Sunday, December 23, 2012

40. கண்ணீரினூடே தெரியும் வீதி - சிறுகதைத் தொகுதி

கண்ணீரினூடே தெரியும் வீதி சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

காலச்சுவடு பதிப்பகம் பல இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிட்டு வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் திரு. தேவமுகுந்தன் அவர்களின் கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற தொகுதி 10 சிறுகதைகளை உள்ளடக்கி 102 பக்கங்களில் காலச்சுவடு பதிப்பகத்;தின் மூலம் வெளிவந்திருக்கிறது.

இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாய் கடமையாற்றி, தற்போது இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் தேவமுகுந்தன் அவர்கள் தன்னைப் பாதித்த விடயங்களையே நிர்மலன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளாக எழுதியிருப்பதாக தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

போர்க்கால நெருக்கடிக்குள் சிக்கியவர்களைத் தவிர, தலைநகர் உட்பட பல இடங்களிலும் தங்கியிருந்த பலரும் பொலிஸ் அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை சதாவும் தம்முடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயநிலை அன்று காணப்பட்டது. அவ்வாறாக மக்களுக்கு ஏற்பட்ட சில அசௌகரியங்கள் இக்கதையினூடு அழகாக சித்தரித்து காட்டப்பட்டு இருக்கின்றது. அது பற்றி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் பின்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'1980 களுக்குப் பிந்திய இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் பிரதான கருப்பெருள் இன முரண்பாடும் யுத்த அவலமும்தான். இன முரண்பாட்டால் பிளவுண்ட இலங்கையின் யுத்தச் சூழல் தனி மனிதர்களின் வாழ்வு, அவர்களின் உணர்வுகளை, நடத்தையை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கிறது என்பதைத்தான் கடந்த முப்பது ஆண்டு காலப்பகுதியில் எழுந்த பெரும்பாலான படைப்புக்கள் பேசுகின்றன என்கிறார்'.

கண்ணீரினூடே தெரியும் வீதி என்ற சிறுகதையானது இலங்கையின் போர்க்கால கட்டத்தில் எங்கும் மரணங்கள் தவிர்க்க முடியாதவை என்பதை பறைசாற்றுகிறது. தமிழராயிருந்தாலென்ன, சிங்களவராயிருந்தாலென்ன யுத்தத்தில் தனது உறவுகளைப் பலிகொடுத்தவர்கள் பயணிக்கும் பாதையாக கண்ணீர்ப் பாதையே எஞ்சிவிடுகிறது. தனது சகோதரனின் மரணம் நிகழ்திருக்கும்போது எதிர்வீட்டு சிங்கள இராணுவ சகோதரர்கள் இறந்த விடயத்தையும் மையப்படுத்தி இந்தக் கதை நகர்கிறது.

வழிகாட்டிகள் என்ற சிறுகதை அதிகாரிகளின் அசமந்தப் போக்கை படம்பிடித்துக் காட்டுகின்றது. நிர்வாகம் ஒழுங்குசெய்யும் கூட்டங்களில் கலந்துகொண்டு தமக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் பொடுபோக்காக நடப்பவர்களின் சாயம் வெளுக்கப்படுகின்றது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் புறூப் பார்த்து முடிக்காத இந்திரனும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றான். மதிய இடைவேளையின் போது குறிப்பிட்ட அதிகாரி இது சம்மந்தமாகக் கேட்க இன்னும் வேலையிருப்பதாய் கூறுகிறான் இந்திரன். அதற்கு அந்த அதிகாரி கூறும் பதில் இது.

ஷஅது அவசரமில்லை தம்பி ஆறதலாய்ச் செய்யுங்கோ. என்ரை கடைசி மகன் ஆறாம் வகுப்பிலை இருக்கிறான். நீர் புறூவ் பார்த்த பேப்பர்களை தந்தீரென்டா நான் அதை புத்தகமாய் கட்டிப்போட்டு அவனுக்கு படிப்பிச்சுப் போடுவன்.|

இடைவெளி என்ற சிறுகதை இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அன்பின் இடைவெளி என்றும் கூறலாம். கொழும்பில் அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் தமிழ் உத்தியோகத்தரின் அவலநிலை இதில் உணர்த்தப்படுகின்றது. எதேச்சையாக அவர் விடுமுறை எடுக்கும் சந்தர்ப்பங்கள் அவரை இனவாதியாக மற்றவர்களை எண்ண வைக்கின்றன. காரணம் கொழும்பில் குண்டு வெடிப்பு நடக்கும் சம்பவங்கள் சொல்லி வைத்தாற்போல அவர் விடுமுறை எடுக்கும் நாட்களில் துரதிஷ்டமாய் நிகழ, அலுவலகத்தில் வேலை செய்யும் ஏனைய சிங்கள நண்பர்களின் பார்வையும், பேச்சும் அவருக்கெதிராக அமைவதை இக்கதை இயம்புகிறது.

சின்ன மாமா என்ற கதை ஏனைய கதையம்சங்களில் இருந்து மாறுபடுகிறது. சொந்த தகப்பனின், சகோதரியின், சகோதரனின் இறந்தவீட்டுக்கு கூட வராமல் தானும், தனது குடும்பமும், வேலையும் என்றாகிவிட்ட சின்ன மாமா பற்றியது. ஒரு எழுத்தாளராக வாழ்ந்து இறந்தபின் அவரது குணநலன்களைப் பாராட்டி அவருக்கு கௌரவ விழாவில் புகழ்ந்து கூறப்படும் விடயத்தை சொல்லி நிற்கிறது.

இவன் என்ற கதை படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காமல் இருக்கும் ஒரு இளைஞனின் அன்றாட வாழ்க்கை எப்படி கழிகிறது? அவனது மனது புண்படும் சந்தர்ப்பங்கள், அவனது திண்டாட்டம் போன்றவற்றை மிகச் சிறப்பாக கூறுகின்றது. மொத்தத்தில் இத்தொகுதி மனதில் நிலைத்துவிடுகிறது. தேவமுகுந்தனுக்கு வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கண்ணீரினூடே தெரியும் வீதி (சிறுகதை)
நூலாசிரியர் - தேவமுகுந்தன்
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
விலை - இந்திய விலை 75 ரூபாய்

Saturday, December 15, 2012

39. வைகறை - சிறுகதைத் தொகுதி

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார்.

மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

'ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்'.

இவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.

தான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்.

'அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக்  குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்'.

பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

'பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்'.

அழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது 'எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை'!!!

பெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா? காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. 'நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்'.

மலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. 'விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்'.

இறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு திருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. 'நான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக'.

தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது? அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 01. 'நான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்' என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 02. 'உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை'.

சிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.

இவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வைகறை (சிறுகதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0775009222
விலை - 300 ரூபாய்

Friday, December 14, 2012

38. கண்திறவாய் - கவிதைத் தொகுதி

கண்திறவாய் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

உடலில் ஏற்படும் ரணங்களை மருந்துகள் போக்கிவிடும். மனதில் தோன்றிய பிணிகளை நல்ல கவிதைகள் போக்கிவிடும். இறைவன் எல்லோருக்கும் எல்லா அருட்கொடைகளையும் கொடுப்பதில்லை. ஆனால் கலாபூஷணம் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள் தொழில் ரீதியாக வைத்தியராயிருந்து பலரை குணப்படுத்துகிறார். மறுபக்கம் கவிஞராக இருந்து இதயப் பிணிகளை போக்குகின்றார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

சாதாரண கவிதைகளை விட, ஆன்மீகம் சார்ந்த அல்லது நன்மை பயக்கும் விடயங்களைக் கற்றுத் தரக்கூடிய கவிதைகளை வாசிக்கையில் வார்த்தைகளில் விபரிக்க முடியாத திருப்தி மனதில் குடியேறி விடுவதுண்டு. அத்தகையதொரு மாமருந்தாக கண் திறவாய் என்ற கவிதைத் தொகுதி காணப்படுகின்றது. வெள்ளையில் ஒரு புள்ளி, சுழற்சிகள், ஆசுகவி போன்ற கவிதைத் தொகுதிகளை இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் கண் திறவாய் என்ற இந்நூலானது 136 பக்கங்களில் அமைந்துள்ளது. கண் திறந்தால், அரங்கக் கவிதைகள், முஸ்லிம் பெண்ணே, பாமடல் போன்ற தலைப்புக்களின் கீழ் கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

'நான் எழுதியுள்ள பல்வேறு பாவினங்களில் அமைந்துள்ள கவிதைகளுள் இஸ்லாமிய எழுச்சிக் கவிதைகள்தாம் அதிகமானவை. அவற்றைத் தொகுத்து வெளியிடுவதற்கு தகுந்த சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்திருந்தேன். அச்சந்தர்ப்பம் மலேசியாவில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் போது கிடைத்தது பெரும் பேறென கருதுகிறேன்' என்கிறார் நூலாசிரியர் தாஸிம் அகமது அவர்கள்.

அவன் என்ற தலைப்பிடப்பட்ட முதல் கவிதை ஏக இறைவனான அல்லாஹ்வின் அருட்கொடைகளை இயம்பி நிற்கின்றது. அல்லாஹ்வின் சக்தியை தெளிவாக சொல்லிக் காட்டுகின்றது. அதன் சில வரிகள் இதோ..

இரவின் அமைதியிலே
இவ்வுலக முறங்குகையில்
ஒருவன் மட்டுந்தான்
உறங்காதிருக்கின்றான்

நீலக்கடலினிலே
நெளியும் அலையாகிக்
கோலச் செறிவுகளை
கொண்டு வருகின்றான்

சோலை மலர்களிலே
தூய வடிவாகிச்
சீலச் சுவைகளினைச்
சிந்தத் தருகின்றான்

கண் திறவாய் என்ற கவிதை நம்மையெல்லாம் நிறுத்தி வைத்து கேட்கும் கேள்விகளாக உள்ளன. கவிஞர் தொடுத்திருக்கும் கேள்விகளுக்கான விடைகள் இருக்கின்றதா? பாருங்கள்.

நாம் இங்கே எதற்காகப் பிறந்துள்ளோம்
நரகத்தின் வாயில்களைத் திறப்பதற்கா?
தூய்மைமிகு வாழ்வு தந்த முன்னோரின்
சுவடுகளை அழித்திங்கே இன்புறவா?
நாமமது முஸ்லிமென இருந்துகொண்டு
நாசத்தின் எல்லைகளை மிதித்திடவா?

ஏக்கம் என்ற கவிதை ஓசை நயம்மிக்கதாகவும், கருத்துச் செறிவு உள்ளதாகவும் காணப்படுகின்றது. ஒரே மூச்சில் முழுக் கவிதையையும் வாசிக்கத் தூண்டுகிறது.

நித்திரையை நாடுகையில் என் சமூகம் தூங்கும் - அந்த
நிலை கண்டு பொறுக்காது நெஞ்சமுமே ஏங்கும்
எத்தனையோ கனவுகளை என் மனதும் காணும் - அதில்
இஸ்லாத்தின் சமூகமொன்றே எப்பொழுதும் தோணும்

கண்ணிரண்டும் நல்லவற்றைக் காண்பதற்கே திறக்கும் - சில
காட்சிகளைக் கண்டிடவே மனங்கூசி வெறுக்கும்
உண்மையுள்ள இடந்தேடி பார்வையுமே போகும் - நெஞ்சில்
உறுதியுடன் சேர்ந்திடுமோர் அமைதியுண்டாகும்

இவ்வாறு காத்திரமான பல கவிதைகள் இந்தத் தொகுதியில் காணப்படுகின்றன. அதிலும் முஸ்லிம் பெண்ணே என்ற மகுடத்தின் கீழ் காணப்படுகின்ற கவிதைகள் எல்லாம் அந்தாதிக் கவிதைகளாக காணப்படுகின்றன. அவை மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கின்றன.

முதல் பந்தியின் நாலாம் வரியில் தொடங்கும் சொல், இரண்டாம் பந்தியின் முதல் சொல்லாக காணப்படுகின்றது. ஒவ்வொரு இடியிலும் இவ்வாறு காணப்படுகின்றமை ஆச்சரியமளித்தது. உதாரணத்துக்கு முஸ்லிம் பெண்ணே என்ற கவிதையின் சில அடிகள் இதோ..

சாந்தியும் சமாதானமும் மலர்ந்திடுக
சன்மார்க்க வழி வந்த முஸ்லிம் பெண்ணே
சூழ்ந்திடும் பாவ இருள் நீக்கவே
தூயோனைப் பிரார்த்தனை செய் முஸ்லிம் பெண்ணே

தூய இஸ்லாத்தின் வழி நடந்து
துன்பங்கள் போக்கிடுவாய் முஸ்லிம் பெண்ணே
நாயனருள் கிட்டுமுன் வாழ்விலென
நம்பிக்கை வைத்திடுக முஸ்லிம் பெண்ணே

உலக மக்களுக்கு இறைவன் அளித்ததொரு பெரும் கொடை புனித அல்குர்ஆன். அதன்வழி நடப்பவர்கள் ஒருபோதும் வழிதவறமாட்டார்கள்.  குர்ஆனை வெறுமனே வீடுகளில் அடுக்கி வைத்தல் பெரும் பாவமாகும். புனித குர்ஆன் பற்றியும் இங்கே அந்தாதிக் கவிதைகள் நீள்கின்றன.

திருக்குர்ஆன் கூறுகின்ற வழி நடப்பாய்
தீமைகளை அகற்றிடுவாய் முஸ்லிம் பெண்ணே
பெருமானார் மனைவியரின் வரலாற்றை
பெருமையுடன் எடுத்தோது முஸ்லிம் பெண்ணே

பெருமையெல்லாம் பெண்களுக்கே என்கின்ற
பெருமானார் மொழியறிவாய் முஸ்லிம் பெண்ணே
அருமையெலாம் திருமறையின் அருள் மொழியில்
அமைந்துளதை நீ காண்பர் முஸ்லிம் பெண்ணே

முஸ்லிம் பெண்ணே என்ற கவிதையில் (பக்கம் - 113) சாந்தி என்று தொடங்கிய சொல் தெளிவு என்ற கவிதையிலும் (பக்கம் - 127) சாந்தி என்ற சொல்லால் நிறைவுற்றிருக்கிறது.

ஆற்றல் மிகு கொண்டவர்கள் சமூகத்தின்
ஆக்கத்துக் குதவுகின்றார் முஸ்லிம் பெண்ணே
போற்றிடுக அவர் பணியை இதனாலே
புத்துணர்வு அவர் பெறுவார் முஸ்லிம் பெண்ணே

புத்துணர்வு பெற்றவரை சமூகந் தன்னில்
புதியவரை உருவாக்க முஸ்லிம் பெண்ணே
ஒத்துழைத்த லுன் கடனாம் முஸ்லிம் பெண்ணே
உள்ளத்தைப் பண்படுத்து என்றும் சாந்தி!

தனது அன்றாட வேலைப்பளுக்களுக்கும் மத்தியில் இஸ்லாமிய சமூகம் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கத்தில், இஸ்லாமிய கருத்துக்கள் உள்ளடங்கிய கவிதைகளை யாத்து இவ்வாறு புத்தகமாக்கியிருக்கிறார் டாக்டர் தாஸிம் அகமது அவர்கள். அல்லாஹ் அவருக்கு மென்மேலும் அறிவையும், ஆற்றலையும் வழங்குவாயாக!!!

நூலின் பெயர் - கண் திறவாய் (கவிதைகள்)
நூலாசிரியர் - தாஸிம் அஹமது
வெளியீடு - எஸ்.ஜே. வெளியீட்டகம்
தொலைபேசி - 0112438801
மின்னஞ்சல் - doctorthassim@gmail.com
விலை - 300 ரூபாய்

37. மாண்புறும் மாநபி - கவிதைத் தொகுதி

மாண்புறும் மாநபி கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


மாண்புறும் மாநபி என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி. அஸீஸ் அவர்களாவார். இவர் ஏற்கனவே உணர்வூட்டும் முத்துக்கள்,  அஸீஸ் கவிதைகள் சிறுவர் பாடல்கள், அஸீஸ் கவிதைகள் மேலதிக இணைப்பு, அஸீஸ் கவிதைகள் தாலாட்டுப் பாடல்கள், அஸீஸ் கவிதைகள் கிராமியக் கவிகள் ஆகிய தொகுதிகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாண்புறும் மாநபி என்ற கவிதைத் தொகுதி எம் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி புகழ்பாடும் கவிதைகளால் நிறைந்துள்ளது. இந்த கவிதை நூலானது 81 பக்கங்களை உள்ளடக்கியதாக பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய கலாபூஷணம் ஏ.எம்.எம். அலி அவர்கள்  ''எனது உடலுக்குள் இருக்கும் உயிரே நீங்கள் தாம் நாயகமே! நபி நாயகமே! என வியந்து போற்றிப் பாவாரஞ் சூட்டிப் பரவச மெய்துகின்றார் கவிஞர் பி.ரி. அஸீஸ். அவர் ஓத முனைந்துள்ள பாக்கள் அனைத்திலும் அல்லாஹ்வின் அடியாரும் அவனது ஹபீபுமாகிய அண்ணலார் மீதான புகழ்ச்சி மணம் வீசிக் கொண்டே இருக்கின்றது. பெருமானார் (ஸல்) அவர்கள் பேணிய வாழ்வு பற்றியும், அன்னாரின் மாண்மியம் பற்றியும் அப் பாக்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன'' என்கிறார்.

சிறப்புக்குரிய நபியவர்கள் கண்ணியம், மரியாதை, உயர்வு என பல இயல்புகளை தன்னகத்தே கொண்ட ஒரு மாபெரும் தலைவர். அத்தோடு அன்பு வெள்ளத்தின் உற்றும் அவர்களே. இத்தகைய நபியவர்கள் மீது ஸலவாத்து சொல்லி, புகழ் பாடுவதென்பது பாராட்டப்படக்கூடிய விடயமாகும் என்கிறார் டாக்டர் ஹில்மி மகரூப் அவர்கள்.

வழிகள் செய்திடுவோம் என்ற கவிதையில் (பக்கம் - 23) நபி பெருமானாரை நினைத்தால் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது என்பதை நிதர்சனமாக தனது கவிதைகளினூடு சொல்கிறார் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள்.

நெஞ்சம் எல்லாம்
எங்கள் நபியின்
புகழைச் சொல்கிறது
கொஞ்சும் மொழியில்
அவர்கள் மீது
ஸலவாத் பொழிகிறது 

நபியவர்கள் மன்னிக்கும் மனம் படைத்தவர்கள். தனக்கு தீங்கு செய்தவர்களையும் தண்டிக்காத மேலானவர். அது பற்றி முத்தாய் என்றும் திகழ்வீர்கள் (பக்கம் 34) என்ற கவிதையில் இவ்வாறு அழகாக கூறப்பட்டிருக்கிறது.

குப்பைகள் கொட்டிய கொடியவளின்
குணத்தை மன்னித்த நாயகமே
தப்புகள் விளைந்த போதினிலும்
தண்டனை வழங்காப் பெருந்தகையே! 

வணக்கத்துக்குரிய அல்லாஹ்வின் தூதர் நபியவர்கள் மீது அனைவரும் ஸலவாத்து சொல்வது ஈடற்ற நன்மைகளைப் பெற்றுத்தரும் விடயமாகும். நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டால் அவர் மீது ஸலவாத்து சொல்வது எமது கடமையாகும். அதனால்தான் கவிஞர் அல்லாஹ் நேசிக்கும் அண்ணல் நபி (பக்கம் - 52) எனும் கவிதையில் அதைப்பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்.

அல்லாஹ்வை நேசிக்கும் அன்பரெல்லாம்
உங்களை (நபியை) நேசிக்க வேண்டுமல்லோ
தங்களை (நபியை) நேசிக்கும் அனைவரையும்
அல்லாஹ் நேசிப்பான் உறுதி இதே! 

முஸ்லிம்கள் வாழும் இடமெல்லாம் நபியவர்களின் புகழ் இருக்கும். ஏனெனில் முஸ்லிம்கள் நபியவர்களை தமது உயிருக்கும் மேலாக நேசிக்கின்றவர்கள். அதனை பூக்களாய் மலரச் செய்தவர் (பக்கம் - 72) என்ற கவிதையின் கீழுள்ள வரிகளில் உணரலாம்.

முஸ்லிம் வாழும் இடமெல்லாம்
முஹம்மத் என்னும் பெயரொலிக்கும்
இஸ்லாம் இருக்கும் காலம் வரை
இகத்தில் அதுவும் நிலைத்திருக்கும்

இவ்வாறு அழகிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - மாண்புறும் மாநபி
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042
மின்னஞ்சல் - azeesphfo@gmail.com
விலை - 250 ரூபாய்

Sunday, December 2, 2012

36. இருக்கும்வரை காற்று - கவிதை தொகுதி

இருக்கும்வரை காற்று கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஏ.எம். தாஜ் அவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளராவார். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளனாக, ஒரு பாடகனாக, ஒலி ஒளி அறிவிப்பாளனாக, ஒரு சட்டத்தரணியாக பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார்.

இவரது கன்னிக் கவிதை நூலே ஷஇருக்கும் வரை காற்று| ஆகும். அழகிய அட்டைப்படத்துடனும், அழகிய வடிவமைப்புடனும் மிகவும் கச்சிதமாய் சிறியதும் பெரியதுமான 43 கவிதைகளை உள்ளடக்கியதாக 80 பக்கங்களில் கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையுடன் வெளிவந்து இருக்கிறது இவரது கவிதை நூல்.

வேதாந்தி என்ற புனைப் பெயரில் எழுதி வரும் கவிஞர் சேகு இஸ்ஸதீனின் முன்னுரை இந்த நூலுக்கு கனதியை சேர்க்கின்றது. சேகு இஸ்ஸதீன் அவர்கள் தனதுரையில்  

சமூக விடுதலைக்கான ஒரு சத்தியப் போராட்டத்தில் எனது தேர்ப்பாகர்களில்  ஒருத்தனாய் இருந்து எனது களைப்பைக் கலைத்து சலிப்பை ஆசுவாசப்படுத்தி வெற்றிகளைத் தேடித் தந்த ஒரு வித்துவக் கலைஞன்தான் தாஜ். மென்மையான அவனது உள்ளத்தைப் போர்த்திய மேலங்கியில் முஸ்லிம் சமூக உரிமைப் போராட்டத்துக்கான உணர்வுக் குண்டுகளைச் சுமந்து திரிந்தவன் அவன். மனித நேயம் அவனது மதம், ஜீவகாருண்யம் அவனது மார்க்கம், சமூக விடுதலை அவனது கொள்கை, சமத்துவம் அவனது கோட்பாடு, சகோதரத்துவம் அவனது பயிற்சிப் பாசறை என்று கவிஞர் ஏயெம் தாஜைப் பற்றி சொல்கிறார்.

விரக்தியின் விளிம்பில் இருப்பவர்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். அவர்களின் துயர் எத்தனைக் காலம் ஆனாலும் மறைந்துவிடப் போவதில்லை. உலகெங்கிலும் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருப்பது வாடிக்கையாகிப்போன சமாச்சாரம். அதை உவமானமாக்கொண்டு ஒரு ஆண் பெண்ணிடம் அவளது இதயத்தை பெறுவது கஷ்டம் என்பதை விரக்தி என்ற கவிதையில் (பக்கம் 28) பின்வருமாறு சொல்கிறான். 

இழந்த மண்ணை
போராடிப் பெறுவதற்கு
பலஸ்தீனமா 
உன் இதயம்?

தவிப்பு (பக்கம் 40) என்ற கவிதை நிவாரணம் வழங்குவதைப் பற்றி நச்சென்று பேசுகிறது. அரசு வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்காக நிவாரணம் வழங்குகிறது. தண்ணீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது சரியாக இருக்கலாம். ஆனால் கண்ணீர் வெள்ளத்தில் மிதப்பவர்களுக்கு?

அரசு
வெள்ள நிவாரணம்
கொடுக்கப் போகிறதாம்
கண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கும்
நமக்குமா?

பல்கலைக்கழகங்களில் நடக்கும் ரெக்கிங் பற்றி வளாகத்தில் ஒரு போர்க்காலம் என்ற கவிதை பேசுகிறது. பகிடிவதை சரியா, பிழையா என்ற விவாதங்களுக்கு அப்பால் பகிடிவதை செய்யப்படுவதையும் இரசிக்கும் விதமாக கவிஞர் தாஜ் அவரது கவிதையில் (பக்கம் 51) பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

விற்பனைக்கு வரும்
பூக்களெல்லாம் 
ஒரு தோட்டத்தில் 
பூத்ததில்லை..

அதனால் 
கோபப் படாதீர்கள்
சந்தைப்படுத்தலுக்கு
தயார் செய்கிறோம்..

மரங்களில் மோதி
காற்றின் சிறகுகள்
உடைந்ததுமில்லை..
முகில்கள் மூடி 
ஒரு பௌர்ணமி இரவு
மறைந்ததுமில்லை..

ஆகையால் அஞ்சி ஓடாதீர்
மரணத்தைப் போல்
ரெக்கிங் நிலையானது!

சத்திய விசாரணை (பக்கம் 53) என்ற கவிதை தனிமையை பாடி நிற்கிறது. வாழ்வு இருட்டாகிப்போன பின் அதில் வெளிச்சம் ஊற்ற யாரிருப்பார் என்று கவிஞர் பின்வருமாறு அங்கலாய்க்கிறார்.

உறைந்து கிடக்கும்
வாழ்வின் ஒரு பகுதியும்
காய்ந்து கிடக்கும் மீதியும்
நிரந்தரமாயின்
மூச்செடுக்க முடியாத அழுத்தம்
எனக்குள் அடங்கிப் போக
என்கூட யாரிருப்பார்?

விடிவுகளில்லாத 
இரவின் விழிகளுக்குள்
சூரியனை உடைத்து ஊற்ற
என்னோடு யார் வருவார்?

ஒரு அழகான பெண்ணின் கண் வீச்சில் இன்னும் சிக்காத ஆண் அவளைப் பற்றி எறிகணை (பக்கம் 65) என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகிறான்.

உன்
கூர்மையான பார்வையால்
என்னை வேட்டையாட வந்தாய்!
உன் குறியில்
அதிகம் தப்பிப் பிழைத்தவன்
இனியும் என்னை 
அப்படிச் செய்ய வேண்டாம்!

உயிர்கொல்லும் 
உன் விழிகளின் சுற்றிவளைப்பில்
இன்னும் சிக்காத கைதி நான்!

வாழ்க்கையின் தத்துவத்தை நமக்குணர்த்தும் கவிதையாக வாழ்க்கை (பக்கம் 79) என்ற கவிதையைக் கொள்ளலாம். அடுத்த நொடி உயிருடன் இருப்போமா என்பது யாருக்கும் தெரியாது. வாழ்கின்ற சொற்ப காலத்தில் எத்தனைப் பேரை வீழ்த்தியிருப்போம்? அடுத்த வேளை உணவை உண்ண நம்முடலில் உயிர் இருக்குமா? சில வரிகள் இவ்வாறு...

அந்தக் கடைசிச் சொல்
என்னவென்று தெரியாது

இரணமும் தண்ணீரும் 
இன்னும் எவ்வளவென்று தெரியாது

தாயோடுதான் வந்தோம்
யாரோடு போவோம்?

நூலாசிரியர் கவிஞர் ஏயெம் தாஜுக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூலின் பெயர்; - இருக்கும்வரை காற்று (கவிதைகள்)
நூலாசிரியர் - ஏயெம் தாஜ்
தொலைபேசி - 0777780807
மின்னஞ்சல் - amthajune@gmail.com
விலை - 300 ரூபாய்