Tuesday, September 3, 2013

47. ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விசித்திரமான மனித மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் மனிதனின் போக்கையே மாற்றும் சக்தி வாய்ந்தது. மந்திர தந்திரங்களால் அதற்கு தீர்வு காணப்போய் மாட்டிக் கொண்ட வரலாறுகளும் இதற்குச் சான்று. ஒரு உளவியலாளரின் ஆலோசனைகள் இதற்கு புறம்பானவை. அவை பெரும்பாலும் மனிதனின் ஆழ் மனதை சம்பந்தப்படுத்தி நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்து வைத்தியம் செய்வதால் அந்த வைத்தியம் சாத்தியப்பாடானதாக அமைகின்றது.

நாடறிந்த எழுத்தாளர் கலாபூஷணம் பீ.எம். புன்னியாமீன் அவர்களால் அத்தகையதொரு உளவியலாளரைப் பற்றிய ஒரு புத்தகம் அண்மையில் வெளிக்கொணரப்பட்டிருக்கின்றது. ஒரு ஈரு நெஞ்சனின் உளவியல் உலா என்ற தலைப்பிட்டு அல்ஹாஜ் யு.எல்.எம். நௌபர் அவர்களைப் பற்றியே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

உளவியலாளர் ஆன்மீகவாதியாகவும், இறைவனோடு நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர் மேற்கொள்ளும் வைத்தியங்கள் அளப்பரிய சாதனைகளை தொட்டு விடுவதும் உண்மை. அந்த அடிப்படையில் நௌபர் அவர்களும் தனக்கு அல்லாஹ் கொடுத்த மன வலிமையின் பிரகாரம் பலருக்கு தன்னால் இயன்ற அளப்பரிய சேவைகளைச் செய்து வருகின்றார்.

நௌபர் அவர்களின் உளவியல் சம்பந்தமான முழு விபரங்களும் இந்தத் தொகுதியல் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, அவரது வைத்தியத்தின் மூலம் குணமாகியவர்களின் கருத்துக்களும் இந்தத் தொகுதியில் உள்வாங்கப்பட்டுள்ளமை கூடுதல் சிறப்பு எனலாம்.

சிந்தனை வட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் இந்தூல் 550 பக்கங்களை உள்ளடக்கி உளவியல் துறை சார்ந்த மேற்படிப்புகளில் நௌபர் அவர்கள் பெற்ற சான்றிதழ்களும் சான்றாதாரமாக இதில் அச்சாகியிருக்கின்றதுடன் முக்கியமான புகைப்படங்களும் இதில் காணப்படுகின்றன.

ஷஉளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனிதனின் மன செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் பற்றி ஆய்வு செய்யும் ஓர் இயலாகும். இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளோரை உளவியலாளர்கள் என அழைக்கிறோம். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்சானிகள் என அழைக்கப்படுவர்| (பக்கம் 54) என உளவியலாளர்கள் பற்றியும், உலகில் தலை சிறந்த உளவியல் அறிஞர்கள்; பற்றியும் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்கள் தனது பரந்துபட்ட தேடல்களை எமக்கு வழங்கியிருக்கின்றார். எனவே அல்ஹாஜ் நௌபர் அவர்களின் ஆளுமைகள் பற்றி அலசுவது பொருத்தம் என எண்ணுகிறேன்.

நௌபர் அவர்கள் தனது பேணுதலான இறை பக்தியின் மூலமும், தன்னுடைய உளவியல் ஆற்றல்களை வளர்த்துக்கொண்டவர். சின்ன வயதிலிருந்தே பிரார்த்தனை மூலம் அல்hஹ்விடம் எதனையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது. எந்தளவுக்கென்றால் தான் சிறுவனாக இருந்தபோது முதல் தவணையில் அவர் வகுப்பில் இரண்டாவது நிலை பெறுகிறார். அடுத்த தவணையில் முதல் நிலை பெற வேண்டும் என நினைப்பது சர்வ சாதாரணமான விடயம். ஆனால் இதில் பொதிந்துள்ள ஆச்சரியம் என்வென்றால் அவர் தனக்கு இன்ன இன்ன பாடங்களில் இத்தனை புள்ளிகள் வர வேண்டும், சராசரி நிலைப் புள்ளி இத்தனைதான் இருக்க வேண்டும் என்று கேட்டு பிரார்த்தித்தார். என்ன ஆச்சரியம் அடுத்த தவணையில் தான் கேட்ட அதே புள்ளிகள் அச்சு அசலாக அதே அளவில் வந்திருந்ததை இறைவன் அருள் இல்லாமல் வேறென்ன என்பது?

சிலபொழுதுகளில் அவர் காணும் கனவுகள் உண்மையாகவே நிகழ்ந்திருக்கின்றன. சில நிகழ்வுகள் அவரது உள்ளத்தில் தானாகவே உதித்திருக்கின்றன. அவை பற்றிய விடயங்கள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. கௌரவ ரணில் அவர்கள் பிரதமராகி இரண்டு வருடங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து விடும், சுனாமிப் பேரலை பற்றிய எதிர்வு கூறல் போன்றவற்றை நௌபர் அவர்கள் முன்கூட்டியே கூறி இருக்கின்றார். அவை நடந்து முடிந்த விடயம் என்பதும் நாமறிந்ததே. அத்துடன் கர்ப்ப கால உபாதை, முள்ளந்தண்டு பாதிப்பு, தெளிவற்ற கண்பார்வை, பித்தப்பைக் கல், இதயத்தில் துளை, வயிற்றுப் புண் இன்னும் பல நோய்கள் என்று வந்தவர்களுக்கு துஆ பிரார்த்தனை மூலம் சிகிச்சையளித்து குணமாக்கிய அதிசய ஆன்மீக சக்தி நௌபர் அவர்களிடம் இருக்கின்றது.

இலங்கையில் நமது இஸ்லாமிய சமூகத்தில் பக்தியை மாத்திரம் கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்டு, இல்லாதவர்களுக்கு உதவி வரும் நௌபர் அவர்களை ஈருநெஞ்சன் என புன்னியாமீன் அவர்கள் விளித்திருப்பது சாலப் பொருத்தம். நௌபர் அவர்களைப் பற்றி அறியத் தந்த கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களையும், பிறர் நலனையே தன்னலனாகக் கொண்டு வாழ்ந்து வரும் மகான் அல்ஹாஜ் நௌபர் அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்று பிரார்திக்கிறேன்!!!

நூலின் பெயர் - ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா
நூலாசிரியர் - கலாபூஷணம் புன்னியாமீன்
தொலைபேசி - 0812493749
வெளியீடு - சிந்தனை வட்டம்
விலை - 880 ரூபாய்

No comments:

Post a Comment