Tuesday, April 17, 2012

20. படிகள் - இருமாத இலக்கிய இதழ் - (ஜனவரி - மார்ச் 2012)

படிகள் இருமாத இலக்கிய இதழ் பற்றிய இரசனைக் குறிப்பு

பெரும்பாண்மை இனத்தவர்கள் அதிகமாக வாழும் பிரதேசத்திலிருந்து சுமார் 08 வருடங்களாக படிகள் சஞ்சிகை வெளிவருவது நாம் அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் ஈழத்து சஞ்சிகையுலகில் படிகளுக்கென்று ஒரு தனியிடம் உண்டு என்பதை எவறும் மறுக்க முடியாது. படிகள் தனது 30 ஆவது இதழை (ஜனவரி - மார்ச் 2012) அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. படிகளின் அட்டைப் படத்தை மறைந்த பேராசிரியர் ம.மு. உவைஸ் மற்றும் சாகித்திய ரத்னா பேராசிரியர் சபா ஜெயராசா, டாக்டர் ஹிமானா செய்யத் போன்றோர்கள் அலங்கரக்கின்றார்கள். படிகள் தனது ஆசிரியர் தலையங்கத்தில் அநுராதபுரப் பிராந்திய கலை இலக்கிய முழுநாள் விழாவொன்றை நடாத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் அல்லாமா ம.மு. உவைஸ் அவர்களின் 16 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புக் கட்டுரைகளாக 1994ம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்ட உவைஸ் மணிவிழா மலரில் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையின் சுருக்கமும், மறைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் ம.மு. உவைஸ் பற்றி எழுதிய கட்டுரையும் மீளப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாற்றங்களைத் தொடும் தமிழ் சினிமா என்ற தலைப்பில் எங்கேயும் எப்போதும் தமிழ்த் திரைப்படம் பற்றிய தனது பார்வையை எல். வஸீம் அக்ரம் மிகவும் காத்திரமாக முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ் நாடு ராமநாத மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஹிமானா செய்யத்தை சுழற்சிகள், கண் திறவாய் போன்ற கவிதை நூல்களின் ஆசிரியரான கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அஹமது நேர்காணல் செய்திருக்கிறார். இந்த நேர்காணல் மூலம் ஹிமானா செய்யத் அவர்கள் தனது எழுத்துலக, இலக்கிய அனுபவங்களை அழகாக விபரித்திருக்கிறார். நேர்காணல் செய்தவரும் நேர்காணப் பட்டவரும் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் நாடக விழாவில் அநுராதபுர மாவட்ட நாடகத்திற்கு ஏழு விருதுகள் கிடைத்திருக்கிறது என்ற தகவலையும் கண்டுகொள்ள முடிகிறது.

மருதூர் ஜமால்தீனின் உயர்ந்தவன் என்ற சிறுகதை சாதிப் பிரிவினை பார்க்கும் மனித வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாய் அமைந்திருக்கிறது. அதே போல் தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்து சீவியம் நடாத்திவரும் பெண்ணின் வாழ்க்கையை ஓவியமாய்க் காட்டி நிற்கிறது வெலிப்பண்ணை அத்தாஸின் காய்த்த மரம் என்ற சிறுகதை.

முல்லை முஸ்ரிபா, ஸாருஸ், காத்தான்குடி பௌஸ், நேகம பஸான், துவாரகன், வெற்றிவேல் துஷ்யந்தன் ஆகியோரது கவிதைகளுடன் கே.எம். ஷபீக்கின் மொழி பெயர்ப்புக் கவிதையும் இதழை மேலும் சிறப்பிக்கின்றன.

நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய ரசனைக் குறிப்பை சேவியர் தந்துள்ளார். அத்தோடு உமா வரதராஜன் கதைகள் பற்றிய ஓர் அவதானத்தை மன்சூர் ஏ. காதிர் முன்வைத்துள்ளார்.

இலங்கையில் கலைச் சொல்லாக்கம் பற்றிய கட்டுரையை கலாவெல றஸ்மிலா நிஹாரும், அநுராதபுர இலக்கிய அலைகள் என்ற கட்டுரையை திக்வல்லை கமாலும் தந்துள்ளார்கள். மேலும் வால்ஸ்ரீட் போராட்டத்தை சி. குமாரலிங்கம் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

எம்.எம். ரிபாயுடீன், சபுர்தீன், பிரியா கார்;த்திகேயன், எம்.எச்.எம். ரிப்கான் ஆகியோரின் படிகள் பற்றிய நேர் எதிர் எண்ணங்களையும் காண முடிகிறது.

இறுதியில் சாஹித்திய ரத்னா தகைமைசார் கல்வித் துறைப் பேராசிரியர் பற்றிய தனது பார்வையை விரித்திருக்கிறார் திரு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், வாசகர் கருத்துக்கள் என பல்வேறு இலக்கியச் சிறப்புக்கள் அமைந்தவையாக படிகள் தொடந்ர்து வெளிவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. படிகள் சஞ்சிகைக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - படிகள் (இருமாத இலக்கிய இதழ்)
பிரதம ஆசிரியர் - எல். வஸீம் அக்ரம்
முகவரி - 519/G/16, Jayanthi Mawatha, Anuradhapura.
தொலைபேசி - 0783 244 255, 0713 485060.
மின்னஞ்சல் - padihal@yahoo.com
விலை - 60 ரூபாய்