Tuesday, March 27, 2018

120. ''நான் மூச்சயர்ந்த போது'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''நான் மூச்சயர்ந்த போது'' கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்

''நான் மூச்சயர்ந்த போது'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் எஸ்.யூ. கமர்ஜான் பீபீ அவர்களாவார். வத்தளை ஹுனுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் நாடறிந்த பன்னூல் ஆசிரியர் நூறுல் ஹக் அவர்களின் துணைவியாவார். அத்துடன் பயிற்றப்பட்ட பாலர் பாடசாலை ஆசியராக ஹுனுப்பிட்டி ஸாஹிரா வித்தியாலயத்தில் கடமையாற்றுகிறார். 
1980 காலப் பகுதிகளில் தனது எழுத்துப் பயணத்தைத் துவங்கிய இவர் 'ஹுனுப்பிட்டி செல்வி' என்ற புனைப் பெயரிலும் தனது கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதி வந்துள்ளார். தினகரன், தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி வார வெளியீடு, நவமணி, இலங்கை வானொலி முஸ்லிம் சேவை, அல் - ஹிலால், அல் - ஹுதா, சோலை, மருதம், தூது, சப்தம், பார்வை, ஹிக்மா, அல் - ஜெஸீறா, மிம்ரஹா, சிந்தனை,  புயல், நங்கூரம், கவிமலர், பவளம், பாசம் ஆகிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஆகியவற்றில் எழுதிவந்த கமர்ஜான் பீபீ அவர்களின் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் வெளியிடும் கன்னி நூல் வெளியீடே இந்தக் கவிதை நூலாகும். 

'என்னுடைய கல்வித்துறை வாழ்வில் மறக்க முடியாத மனிதநேயம் மிகுந்த ஒரு மாணவி' என்ற தலைப்பில் நூலாசிரியர் கற்பிக்கும் பாடசாலையின் அதிபராக இருந்த அல்ஹாஜ் என்.எம்.எம். றெஸீன் அவர்கள் நூலாசிரியர் கமர்ஜான் பீபீ பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''ஹுனுப்பிட்டிய முஸ்லிம் வித்தியாலயத்தில் என்னிடம் கல்வி கற்ற மாணவ மாணவிகளில் எனது மனதில் இன்றும் இடம் பெற்றுள்ள மாணவி கமர்ஜான் பீபீ என்பவராவார். ஆரம்ப காலத்திலிருந்து க.பொ.த. சாதாரண தரம் வரைக்கும் என்னிடம் கல்வி கற்றார். தமிழ் மொழியில் மிகவும் பற்றுக் கொண்ட கமர்ஜான் பீபீ படிக்கும் காலங்களிலேயே எழுத்துத் துறையில் ஆக்கங்கள் செய்வார். பத்திரிகைகளில் சிறுவர் மலர் பகுதிகளில் அக்காலத்தில் அவரது ஆக்கங்கள் வெளிவரும். வானொலி மாணவர் நிகழ்ச்சிகளில் பங்குபற்றியதோடு, ஹுனுப்பிட்டி பகுதி வாழ் மாணவ மாணவியரை சிறுவர் நிகழ்ச்சிகளில் பயிற்சி அளித்து பங்கேற்கச் செய்வார்'' என்று கமர்ஜான் பீபீயின் இலக்கிய ஆர்வம், பங்களிப்புக்கள் பற்றி குறிப்பிடுகின்றார்.

76 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலில் சுமார் 52 கவிதைகளே உள்ளடங்கியுள்ளன. ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ள இந்தக் கவிதாயினி கல்பில் நிறைந்த காத்தமுன் நபியே, றஸுல் எங்கள் நாயகமே, ஹாஜிகளே வருக, முஹர்ரமே வருக, நோன்பினை நோற்று மாண்பினை அடைவோம், மறையின் மகிமை ஆகிய ஆன்மீகக் கவிதைகளையும் நூலாசிரியர் எழுதியுள்ளார். இதுதவிர சமுக அவலம், அரசியல், வறுமைப் புயல், இயற்கையின் சீற்றம், தாய்ப் பாசம், குழந்தைப் பாசம், வாழ்த்து போன்ற இன்னோரன்ன கருப்பொருட்களில் பல்வேறு கவிதைகளையும் யாத்துள்ளார்.

கவிஞராகவும் கணக்காளராகவும் அடையாளம் பெற்ற நூலாசிரியரின் மகனுக்காக ஷஎன் மகனே நீ வாழ்க| (பக்கம் 13) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். தான் பெற்ற பிள்ளைகள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழும்போது அது பெற்றோருக்கு எந்தளவு மகிழ்ச்சியையும் தைரியத்தையும் வழங்குகின்றது என்பதற்கு இக்கவிதை உதாரணமாகத் திகழ்கின்றது. பெற்றோருக்கு அடிபணிந்து, அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் மகன் அல்லது மகளைப் பெற்றெடுத்த பெற்றோரின் பிரார்த்தனைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அத்தகைய ஒரு தாயாக அவர் தன் மகனுக்காக எழுதிய கவிதையின் சிலவரிகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன.

பத்து மாதம் கருவிலே சுமந்துன்னை
பவுத்திரமாய் பெற்றெடுத்தேன் செல்ல மகனே
இரத்தத்தைப் பாலாக்கி மூன்று வருடமுனக்கு
இரணமாய் ஊட்டினேன் நீ வளர

கருவிலே உன்னை வைத்திருந்த போதினிலே
கவனமாகப் பாதுகாத்தார் உன் தந்தை
என் மகன் எப்போது வெளிவருவான் என்று
ஏக்கத்துடன் தவிர்த்து நின்றார்
உன் வரவைஎ ண்ணி

பாலகர்களே (பக்கம் 18) என்ற கவிதை மூலம் கல்வியின் பெருமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார். அத்துடன் நேரம் பொன்னானது. ஒருநிமிடம் கூட மகிவும் பெறுமதி வாய்ந்தது. அந்த நேரத்தைப் பயனுள்ளாதக் கழிக்க வேண்டும் என்று ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் என்றும் நல்ல சிந்தனைகளை பிள்ளைகள் மனதில் தூவும் விதமாக அவர் எழுதியிருக்கும் பாங்கு நோக்கத்தக்கதாகும்.

பாலகர்களே பாலகர்களே
பள்ளி செல்ல எழுந்திடுங்கள்
கண்ணயர்ந்து தூங்கிவிட்டால் 
கணப் பொழுதில் ஓடிவிடும் நேரம்

காலையில் எழுந்து நீங்கள்
காலைக் கடமையினை முடித்திடுங்கள்
கல்விதனை கற்றிடவே
கல்வி கூடம் சென்றிடுங்கள்

அறிவுதனை பெற்றிடவே
ஆசான் சொல்லை மதித்திடுங்கள்
கரை காணாத கல்விதனை
கவனமாய் கற்றிடுங்கள்

உம்மாவுக்காக.. (பக்கம் 28) என்ற கவிதை தாயன்பை சித்தரித்திருக்கின்றது. தியாகத்தின் மறு வடிவமாகத் திகழும் ஒருதாய், தன் பிள்ளைகளை நல்ல நிலைமையில் பார்ப்பதற்காக பாடுபட்டு பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றார். அந்தத் தாயின் கனவு நிறைவேறும் தருணத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தை கொண்டு அளவிட முடியாது. அதேபோல தாயின் அன்பையும் எந்தக் கருவியினாலும் அளந்திட இயலாது. தாய்க்கு நிகர் யாருமில்லை. கீழுள்ள கவி வரிகள் மூலம் நூலாசிரியர் தன் தாயாரின் தியாகங்களைப் பின்வருமாறு எடுத்தியம்புகின்றார்.

என் தாயே
ஜெய்னம்பு உம்மா ஈன்ற
செல்வம் நீங்கள்
வல்ல நாயன்
எமக்களித்த பொக்கிஷம்
தாயென்று முத்தாக
முகம் மகிழ்ந்தீர்கள்

எங்கள் இதயமே
நீங்கள் மெழுகுவர்த்தியாக
உருகிப் போனீர்கள்
பிறருக்கு செய்த
சேவையின் நிமித்தம்
அன்பு காட்டினீர்கள்

வீட்டுக்கு மாத்திரமல்ல
எல்லோருக்கும்
ஒளி விளக்காக பிரகாசித்தீர்கள்
பொறுமைக்கு நிகர்
நீங்களாக இருந்தீர்கள்

நிம்மதிக்காக (பக்கம் 32) என்ற கவிதை கடந்து போன யுத்த காலத்தைப் பற்றி பேசியிருக்கிறது. துணிவிருக்கிறது என்பதற்காக எல்லாக் காரியங்களையும் துணிச்சலாக செய்துவிடக் கூடாது. அந்தத் துணிவை தூரமாக்கிவிட்டு அன்பெனும் கூட்டுக்குள் பிரியமாக வாழ்வதற்கு ஆசை கொள்ள வேண்டும். அகிம்சை மூலம் உலகத்தை வெல்ல வேண்டும். துப்பாக்கிச் சப்தங்களுக்கு பதிலாக பறவைகள் கீச்சிடும் சத்தம் கேட்டு நாட்கள் புலர வேண்டும். துன்பங்களைத் துரத்திவிட்டு இன்பத்தின் கைகளுக்குள் தஞ்சமடைய வேண்டும்.. நாளைய உலகம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற தன் மன ஆதங்கத்தை நூலாசிரியர் கீழுள்ளவரிகள் மூலம் தௌ;ளத் தெளிவாக சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

துணிவுக்கு
துறவறமிட்டு
துப்பாக்கிகளை
கீழே இறக்கட்டும்

நாளைய சந்ததிக்காக
அமைதியினை நிலைநாட்டி
சமாதானப் பூ
பாரெங்கும் 
பூத்துக் குழுங்கட்டும்

கடந்து போன
அந்தக் கொடூ ரநாட்கள்
தொலைந்தே போகட்டும் 

இறுதியில் நூலாசிரியரின் மகளுக்காக 'திருமண வாழ்த்து' (பக்கம் 74) என்ற தலைப்பில் ஒரு கவிதையாத்துள்ளார். மனதாலும் கவிதையாலும் தன் மகழுக்கு வாழ்த்திசைத்துள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.

வல்லல்லிறை வகுத்திட்ட
வாழ்க்கை துணை நித்தம்
பண்புடனே அமைந்திடவே
பாவையே உறுதி பூண்டிடுவாய்

தாயான நான் இவள்
தரணியிலே உன்னை ஈன்றெடுத்தேன்
தரமான பிள்ளை என்றதனால்
பரவசம் கொள்கின்றேன் நித்தம்

பொன்னான உன் வாழ்வு
பொங்கிடவே இம்மணநாள் தன்னில்
மனப் பூரிப்புடனே வாழ்த்துகின்றேன்
என்னுயிர் செல்ல மகளே


ஆன்மீகக் கவிதைகள், சிறுவர்களுக்கான நற்சிந்தனைகள், சமூகத்தில் காணப்படும் அநீதிகளுக்கு எதிரான கருத்துக்கள், குடும்பத்தாருக்கான கவிதைகள் என்று பலதரப்பட்ட தலைப்புக்கள் இந்நூலில் பரந்து கிடக்கின்றன. நூலாசிரியர் தன் வாசிப்புத் தேடலை இன்னும் விரிவுபடுத்தி, எதிர்காலத்தில் இன்னமும் படைப்புக்களை வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - நான் மூச்சயர்ந்தபோது
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்.யூ. கமர்ஜான் பீபீ
வெளியீடு - மருதம் கலை இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்

No comments:

Post a Comment