந்தஸ்தை இக் குறுங்காவியம் பெறுகின்றது. 

நெல் காய வைக்கப் பயன்படுத்தப்படும் நீண்ட பாயே இங்கு தோட்டுப்பாய் என்று குறிப்பிடப்படுகின்றது. தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற இக்காவியமானது, தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா, அகலக் கண் திறந்த அடக்கத்தலம், குடிசைக்கு வந்த குதூகலம், சிற்றூரில் பூத்த செய்னம்பூ, பெருமைகள் நிறைந்த பெரியம்பி, அதபாய் வளர்ந்த அழகு, பருவம் பூத்த பளபளப்பு, சுடுதண்ணி என்ற மறு நாமம், மஞ்சக் குருவி வடிவு, மருக் கொழுந்து வாசம், ஏர்வை வண்டி இசுமாயில், கலியாணம் பேசும் களிப்பு, மாற்றியெடுத்த மருதோண்டி, காவின் பதிந்த கலியாணம், மனம் பொருந்தாத மணம், ஒட்ட முடியாத உடைவு, மறுமணம் பூசிய மருக்கொழுந்து, பற்றூரில் இருந்து பயணிப்பு ஆகிய பதினெட்டுத் தலைப்புக்களில் விரிந்து செல்கிறது. 

யாரிந்த மூத்தம்மா? என்ற கேள்விக்கு கவிஞர் பின்வருமாறு பதில் சொல்லிக்கொண்டே போகின்றார். கைக் குத்தரிசியிலே இரவு உணவைத் தயாரிக்க எண்ணி அதை உண்ணாமல் போய்ச் சேர்ந்த மூத்தம்மா.. கன நாளாய் ஒரு நேர உணவினையே உண்டு கழித்திருந்த மூத்தம்மா.. மாப்பிள்ளையோடு மாட்டு வண்டியிலே வந்திங்கு சேர்ந்தவளாம்.. ஊரார் ஒரு துண்டு நிலம் உபயம் என அளிக்க வேர் பிடுங்கிக் காடழித்து வசிக்கவென இல்லிடத்தை ஏற்படுத்திக் கொண்டவளாம்.. மாப்பிள்ளையோடு மனமொன்றிச் சேர்ந்திருந்து பார்த்திருந்தோர் கண்படவே பாசத்தைப் பிழிந்தவளாம்.. கிளியும் மொழியும் எனப் பழகி அவள் அன்பினையே பொழிந்து அவரோடு பொருந்தியே வாழ்ந்தவளாம்.. இப்படி பாலமுனை பாறூக் அவர்கள் மிகவும் அழகாக இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா பற்றி மிகவும் ரசனையாக சொல்லிக் கொண்டு போகிறார்.

காத்தான்குடியைப் பின்புலமாகக் கொண்டு அப்துல் காதர் புலவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செய்னம்பு நாச்சியார் மாண்மியம் என்னும் மிகச் சிறந்த காவியம் முஸ்லிம் மக்களது திருமணச் சடங்கை மாத்திரமே எடுத்துரைத்தது. கலாபூஷணம் பாறூக் அவர்கள் அதைவிட ஒரு படி மேல் சென்று திருமணச் சடங்கை மட்டுமல்லாமல், மையத்துச் சடங்கு முறைமை, பிறப்புச் சடங்கு முறைமை, பெரிய பிள்ளைச் சடங்கு முறைமை முதலானவை பற்றியும் இக்காவியத்தில் சுவைபடக் கூறியுள்ளார். இதனால் இக்காவியம் விஷேடமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.

செய்னம்புவை முதல்நிலைப் பாத்திரமாகக் கொண்ட கதையம்சத்தோடு தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், என்பவற்றைப் பதிவு செய்யும் படைப்பாகவே இக்குறுங் காவியம் அமைந்திருக்கின்றது. அதாவது இங்கு செய்னம்பு என்ற பெண் பாத்திரத்துக்கே மிக முக்கியமான இடம் வழங்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் காவிய நூல் மிகவும் அற்புதமானது. அனைவரும் வாசிக்க வேண்டியது. ஜனாப் பாலமுனை பாறூக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்)
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0775367712
விலை - 200 ரூபாய்