Friday, September 30, 2011

13. இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.

"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

இப்படிக்கு அன்புள்ள அம்மாவுக்கு என்கிற கவிநடையில் அமைந்த திருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் இலக்கியப் படைப்பின் நாயகியும் ஒரு வயதான அம்மா. இந்த மூதாட்டி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து டென்டார்க்கில் வாழும் நாயகி. இம் மூதாட்டியின் மிகப்பெரும் அவலம் தனது மகனை ஈழத்தில் இழந்ததுதான். அவரின் இறப்புக் காலம் நெருங்க நெருங்க அந்தப் பிள்ளையின் நினைவுகள் இம் மூதாட்டியை அல்லல்படுத்துகின்றது. அவர் அதனை தன் மனக்குமுறல்ளை கொட்டும் ஒரு வடிகாலாக, துயரங்களைக் கடிதங்களாக எழுதி தன்னை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு ஓட்டமாகத்தான் இந்த இலக்கிய வடிவத்தை அச்சில் கொண்டுவந்துள்ளார்.

மூதாட்டி தன் வாழ்வை கடிதம் மூலம் மகனுடன் பகிர்ந்துகொள்வதினூடாக டென்மார்க் தேசத்து வசதியான வாழ்வும், மருத்துவ வசதிகளும், மனித உறவுகளின் தொடர்புகளும் பங்களிப்புக்களும் இந்த இலக்கியத்தில் பதிவாகின்றன. திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் தாங்கள் கண்டு கொண்ட வாழ்க்கையை கூடிப்பழகிய மனிதர்களின் உறவுகளை இங்கு நன்கு பதிவுசெய்கிறார்" என்று கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் குறிப்பிடுகின்றார்.

திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் நுழைவாயிலில் என்ற தனதுரையில் "யுத்தத்திற்கு பிள்ளைகளைக் காவு கொடுத்த ஆயிரம் ஆயிரம் என் அம்மாக்கள். இவர்கள் வரிசையில் இந்த யசோ அம்மா - இப்படிக்கு அன்புள்ள அம்மாவின் கதை நாயகி. ... புத்திர சோகம்! இது நம் தேசத்தின் சாபம்!! இந்த வலி - என் அப்பா அம்மா பட்ட வலி. என் மாமா மாமி பட்ட வலி. இது என்னையும் துரத்திய போது என்னுள் எழுந்ததுதான் இப்படிக்கு அன்புள்ள அம்மா. இது டென்னிஷ் மொழியில் கருவானது" என்கிறார்.

1. முதியோர் இல்லம் 2. ஹரி என் கனவில் வந்தான் 3. அந்த சிவத்த ரங்குப்பெட்டி 4. எனது பேரப்பிள்ளை 5. அனைத்தும் இழந்தோம் 6. அகதி முகாமில் எங்கள் வாழ்வு 7. என் உதய சூரியனே 8. பாசத்தின் போராட்டம் 9. எண்பது வயதில் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்தேன் 10. போய் வருகிறேன் மகனே ஆகிய தலைப்புக்களில் இப்படிக்கு அன்புள்ள அம்மா என்கின்ற காவியக் கவிதை நூல் விரிந்து செல்வதை அவதானிக்கலாம்.

டென்மார்க்கில் தனியாக காலம் கழிக்கும் அந்த மூதாட்டிக்கு இயற்கையின் அன்றாட நிகழ்வுகள் கூட தன் நிலையை உணர்த்துவதாய் கற்பனைகள் எழுந்து வதைக்கின்றன. வழமையாக நிகழும் சூரிய அஸ்தமனத்தைக்கூட தனது மகனின் பிரிவுத் துயருடன் ஒப்பிட்டு கீழுள்ளவாறு வருந்துகிறார் அவர்.

கடைசிக் காலம் எனக்கு வந்திட்டுதா? கண் கலங்குது - என் கண்மணியைக் காணாது போகப் போறன் எண்டு... அந்த சிவத்த ரோஜாக்கள் மீண்டும் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.. அந்திமச் சூரியன் எனக்கு கைகாட்டி விட்டுப் போவது போல இருக்குது.. அவனும் தன் தாயிடம் தான் போகின்றானா? என் மகனும் இந்த அந்திமத் தாயிடம் வருவானா? (பக்கம் 20)


தனயனின் அருகாமை இல்லாத இரவுகள் அவளுக்கு வேதனையை அள்ளித் தெளிக்கின்றன. ஆனாலும் அவள் அமைதியைத் தேட முற்படுகின்றாள். ஆழ்மனதில் கணவனின் நினைவுகள் ஊசலாடுகின்றன. மூதாட்டிக்கு தற்போது ஊன்றுகோலைத் தவிர துணைக்கென யாருமில்லை. ஊன்றுகோலையே தனது உற்ற நண்பனாக கருதும் அவள், தன்னை ஆறுதல் படுத்துவாக கீழுள்ள வரிகளில் தன்னையே ஆசுவாசப்படுத்தும் பாங்கை அவதானிக்க முடிகின்றது.

அழகிய அந்த யன்னலுக்கு வெளியே தெரியும் தெளிந்த வானமும்... கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் என் வீட்டுக்காரரை எனக்கு காட்டுகின்றன.. என் ஆன்மா அரவணைக்கப்படுகின்றது. ஷஷநிம்மதியாக தூங்கு யசோதா||
அமைதியாக சொல்லுகின்றார் - என் கண்கள் அவருள் ஐக்கியமாகின்றன! நானும் தூங்கப் போறன். நாளை தொடர்கின்றேன். (பக்கம் 24)

மகனே! அதிகாலை ஐந்து மணி அவசரப்பட்டு விழித்த கண்கள் மூட மறுக்கின்றன.. இரண்டு கால்களிலும் வலி இடது முழங்காலில் இன்னும் வலி.. கைத்தடியை எடுத்துக்கொள்கிறேன். என் புதிய நண்பன் அவன்! அவனின் துணை இனி எனக்கு எப்பவுமே வேண்டும். கைத்தடி இல்லாமல் இனி என்னால் நடக்க முடியாது (பக்கம் 37)

மகனை யுத்தத்தில் தொலைத்தது போல் அல்லாமல் அவனது ரங்குப் பெட்டியை ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் அவள் தன்னுடனேயே கொண்டு வந்து விடுகின்றாள். மகனைத்தான் காணவில்லை. சிறுவயதில் அவனது பிஞ்சுக் கரங்கள் தொட்டு விளையாடிய அந்த விளையாட்டுப் பொருட்களாவது அந்தக் கிழவியை ஆறுதல்படுத்துமா? கீழுள்ள வரிகளின் அந்த ஏக்கம் துளிர்ப்பதைக் காணலாம்.

ஞாபகமிருக்கா ஹரி உன் விளையாட்டுப் பெட்டியை? சிவப்பு நிற ரங்குப் பெட்டி உன் விளையாட்டுப் பொருள்கள் அத்தனையும் அதனுள்ளே! அவற்றுடனேயே விளையாடிக்கொண்டிருப்பாய்.. அதனுடனேயே அயர்ந்து தூங்கிவிடுவாய்.. அம்மா என்னுடனே அதை எடுத்து வந்துவிட்டேன் இந்த பனிபடரும் தேசத்திற்கு! ஒவ்வொரு இடப்பெயர்விலும் அதனை மட்டும் என் கையில் எடுத்துவிடுவேன் உன்னைத் தொலையவிட்ட மாதிரி அல்லாது! (பக்கம் 38)

என் நாடிகளிலும் நாளத்திலும் இரத்தம் ஓடும் வரை.. இதயத்தின் சுவர்கள் சந்தம் மாறாமல் அடிக்கும் வரை..
சுவாசப்பைகள் இரண்டும் விரிந்து மூடும் வரை.. காதுகள் உன் குரலைக் கேட்கும் வரை.. கண்கள் உன்னைக் காணும் வரை.. உன் ரங்குப் பெட்டியுடன் இந்தத் தாய் காத்திருப்பாள்! (பக்கம் 44)

போரின் வடுக்களைப் பற்றி அந்த மூதாட்டி சொல்லும் கதைகள் வாசக உள்ளங்களையும் கவலையில் மூழ்கடித்து விடுவதை மறுக்க முடியாது. யதார்த்தமாக கதையின் பாங்கு நகர்த்தப்பட்டிருப்பதினூடாக அந்த சமூகத்தின் அவலம் எமக்கு நன்கு புலப்படுகின்றது.

ஆகாயத்தில் இருந்து தரையை நோக்கி வான வேடிக்கை தொடங்கியது.. இல்லை உயிர்வேட்டை தொடங்கியது!
எங்கள் கிராமம் உழப்பட்டது! எங்கள் வீடு எரிந்துவிட்டது! மரண பயத்தை கையால் தொட்டுப் பார்த்த முதல் கொடிய இரவு அது! நடுங்கின கைகள்.. உதறிய உடம்பு.. தடுமாறின சொற்கள்.. வேறு வழியில்லை இடம்பெயர்ந்தோம்! இரண்டாம் தடவை என் தொப்புள் கொடி அறுந்தது.. குண்டுவீச்சு தந்த இரத்த வெள்ள மரணத்தில் நெளிந்தோம். விடியலில்லாத இரவை சந்தித்த வாழ்வின் முதல் நாள் அது (பக்கம் 63)

தனது அந்திம காலத்தின் தான் ஓடியாடி விளையாடிய ஊரை ஒருமுறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யசோதா கிழவிக்கு ஏற்படுகின்றது. எனினும் அது சாத்தியப்படக்கூடிய விடயமில்லை. ஆதலால் அவளது உள்ளம் இவ்வாறு மௌனமாக கதறி அழுகின்றது.

ஹரி! எனக்கு பறக்கும் கம்பளம் ஒன்று அனுப்பி வைப்பாயா? சிவத்த பறக்கும் கம்பளம்! அதில் பறந்து என் தாயகத்திற்குப் போக வேண்டும். கிளித்தட்டும் எட்டுக் கோடும் விளையாடிய மண்ணில் என் சிறு கை அளாவ வேண்டும். கைகளை விரித்தபடி மழை பெய்யும் பொழுது.. வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். வெள்ளம் மூடிய வயல் காணிகளில் நடந்து நடந்து போக வேண்டும். நெல்லின் கதிர்கள் என் கால்களுடன் கதை பேச வேண்டும். பள்ளிக்குச் செல்லும் பின் வளவு ஒழுங்கையூடே கைகளினால் கார் விட்டபடி ஓட வேண்டும். நான் சின்னப் பெண்ணாக வேண்டும். என் தாய் மண்ணில் விளையாட வேண்டும். பாழாய்ப் போன போர் எல்லாத்தையுமே பந்தாடிவிட்டது. பஞ்சாக்கிவிட்டது. (பக்கம் 90)

இன்று எல்லோரையும் தொற்றிக்கொண்டு விட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக்கிலும் தனது மகனைத் தேடியதாய் சொல்லியிருக்கிறார் அந்த மூதாட்டி. என்றாவது மகன் அதனைக் காணக்கூடும். கண்டால் அவளைத்தேடி வரக்கூடும் என்ற அந்த தாயின் எதிர்பார்ப்பு மனதை கனக்கச் செய்கின்றது.

உனக்குத் தெரியுமா? ஃபேஸ் புக்கில் உனக்கொரு பக்கம் ஒதுக்கி உன்னைத் தேடினேன். ஒரு நாள் நீ அதைக் காண்பாய். என்னிடம் வருவாய். இது கதையல்ல என் கண்ணா.. இது நிஜம்! (பக்கம் 97)

கதையின் இறுதியில் கலாநிதி ஜீவகுமாரன் வாசகர் மனதை அப்படியே கவலையால் துடிக்க வைக்கின்றார். காரணம் உலகத்தில் பரவி வரும் புற்றுநோய் மூதாட்டிக்கும் ஏற்பட்டுவிட்டது என்று மாத்திரம் கூறாமல் அது நோயாளிகளின் புறத்தோற்றத்தை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது. அந்த மாற்றத்தை யசோதாக் கிழவி எந்தப் பாங்கில் வெளிப்படுத்துகிறாள் என்பதை வாசிக்கும் போது கதாசிரியர் வெற்றி பெறுகின்றார் என்றே கூற வேண்டும். அந்தக் கொடுமையை விபரித்து இருக்கும் விதம் இப்படி வருகிறது.

ஹரி! நான் சொல்வதைக் கேட்டு நீ கலங்காதே. வைத்தியசாலையிடம் இருந்து இறுதி முடிவு வந்தது. உன் அம்மாவுக்கு புற்று நோயாம். மரணத்தின் வாசலுக்கு மெது மெதுவாய் அழைத்துச் செல்லும் புற்று நோயாம்!! (பக்கம் 140)

உனக்குத் தெரியுமா ஹரி! இங்கு ஒரு ஒற்றுமை. இந்த வார்டில் ஒருவருக்கும் தலையில் முடியில்லை. கண்ணில் இமையில்லை. கான்சர் பேசண்ட் சங்கத்தின் முத்திரை இது. ஊதாக் கதிரின் வெப்பத்தில் இந்த ஊளைச் சதையில் தொங்கி நிற்கும் அத்தனை மயிர்களும் கொட்டிவிடும். நீ அம்மாவைப் பார்த்திருந்தால் பயந்திருப்பாய். இங்குள்ள அனைவருக்கும் இருட்டும் ஒன்றே. வேதனையும் ஒன்றே!! வலிகளும் ஒன்றே!!! (பக்கம் 145)

யசோதாவின் இறுதிக் காலங்கள் ஹெஸ்பிக் என்ற ஆசிரமத்திலேயே கழிகிறது. அன்னையர் தினமொன்றில் அவளது மற்ற பிள்ளைகள் ரோஜாக்களை அன்பளிப்பாக வழங்குகின்றார்கள். ஆனால் அந்த ரோஜாக்களிலும் கிழவி தனது இறுதி நாட்களையே காணுகிறாள். ஹரியின் குரலையாவது கேட்காமல் தனது இதயம் செயலிலழந்து விடக்கூடாது என கடவுளிடம் மன்றாடுகிறாள்.

ஆனாலும் என்ன ஹரியின் குரலையும் கேட்காமல், அவனையும் பார்க்காமல் பிரிவுத்துயரிலே கழிந்து வந்த அவளின் வாழ்க்கைப் பயணம் காலனின் கைகளுக்குள் அமிழ்த்தப்படுகின்றது. ஆம் யசோதா இறந்துவிடுகிறாள்! புத்தகத்தை வாசிக்கும் தொடக்கத்திலிருந்து கிழவி மகனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் புத்தகத்தை படிக்கும் எங்களுக்கும் தொற்றிவிடுகிறது. எனினும் ஹரியைக் காணாமலேயே கிழவி இறந்த பிறகு எங்கள் மனசும் விம்மி அடங்குகிறது.

திரு. ஜீவகுமாரன், திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் ஆகிய இலக்கிய தம்பதியரின் இலக்கிய முயற்சி இன்னும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்
தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com

Saturday, August 20, 2011

12. நீலாவணன் காவியங்கள் தொகுதி

நீலாவணன் காவியங்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

கவிஞர் நீலாவணன் 1931 இல் பிறந்தவர். பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் 1952 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். அன்னார் இயற்கை எய்தும் வரை ஒரு கவிஞராகவே வாழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பு விரவிக் காணப்பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பெரிய நீலாவணையிற் பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத்துரை ஆகிய இவர் ஊரின் மீதுகொண்ட பற்றுக் காரணமாகவே நீலாவணன் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்தார்.

நீலாவணன் காவியங்கள் என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தினூடாக 112 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவணனின் மூன்று காவியங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய காவியங்களே அவையாகும். நீலாவணனை நிலவுக்கு ஈந்த அவர் தாயார் தங்கம்மா தாளடிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந் நூலுக்கான பதிப்புரையை கவிஞர் நீலாவணனின் மகனான திரு. எஸ். எழில்வேந்தன் வழங்கியுள்ளார். மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில் நெல்லு மூடைகளை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்றது. அண்ணன் நிலாவணனுக்கு என்ற தலைப்பில் திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் கவிஞர் நீலாவணன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'நம் காவிய மரபுகள் எப்படி இருந்தாலும் அவைகளை அப்படியே தூக்கி வைத்துவிட்டு நவீன வாழ்வின் கதையை யதார்த்தமாகவோ குறியீடாகவோ செய்யுளில் வடித்துக் காட்டிய மூவர்களில் நீயும் ஒருவன். மூத்தவர் மஹாகவி அடுத்தது நீயும் முருகையனும். உன் வழியும் ஒருவிதமான கதை கூறும் காவியப் பொலிவுடைய நெடும்பாடல்தான். உங்கள் காவியங்களைக் கதைப் பாடல்கள் என்றும் சொல்லலாம். மரபுக் காவியங்களில் உள்ளது போலவே நவீன காவியங்களிலும் கதை பிரதான அம்சம். கதையின் சரடு இல்லாமல் காவியப் பொருள் விரியாது. உனது காவியங்களில் மூத்தது பட்டமரம். 1956 வாக்கில் எழுதியிருப்பாய். அடுத்தது வடமீன். பட்டமரத்திலிருந்து வடமீன் பெற்றுள்ள பாய்ச்சலுக்குக் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். வேளாண்மை அறுபதுகளின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டு அடுத்த பத்து ஆண்டுகளின் பருவங்களில் வளர்ந்திருக்கும்'.

பட்டமரம் காவியம் 39 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. பண்ணையாரிடம் பணிபுரியும் பரந்தாமன் பண்ணையாரின் மகளான பத்மாவைக் காதலிக்கிறான்;, அதனை அனுமதிக்காத பண்ணையார் பரந்தாமனைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் புதைத்துவிடுகின்றார். பண்ணையாரின் மகளும், பரந்தாமனின் காதலியுமான பத்மா கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இவற்றைக் கண்ட பட்டமரம் ஒன்று கதை சொல்வதாகவே இந்த பட்டமரக் காவியம் அமைந்திருக்கிறது. இரசனைக்காக ஒரு சில வெண்பாவை இங்கு நோக்கலாம். (பக்கம் 06)

"பரந்தாம னுங்களது பாட்டைப் படித்தா(ல்)
இரங்காதாருள்ள மிரங்கும் - பறந்தோடிச்
சென்று தவம் நீங்கள் செயவேண்டா மிங்கேயே
என்று மிருப்போ மிணைந்து"

பத்மா வுரைத்தாள் பரந்தாமன் கேட்டதனைப்
"பத்மா விதென்ன பரிகாசம் - பித்திலையே!
ஏழைக் கணக்கனுக்கு ஈவா ரெவருன்னை
நாளை யெனக்கு நமன்!"

"ஏழை பணக்கார னில்லையன்பா! காதலுக்கு
கோழைபோன் றெல்லாங் கூறாதீர் - ஏழைதான்
எட்டி! மரமதனை ஏற்றே அரசொன்று
ஓட்டி வளர்த்திருப்ப தோர்!

அடுத்தது வடமீன் காவியம். இக்காவியம் 47 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. தனது ஊரிலிருந்து கொழும்புக்கு வந்து குடியேறிய தம்பதிகள் பற்றிய கதைதான் வடமீன் காவியம். கணவன் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளைஞனோடு தொடர்புபடுத்தி தன் மனைவியை சந்தேகிப்பதும், பின்னர் எப்படியோ பிரச்சினை தீர்வதுமாக இக்காவியம் அமைந்துள்ளது. மாதாந்தம் சம்பளம் பெறுவோரின் திண்டாட்டங்கள், சிக்கல்கள், போராட்டங்கள் இக்கதையினூடு நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். (பக்கம் 14)

'பட்டிக்காட்டாளே, ஈது
பாராளு மன்றம் என்னுங்
கட்டிடம் கோட்டைப் பார்த்துக்
கடவையில் நடவும்; நில்! இம்
எட்டிவை காலை: 'காலான்'
இடறுதோ? கடவுளே... சீ!
கட்டதை இறுக்கி; 'கோல்பேஸ்'
கடற்கரை இதுதான் கண்ணே!

இறுதியாக வேளாண்மைக் காவியம். இது கவிஞர் நீலாவணனின் கடைசிக் காவியமாகும். இக் காவியத்தின் படலங்களுக்கு கவிஞர் மிகப்பொருத்தமாக குடலை, கதிர்ப்பருவம் எனத் தலைப்பிட்டுள்ளார். குடலைப் பருவமானது பல்வேறு தலைப்புக்களில் 148 விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது. இது போலவே கதிர்ப் பருவமும் பல்வேறு தலைப்புக்களில் 125 விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது.

வேளாண்மைக் காவியத்தில் உதாரணத்திற்காக சிலதைப் பார்ப்போம்.

ஆரங்கே? பொன்னம்மா உன்
அடுப்படி அலுவல் ஆச்சா?
நேரமும் கடந்து போச்சே!
நீ என்ன செய்கின்றாய் போய்ச்
சோறெடு, சிவசிவா... ஏய்
சுரைக் காயை என்ன செய்தாய்?
நீறினை நெற்றியிட்டு
நெஞ்சினை வயலில் விட்டுச்
சோறொடும் மீனைப்பிட்டுச்
சுவைக்கின்றார் கந்தப்போடி

சோக்கான கறிகா! தோலிச்
சுண்டலில்வை: முன் னால் நான்
கேட்காமல் அள்ளி வைப்பாய்,
கிழவனாய்ப் போனேன் பாரு!
காக்கையேன் பகல் முழுக்கக்
கறுபுறுக்கிறதோ? சேதி
கேட்கவோ, வீட்டுக் காரும்
கிளை வழி வருகின் றாரோ?...

ஆனாலும் இது ஒரு முற்றுப்பெறாத காவியமாக எழுதப்பட்டிருப்பதாகவே கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வாறாயினும் இதனை படித்து பயன்பெற வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த அற்புதமான காவியத்தை நீங்களும் படித்து பயன்பெற உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்!!!

நூல் - நீலாவணன் காவியங்கள்
நூலாசிரியர் - நீலாவணன்
வெளியீட்டாளர் - எஸ். எழில்வேந்தன்
தொலைபேசி - 0777 313720
விலை - 300/=

Thursday, June 30, 2011

11. இதயத்தின் ஓசைகள் - கவிதைத் தொகுதி

இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் பெண் கவிஞர்கள் வரிசையில் கலைப்பட்டதாரி ஆசிரியரான ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களும் இணைந்துகொள்கிறார். தனது கவிதைத் தொகுதியாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் இவர், விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி), முதிசம் (பொன்மொழித் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியராகவும் காணப்படுகிறார்.

ஆசிரியர் தொழிலை பெரும் சேவையாக மேற்கொண்டு பல மாணவர்களுக்கு அறிவுக்கண் கொடுத்தவர் ஸக்கியா அவர்கள். அதனால் பல மாணவர்கள் இன்றும் அவரை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள என்ற சிறந்த ஆய்வு நூலையும் எழுதி பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரது எழுத்து ஆளுமைக்கு இந்நூல் சிறந்த சான்று. அந்த எழுத்து ஆளுமையோடு கவிதைத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். என்று தனது அணிந்துரையில் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கான கவிதைகளும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான கவிதைகளும் இந்தக் கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. மொத்தத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய விதத்தில் இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இத்தொகுதியில் சமாதானம், தாயின் பெருமை, ஒற்றுமை, அறிவுரைகள், உழைப்பின் மகிமை, போர் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

தாயின் கருவறை சுகம் இந்த உலகத்தில் எந்த பாகத்திலும் கிடைக்காது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கருவறை என்பது மிகவும் பாதுகாப்பானதொரு இடம். குழந்தையாக நாமிருந்தபொழுது இந்த உலகத்தின் எந்தவித அக்கிரமங்களும், நோய்நொடிகளும் எம்மைத் தாக்கும் வீதம் மிகக்குறைவு. தன் கண்ணைப்போல நம்மை நேசிக்கும் ஒரேயொரு உயிர் நம் தாய் மாத்திரம்தான். உலகத்தில் யாரை நாம் நேசித்தாலும் அல்லது யார் நம்மை நேசித்தாலும் அதில் ஒரு சுயநல உணர்வு கலந்திருக்கும். ஆனால் அத்தகைய எந்த உணர்வும் இன்றி நூறுவீத அன்புடன் பழகும் தாயின் பெருமை அம்மா வேண்டும் (பக்கம் 17) என்ற கவிதையில் இப்படிக் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.

அம்மா வேண்டும் எனக்கு ஓர் அம்மா வேண்டும். அள்ளி அணைத்து ஆறுதல் தந்திட எனக்கு அம்மா வேண்டும். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இப்பாரினில் எதற்குமீடாகா அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். பள்ளி விட்டுத் துள்ளி வரும் என்னை அள்ளியணைத்து முத்தமிட்டு பக்குவமாய் வளர்த்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். அன்னைக் கீடான ஓருயிர் ஆயிரம் தேடினாலும் உண்டோ உலகில் ஆறுதல் அளித்தெனைக் காத்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும்.

ஏமாற்றங்களும், களவு பொய் புரட்டுக்களும் நிறைந்த உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிரி யார் என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றோம். உற்ற தோழர்களை சந்தேகப்படுமளவுக்கு சிலரின் நடவடிக்கைகள் துரோகமாய் அமைந்துவிடும் துரதிஷ்டங்களைப் பரவலாக சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகையதொரு நிலைமையினை நம்ப நட நம்பி நடவாதே (பக்கம் 18) என்ற கவிதையினூடாக அறிவுரை கூறுகிறார் இப்படி

உள்ளத்தில் நஞ்சு வைத்து உதட்டினிலே அமுதம் வைத்து பள்ளத்தில் தள்ளி விடும் பாவிகள் தான் எத்தனை பேர்? கள்ளமாகப் பழகிக் காரியம் சாதித்து குள்ள நரிகளாய் வாழும் கயவர்கள் எத்தனை பேர்? நல்லவன் போல் நடித்து நயவஞ்சகம் புரியும் நண்பனை நம்பியதால் நாதியற்றோர் எத்தனை பேர்?

மழையில்லை என்று வாய்கிழியப் பேசும் நாம் மரம் வளர்ப்பதை மாத்திரம் ஏனோ மறந்து போகிறோம். மரங்களற்ற பொட்டல் வெளியில் மழை வரும் வரை காத்திருத்தல் எத்தனைப் பெரிய முட்டாள் தனம்? காடுகளை அழித்து கட்டடிடங்களை நிர்மாணித்துச் நச்சுப் புகையை சுவாசிப்பதால் எவ்வளவு நோய்களுக்கு ஆளாகின்றோம். இதையெல்லாம் உணர்த்துமாற்போல மரங்களை நாட்டுவோம்: மாநிலம் காப்போம் (பக்கம் 24) என்ற கவிதை அமைந்திருக்கின்றது.

மனிதனோ மண்ணதன் புனிதத்தை நீக்கி
மதியினை இழந்து மறம் பல புரிந்து
மரங்களை வெட்டி மாளிகை கட்டி
மாநிலமதனை மாசுபடுத்திட்டான்
மழை வழி நீரெல்லாம் வற்றிப் போகாமல்
மரமெல்லாம் பட்டுப் போய் மணல் வெளியாகாமல்
மன்பதை வாழ்வெல்லாம் கருகிப் போகாமல்
மரங்களை நாட்டுவோம் மாநிலம் காப்போம்

யாருடைய தலையெழுத்து மாறினாலும் தோட்டத்தொழிலாளர்களின் தலையெழுத்து மட்டும் இத்தனைக் ;காலங்களாக இன்னும் மாறவில்லை. அந்த பாவப்பட்ட ஜீவன்கள் பரம்பரை பரம்பரையாக பலருக்கும் அடிமைப்பட்டு முறையாக உண்ணக் குடிக்க வழியில்லாமலும், உடுத்துவதற்குரிய துணியில்லாமலும் அவதிப்படுவது கண்கூடாக நடக்கின்ற விடயம். மலையக சிறுமிகளை தலைநகரத்தில் உள்ள பெரிய பணக்கார வீடுகளுக்கு வேலைக்கு அனுப்புதல், பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய காலத்தில் கடைகளில் வேலை செய்யும் வாலிபர்கள் என்று அவர்களது வாழ்க்கை தன்னிச்சையின்றியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.

வெயில் மழை பாராமல் மலைகளில் தேயிலை பறித்து தமது ஜீவனோபாயத்தை நடத்துகின்ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு மங்கை பற்றிய தனது ஆதங்கத்தை தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்து ஓடாகிப் போன மங்கையே (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.

கொழுந்து கொய்து கொய்து உன்
கொடும் பசியைத் தீர்த்திடும்
கொடியே உந்தன் வாழ்வினில்
கொடுமை என்று நீங்குமோ?
முதுகில் கூடை சுமந்ததால்
முள்ளந்தண்டு வலிக்குதோ
முதுமை காணும் வரையிலும்
முடிவே இன்றி உழைப்பதோ?

இன்று பணக்காரர்களாக நம்மத்தியில் வாழும் பலரை நாம் அவதானித்திருக்கின்றோம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர்தான் உண்மையில் நல்மனம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள். வேறு சில பணம் படைத்தவர்கள் தாமும் தங்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தால் போதும் என்ற கீழ்த்தரமான எண்ணம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பள்ளிப் படிப்புக்கு பணமின்றி தவிக்கும் ஒரு மாணவனின் துன்பமோ, உண்ண உணவின்றி பசியால் வாடும் ஏழைகளின் கதறல்களோ, திருமணம் முடிக்க அத்தனை தகுதியிருந்தும் சீதனம் கொடுக்க வழியில்லாமல் ஏங்கும் அபலைகளின் உஷ்ண மூச்சோ இவர்களின் இதயத்தை உருக்குவதில்லை. மாறாக அவ்வாறானவர்கள் உதவி கேட்டு சென்றாலும் அவர்களை அவமதித்து அனுபபும் நிலைகள் பரவலாகிவிட்ட நிலைiயில் அவர்களின் கவனத்துக்காகத் தான் செல்வச் சீமானே என்ற கவிதை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

உண்ண உணவின்றி
உறவினர் உழல
உற்றாரும் பெற்றாரும்
ஊமை போல் வாட
உதவி செய்யாமல் வாழலாமோ செல்வச் சீமானே

இவ்வாறான மனதைத் தொடும்; கவிதைகளை கவிஞர் உணர்வுபூர்வமாக மிகவும் அற்புதமாக முன்வைத்திருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள், அறிவுரைகள் பற்றியும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக காணப்படுகின்றார் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
வெளியீடு - முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் (ஆநுPளு)
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 150/=

10. இடி விழுந்த வம்மி - கவிதைத் தொகுதி

இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சமகாலத்தில் கவிதைத் தொகுதிகளின் வரவு இலக்கியத்துறையில் அதிகமாய் அணிசேர்த்து தமிழ்ச் சுவை செழுமையுடன் இலக்கிய தாகத்துக்கு அமிர்தமாகின்றது. அந்த வகையில் இடி விழுந்த வம்மி| என்ற கவிதைத் தொகுதியின் வருகை சிறப்பாக அமைகின்றது. இந்த நூலின் ஆசிரியர் கல்முனை அபார் அவர்கள். இவர் பிரபலக் கவிஞர் சோலைக்கிளி அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கவிதைத் தொகுதி அபாரின் கன்னித் தொகுதியாக, ஒரு உயிரின் வெளியீடாக 48 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

தொலைந்து போன கிராமம், திருடப்பட்ட இரவு, தலையெழுத்து மாறிய ஊர், சந்தையை சுமந்து வந்த பைத்தியம், என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, என்னுள் நானில்லை, பூமியை விட்டுப் பயணம், கட்டில் காதலி, மனதைச் சப்பிய மாடு, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், கவிதை பேசிய இரவு, சுவைக்காத சுதந்திரம், நன்றியுடன் நான், துளிர் - காய் - பழு, ஒரு மூடைப் பயம், காறித் துப்பிய ஜுலை, மலட்டு வானம், காகக் கூடு, குட்டு வாங்கும் நகரம், எனது மயானம், சப்பாத்துக் கால் இரவு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கவிதைத் தொகுதியில் பெரும்பாலான கவிதைகள் உருவக, உருவகித்தல்களை வெளிப்படுத்துவனவாக நிரம்பிக் காணப்படுகின்றன.

''இடக்கரடக்கல் அற்ற பச்சையான பிரதேச வழக்குகளினதும், கிராமத்தவர்களின் உருவக உருவகிப்பு பேச்சுமுறையினதும் வெளிப்போந்தலாக 1989களின் பிற்பகுதியில் கல்முனைப் பிரதேசத்தில் உருவான கவிதைச் சூழலைச் சுவீகரித்து 1990களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்தான் அபார். ... அவரின் கவிதைகள் தனக்குரிய முறையில் தாளிதமாகி, சுதாகரித்து புதிய பரிமாணங்களைத் தொட்டது. அதன் விம்பங்களை அபாரின் இந்த இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதியில் பார்க்கக் காணலாம். முதல் வாசிப்பில் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே ஒன்று போலத் தோன்றக்கூடும். மரத்தில் தாவும் குரங்குகள் எல்லாம் ஒரே மாதிரி தெரிவதுபோல - இந்தக் கவிதைப் போக்கின் பாணியில் சொன்னால் இதற்குக் காரணம் இந்தக் கவிதைகளின் இடைவிடாத உருவக, உருவகிப்புத் தன்மையே.'' என்று அபாரின் கவிதைகள் பற்றி திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

இனம். மதம், மொழி, என்ற வகையில் பிரிந்து போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைந்துகொள்கிறான். இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் எவருமே கட்டுண்டுப்போகின்றார்கள். இந்த வகையில் அபாரின் இயற்கை ரசிப்புக்கு உட்பட்ட கவிதைகளாக என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், மலட்டு வானம், காகக் கூடு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய கவிதைகளைக் குறிப்பிடலாம்.

என்னுள் நானில்லை (பக்கம் 12) என்ற கவிதையில்

என் கண்ணைக் கொத்திக் குடிக்க
அரவங்கள் அரளுகின்றன
என் எலும்பை வேட்டையாட
நாய்கள் வட்டமிடுகின்றன

என் இதயத்தைக் கொத்திப் புரட்டி
மரவள்ளி நடலாம்!
அல்லது
கீரை விதை தூவலாம்!

இந்தக் கவிதையூடாக காதலில் தோற்றுப்போன ஒரு வெறுமைத் தன்மையை வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். மானம் காத்த ஆடைகளை காற்று கழற்றிக்கொண்டு போவதாக குறிப்பிடுவதிலிருந்து எல்லா வஸ்துக்களும் தன்னை பந்தாடிப்பார்க்கின்றன என்ற நிலையை இயற்கையோடு ஒப்பிட்டு மிக அருமையாக உவமித்திருக்கின்றார்.
மனதைச் சப்பிய மாடு (பக்கம் 17) என்ற கவிதையில் அழுக்கடைந்திருந்த மனம், தூய்மையாகிவிட்டது போன்றதொரு விடயத்தை இயம்பி நிற்கிறார். மாடு சாணத்தை ஈரலில் கழித்தது எனவும், அதை மொய்க்க வந்த இலையான கூட்டங்கள் இடம்மாறி சிறுகுடலில் மொய்த்து விளையாடியது எனவும் சொல்லும் கவிஞர், இறுதியாக மனமிருந்த இடம் வாசமாவது வீசட்டும் என்று கீழுள்ள வரிகளினூடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

போகட்டும்
ஊத்தை மனம்
மனமிருந்த இடத்தில்
மல்லிகைக்கொடி நட்டால்
வாசமாவது வீசும்!

தூக்கம் வராத தருணங்களில் பலவித கற்பனைகள் எல்லோருக்கும் எழுவதுண்டு. அந்தமாதிரியான சில அனுபவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கவிதை பேசிய இரவு (பக்கம் 21) என்ற கவிதை சுவாரஷ்யமாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் பயங்கரத்தை நாசூக்காக சொல்லப்பட்டதுமாக இருக்கிறது. அந்தக்கனவு கீழுள்ளவாறு வரிகள் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

தாலியறுத்த பெண்கள்
வேலி பாய்கிறார்கள்
அஹிம்சை பேசிய மனிதன்
ஆள் தின்னுகிறான்

என் பேனைக்குள்ளேயிருந்து
இரண்டு புடையான்கள்
படமெடுத்து வந்து
என் கவிதைக்கு
கொத்திவிட்டுப்போயின

சுவைக்காத சுதந்திரம் (பக்கம் 23) என்ற கவிதை காதலின் சோகத்தை சொல்லுகின்றது. சின்ன வயசில் செதுக்கியெடுத்த சிற்பிபோன்றிருந்த தன் காதலி, ஒரு குரோட்டன் இலையாய் அலறிப்பூவாய் தனக்குள் வாழ்ந்த காதலி.. இல்லாமல்போன வேதனையை வெளிப்படையாக காட்டும் கவிதையாக இதை நோக்கலாம். உலகக் காதலர்கள் அறியும் வரைக்கும் காகங்களுக்கு கத்தச்சொல்லியும், நாய்களுக்கு குரைக்கச்சொல்லியும் தனது காதலின் வேதனையை முகாரி இசைக்கிறார் இப்படி

என் சிறகு
முறிந்து விட்டது
இனி
எங்கே போவேன்?
யாரைத் தேடுவேன்?

என் இதயம்தான்
இருந்தென்ன
இறந்தென்ன
என் இதயம் போனபிறகு?

பறவைகளைப் பார்த்திருக்கிறோம். அதன் கீச்சுக்குரலைக் கேட்டிருக்கிறோம். பறவைகள் பற்றிய பல கவிதைகளை படித்துமிருக்கிறோம். எனினும் அபார் தனது காகக் கூடு (பக்கம் 34) என்ற கவிதையில் காகத்தைப்பற்றி பாடியிருக்கிறார். தினமும் பெருக்கிய முற்றத்தில் சுள்ளியும் முள்ளும் பரவிக்கிடக்கிறது. பெண் காகம் அடைகாத்துக்கொண்டிருக்கின்றது. அண்டை வீட்டுக்காரியின் கோழிகளின் இறகுகளையும், தென்னந்தும்புகளையும் கூடுகட்டுவதற்காகக் கொண்டு சென்ற காகம் அவற்றை தனது வீட்டு முற்றத்தில் போட்டிருப்பதாக கூறும் கவிஞர் தனது கற்பனையின் உச்சகட்டமாக காகத்தின் எச்சத்தை எப்படி எழுதியிருக்கிறார் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வாசல் முழுக்க எச்சங்கள்
மண்ணுக்கு மருதாணி போட்டாற்போல
இருக்கிறது

இவ்வாறு இயற்கையோடிணைந்த வாழ்வியலை கவிதைகளில் தத்ரூபமா தந்திருக்கும் அபார் இன்னும் பல படைப்புக்களைத் தந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும் என்று வாழ்த்தி நிற்கிறேன்.

நூலின் பெயர் - இடி விழுந்த வம்மி (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - அபார்
முகவரி - 143, சாஹிப் வீதி, கல்முனை - 05.
தொலைபேசி - 0776 912029
விலை - 200/=

Thursday, June 23, 2011

09. "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" - கவிதைத் தொகுதி

"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" - கவிதைத் தொகுதி

மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்ற கவிதைத் தொகுதி 76 பக்கங்களை உள்ளடக்கி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது இவரது இரண்டாவது நூலாகும். ஏற்கனவே இவர் வேர்களும் பூக்கட்டும் என்ற உளவியல் நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

தியாகம் அவள் பெயர், நீதான் அவள், நீ - நட்பு - காதல், முதிர்கன்னி, செத்தா போய்விட்டேன், கல்லறைக் கனவு, எனது ஆட்டோகிராப்ஃ, ஒரு ரயில் பயணம், முள்ளிவாய்க்கால் முடிவுரை, தமிழ் சுதந்திரம், ஊர்ப் பக்கம், பயணங்கள் முடிவதில்லை, ஒரு காதல் காவியம், அடங்காத காதல், கொன்றுவிடுங்கள், மொட்டைக் காதலும் முடிந்து போன கற்பனையும், கடற்கரைக் காதல், புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும் ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


இந்தக் கவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

'காதலையும் கிளர்வையும், இளம் பெண்களையும் மட்டுமே கவிப் பொருள்களாகக் கொள்ளும் எம் இளைஞர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான கவிஞனாக அமல்ராஜைக் காண்கிறேன். சமூகத்தின் நிகழ்வுகளை தன் அக்கரையுள்ள சமூகப் பார்வையினால் நோக்கி ஆதங்கப்படுகிறார், ஆத்திரப்படுகிறார். தாய்மை பற்றி உருகும் கவிஞர், யுத்தம் பற்றிக் கவலைப்படுகிறார். முள்ளி வாய்க்கால் முடிவுரையை வாழ்க்கையை முழுதும் தொலைத்த ஒரு பெண்ணை முன்னிறுத்தி எம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். சில காதல் கவிதைகளிலும் அவரின் கவித்திறமை, காதல் உள்ளம் புரிகிறது.' என்று ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

அணிந்துரை வழங்கிய கவிமாமணி அகளங்கன் அவர்கள் 'இன்று ஈழத்தில் வெளிவரும் இலக்கியப் படைப்புக்களில் கவிதை நூல்களே அதிகம் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. புதுக்கவிதைத் தொகுப்புக்களே அதிகம் வெளிவருகின்றன. அதில் காதல் கவிதைகளே அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் இளைஞர்களே அதிகமாக இத்துறை சார்ந்த நூல்களை எழுதிவெளியிடுவதே. சில புதுக் கவிதைத் தொகுப்புக்கள் வெறும் நாட்குறிப்புப் புத்தகம் போல அல்லது காதலிக்கு அனுப்ப வேண்டிய காதலனின் கடிதம் போல இருக்கின்றன. சில தொகுப்புக்கள் காதலையும் சமூகத்தையும், சம காலத்தையும் பாடுவனவாக அமைந்துள்ளன. இந்த வகையில் பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்னும் இக்கவிதைத் தொகுதி காதலோடு சமகாலம், சமூகப் பிரச்சினை என்பவற்றை கலந்ததாக அமைந்துள்ளதைப் பாராட்டலாம்.' என்கிறார்.

நூலாசிரியர் தனதுரையில் 'கவிதையை நான் அதிகம் நேசிப்பவன். அவற்றை அதிகம் வாசிப்பவனும் கூட. கவிதையை எழுதுவது சுலபம். ஆனாலும் அதை நல்ல கவிதைக்குரிய இயல்புகளுடன் காலத்திற்கு ஏற்றாற் போல் உருவாக்குவதில்தான் ஒரு கவிஞனின் வெற்றி தங்கியிருக்கிறது. அந்தவகையிலே, நானும் ஒரு நல்ல சமூகக் கவிஞனாக வெற்றிபெற வேண்டுமென்பதே எனது ஆவல். வாசித்தாலும் யதார்த்தச் சிந்தனைப் போக்கும் தரமான கவிதைகளை உருவாக்க ஊன்றுகோல்களாக அமையவல்லன.' என்கிறார்.

திருமணமாகாத ஒரு பெண்ணின் மனநிலையை முதிர்கன்னி (பக்கம் 12) என்ற கவிதையில் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். சீதனம் என்ற பிரச்சனைப் பற்றி காலங்காலமாக பேசி வந்தாலும் அது தருகின்ற காயங்கள் மட்டும் ஏனோ இன்னும் ஆறவில்லை. வாழையடி வாழையாக அந்த பிரச்சனை எல்லா சமூகத்திலும் ஊடுறுவி விட்டது. தாலி பாக்கியம் பெறாமல் முதுமையாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண் இதயத்தின் ஓசைகள் இவ்வாறு சோக கீதம் பாடுகின்றது.

மஞ்சத்துப் பெண்கள் கொஞ்சிக் குலாவும் முற்றத்தின் மூலையில் மூச்சுமின்றி பேச்சுமின்றி முக்காட்டோடே முப்பது வருடங்கள்... இது அலரிப் பூவும் அந்தஸ்து கேட்கும் காலம் அப்படியிருக்க இந்த அல்லிப்பூ மட்டும் ஏன் இன்னும் சாகாமலும் சமையாமலும் விலைபோகாமல் கிடக்கிறது? கையிலில்லை - எங்களிடம் ஆனால் கைகளிருக்கு. பணமில்லை உண்மைதான் மனமிருக்கு - நல்ல குணமிருக்கு...

செத்தா போய்விட்டேன் (பக்கம் 18) என்ற கவிதையில்

ஓர் அந்திப் பொழுதின் முந்திப் பார்க்கும் பிந்திய பகல்களுக்;குள் சிக்கிக் கேட்கும் யுத்த விமானங்களின் குண்டு மழையில் நனைந்து கரைந்த வலது கையும்... வெட்ட வெளியில் விட்டு வந்த வீட்டுப் பொருட்களை மீட்கப்போய், நட்டு வைத்த கன்னி வெடியில் காலை வைத்து மண்ணோடு போன மற்றொரு காலும்... என் உடலில் - ஓர் உறுப்பென்று இன்று மறந்தே போனது எனக்கு... என்று கவிஞர் வேதனைப்படுகிறார். மட்டுமல்லாமல் எங்களையும் கண்கலங்க வைக்கிறார்.

கடந்த காலங்களின் பொதுமக்கள் பட்ட துயர்களை வைத்து பயணங்கள் முடிவதில்லை (பக்கம் 52) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாம் மடிந்து போக மாட்டோம் என்றும் வயிற்றில் உதைத்தாலும் முதுகில் பிள்ளையை சுமப்பவர்கள் தமது வீரத்தாய்கள் என்றும், இழப்பும் களைப்பும் தம்மை ஒன்றும் செய்யவியலாது என்றும் உறுதியாக கூறி நிற்கிறார். இவரது மன ஆதங்கம் நியாயமானது. இதை அவர் சொல்லியிருக்கும் பாங்கு வித்தியாசமானது.

இன்று தொடங்கிய
பயணமல்ல - அது
நாளை முடிவதற்கு
எமது பயணங்களுக்கு
எனது வயதாகிறது...
சொத்தை இழந்தோம்
செத்துவிடவில்லை
மண்ணை இழந்தோம்
மாண்டுவிடவில்லை
மானமிழந்தோம்
மண்டியிடவில்லை

ஒரு காதல் காவியம் (பக்கம் 58) என்ற கவிதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கிறது. காதலித்து ஏமாறும் ஆண்களின் வேதனையும், காதலித்தவளையே கரம்பிடித்த ஆடவனின் சோகத்தையும் நயக்கத்தக்கதாக வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு இதமாயிருக்கிறது. ஓரிரு பெண்கள் செய்யும் சில தவறுகள், சில ஆண்கள் செய்து விட்டுப்போகும் காதல் லீலைகள் காதல் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த சுகத்துக்கே கேடு விளைவிப்பதாக மாறிவிட்டது. தற்காலத்தில் காதல் வெறும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. இந்தக் கவிதையின் சிறப்பாக உவமான உவமேயத்தை மாலை நேரம் கவிஞரின் மனதில் எத்தகைய கற்பனையை தோற்றுவித்திருக்கிறது என்பதை நோக்கலாம்.

சோம்பல் முறிக்கும் மாலைப்பொழுது
தங்கச் சூரியனும் தாண்டமுடியாக் கடலும்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்ளும் நேரம்

விஷமிகளாக சமூகத்தில் நடமாடித்திரியும் இரட்டைவேடம் கொண்டவர்களுக்கு சாட்டையடியாக எழுதப்பட்டிருக்கிறது கொன்றுவிடுங்கள் (பக்கம் 65) என்ற கவிதை. நேர்மையில்லாத பார்வைகளும், மகிழ்ச்சியற்ற சிரிப்பும், உண்மையற்ற புகழ்ச்சியும், யதார்த்தமற்ற வார்த்தையும் கொண்டு போலிகளாக நடிக்குமிவர்களிடமிருந்து தப்புவதே சிறப்பானது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டும் அழகிய முன்மாதிரி இந்தக் கவிதை. இவ்வாறானவர்களுடன் வாழ்வதை விட செத்துவிடுதல் மேலானது என்ற கருத்தை இன்று பலர் சொல்வதைக் கேட்கிறோம். இந்த கருத்தை பிரதிபலிக்கும் இரு வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

பொய்யான வாழ்க்கை மலிந்துகிடக்கிறது இதற்குள் உண்மைகள் மட்டும் பொசுங்கித் துடிக்கிறது.. போலி முகங்களை ஒப்பனை செய்து அழகாக பொருத்தியிருக்கிறார்கள் சில மனிதர்கள்.

காதல், சமூகம், போர், தாய்மை போன்ற பல அம்சங்களை வைத்தும் கவியெழுதும் ஆற்றல் மிக்க இளம் கவிஞரான பி.அமல்ராஜ், எதிர்வரும் காலங்களிலும் இன்னும் பல இலக்கிய படைப்புக்களைத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - சிறுக்கல்கள் சித்திரமாகின்றன (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - பி. அமல்ராஜ்
முகவரி - 66, பெரியகமம், மன்னார்.
தொலைபேசி - 023 2251364, 0773 268913.
விலை - 150/=

Monday, May 9, 2011

08. 'சுனாமியின் சுவடுகள்' - கவிதைத் தொகுதி

'சுனாமியின் சுவடுகள்' கவிதைத் தொகுதி மீதான விமர்சனக் குறிப்பு

2004 ஆம் ஆண்டின் டிசம்பர் 26 ஆம் திகதி உலகிலுள்ள மக்கள் தொகையின் கணிசமான பகுதியினரை தன் அகோரப் பசிக்குள் இரையாக்கிக் கொண்ட நிகழ்வை நினைத்தால் இன்றைக்கும் பயங்கரமாகத் தான் இருக்கிறது. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, தற்காலத்திலும் கூட வீடு வாசல்கள் அற்று அவதிப்படும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சம்பவம் நடந்த காலப் பகுதிகளின் ஆரம்பத்தில் மாத்திரம் அவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகளும், கவிதைகளும், புகைப்படங்களும் என்று ஏராளம் எழுதப்பட்டாலும், பேசப்பட்டாலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு விட்டனவோ என்னவோ? தென் மாகாணத்தின் கரையோரப்பகுதியைச் சேர்ந்த வெலிகமையை பிறப்பிடமாகக் கொண்ட நான் நேரடியான சுனாமியின் பாதிப்புக்களுக்கு உள்ளாகாவிட்டாலும் கூட சுனாமி விளைவித்து விட்டுப்போன சோகங்களால் நன்கு தாக்கப்பட்டவள். ஆதலால் சுனாமியின் சுவடுகள் என்ற இந்தக் கவிதைத் தொகுதியினுள் பொதிந்திருக்கும் ஆத்மார்த்தமான வலிகள் என்னிலும் ஊடுருவிவிடுகிறது.

இத்தகைய விடயங்களை வைத்து நானாட்டான் எஸ். ஜெகன் தனது உணர்வுகளை சுனாமியின் சுவடுகளுடாக தந்திருப்பது பாராட்டத்தக்கது.

அவஸ்தைகள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியரான ஜெகன் தனது இரண்டாவது தொகுதியாக சுனாமியின் சுவடுகள் என்ற இத்தத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார். கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் வெளியீடாக, 65 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 52 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு சுனாமிப் பேரலைகள் கொடூரமாகத் தாக்கவில்லை. எனினும் தமிழர் தாயகத்தின் வடக்கு மற்றும் கிழக்குக் கரையோரம் இப்பேரலையின் சீற்றத்தால் சீரழிந்தமையும், அங்கு வாழ்ந்த மக்கள் தமது இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றமையும் எம் இதயத்தை உருக்கியதே. எனவே கவிஞர் சகோதரப் பாசத்துடன் எம் உறவுகளின் இன்னல்களையும், அவஸ்தைகளையும் கவிதைகளாக வடித்துள்ளார்' என்று தனது வாழ்த்துரையில் அ. பத்திநாதன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் தனது அணிந்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். 'பாரதிக்குப் பிறகு புதிய போக்கு ஒன்று கவிதையில் தோன்றி வளர்ந்து வர அதற்குத் துணை நிற்பவர்கள் பலராயினர். புதுக் கவிதை என்று சொல்வது கூட அதன் அமைப்பு வடிவத்தில் பண்டைய காலத்தில் இல்லாமல் இல்லை. கருத்தை வேகமாக சொல்ல, வேகமாக வாசகனிடம் பதிய வைக்க புதுக் கவிதை வடிவம் துணை நிற்கிறது என்பது அதன் ஆதரவாளர்கள் கூறும் கருத்து. ...ஆக மரபுக் கவிதையிலும் புதிய போக்குண்டு. புதுக் கவிதையிலும் மரபின் சாயலுண்டு. ... கவிஞர் ஜெகன் தனக்கேயுரிய பார்வையுடனும் சொல் வீச்சுடனும் மனித நேய மாண்பு கொப்பளிக்க இக்கவிதைகளைத் தந்துள்ளமை பாராட்டத்தக்கது'

நட்பென்ற போர்வையில் நாடகமாடும் நரிகள் மலிந்த இந்த யுகத்தில் நாம் வாழ்வதே பெரும் போராட்டம்தான். வெட்டும் குத்தும், குழிபறிப்புகளும் அடுத்தவன் சொத்தை அபகரிப்பதும் கொடுத்த கடனுக்கு ஆப்படிப்பது மாத்திரமன்றி, கடனைத் திருப்பிக் கேட்டால் கடன் கொடுத்தவரையே பழிவாங்குவதும், இறுதியில் தான் கொடுத்த கடனை எப்படியேனும் பெற்றுக் கொள்ளவதற்காய் காவல்நிலையம் வரை போக வேண்டிய சூழ்நிலையும் அன்றாடம் நிகழ்கின்றன.

நல்லவர்களாக வேஷமிட்டுப் பழகி இடையில் நயவஞ்சகக் கத்தி வைப்பவர்களும், தம் தவறை மறைப்பதற்காய் நல்லவர்கள் மேல் பழிபோடும் பொய் மனிதர்களும் தான்; இன்று பரவலாகக் காணப்படுகிறார்கள். இவர்கள் தான்தோன்றித் தனமாக நடப்பது மாத்திரமன்றி நல்ல உள்ளங்களைப் பிரிப்பதற்காக சதித்திட்டங்களும் தீட்டுகிறார்கள். உண்மையில் இவ்வாறானவர்கள் நல்லவர்களின் சாபத்தைத் தவிர வேறெதைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள்? ஆறறிவு படைத்த மனிதர்களே இப்படி இருக்கும் போது அவர்களை சுமந்து கொண்டிருக்கும் பூமியைச் சுற்றிக் காணப்படும் கடல் மாத்திரம் எவ்வாறு வேறுபட முடியும்? வஞ்சகம் (பக்கம் 08) என்ற கவிதையும் கடலின் துரோகத்தையே சுட்டி நிற்கின்றது.

கவலை(க்) கட்டுக்கள் அவிழும் பொழுது புதிய கட்டுக்கள் போட்டு புலம்ப வைத்தாய் - தாய் போல எமை சுமந்து தாலாட்டி தூங்க வைத்தாய் - அசந்து தூங்கிய வேளை உயிர் குடித்தாய் - உப்புக் கடலே எம் உதிரம் அவ்வளவு சுவையா? என்று வினாதொடுக்கிறார் கவிஞர் நாளாட்டான் ஜெகன்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்தவை வீடுகளும் காணிகளும் மட்டுமல்ல எல்லாவற்றுக்கும் மேலான சொந்த பந்தங்களையும்;தான். கண்கள் பார்த்திருக்க அலைகளின் ராட்சதப் பிடியில் சிக்கி உயிரிழந்த உறவுகளை நினைத்து சோகத்தில் வாடும் மனிதர்கள் ஒரு புறம் இருக்க, அடித்தது அதிர்ஷ்டம் என்று எண்ணி திறந்த வீடுகளில் புகுந்து கொள்ளையிட்ட திருடர்கள் மறுபுறமாய்... இது கூடப் பரவாயில்லை. சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கென உலக நாடுகள் ஒருங்கிணைந்து அனுப்பிய நிவாரணப் பொருட்களை நம் நாட்டு சில சுண்டெலிகள் சுரண்டிக்கொண்டதை சில பல்லவிகள் (பக்கம் 10) என்ற கவிதையில் இவ்வாறு கூறுகிறார்.

அலையில்
அகப்பட்ட நாங்கள்
அவதியுற்ற வேளை
பலர்
பங்கு கொண்டார்கள்
எம் சோகத்தில் அல்ல
சுனாமி நிவாரணத்தில்...

பதில் கூறு (பக்கம் 13) என்ற கவிதையினூடும் கவிஞர் ஷஎத்தனை காதலுக்கு கவிதை சொல்லிய நீ - எத்தனை இதயங்களுக்கு ஆறுதல் தந்த நீ - எத்தனை கண்களுக்கு கனவு கொடுத்த நீ - எத்தனை மௌனங்களுக்கு வார்த்தை கொடுத்த நீ - அத்தனை உயிர்களுக்கும் ஏன் மரணத்தைக் கொடுத்தாய் என்று கடலிடமே கேள்வியெழுப்புகிறார்.
சுனாமியால் வாழ்வின் ரணங்கள் (பக்கம் 24) என்ற கவிதையில் கவிஞரின் ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்துகிறார்.

மாமிச அரக்கியே வந்து பார் - உன் மமதைக்குப் பலியான மனித உயிர்களை - மாடிக் கட்டிடங்களை மண் குடிசைகளை... கடலால் சூழ்ந்த கன்னித் தீவை கடனால் சூழவைத்தாய் - சுனாமியே வந்து பார் அடுப்பில் நெருப்பு எரியவில்லை எம் அடிவயிறு எரிகிறது - உலை கொதிக்கவில்லை எம் உள்ளம் கொதிக்கிறது...!

ஊனம்+சமூகம் என்ற கவிதையானது (பக்கம் 39) கலைந்து போன கனவுகளைப் பற்றிக்கூறுவதுடன் அவற்றால் தான் ஒருபோதும் ஓய்ந்துவிடப்போவதில்லை என்பதையும் தன்னம்பிக்கையோடு கூறியிருக்கிறார் நூலாசிரியர் நானாட்டான் ஜெகன்.

எங்கோ இருந்து ஏவப்பட்ட அம்புகளால் தமது சமூகம் எழ முடியாமல் தவிக்கின்றபோது, தவிப்புக்களையும் தாகங்களையும் தாங்கிய தனது உள்ளம் தளரவில்லை என்கிறார். உறவுகள் பறிபோனாலும் உணர்வுகளை இழக்கவில்லை என்றும், கடலால் கனவுகளைத்தான் பொசுக்க முடியுமே தவிர கண்களை அல்ல என்றும் கூறும் கவிஞர், விழுந்த அலை மீண்டும் எழுவது போல் தானும் ஆகாயமாக எழுவதாகவும், அப்போது சுனாமி என்ன சூரியனால் கூட தன் வேட்கையை வேக வைக்க முடியாது என்றும் கூறுவதினூடாக தன்னை மாத்திரம் திடப்படுத்திக்கொள்வதன்றி சுனாமியினால் நொந்து போனவர்களுக்கு இதய ஒத்தடமாகவும் இக்கவிதையை யாத்திருக்கின்றமை சிறப்பானதாகும்.

வலுவிழந்து போனேன் நண்பா (பக்கம் 41) என்ற கவிதை சுனாமியால் இறந்து போன ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டிருக்கும் விதம் எம்நெஞ்சிலும் துன்பத்தை தந்துவிடுகிறது. நீ என் அருகில் இருக்கும்வரை வானம் எனக்கருகில் வட்டமிட்டுக்கொண்டிருந்தது என்றும், பூமி எனக்கருகில் பூத்துக் குலுங்கியது என்றும் சொல்லும் ஜெகன், இருவரின் இரகசியங்களையும் ஒட்டுக் கேட்கும் கட்டுமரம் உட்பட கடற்கரை மணல் எல்லாமே நண்பனை ஞாபகப்படுத்திப்போகிறது என்கிறார். இறுதியில் எல்லோருக்கும் பிடித்த தன் நண்பனை, ஆழிப்பேரலையும் விரும்பி கொண்டு சென்றுவிட்டதாக கூறி எம் உள்ளத்தையும் நெகிழ்ச்சியடைய வைக்கிறார்.

கடல் அலையாய்க் காதல் (பக்கம் 59) என்ற கவிதையில் காதலை கடலலைக்கு ஒப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்றது. 'கடலலையைப்பார் என்னைப்போலவே ஏதேதோ சொல்ல வருகிறது, ஆனால் கரை கூட உன்னைப்போலவே கேட்காமல் போய்விடுகிறது' என்றவாறு கவிதை தொடர்கிறது. மேலும் அலை நுரைபோல் அழுவதாகவும், அதற்கு ஒப்பீடாக நான் அழுகிறேன் கண்ணீராய் என்றும் குறிப்பிடுகிறார். இறுதியில் அலையின் காதல் கடலுக்குள் மூழ்கி விடுவதாகவும், தன் காதல் கனவாய் கலைந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

சுனாமி என்ற கருவை வைத்து ஒரு புத்தகத்தையே போட்டுவிடும் திறமை வாய்ந்த நானாட்டான் ஜெகன், சமூகத்தில் மிகைந்து கிடக்கும் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் பல கவிதைத்தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக காணப்படுகின்றார். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - சுனாமியின் சுவடுகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - எஸ். ஜெகன்
வெளியீடு - கிராம மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம்
தொலைபேசி - 077 8062696
விலை - 150/=



மேலுள்ள கவிதைத்தொகுதியின் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14476%3A2011-05-09-04-36-33&catid=4%3Areviews&Itemid=267

Thursday, May 5, 2011

07. 'விழி தீண்டும் விரல்கள்' - கவிதைத் தொகுதி

'விழி தீண்டும் விரல்கள்' கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென முக்கிய இடத்தைப் பிடிக்கிறார் இளம் பட்டதாரி ஆசிரியரான கவிஞர் அமல்ராஜ். கவிதைத் தொகுதியின் தலைப்புக்கு மிகப் பொருத்தமான அட்டைப் படத்தோடு தனது கன்னிக் கவிதைத் தொகுதியாக விழி தீண்டும் விரல்கள் என்ற கவிதைத் தொகுதியை பேசாலை அமல்ராஜ் வெளியிட்டிருக்கிறார். இளம் படைப்பாளிகளான விக்கிரம் தீபநாதன், மன்னார் அமுதன், நானாட்டான் ஜெகன், தமிழ்நேசன் அடிகளார், எஸ். ஏ. உதயன் போன்றோர்கள் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு தங்களை அடையாளப்படுத்தியது போல் கவிஞர் அமல்ராஜூம் இந்த வரிசையில் இணைந்துகொள்கிறார். பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய பரிபாலன சபை வெளியீடாக, 74 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 28 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


பேசாலை ஊர்க்காரி, தூரத்து வெளிச்சம், நம்பிக்கை, ஈ.வே.ரா. ராமசாமி, நீ பயணித்த சாலைகளில்..., பூமிப் பெண்ணே, அப்பா, கனி - மாங்கனி, கருவாடு, முத்துக்குமார், சிகரெட், குடை, வானத்துச் சுவருக்கு, செருப்பு, மை, கரைவலை, தமிழன், இ(ப்) போ(தே) ச(சா) என, மன்னார் மானிடரே, போர்வை, வாக்குறுதி, பொலித்தீன் பை, தமிழ் இருண்ட நாடு, சுருக்கு வலைக்கு போற மச்சான், சாதி, ஏதிலியர்கள், கற்பகத்தரு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

'மன்னார் பிரதேசத்தைப் பொறுத்தவரை அதுவொரு கலை இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசம். கடந்த காலத்தில் நவீன கலை இலக்கியம் வழியாகக் கலை இலக்கியப் பணிகள் செய்வதில் பின் நிற்காத ஒரு பிரதேசம். அந்த வரிசையில் விழி தீண்டும் விரல்கள் எனும் இத்தொகுப்பின் மூலம் அமல்ராஜ் இணைகிறார். இன்றைய தமிழ்க் கவிதை வளர்ச்சிப் போக்கில் புதிய தலைமுறையினர் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இப்பங்களிப்பின் ஊடாகத் தமிழ்க் கவிதை செழுமை அடைந்திருப்பது இன்னும் சிலரால் ஒத்துக்கொள்ள முடியாத உண்மையாகவே இருக்கிறது. இச்செழுமைக்கு வெறுமனே அவர்கள் புதிய தலை முறையினராக இருப்பது மட்டுமே காரணம் அல்ல. மாறாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகமும், அது கொண்டு வந்து சேர்த்த அனுபவங்களும் காரணங்களாகின்றன. ஓர் இலக்கிய உருவத்தின் செழுமை என்பது வெறுமனே அதன் உருவச் செழுமையில் மட்டுமே தங்கி நிற்பதில்லை. அதனோடு அவ்விலக்கிய உருவத்தினூடாக பேசப்படும் விடயமும் பாரிய பங்காற்றுகிறது என்பது நாம் அறிந்த உண்மை. ... மன்னார் பிரதேசத்தைச் சார்ந்த சமீப கால கவிஞர்கள் கவனம் செழுத்தாத, ஒரு சில புதிய விடயங்களைப் பற்றி அமல்ராஜ் பேசியிருக்கிறார் என்ற வகையில் இத் தொகுப்பு நமது கவனத்தை ஈர்க்கிறது' என்று மேமன் கவி அவர்கள் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் மதிப்பீட்டுரை வழங்கியிருக்கும் எஸ்.டேவிட் அவர்கள் '...இக்கவிதை நூலில் உள்ள கவிதைகளின் பரிமாண வீச்சுக்களை மதிப்பீடு செய்ய உள் நுழைந்த எனக்கு கவிதைக்கு சொந்தக்காரரான அமல்ராஜின் சிவந்த சிந்தனைகள் கனிந்த உண்மையான அறிவுத்தளத்தை இனங்கான முடிந்தது. வேறு வார்த்தையில் கூறுவதாயின் அமல்ராஜின் கவிதைகளில் அமல்ராஜ் என்ற மனிதனின் மனிதத்துவப் பண்புகள் பிரதிபலிப்பதை தரிசிக்க முடிந்துள்ளது' என்கிறார்.

'... நான் ஆசிரியனாக இருந்த போதும் கவிதைத் துறைக்குள் நானொரு மாணவன் போல இருக்கின்றேன். கல்லூரிக் காலங்களில் தமிழ் நாட்டில் கல்கி, நந்தன் போன்ற இதல்களில் சில கவிதைகள் எழுதியுள்ளேன். கல்லூரி விழாக்களில் கவிதைகளை படைத்திருக்கிறேன். ஆனால் எமது நாட்டில் கவிதை எழுத முனைந்தபோதெல்லாம் அதற்குரிய சூழல் அமையவில்லை. எம்மினத்தின் துயரங்களை பக்கம் பக்கமாக எழுத முடியும். ஆண்டாண்டு காலமாக நாம் பட்ட அவலங்கள், துன்பங்கள், ஆதங்கங்கள் எல்லாவற்றையும் கவிதைகளாகக் கொட்டியிருக்க முடியும். ஆனால் தக்க சூழல் அதற்குக் களம் அமைத்துத் தரவில்லை. ... கவிதைத் துறை என்பது பெருங்கடல். அதில் இது ஒரு துளி. என் கண்கள் கண்ட விடயங்களை விரல்கள் தீண்டியிருக்கின்றன. அந்த வகையில் இப்படைப்பு என் உன்னம் சார்ந்த, நான் நாடுகின்ற இடது சாரித்துவக் கொள்கையினை ஓரளவு தொட்டுச் செல்வதை இங்கே நீங்கள் காணலாம். இக் கவிதைத் தொகுப்பு மூலம் என் இனிய தாய் மொழி சிறப்படையுமாக இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். இறுதியாக வீழ்வது நாமாக இருந்தாலும் எழுவது தமிழாக இருக்கட்டும் என்ற அசையாத நம்பிக்கையோடு இந்தக் கவிதையைத் தொகுத்துப் படைக்கின்றேன்' என்று தனது ஆதங்கத்தையும் அதே நேரம் நம்பிக்கையையும் அமல்ராஜ் தனதுரையில் முன்வைக்கிறார்.

இத்தொகுதியில் காதல், தனி மனித உணர்வுகள், சமூகம், அழகியல், போர்ச்சூழல், மீனவச் சூழல், அகதி வாழ்வு, அரசியல், சாதியப் பிரச்சினை போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

பேசாலை ஊர்க்காரி, சுருக்கு வலைக்குப் போற மச்சான் போன்ற கவிதைகள் நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற சாயலில் மிகவும் ரசனையுள்ளதாக அமைந்திருக்கின்றன.

பேசாலை ஊர்க்காரி என்ற கவிதையில் (பக்கம் 01) பேசாலை ஊர்க்காரி பேசாமப் போறியே... காளை மனசில திருக்கை வாலால குத்தியவளே...! வாவல் மீனப் போல வளவளப்பு உடம்புக்காரி சுறா மீனப் போல சூப்பரடி உன்னழகு...! நீ வளைஞ்சு நெளிஞ்சு நடக்கையில வாளை போல வளவளப்பு நீ பார்த்த பார்வை சுள்ளென்று சுங்கானாய் குத்துதடி...! என்று மீனவச் சூழலில் உள்ள விடயங்களை ஒப்பிட்டு அவற்றைப் படிமங்களாக, உருவகங்களாகப் பயன்படுத்தி மிகவும் அழகாக இக் கவிதையை முன்வைத்துள்ளார்.

இதே போன்ற சாயலில் அமைந்த கவிதை தான் சுருக்கு வலைக்குப் போற மச்சான் (பக்கம் 61) என்ற கவிதையும். சுருக்கு வலைக்குப் போற மச்சான் - வாக்கு சறுக்காம வந்திடுங்க அலவாக்கரை போல ஆறாம நானிருக்கேன்.. அந்தியில வந்திடுங்க - நேரம் பிந்திடாம வந்திடுங்க மடி நிறைய மீனைப் பிடிச்சிடுவ - இந்த மச்சா கழுத்த - எப்ப நிறைச்சிடுவ?

காதலை பாடாத கவிஞர்களில்லை என்ற கருத்து மாறி தற்போதுகளில் யுத்தத்தைப் பற்றிப் பேசாத கவிஞர்கள் நம் நாட்டில் இல்லை என்று கூறுமளவுக்கு யுத்தம் தனது அகோரத்தைக் காட்டிச் சென்றுவிட்டது. இருந்தாலும்; அதனால் ஏற்பட்ட வடுக்களும், காயங்களும் இன்னும் மாறாமல் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கின்றது. அமல்ராஜூம் நம்பிக்கை என்ற கவிதையில் யுத்தம் பற்றி பேசியிருக்கிறார். ஆமைகள் அசுரவேகத்தில் ஓடினாலும், குயில்கள் கூடு கட்டினாலுங்கூட தமிழனின் தலையெழுத்து மாறுமா என்ற சந்தேகக் கணைகளை வாசகர்களின் நெஞ்சிலும் ஏவி விட்டிருக்கிறார். அந்த கவிதையின் இடையில் வரும் சில வரிகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. (பக்கம் 10)

..குண்டு வீச்சில்
குழந்தையும் குடிசையும்
சிதறிக்கிடந்த கோரமது
மறைந்துவிடும் என்பதில்
நம்பிக்கையில்லை...!

இறைவன் நமக்கு அளித்திருக்கும் கொடைகளை எண்ணிப்பார்த்து நாம் என்றாவது நன்றி செலுத்தியிருக்கிறோமா என்பது கேள்விக்குறியான விடயம். அது ஒரு புறமிருக்க இயற்கையின் நியதிகளை சர்வ வல்லமை படைத்த இறைவனைத் தவிர யாராலும் அசைக்க முடியாது என்பது உண்மை நிலையாகும். உதாரணத்திற்கு யாரும் நினைத்து மழை பெய்வதில்லை. யாரும் சொல்லி சூரியன் உதிப்பதில்லை. இந்த வரிசையில் யாருக்குமே தோன்றாத சின்ன விடயமொன்றை கருவாடு (பக்கம் 30) என்ற தலைப்பில் கூறியிருக்கிறார் கவிஞர். அதாவது உப்பு கரிக்கின்ற கடல் நீரில் பிறந்தாலும் மீன் உப்பாக பிறப்பதில்லை. அதை எடுத்து உப்பிட்டு காயவைத்தால் தான் அது உப்புக்கருவாடு எனப்படுகின்றது. இந்த விடயத்தை நறுக்கென்று சொல்லியிருக்கிறார் இப்படி.


உப்பான தண்ணீரில்
உப்பில்லா மீன்பிடிச்சு
உப்பிட்டு உலரவிட்டால்
கருவாடு

காலுக்கு போடுகின்ற செருப்பை அதிக விலைகொடுத்து வாங்குவோரும் எம்மத்தியில் இருக்கின்றனர். அதுபோல செருப்பே இல்லாமல் ஊர்சுற்றி வயிற்றுப் பசிபோக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் விலைகூடிய செருப்புக்கள் காலைவாரிவிடும் சந்தர்ப்பங்களும் அமைந்துவிடுவது தவிர்க்க முடியாததாகின்றது. செருப்பு என்பது எமது கால்களுக்குரிய கவசமாக இருந்தாலும் நாம் அன்றாடம் பாவிக்கையில் அது படும் வேதனை குறைவு என்பதை பின்வரும் கவிதை வரிகள் எடுத்துக்காட்டுகின்றன. அதாவது தினந்தோறும் பாவிப்பதைவிட எங்காவது கல்யாண வீடுகளில் செருப்புகளின் பரிதாபகரமான நிலையைப்பற்றி யோசித்திருக்கிறார் கவிஞர் அமல்ராஜ். கவிதை வரிகள் இவைதான். (பக்கம் 40)

காலுக்குக் கவசம்
கல்யாண கச்சேரிகளிலும்
கருமாதி வீடுகளிலும்
நீ துவம்சம்

விஞ்ஞான வளர்ச்சி பாரிய அளவில் விருத்தியடைந்தாலும் நம்மவர்கள் அதில் எதை சரியாக புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது சிந்திக்கத்தக்க விடயம். கணனிசார் விடயங்களில் அதிக சிரத்தை எடுத்தக்கொள்ளும் இவர்கள் சமுதாய அக்கறையில் பங்கெடுத்துக்கொள்வதில்லை என்பது கண்கூடு. இன்று வைத்தியசாலைகள் உட்பட பொது இடங்களிலும் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டிருக்கின்றமை நாம் அறிந்ததே. அதற்கு மாற்றீடாக கடதாசிப்பைகளை பாவிக்கலாம் என்று கூறப்பட்டு வருகின்றது. எத்தனைக் காலங்கள் சென்றாலும் உக்கிவிடாத ஒரு பொருளாக பொலித்தீன் காணப்படுவதாலேயே இவ்வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பொலித்தீன் பைகளை உட்கொண்டு இறந்துபோன விலங்கினங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருந்தாலும் கூட, அத்தகைய சமூகத்துரோகம் செய்யும் பொலித்துPன் பாவனைகளில் இருந்து நாம் இன்னும் விடுபடவில்லை என்பது கசப்பான உண்மை. அதை எண்ணி ஆவேசத்துடன் பொலித்தீன் பை என்ற கவிதையை அமல்ராஜ் எழுதியிருக்கிறார். கவிதையின் சில வரிகள் இதோ.. (பக்கம் 59)

பாலான பாரை - நீ
சேறாக்க வந்தாயோ?
பூக்கடையான
பூமியை வேக்காடாக்கி
வேதனை தர வந்தாயோ?

இவ்வாறு பல கோணங்களில் இருந்தும் சமுதாய அக்கறைப்பற்றியும், காதல், போர்ச்சூழல் மற்றும் இன்னோரன்ன விடயங்களைப் பற்றியும் சிந்தித்து கவிதை யாத்திருக்கும் கவிஞர் அமல்ராஜ் இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டு தமிழ்ப்பணி செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விழி தீண்டும் விரல்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - அமல்ராஜ்
முகவரி - 08 வட்டாரம், பேசாலை, மன்னார்.
தொலைபேசி - 077 5382544
வெளியீடு - புனித வெற்றி நாயகி ஆலய பரிபாலன சபை
விலை - 100/=




மேலுள்ள கவிதைத்தொகுதியின் விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14432%3A2011-05-04-04-36-08&catid=4%3Areviews&Itemid=267