Wednesday, December 10, 2025

160. 'என்னை மீட்டும் வீணை' கவிதைத் தொகுதி மீதான இரசனைப் பார்வை

'என்னை மீட்டும் வீணை' கவிதைத் தொகுதி மீதான இரசனைப் பார்வை

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


'மக்கொனையூராள்' என்ற புனைப் பெயரில் எழுதி வருகின்ற பர்ஹானா அப்துல்லாவின் 'நிசாந்தம்', 'நான் முகிலாகிறேன்' ஆகிய கவிதைத் தொகுதிகளைத் தொடர்ந்து, 'என்னை மீட்டும் வீணை' என்ற இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுதி குறுகிய கால இடைவெளிக்குள் வெளிவந்து கவிதைப் பிரியர்களை மகிழ்விக்கின்றது. 

'என்னை மீட்டும் வீணை' என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் இவர் அண்மைக் காலமாக எழுதிய 60 கவிதைகள் இடம்பிடித்துள்ளன. அக உணர்வுக் கவிதைகளோடு அன்பு, கருணை, நட்பு, நேசம், பெண்மையின் சுபாவம், பெண் வலிமை, எழுத்தின் முக்கியத்துவம், பிரிவுத் துயரம், போலி அரசியல், வறுமை, இயற்கை எழில், வாசிப்பின் தேவை, வாழ்வியல் தரிசனங்கள், மனித நடத்தைக் கோலங்கள், நோன்பின் மாண்பு, தந்தைப் பாசம், மனித உறவுகள் போன்ற பல கருப்பொருட்களில் அமைந்த கவிதைகள் 64 பக்கங்களில் காணப்படுகின்றன.

கனதியான சொற்களைக் கொண்டு, எளிமையான முறையில் இவர் கோர்க்கும் கவிதைகள் மனதைக் கவர்கின்றன. பர்ஹானா அப்துல்லாஹ் ஏற்கனவே இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்ட கவிஞர் என்பதால் இவர் பற்றிய அறிமுகத்தை வாசகர்கள் ஏற்கனவே அறிந்து வைத்திருப்பர். எனவே இவருடைய கவிதைகளைப் பற்றிய எனது பார்வையை இங்கு நேரடியாகவே பதிவு செய்கின்றேன்.

'பொழுதுகளோடு போராடுதல்' (பக்கம் 06) என்ற கவிதை ஏமாற்றங்களையும் நிராகரிப்புகளையும் தாங்கும் உள்ளத்தின் பலம் பற்றிப் பேசுகிறது. வேதனைகளோடு நகரும் வாழ்க்கையைக் கடக்க பொழுதுகளோடு போராட வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது. விடையில்லா கேள்விகளுக்குக்கூட வழி தேடும் உயிர்ப்பே மனித வாழ்க்கையின் உண்மையான போராட்டம் என்பதை இக்கவிதை நன்கு உணர்த்துகிறது.


எல்லா பொழுதுகளிலும் மலராக இருத்தல் முடியாது 

சில பொழுதுகளில் மரித்தாக வேண்டும் 

போலிப் புன்னகை தரித்தாக வேண்டும் 

சில ஏமாற்றங்களை சகித்தாக வேண்டும்


முட் சொற்களை ஏந்தியாக வேண்டும் 

கற் பொழிவுகளை தாங்கியாக வேண்டும் 

கதவடைப்புகளை வாங்கியாக வேண்டும் 

நிராகரிப்புகளில் நீந்தியாக வேண்டும் 

மௌனத்தின் கரம்பற்றி மொழியாக வேண்டும் 

பெருவனத்திலும் தனித்தாக வேண்டும் 


விடையில்லா கேள்விகளுக்கும் பதிலாக வேண்டும் 

பதில் இல்லா பொழுதொன்றில் வழி காண வேண்டும்  

துணிந்திருக்கவும் வேண்டும் பணிந்திருக்கவும் வேண்டும் 

மொத்தத்தில் வாழாமல் வாழ வேண்டும் 

பொழுதுகளோடு போராடுதல் தானே வாழ்க்கை!


'என் மேகமே' (பக்கம் 32) என்ற கவிதை மேகத்தை ஒரு நெருங்கிய துணையாக எண்ணி, மனத் துயரங்களை அதனோடு பகிரும் ஒரு அழகியல் சார்ந்த கவிதையாகும். கவிஞர் தனது மனத் துயரம், தனிமை, ஆறுதல் ஆகியவற்றை இயற்கையின் கரங்களில் ஒப்படைத்து, மேகத்திடம் தஞ்சமடைவதாக இரசனையோடு இக்கவிதையை அமைத்துள்ளார். பரந்த வானத்திலுள்ள மேகத்தோடு எல்லை இல்லாத நேசத்தைப் பேசும் உணர்வானது கவிதைக்கு நித்தியமான காதல் ஒளியைக் கொடுக்கிறது.


வெண் பஞ்சு மேகங்களே 

என் தஞ்சம் ஆகுங்களே 

நான் கொஞ்சம் தோள் சாயவே 

பொன்மஞ்சம் தாருங்களே


என் நெஞ்சின் வலி தீரவே 

மென் பூ கொஞ்சம் தூவுங்களே 

நான் துஞ்சும் துயர் நீங்கவே 

தேன் கொஞ்சப் பேசுங்களே


வழிகின்ற விழிநீர் எல்லாம் 

மறைந்தோடச் செய் மேகமே 

நீள்கின்ற என் கைகளில் 

இதழ் பதித்துப் போ மேகமே


ஓடாதே நில் மேகமே 

தாளாதே என் தேகமே

உன்னோடு எனை ஏந்தியே 

விண்ணோடு செல் மேகமே


எல்லை இல்லாத நீல்வானிலே 

தொல்லை இல்லாது தினம் நீந்த வா

சொல்லில் முடியாத நம் நேசத்தை 

நில்லாமல் நிதம் பேச வா!


'அன்பே இன்ப ஊற்று' (பக்கம் 43)  என்ற கவிதையில் அன்பு என்பது ஒரு சொல் அல்ல. அது ஒரு வாழ்வியல் என்கிறார் கவிஞர். அன்பு மனிதர்களை ஒன்றாக்கும் மென்மையான இணைப்பு. அன்பு உலர்ந்து போன மனங்களை ஈரலிக்கச் செய்கின்ற ஒரு மழை. அன்பு ஒரு பரிசுப் பொருள். இங்கு பெறுபவர் மட்டுமல்லாமல் வழங்குபவரும் மகிழ்ச்சியடைகிறார். சுமைகளை நீக்கும் சுகமாக அன்பு காணப்படுகிறது. அன்பு நதியில் நீச்சலடிக்கும்போது மனிதன் புதிதாகப் பிறக்க முடியும். இக்கவிதையில் அன்பானது பயணம், மழை, கீதம், கவிதை, பரிசு, விருந்து, மொழி, காற்று, சுவாசம், நதி, சிறகு ஆகிய பல உருவங்களில் உருவெடுத்து, மனித வாழ்க்கையை எப்படி செழிப்பாக்குகிறது என்பதை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளார்.


அன்பின் பாதை தேடு அதில் பயணம் செய்

அன்பை வலையாய் வீசு உறவுகளைப் பிடி 

அன்பை மழையாய்ப் பொழி இதயம் நனை 

அன்பு கீதம் பாடு பிறரை இரசிக்க வை

அன்புக் கவிதை எழுது பரிசளித்து விடு 

அன்புத் தேநீர் தயாரி பருகக் கொடு

அன்பை ஆகாரமாக்கு விருந்து வை


அன்பை மொழியாக்கு பேசிச் சுவை

அன்பைக் காற்றாக்கு சுவாசம் கொடு 

அன்பை நதியாக்கு மூழ்கி எழு

அன்பை கைக்குள் திணி பற்றிக்கொள் 

அன்புச் சிறகு விரி அகிலத்தைச் சுற்று

அன்பை விதை அன்பளித்து விடு

அன்பால் ஆள் அன்பால் வாழ் - வாழ வை!


'முதுமை' (பக்கம் 49) என்ற கவிதை முதுமையின் மகிமையைப் பேசுகின்றது. இன்றைய காலங்களில் இளவயது மரணங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முதுமையை அடைவது பலருக்குக் கிடைக்காத ஒரு வரமாக அமைந்துள்ளது. இப்போதைய சூழ்நிலைகளில் காலத்தை வென்று இந்நிலையை அடைவது பெரிய சாதனையாகவே காணப்படுகிறது. முதுமையின் நரைத்த முடி வாழ்வின் அனுபவங்களைச் சொல்கிறது. உடல் பலவீனமடைந்தாலும், முதியோரின் உள்ளத்தில் இனிமையான நினைவுகள், வாழ்க்கைச் சுவைகள், அனுபவக் கதைகள் நிரம்பிக் காணப்படும்.


முதுமை கடந்த கால வாழ்வுக்கான 

நற்சான்றுப் பத்திரம் 

முதுமை சாபமல்ல வரம் 

மூப்பெய்து முன்னரே முடிந்து போகின்றது 

பலரது வாழ்க்கை 

கூன் விழுந்த தேகத்திலும் 

தேன் ஒழுகும் கதைகள் காணலாம் 

நரைத்த முடியெல்லாம் 

உரைக்கும் அனுபவப் பாடம் 


இளமை நதி சங்கமிக்கும் கடல் முதுமை 

அங்கே கொஞ்சம் நீந்திப் பார்த்தால் 

அனுபவ முத்துக்களை அள்ளி வரலாம்

வாழ்வியலின் வலியறியவும் 

தோல்விகளின் வலியறியவும்

புதினங்களைப் புரிந்து கொள்ளவும் 

கவனமாய் வாழ்வை வெல்லவும் 

முதுமையின் கையில் இருக்கும் 

புதுமையின் முகவரி 

தேடிப்போய் கண்டுபிடி 

உன் வெற்றிக்கான முதல் வரி!


'என்னை மீட்டும் வீணை' சமூகப் பெறுமானம் மிக்க கவிதைகளின் தொகுதியாகும். சோர்ந்து போய் இருக்கின்ற ஆன்மாக்களைத் தடவி, ஆறுதல் படுத்தக்கூடிய பல கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளமை சிறப்பு. இத்தகைய அழகிய, அர்த்தம் மிக்க கவிதைகளை எழுதி வருகின்ற இவருடைய எழுத்துக்கள் உயிரோட்டமிக்கதாக அமைந்திருக்கின்றன. அவை நிச்சயமாக சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். 'என்னை மீட்டும் வீணையின் நாதம் உங்களில் எழுப்பட்டும் இனிமையின் கீதம்' என்ற நூலாசிரியரின் வரிகளை இங்கு சுட்டிக்காட்டி, சொற்களை இலாவகமாகப் பயன்படுத்தி கவிதைகளை யாத்திருக்கும் பர்ஹானா அப்துல்லாஹ் இன்னும் பல கவிதை நூல்களை வெளியிட்டு இலக்கிய வாசகரை மகிழ்விக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!


நூல் - என்னை மீட்டும் வீணை

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - பர்ஹானா அப்துல்லாஹ்

விலை - 400 ரூபாய்




நூல் கண்ணோட்டம்:-

வெலிகம ரிம்ஸா முஹம்மத்












Saturday, December 6, 2025

159. ருஷ்தா லுக்மானின் மௌன ஓசை கவிதை தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

 ருஷ்தா லுக்மானின்

மௌன ஓசை கவிதை தொகுதி மீதான இரசனைக் குறிப்பு


வெலிகம ரிம்ஸா முஹம்மத்


இலக்கியத் துறையில் அதிக முனைப்பு காட்டி தமது கவிதைகளை ஊடகங்கள் வாயிலாக களப்படுத்தி வருகின்ற இளம் தலைமுறைப் படைப்பாளிகள் அண்மைக் காலமாக கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு வருவதில் மிகவும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். அந்தவகையில் 'மௌன ஓசை' என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டு ருஷ்தா லுக்மானும் இலக்கியத் துறையில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்கிறார். மௌன ஓசை என்ற கவிதைத் தொகுதி சிறியதும் பெரியதுமான 74 கவிதைகள் உள்ளடக்கி 104 பக்கங்களில் வெளிவந்துள்ளது.


ருஷ்தா லுக்மானின் பிறப்பிடம் கிழக்கிலங்கையின் காத்தான்குடியாகும். இந்த ஊரின் மண் வாசனையே இவரது படைப்புகளில் அதிலும் விசேடமாக கவிதைகளில் வெளிப்பட்டு நிற்கின்றது. 'எழுதும் ஆற்றல் உள்ளவர்களுக்கு உணர்வு பெருக்கெடுத்தோடும் போது அவ்வெழுத்துக்கள் கவிதைகளாக பிரவாகம் எடுப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் பிரவாகமாகவே ருஷ்தா லுக்மானின் கவிதைகளைப் பார்க்கின்றேன். தன்னோடு வாழும் தந்தை பற்றியும், அவரை தந்தைக்கும் மேலாய் உற்ற நண்பராய் பார்க்கும் உணர்வினையும் தனது மன எழுச்சிக் கவிதையாக பதிவு செய்துள்ளார். தாயைப் பாடியுள்ள அவர் தாய் மண் என்று கிழக்கையும் பாடியுள்ளார்' என்று ருஷ்தா லுக்மானின் கவிதைகள் பற்றி முன்னாள் அரசாங்க தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்கள் தனது அணிந்துரையில் எழுதியுள்ளார். இந்த நூலின் பின்னட்டைக் குறிப்பை இவருடைய சகோதரியான லுதுபியா லுக்மான் எழுதியுள்ளார்.

'மௌன ஓசை என்ற இந்த கவிதைத் தொகுதியில் சிந்தனைக்கும் உணர்வுக்கும் இடையே பாலமாகப் பதிந்திருக்கும் பல்வேறு அனுபவங்கள், மௌனித்திருந்த உணர்வுகள் என்பன பேசாமல் பேசுகின்றன' என்று ருஷ்தா லுக்மான் தனது கவிதைகள் குறித்து என்னுரையில் பதிவு செய்துள்ளார். 

தனது பாடசாலைக் காலத்திலேயே தமிழ் தினப் போட்டிகளில் கலந்து கொண்டு வலய மட்டம், மாகாண மட்டம், மற்றும் மாவட்ட மட்டங்களில் கவிதைப் போட்டிகளில் முதல் இடங்களைப் பெற்று கவிதைத் துறையில் தனக்கானதொரு தடத்தைப் பதிவு செய்துள்ளார் ருஷ்தா லுக்மான். 

இந்த நூல் ஆண்கள் உணராத பெண்களின் வலிகளையும், பெண்கள் உணராத ஆண்களின் சுமைகளையும், உறவுகளின் முகங்களையும், சமூகம் கவனிக்க மறந்த கடமைகளையும், தட்டிக் கேட்கப்படாத அநியாயங்களையும், இயற்கைக்கும் தனக்குமான பிரிக்க முடியாத காதலையும், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், முயற்சி, வீழ்ச்சி என பன்முகங்களையும் கண் முன்னே கொண்டு வந்து கவிதை வரிகளின் வழியாக வாசகர்களுக்குள் புதுப் பரிமாணத்தைத் தோற்றுவிக்கும் என்ற நூலாசிரியரின் கூற்றுக்கு இணங்க நாமும் இவருடைய கவிதைகளை எதிர்பார்க்கலாம். வாசகர்களின் இரசனைக்காக நூலாசிரியரின் சில கவிதைகளை இங்கே நாம் எடுத்து நோக்குவோம்.

'அவள் இருபதின் பின்' (பக்கம் 16) என்ற தலைப்பில் அமைந்த கவிதை பெண்களின் வாழ்க்கையில் கல்வியறிவு, தன்னம்பிக்கை, கனவு, எதிர்பார்ப்பு கொண்ட இளமைப் பருவத்திலிருந்து குடும்பப் பொறுப்புகளுக்குள் முற்றாக மாறிவிடுகின்ற நிலையை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இருபதுகளின் பின்னரான அவளின் உற்சாகம் சாந்தமாக மாறினாலும், அதில் ஒரு ஆழ்ந்த வலியும் அமைதியும் கலந்துள்ளது என்று குறிப்பிட்டு இப்பெண்களின் மௌனப் போராட்டத்தையும் அதனைத் தாங்கும் சக்தியையும் இக்கவிதை உணர்வுபூர்வமாக பிரதிபலிக்கிறது. கவிதையின் சில வரிகள் இதோ:-


பேனா கறை படிந்த அவள் கரங்கள் 

அடுப்பங்கறைக்கு சொந்தமாயிற்று!

வகுப்பறையில் போட்ட கூச்சலும் சத்தமும் 

அடுப்பறையில் சாந்தமாயிற்று! 


மைதானங்களில் ஓடி வெற்றி நடை போட்ட அவள் கால்கள் 

விளக்குமாறோடு கொல்லைப் புறத்தில் கோலமிடுகிறது! 

எதற்கும் துணிந்து எதிர்த்துப் பேசிய நாவும்

எதையும் தாங்கும் இதயம் கொண்டு சாந்தமாயிற்று!


'நவீன தாய்' (பக்கம் 20) என்ற தலைப்பில் அமைந்த கவிதை  இக்காலத்தில் பெரும்பாலானோருக்குள் இருக்கும் செல்போன் மோகத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது. வீட்டு வேலைகளையும் கணவன் மற்றும் குழந்தைகளின் வேலைகளையும் பூர்த்தி செய்யாமல் சீரியல்களிலும் பேஸ்புக்கிலும் காலம் களிக்கும் பெண்கள் ஏராளம். நவீன தொழில்நுட்பமானது தாய்மையின் நேசத் தொடுதலை மங்கச் செய்ததையும், தாய்க்கும் சேய்க்குமிடையிலான இடைவெளி ஏற்பட்டுள்ளமையையும் ஆணித்தரமாக சித்தரித்துள்ள இக் கவிதையின் சில வரிகள் இதோ:-


சொல் பேச்சு கேட்காது செல் பேச்சு பழகிட்டு 

ஓயாத கண்ணிற்கு ஒன்றுமே விளங்காது 

வெளி விளையாட்டு தெரியாது வீட்டு வேலை ஓடாது 

கைபேசி கதை பேச அதுவே உலகமாயிற்று!


செல்போன் சிறைக்குள் சிக்கித் தவிக்கின்றனர் 

திசை மாறிய சிட்டுக்கள்!

தன் வேலை நிறைவேற தன்நிலை மறந்து 

செல்போனைக் கொடுத்துவிட்டு செல்லமாய் தடவிவிட்டு 

பிள்ளை தடம் புரள தலைப்பிடும் நீ எல்லாம் 

தாயாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டாய் 

பத்து மாதம் சுமப்பவள் தாய் அல்ல - மாறாக 

பக்குவமாய் சுமப்பவளே தாய்!


'அவன் இருந்தும் நான் விதவை' (பக்கம் 37) என்ற தலைப்பில் அமைந்த கவிதையை வாசிக்கும் போதே ஒரு வகையான மனவேதனை ஏற்படுகின்றது. கணவனின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கும் ஒரு மனைவியின் ஏக்கமும் துன்பமும் தனிமையின் தவிப்பாக இக்கவிதையில் வெளிப்படுகிறது. ஒரு பெண்ணுக்கு உணவும் உடையும் ஆபரணமும் கொடுத்துவிட்டால் அவள் இன்பமாக இருப்பதாய் பலரும் எண்ணுகிறார்கள். அவளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களை இயந்திரங்களாக அணுகுபவர்கள் பலர். அத்தகைய பெண்கள் வெளியுலகுக்கு தாம் மகிழ்ச்சியாய் இருப்பதாகக் காட்டிகொண்டு உள்ளுக்குள் குமுறுவார்கள். அத்தகைய பெண்ணின் மனப்பாரத்தைப் பகிரும் இக்கவிதையின் வரிகள் இதோ:-


இரவானால் தூங்குவதிலும் 

விடிந்ததும் வேலைக்கு கிளம்புவதிலும் 

உன் காலம் ஓடுகிறது! 

இதற்கிடையில் அர்த்தமே இல்லாமல் 

உன் வாழ்வில் நான் எதற்கு?


நீயோ வேலை என்று சொல்லி 

என்னை வாடவிட்டு வெளிநாடு பறந்து விட்டாய் 

நானோ உன்னை மட்டுமே எண்ணியெண்ணி 

ஒவ்வொரு நிமிடத்திலும் 

நிகழ்காலத்திற்காய் செத்துப் பிழைக்கிறேன்!


நான் உன் மனைவி.. 

உன் உயிரின் பாதி..

உன் விலா எலும்பின் மீதி..

உன் இரவின் போர்வை!


நான் கேட்பதெல்லாம் உன் வாழ்நாளின் 

ஒரு சில நிமிடங்கள் மட்டுமே

அந்த நிமிடங்களிலும்கூட உன் மடியில் 

என் தலை சாய்த்து உன் விரல்கள் என் தலை கோத

என் கரங்கள் உன்னை இறுகப்பிடித்து 

கதை பேச வேண்டும்!


'மௌன ஓசை' கவிதைத் தொகுதி நூலாசிரியரின் கன்னி முயற்சியாகும். இதில் அதிகமாக அகம்சார் கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன. தொடர்ந்து வெளியிடும் கவிதை நூல்களில் சமூகம்சார் கவிதைகள், காத்திரமான கருப்பொருட்களை உள்ளடக்கி வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்போடு நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.


நூல் - மௌன ஓசை

நூல் வகை - கவிதை

நூலாசிரியர் - ருஷ்தா லுக்மான்

தொலைபேசி - 0778389567

வெளியீடு - மூதூர் ஜே.எம்.ஐ. வெளியீட்டகம்

விலை - 600 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்