Friday, November 30, 2012

35. நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர்

நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் - நினைவு மலர் பற்றிய எனது பார்வை

தாம் வாழும் மண்ணுக்கு பெருமையும், புகழும் கிடைக்கச் செய்வதானது ஒரு மனிதன் தனது வாழ்வில் கண்ட மாபெரும் வெற்றியாகும். அந்த வெற்றியை தனது பன்முக ஆளுமைகள் மூலம் தனதாக்கி கொண்டவர் எமது வெலிகம மண்ணின் மாணிக்கங்களில் ஒருவரான ஹூசைன் சேர் அவர்கள்.

தான் வாழ்ந்த காலப்பகுதியில் பல்துறைகளில் தனது சேவைகளைப் புரிந்த மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹூசைன் அவர்களைப் பற்றி, 188 பக்கங்களைக் கொண்ட நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள் என்ற நினைவு மலரை ஓய்வு பெற்ற ஆசிரியரான எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் மற்றும் முன்னால் அதிபரான ஏ.ஆர்.எம். இர்ஷாத் ஆகியோர் தொகுத்திருக்கிறார்கள்.

இந்தத் தொகுப்பில் கட்டுரைகள், கவிதைகள், நினைவுரைகள் தவிர மர்ஹூம் ஹூசைன் அவர்களின் படைப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றமை சிறப்பம்சமாகும். இதுபோலவே மர்ஹூம் ஹூசைன் அவர்களிடம் கல்வி பயின்று இன்று மதிப்புக்குரிய தொழில்களிலிருக்கும் பலர் அவரைப் பற்றிய தத்தமது அவதானங்கள், குறிப்புகள் போன்றவற்றை பகிர்ந்துள்ளமையும் புத்தகத்துக்கு வலு சேர்த்திருக்கிறது எனலாம். அதன் மூலம் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஹூசைன் அவர்களைப் பற்றிய தகவல்களை பிறரும் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது.


ஓய்வு பெற்ற ஆசிரியரும், இலக்கியவாதியுமான எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் ஏற்கனவே பாலைவனத்தில் ஒரு சோலைவனம், அல்-குர்ஆன், அல்ஹதீஸ் அடிப்படையில் சொத்துப் பங்கீடு (பாகப் பிரிவினை), மண்ணூருக்கு மாண்பு சேர்த்த மன்னர்கள் ஆகிய தொகுப்பு நூல்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தும் இறவா இன்னுறவே என்ற கவிதையை டாக்டர் எம். இப்லால் சுபைர் அவர்கள் யாத்திருக்கின்றார். அதில் ஹூசைன் சேரின் உயர்ந்த குணங்களை அழகாக குறித்து நிற்கும் கவிதையின் சில அடிகள் (பக்கம் 66)...

கல்விக் கரையை நாங்கள் அடைந்திட
கலங்கரை விளக்கமாய் ஒளிர்ந்த உறவே
வல்லபம் மிக்கவோர் மானுடன் ஆக
கல்வியால் நானும் மேன்மையுற்றேன்

கல்விக்குயிர் கொடுத்தோன் மாள்வதில்லை
கனவானுங்களை மரணமும் மறைக்காது
நல்லோர் காணும் சுவர்க்க உலகத்தை
நீங்கள் காண இறையை இறைஞ்சினேன்

உலகக் கல்வியுடன் மார்க்கக் கல்வியும் மனிதனுக்கு மிக முக்கியம். இன்றைய காலத்தில் அதான் (தொழுகைக்கான அழைப்பு) ஒலிக்கும் போதும் பலர் அதனைக் கணக்கிலெடுக்காமல் வீணாக பொழுதைப் போக்குகின்றனர். ஆனால் கற்பிக்கும் நேரத்தில் கூட அதான் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுத்த உத்தமரைப் பற்றிய கல்விச் சோலையில் பூத்த ரோஜாவே (பக்கம் 108) என்ற தலைப்பில் எம்.எஸ்.எம். அப்ளல் ஹுஸைன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

பள்ளிவாசல்களில் பாங்கொலி கேட்கும் வேளை
பள்ளிக்கூடங்களில் மணியொலிக்கச் செய்தாய்
மனோரம்மியமான சூழல் வேண்டும் என்றாய்
மகிழ்ச்சி பொங்கும் சோலையாக கலாசாலைகளை மாற்றினாய்

மாணவருலகம் எழுச்சி பெற்றிட
மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி
ஆசானாய் - அதிபராய் - பணிப்பாளராய் பணிசெய்து
அனைந்துவிட்டாலும் நிலைத்துவிட்டீர் எம்மகங்களில்!

மர்ஹூம் ஹூசைன் அவர்கள் பிறருக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர். ஒரு ஏணியாக இருந்து கரம்கொடுத்து உதவியவர். கரந்ததே கல்விக் கதிரவன் என்ற தலைப்பில் (பக்கம் 133) எம்.எஸ். பஸ்லி ஸாலிம் ஆசிரியர் அவர்கள் அதனைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

அணி உரையில் அண்ணாத்துரை அவர்
துணிச்சலில் யூலிய சீசருக்கு நிகர்
பணியே பரம் பொருளாய்க் கண்டவர்
ஏணியாக எம்மை ஏற்றி விட்டவர்

எரியும் வேளையில் கண்ணீர்
சொரிவது மெழுகுத்திரி ஆனால்
சிரித்துக் கொண்டே தன்னைக்
கரித்துக் கொண்ட வித்தகர்

எம்.ஜே.எம். மின்ஹாஜின் மறைந்தாலும் மங்காத ஒளித்தீபம் (பக்கம் 139) என்ற கவிதை மர்கூம் ஹுஸைன் அவர்கள் வெலிகமை மக்களின் உள்ளத்தில் என்றும் ஒளியாகத் திகழ்கிறார் என்பதையும், அவர் ஆற்றிய சேவைகள் மாணவர்களின் நினைவுகளில் என்றுமே நிழலாடிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை இவ்வாறு இயம்பி நிற்கிறது.

தென்னிலங்கையின் தன்னிகர் முத்தாக
வெலிகமை வாழ் மக்களின் உள்ளத்தில்
என்றும் நீங்காத ஒளி விளக்காக
ஏற்றம் பெற்றவர் ஏயாரெம் ஹுஸைன்

அதே போல நூலில் இடம்பெற்ற பிரார்த்திப்போம் எந்நாளும் (பக்கம் 160) என்ற எனது கவிதையிலும் அவரது பல்துறைத் தொழில்களையும், சேவையையும் எழுதியிருக்கிறேன்.

நல்லாசானாய்
அதிபராய்
உயர் அதிகாரியாய்
பல பரிமாணங்கள் பெற்று
வெலிகமை மண்ணுக்கு
பெருமை சேர்த்தீரே!

மாணவச் செல்வங்கள்
மதிப்புடனே வாழ்ந்திட
பண்பாகப் படிப்பித்து
பார்போற்றச் செய்தீரே!

இது தவிர பல கட்டுரைகளைப் பிரபலம் வாய்ந்த பல்வேறு பட்டோர் எழுதியிருக்கின்றனர். அதில் வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் போன்ற பலர் எழுதியிருப்பது ஹூசைன் சேர் அவர்களின் மதிப்புக்கும், ஆளுமைக்கம் கட்டியங் கூறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவரும் சமூக சேவை உள்ளம் மிக்க ஆசிரியர் ஹபீபுர் ரஹ்மான் அவர்களுக்கும எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - நெஞ்சை விட்டும் நீங்காத நினைவலைகள்     (நினைவு மலர்)
தொகுப்பாசிரியர் - கலாபூஷணம் எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான்
தொலைபேசி -  0776929711
விலை - குறிப்பிடப்படவில்லை

No comments:

Post a Comment