Saturday, December 25, 2021

145. 2021.01.19 இல் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம்

2021.01.19 இல் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிய கண்ணோட்டம்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் வாரந்தோறும் செல்வாய்க் கிழமை இரவு 8.15 மணிக்கு பாரம்பரியம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியை முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் எம்.ஜே. பாத்திமா ரினோஸியா தயாரித்து வழங்க, சிரேஷ்ட கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா மிகவும் அருமையாகத் தொகுத்து வழங்குகின்றார். முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்பினை நல்கிய கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியாகவே இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி தொடர்ந்தும் ஒலிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


2021.01.19 ஆம் திகதியில் ஒலிபரப்பான பாரம்பரியம் நிகழ்ச்சியில் முஸ்லிம் சேவையின் இலக்கிய பாரம்பரியம் என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும், கவிஞருமான கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் அவர்களும், முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சி பற்றிய தன் கண்ணோட்டம் என்ற தலைப்பில் சிரேஷ்ட வானொலிக் கலைஞர், நடிகர், சின்னத்திரை சினிமா புகழ், கலாபூஷணம் கே. சந்திரசேகரன் அவர்களும், முஸ்லிம் சேவையின் நாடக பாரம்பரியம் என்ற தலைப்பில் கவிஞரும் கலைஞருமான எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்களும் உரையாற்றினார்கள்.

உண்மையில் இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி இலக்கிய நெஞ்சங்களையும் நாடக இரசிகர்களையும் மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது. இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் பல கலைஞர்கள் நாடகங்களுக்காக குரல் கொடுத்தும் பிரதிகளைத் தயாரித்து வழங்கியும் தாங்களது பங்களிப்பைச் செவ்வனே செய்துள்ளார்கள். இந்த பாரம்பரியம் நிகழ்ச்சியில் இரண்டு நிமிடமளவில் ஒலிபரப்பப்பட்ட ஒரு நாடகத்தின் சிறு பகுதியைக் கேட்க முடிந்தது. அந்த நாடகத்தை முழுமையாகக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை அந்த நாடகத்தின் வரிகள் ஏற்படுத்தின.

ஆரம்ப காலங்களில் இலக்கிய மஞ்சரி, இளைஞர் இதயம், கவியரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய ஜவாத் மரைக்கார் அவர்கள் தன் குரல் வளத்தாலும் எழுத்துக்களாலும் அளப்பெரும் பங்காற்றி நேயர் நெஞ்சங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டவர். இந்த நிகழ்ச்சியில் ஷஷமுஸ்லிம் சேவையின் கலை இலக்கியம் தொடர்பான பாரம்பரியம்|| தொடர்பாக தனது ஞாபகங்களை மீட்டிப் பல கருத்துக்களை அவர் முன்வைத்தார். 

ஜவாத் மரைக்கார் அவர்கள் முன்வைத்த கருத்துக்களைப் பார்க்கும் போது, மார்க்கம் சம்பந்தமானவை, சமூகம் தொடர்பான பொது விடயங்கள், கலை இலக்கியம் சார்ந்தவை ஆகிய முன்று தலைப்புக்களில் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையானது முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய, ஆற்றிவரும் தொண்டுகள் பற்றிக் குறிப்பிட்டார். அதாவது முழுக்க முழுக்க முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் பலவற்றின் விரிவான பார்வையாகவே அவரது உரை இருந்தது. 

அன்றைய நாட்களில் தென்னிந்தியா வரை புகழ் பெற்றிருந்த இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகள் தற்காலங்களில் நவீன தொழில் நுட்ப வசதிகளின் காரணமாக சர்வதேச மட்டத்தில், பரவலான அமைப்பில் தமிழ் பேசும் மக்களைச் சென்றடைந்துள்ளது. கலை இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் உள்நாட்டுப் பாடகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பாடகர்களால் பாடப்பட்ட இஸ்லாமிய கீதங்கள் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன. தமிழ் மொழி தவிர அறபு, உருது, ஹிந்துஸ்தானி, மலாய் மொழிப் பாடல்களையும் முஸ்லிம் சேவை ஒலிபரப்பியுள்ளது. அவ்வாறே கஸல், நாத், கவ்வாலிப் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. 

பிற நாட்டு இசைக் கலைஞர்கள் வருகை தந்த போது அவர்களின் இசைத் திறனைக் கேட்பதற்கு அவர்களை நேர்காணல் செய்து அதனையும் ஒலிபரப்புச் செய்துள்ளார்கள். முஸ்லிம் சேவையில் தயாரித்து, ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் நாடு கடந்து, மதங் கடந்து அனைவராலும் இரசிக்கப்பட்டு பாராட்டைப் பெற்றுள்ளன. ஆற்றல் மிக்க தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நாடக எழுத்தாளர்கள் ஆகியோரின் பங்களிப்பே இவ்வகையான நாடகங்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. வாரத்தில் ஒரு நாள் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் நேயர்களின் நெஞ்சங்களில் நிலைத்தன. இந்த நிகழ்ச்சி வானொலி நாடக எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

கவியரங்கங்கள், இசைச் சித்திரம், உரைச் சித்திரம் போன்ற நிகழ்;ச்சிகளும் அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டுள்ளன. முன்னோர் அளித்துச் சென்ற பழம்பெரும் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக முதிசம் என்ற பெயரில் வாரந்தோரும் ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. இலக்கிய அலசல்களை உள்ளடக்கியதாக இலக்கிய மஞ்சரி என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்றுவரை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது. இன்றைய நாட்களில் கவிஞரும் எழுத்தாளருமான அஷ்ரப் சிஹாப்தீன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றார். இது ஒரு சஞ்சிகை நிகழ்ச்சியாகும். அத்துடன் கவிதை தொடர்பாக கவிதைச் சுடர், கவிதைச் சரம், கவிஞர் மன்றம், கவிதா சாளரம், கவிதைக் களம் போன்ற நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளன. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்ட பக்கீர் பைத் நிகழ்ச்சி பற்றியும் குறிப்பிடப்பட்டது. 

கிராமிய இலக்கியமான நாட்டுப் பாடல்களின் தொடர் நிகழ்ச்சி கிராமத்து இதயம் என்ற பெயரில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. முத்தாரம் என்ற பெயரில் ஒரு பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சியும் வாராந்தம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளது. சதுரச் சங்கமம் என்ற பெயரில் வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி ஒன்றும் முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கலைஞர்களின் நேர்காணல்களும் அவ்வப்போது ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. நிலா முற்றம் என்ற பெயரிலும் சில நேர்காணல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. 

புனைகதைகள் தொடர்பாக கதை கேளீர் என்ற நிகழ்ச்சி மற்றும் சிறுகதை என்ற வாராந்த நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. முஸ்லிம்களால் எழுதி வெளியிடப்பட்ட இலக்கிய நூல்கள் பற்றி நூல் உலா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் என்ற ஒரு நிகழ்ச்சியும் அந்நாட்களில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. மகரந்தம் என்ற பெயரில் பல்சுவைக் கதம்ப நிகழ்ச்சி ஒன்றும் வாராந்தம் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அருட்சுணை என்ற நிகழ்ச்சி முஸ்லிம்களால் ஆக்கப்பட்ட பக்தி இரசம் கொண்ட இலக்கியங்களின் சிறப்பை நயந்து அறிமுகம் செய்வதாக ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளது. ஊடுருவல் என்ற சமூகச் சித்திரம், சமுதாயம் தொடர்பான விமர்சனங்களை இலக்கிய நயத்துடனும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கும் சுவையான நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டுள்ளன என்றவாறு ஜவாத் மரைக்கார் அவர்கள் முஸ்லிம் நிகழ்ச்சிகள் பற்றிய தனது பதிவை மீட்டிச் சென்றார்.

வாரா வாரம் சுமார் 05 வருடங்களாகத் தொடர்ந்தும் சனிக் கிழமை காலை 8.40 மணிக்கு ஒலிபரப்பப்பட்டு வருகின்ற ஜனரஞ்சகமான கலை இலக்கிய நிகழ்ச்சியே சஞ்சாரம் என்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி பற்றி குறிப்பிடப்படாமை ஒரு குறையாகும். இந்த நிகழ்ச்சியைத் தயாரித்தும் தொகுத்தும் வழங்கி வருபவர்களுக்கு அதுபெருங்கவலையான விடயமாக அமைந்துள்ளது. அத்துடன் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சி பற்றியும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறான சில குறைபாடுகளைத் தவிர்த்துக்கொண்டால் வானொலி முஸ்லிம் நிகழ்ச்சிகளைப்பற்றி ஆய்வு செய்ய வருபவர்களுக்கு அது முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்பதையும் கருத்தில்கொள்வது நல்லது.

அடுத்து உரையாற்றிய முஸ்லிம் சேவையின் பேரபிமாணி கே. சந்திரசேகரன் அவர்கள் முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் பற்றிய தனது கண்ணோட்டத்தை மிகவும் சிறப்பாகவும் சுவையாகவும் முன்வைத்தார். அவர் தனதுரையில், பாரம்பரியம் நிகழ்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது அந்நாட்களில் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு உயிரூட்டியவர்களை நேர்காணல் செய்து அவர்களது அநுபவங்களை இளந்தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் அருமையான நிகழ்ச்சியே இந்தப் பாரம்பரியம் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். நாடக நடிகர்கள் மற்றும் நாடகப் பிரதி எழுத்தாளர்கள் என்று பலரது பெரைப் பட்டியலிட்டு முன்வைத்த அவர், முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழ் பேசும் மக்களால் விரும்பிக் கேட்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். சமுதாயச் சீரழிவுகளை எடுத்துச் நகைச் சுவையாகச் சொல்லும் நாடகத் தொடர்களாக சுவைக் கதம்பம் நிகழ்ச்சியை மஹ்தி ஹஸன் இப்றாஹீம் எழுதி, ஸில்மியா ஹாதியுடன் இணைந்து நடித்து வழங்கி பலரது மனங்களையும் கவர்ந்தார் என்றும் குறிப்பிட்டார். 

1992 ஆம் ஆண்டு குரல் தெரிவில் இலங்கை வானொலி, முஸ்லிம் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராகத் தெரிவாகியவரே கலைஞர் எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்கள். தொடர்ந்து உரையாற்றிய அவர், முஸ்லிம் சேவையின் நாடகப் பாரம்பரியம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை முன்வைத்தார். 

முஸ்லிம் நிகழ்ச்சியின் ஆரம்ப காலங்களில் நாடகங்கள், உரைச் சித்திரங்கள், நடைச் சித்திரங்கள் ஒலிபரப்பாகவில்லை. அக்காலத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆசிரியராக இருந்த கலாநிதி அல்லாமா ஏ.எம். உவைஸ் அவர்கள், எழுதி என்ற புனைப் பெயரில் நடைச் சித்திரங்களையும் உரைச் சித்திரங்களையும் எழுதியுள்ளார். கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியர் புத்தளத்தைச் சேர்ந்த ஓ.எச். ஆப்தீன் அவர்களும் தொடர்ந்து நாடகங்களை எழுதியுள்ளார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆசிரியர் திக்குவல்லையைச் சேர்ந்த எம்.ஏ. முஹம்மத் அவர்களும் பல நாடகங்களை எழுதியுள்ளார். இவரது புயல் என்ற நாடகமே தமிழ் தேசிய ஒலிபரப்புச் சேவையில் முதன் முதலாக ஒலிபரப்பாகியுள்ளது. பின்னாட்களில் சூறாவளி என்ற பெயரில் இந்த நாடகம் முஸ்லிம் சேவையிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளது. பல புனைப் பெயர்களில் பல நாடகங்களை இவர் எழுதி, நாடகத் துறையில் ஒரு தனித்துவமான பெயரைத் தனதாக்கிக் கொண்டார். தொடர் நாடகங்கள் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யுமுகமாக முஹம்மது மாஸ்டர் எழுதி, 50 வாரங்கள் வரை ஒலிபரப்பான இவரது பௌஸியா தொடர் என்ற நாடகம் இங்கு குறிப்பிடத்தக்கது. 

சுரையா என்ற புனைப் பெயரில் எழுதிய மானா மக்கீனின் பாத்திமா மன்ஸில், எம்.ஏ. றஹ்மான் எழுதிய தாஜ்மகால் நிழலில், இளங்கீரன் சுபைர் எழுதிய வாழப் பிறந்தவர்கள், கல்பிட்டி எஸ்.ஐ.எம்.ஏ. ஜப்பாரின் தொடர் நாடகம், தீன்ஷா என்ற புனைப் பெயரில் ஆர்.எம். சைபுதீன் சாஹிப் எழுதிய நினைத்ததும் நிகழ்ந்ததும், எம். அஷ்ரப்கானின் சக்கரங்கள், தாய்மைக்கு என்ன விலை, காலச் சக்கரம், திக்குவல்லை கமாலின் மண்ணில் விழுந்த நிலவு, புர்கான் பீ இப்திகாரின் நிஜங்களின் நிழல்கள் போன்ற நாடகங்களை முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான நாடகங்களாகக் குறிப்பிடலாம். முஹம்மது மாஸ்டரைத் தொடர்ந்து நாடகம் எழுதியவர்களில் கொழும்பு வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த எம்.எம். சாகுல் ஹமீத், பொல்கஹவெல யூ.எல்.எம். தாஹா, கொழும்பைச் சேர்ந்த மானா மக்கீன் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள். 

எம். தாலிபின் விசித்திரப் பிறவி என்ற நாடகமும், ஸீ.பீ.எம். காஸிமின் கண்ணீரே காணிக்கை என்ற நாடகமும், எஸ். முத்துமீரானின் காதலும் கருணையும் என்ற நாடகமும் ஒலிபரப்பாகியுள்ளன. அத்துடன் கே.எம்.ஏ. மொகிதீன் அவர்களின் நாடகப் பிரதிகளும் ஒவிபரப்பாகியுள்ளன.  

கவிதை நாடகம் இல்லாத குறையைத் தீர்க்கும் முகமாக எம்.ஏ. கபூர் என்ற பொத்துவில் யுவன் அழாதே சிரி என்ற நாடகத்தை எழுதியிருந்தார். கல்ஹின்னை எம்.ஸீ.எம். சுபைர், பஸீல் காரியப்பர் ஆகியோரும் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார்கள். திக்குவல்லை எம்.எச்.எம். ஷம்ஸின் அன்பின் பரிசு, அஷ்ரப் சிஹாப்தீனின் திப்பு சுல்தானின் மனிதாபிமானம் ஆகிய நாடகப் பிரதிகள் ஒலிபரப்பப்பட்டன. நாவலாசிரியர்களும் வானொலி நாடகங்களுக்கான தனது பங்களிப்புக்களைச் செய்துள்ளார்கள். அந்தவகையில் அக்கரைப்பற்று அ.ஸ. அப்துஸ் ஸமத், யாழ்ப்பாணம் இளங்கீரன் சுபைர் ஆகியோரின் பங்களிப்புக்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.

 1967 க்குப் பின்னர் நாடகங்கள் எழுதியவர்கள் வரிசையில் மன்னார் எச்.எம். சரீப், எம்.எச். பௌசுல் அமீர், எம். அஷ்ரப் கான், ரைத்தலாவளை எம்.என்.ஏ. அஸீஸ், போர்வையூர் ஜிப்ரி, ஏத்தாளை மொகிதீன் ஏ. றஸ்ஸாக், மன்னாரைச் சேர்ந்தவர்களான எஸ்.எச். நிஃமத் மற்றும் கலைவாதி கலீல், வாழைத்தோட்டம் எஸ்.ஐ. நாகூர்கனி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதன் பின்னரான காலப் பகுதிகளில் நயீமா சித்தீக், ஜுனைதா ஷெரீப், எஸ்.ஏ.எம்.எம். அஷ்ரப், புத்தளம் எம்.எச்.எம். ஹஸன், கல்ஹின்னை சலீம், சோலைக்கிளி யூ.எல்.எம். அதீக், புர்கான் பீ இப்திகார், மஹ்தி ஹஸன் இப்ராஹீம், எஸ்.ஏ.ஸீ.எம். பிர்தௌஸி, தீரன் ஆர்.எம். நௌஷாத், மரீனா இல்யாஸ், ஹாஜா அலாவுதீன், எச்.ஐ.எம். ஹுஸைன், அஷ்ரப் சிஹாப்தீன், எம்.எஸ்.எம்.எஸ். நகீப், யாழ். பரீத் ஜாபிர், பௌஸியா யாஸீன், நஸீலா ஆதம், திக்குவல்லையைச் சேர்ந்தவர்களான கமால், ஸப்வான், ஸும்ரி, எம். அஸ்மி சாலி, அபுக்காகம பழீல் ஏ. கபூர், இர்சாத் கமால்தீன், பாலையூற்று அஷ்ரபா நூர்தீன், ஸில்மியா ஹாதி, சபானா ஜுனைதீன் ஆகிய பலரும் வானொலி நாடகங்களை எழுதியுள்ளதாக ஒரு பெரிய பெயர்ப் பட்டிலை முன்வைத்தார். 

முஸ்லிம் நாடகங்களை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் தமிழ் பேசும் ஏனைய சமயத்தவர்களும் அந்நாட்களில் விரும்பிக் கேட்டு வந்துள்ளார்கள். அருமையான கருத்துக்களும் இஸ்லாமிய கலாசார விழுமியங்கள், மரபுகள் சார்ந்த விடயங்களும் இந்த நாடகங்களில் பிரதிபலித்துள்ளன. சமூகக் குறைபாடுகளும் இந்த நாடகங்களினூடாக சுட்டிக் காட்டப்பட்டு, இதற்கான தீர்வுகளும் இந்த நாடகங்கள் மூலமாக முன்வைக்கப்பட்டன. பெண் கல்வி, சீதனம், விதவை மறுமணம், ஆலிம்கள் முஅஸ்ஸின்களின் கண்ணியம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவை, கல்வியின் முக்கியத்துவம், ஸக்காத், ரமழான், ஹஜ் ஆகிய கடமைகளின் சிறப்பு, வாழ்வில் ஹராம் ஹலால் பேணல், பல்கலைக்கழக பகிடிவதை போன்ற சமுதாயச் சீர்திருத்த விடயங்கள் இந்த நாடகங்களினூடாக முன்வைக்கப்பட்டன. இந்த நாடகங்கள்; சமூகத்தில் பல தாக்கங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. சமூக மேம்பாட்டக்கான நாடகங்களின் பங்களிப்புக்கள் மகத்தானவை. இலங்கையில் மட்டுமல்லாது கடல் கடந்த பல நாடுகளிலும் இந்த நாடகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

மௌலவி ஆர்.எம். சைபுதீன் சாஹிப், மௌலவி யூ.எல். தாஸிம் போன்ற மார்க்க அறிஞர்களும் நாடகப் பிரதிகளை எழுதியுள்ளார்கள். மௌலவி ஆர்.எம். சைபுதீன் சாஹிப் எழுதிய பணமா பாசமா என்ற நாடகம், நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளது. இவரது ஆயிரத்தொரு இரவுகள் என்ற தொடர் நாடகம் அந்நாட்களில் சிலாகித்துப் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்களில் நாடகத் துறையில் பல பரீட்சார்த்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தவகையில் உலக அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத் அவர்களின் தனிநபர் நாடகத்தைக் குறிப்பிடலாம். எம். அஸ்வத் கான் எழுதிய பயணம் என்ற நாடகம் ஒரு புகையிரதத்தில் பயணம் செய்யும் போதே நடிக்கப்பட்டு, ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஒலிபரப்பான நாடகம் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். 

நாடகத் தயாரிப்புத் துறையில் ஏ.எம். காமில் மரிக்கார், எம்.எச். குத்தூஸ், குலாம் ரஷீத், எம்.எம். இர்பான், ரஷீத் எம். ஹபீல், எம். அஷ்ரப் கான் ஆகியோருடன் ஏ.எல். ஜபீரும் இணைந்துள்ளார்கள். 

சிலாபத்தைச் சேர்ந்த எம். அஷ்ரப் கான் எழுதிய எது தியாகம் (1958) என்ற தனது முதல் நாடகத்தைத் தொடர்ந்து பல சமூக நாடகங்களையும் எழுதியுள்ளார். அத்துடன் ஆக்ராவின் கண்ணீர், முஹம்மது பின் துக்லத், மாமன்னர் பாபர் போன்ற பல சரித்திர நாடகங்களையும் எம். அஷ்ரப் கான்; எழுதியுள்ளார். இவரது இந்த நாடகங்களை நேயர்கள் இன்றும் மறக்கவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும். பரதேசி என்ற இவரது நாடகம் பல தடவை முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. 

நாடகத் துறையில் பங்களிப்புச் செய்த வானொலி முஸ்லிம் நாடக நடிகர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என்ற வகையில் பலரது பெயர்களைக் குறிப்பிட்டு மிகவும் நீண்ட பெயர்ப் பட்டியலொன்றும் எம்.எஸ். அப்துல் லத்தீப் அவர்களினால் முன்வைக்கப்பட்டது. 

எம் நெஞ்சங்களில் தனியான ஒரு இடம்பிடித்து நிலைத்து நிற்கும் எமது முஸ்லிம் சேவையின் தனித்துவம் நிறைந்த நிகழ்ச்சி பாரம்பரியம் நிகழ்ச்சியாகும் என்பது மிகையான கூற்று அல்ல. முஸ்லிம் சேவையின் சமூகம் தொடர்பான கலை இலக்கிய நிகழ்ச்சிகளின் பாரம்பரியத்தினை சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டும் பாரம்பரியம் நிகழ்ச்சி தங்கு தடைகளில்லாமல் தொடர்ந்தும் ஒலிபரப்பாக வேண்டும் என்று பிரார்த்தித்தவளாக, இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வானொலிக் கலைஞர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்!!!


No comments:

Post a Comment