Saturday, December 31, 2011

15. மகுட வைரங்கள் - கவிதைத் தொகுப்பு

மகுட வைரங்கள் கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

பதுளை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது நித்தியஜோதி அவர்களின் மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுப்பு. கல்வியமைச்;சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாலராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ள இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது கவிதை நூலை வெளிக்கொணர்ந்திருக்கிறார். இணையத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியீடாக, 76 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 43 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மலையக மக்களின் வாழ்கையைப் புடம் போட்டுக் காட்டும் ஓரிரு கவிதைகளையும், காதல் கவிதைகளையும், ஆன்மீகம் சார்ந்த சில கவிதைகளையும் இந்நூலில் தரிசிக்கலாம்.

இணைய தளத்தில் இலக்கியங்களைத் தேடி தகவல்களை சேகரித்த அனுபவம் கவிஞர் நித்தியஜோதி அவர்களுக்கு உண்டு. வாழ்க்கை என்னும் இணையப் பத்திரிகையை நெனசல நிலையம் ஊடாக வெளியிட்டு இலங்கை முழுவதும் இணைய வாசகர்களுக்கு இலக்;கியம் வாசிக்கத் தந்தவர். ... நவீன காலத்திற்கேட்ப தகவல் தொழில்நுட்பம், இணையம் என்பவற்றில் ஈடுபாடும், அவற்றின் பயன்பாடும் தமிழ் இலக்கியத் துறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்று தனது வெளியீட்டுரையில் கௌரிசங்கர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பூனாகலை பௌர்ணமி கலை இலக்கிய வட்டத்தின் தலைவரான ஆறுமுகம் கலையரசு அவர்கள் இக் கவிதை நூலுக்கு அணிந்துரையை வழங்கியுள்ளார்.

அப்புத்தளை தமிழ் இலக்கிய ஆய்வு மன்றத்தின் செயலாளர் பௌஸர் நியாஸ் தனது பதிப்பாசிரியர் உரையில் இந் நூலிலுள்ள கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. நவீனத்துவம் மிளிர்ந்து கவிதைகள் நடை போடுகின்றன. கவிதைகளின் உருவம், சொல்லாட்சி, உள்ளடக்கம் என்பன ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து இக்கவிஞரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார்.

காதல் சொன்ன கண்ணாளன் என்ற கவிதையில் (பக்கம் 18) காதலி தனது உள்ளத்தை கூறியிருக்கிறார். மேலும் கண்களால் கேட்கும் கேள்விகளுக்கு செயலால் பதில் கூறும் தனித்திறமை தனது காதலுக்கு கிடைத்த முதல் மரியாதை என்கிறார் கவிதையின் நாயகியான அந்தப் பெண். மனதினால் தான் மனைவியாகிவிட்டதாக கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

சிங்கார சிரிப்புகள்
நாகரீக மூட்டத்தினுள்ளே
முகம் கழுவும் நாளில்
வெட்கத்திற்கு மட்டும்
மரியாதை தந்தவனே..
உந்தன் வேள்வியால்
நானே
மனைவியாகிறேன்
மன ஊஞ்சலில்...

காதலில் விழுந்தவர்கள் நேரெதிர் மாற்றங்களான விடயங்களை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே விளங்காத ஒரு அதிசய உலகத்தில் அவர்கள் இருப்பார்கள். அதே நிலை நீ ... என்றும் நான்... (பக்கம் 46) என்ற கவிதையிலும் நயமாக உரைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக கீழுள்ள அடிகளைக் குறிப்பிடலாம்.

புரிந்து கொண்டும்
பதிலைத் தேடுகின்றாய்..
நானோ...
வினாவைத் தேடுகின்றேன்..

கவிதையில் ஆர்வம் காட்டி வரும் கவிஞர் நித்தியஜோதி அவர்கள் இன்னும் காத்திரமான கவிதைகளைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - மகுட வைரங்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கவிஞர் நித்தியஜோதி
வெளியீடு - இணைய தமிழ் இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0729068724
விலை - 200 ரூபாய்



பதிவுகள் வலைத்தளத்தில் இந்த விமர்சனத்தைப் பார்வையிட...

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=549:2011-12-29-03-54-12&catid=14:2011-03-03-17-27-43

Friday, December 9, 2011

14. கரை தேடும் அலை - கவிதைத் தொகுதி

கரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் இளம் கவிஞர்கள் வரிசையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கிறார் இளம் கவிஞர் புவிலக்ஷி. அழகிய அட்டைப் படத்தோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுதியாக கரைதேடும் அலை என்ற கவிதைத் தொகுதியை புவிலக்ஷி வெளியிட்டிருக்கிறார். உள்ளக்கிடக்கைகள் என்ற கவிதைத் தொகுதியை இவர் ஏற்கனவே வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பல கவிஞர்களை உருவாக்கிய கிழக்கு மண்ணில் இவர் பெரிய நீலாவணையைச் சேர்ந்தவர். டிசைன் லப் வெளியீடாக, 57 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 55 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் பல கவிதைத் துளிகளும் உள்ளடங்குகின்றன.



நினைவலைகள், மீனவன், நட்பு, இதயச் சிறைக்குள், கவலை, நிகரில்லாதவள், காதல், இதய வாழ்த்து, யாரும் இல்லையே, சுனாமியே, காதல் தேவதை, கலங்காதே, சவால், தூரத்துறவு, புரியாத புதிர், வேதனை, கரை தேடும் அலை, என் அழகே, வாழ்த்துக்கள், உறவு தேடும் உள்ளம், துயரம், அம்மாவே, அழியாத நினைவுகள், ஏழைப் போராளி, நான் இயேசு அல்ல, பலமேது?, இறுதி வரை, நீயும் பறந்திடுவாய், உனக்காக, கவிஞனின் காதலி, சாயம், பிரிவுத் துயர், சிறை வாழ்க்கை, சிரிப்பு, எதிர்பார்ப்பு, இடைவெளி, சுவை, கனவு, கேட்க யாருண்டு, உயர்வு, பிரசவம், கிடைக்குமா?, நிழல் இல்லாத நினைவு, உணர்வாய், துன்பமில்லை, தரிசனம், வசந்தம், உறுதிகொள், அதிஷ்டம், எதற்காக?, ப்ரார்த்தனை, காத்திருப்பு ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

திமிலைத் துமிலன் அவர்கள் கவிதையும் இந்தத் தொகுதியும் என்ற தலையங்கத்தில் கருத்துரையொன்ரை வழங்கியுள்ளார். அம்பிளாந்துறையூர் அரியம் அவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் கவிதைகள் என தனது வாழ்த்துரையை வழங்கியுள்ளார். ம. புவிலக்ஷி தனதுரையில் ``இரண்டாவது தொகுப்பாய் வெளியாகும் கரை தேடும் அலையில் என் உணர்வுகள் மட்டுமல்ல சில உண்மைகளும் அலைகளாய்...'' வெளிப்படுகின்றன என்கிறார்.

சுனாமியின் தாக்கம் பற்றி பொதுவாக எல்லா கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதுகிறார்கள். இத்தனை வருடங்களாகியும் சுனாமியின் பாதிப்புக்கள் இன்றும் எச்சங்களாகவே இருக்கின்றன. சொத்திழந்து சொந்தமிழந்து வாடும் பலர் இன்னும் நிவாரணம் கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சை விட்டபடியும், நிரந்தரமான சுமைகளை நெஞ்சில் சுமந்தபடியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். புவிலக்ஷியின் கவிதையிலும் சுனாமி புகுந்திருக்கிறது. தங்கையை இழந்த தனயனின் சோகம் நினைவலைகள் என்ற கவிதையில் (பக்கம் 01) இவ்வாறாக கவியாக்கப்பட்டிருக்கிறது.

கண் இமைக்கும் நேரமதில்
கை நீட்டிய தங்கையை - உன்
கரங்களால்
அள்ளிக்கொண்டதும்
நான் நிர்வாணமாய்
நின்றதும்...
மாறாத ரணமாய்...


அலைச் சப்தங்களில்
என் உறவுகளின்
அலறல் கேட்பதால்
கடலுக்குச் செல்வதையே
தவிர்த்துவிட்டேன்
இப்போதெல்லாம்...

ஒரு தந்தையின் பரிவோடு வடிக்கப்பட்டிருக்கும் கவலை என்ற கவிதையில் (பக்கம் 05) ஒரு அழகிய சிறுமியின் படம் கவிதைக்கு உயிர்சேர்ப்பதாய் அமைந்திருக்கிறது. அந்தக் கவிதையின் கடைசி வரிகள் பின்வருமாறு அமைந்திருக்கிறது.

என் பிஞ்சு நிலாவின்
உறக்கம் கலைந்ததில்
என் உள் நெஞ்சம்
வேதனையில் வெதும்புகிறது..

காதல் வயப்பட்டாலே மனிதருக்குள் பௌதீக மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை நிரூபிப்பது போல் காதல் (பக்கம் 07) என்ற கவிதையினூடாக புவிலக்ஷி கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றார். காதலியின் குரல் ஓசை தன் தலையணைக்குள் கேட்கும் என்பதை கவிநயத்தோடு கூறும் அவரது மொழிநடை இதோ...

தலையணைக்குள்
ஒலிக்கும் உன் காதல்
குரலின் ஓசைக்காய்
விழியுறக்கம் மறந்து
விழித்துக் கிடக்கிறேன்...

காலம் எதையும் மாற்றக் கூடியது. அது மனித மனங்களையும் மாற்றவல்லது. இன்றைய நண்பர்களை எண்ணி உன் இரகசியங்களைச் சொல்லாதே. ஏனெனில் அவன் எதிரியாக மாறலாம் என்றொரு மூத்தொர் வாக்கு உண்டு. அதற்கிணங்க பகைவரையும் நாம் எதிர்க்கக்கூடாது. அவர்கள் ஒருநாளில் நண்பராகலாம் என்ற தத்துவத்தை விளக்குவதாக சவால் என்ற கவிதை (பக்கம் 14) அமைந்திருக்கிறது.

எந்த மனிதனையும் ஓரிரு நாளில் நல்லவர் என நம்பிவிடாதே! அந்த நம்பிக்கையே உன்னை ஏமாளியாக மாற்றலாம்.. கெட்டவர்கள் கூட நல்லவர் தான். கெட்டவர் என்பது நிரூபனமாகும் வரை..

காதலியின் பிரிவு எத்தகைய கொடுமை என்பதையே உணர்வு என்ற கவிதை (பக்கம் 43) சுட்டி நிற்கிறது. உலகத்தில் சந்தோஷம் தரும் அத்தனை விடயங்களும் காதலியின் பிரிவால் அர்த்தமற்றுப் போகின்றன. எல்லா நிகழ்வுகளும் இன்பமாயிருக்கும்போது காதலியின் பிரிவு மாத்திரம் வாட்டுவதாக இக்கவி வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

புல் சிரித்தது
பூ சிரித்தது..
புல்லின் மீது
பனித்துளி சிரித்தது..

காற்று இனித்தது..
காதல் இனித்தது..
ஏனோ...
அவளுடைய பிரிவு மட்டும் கசத்தது...

உள்ளக்கிடக்கைகள், கரை தேடும் அலை என்ற இரு கவிதைத் தொகுதிகளைத் தந்த புவிலக்ஷி எதிர்காலத்தில் இன்னும் சிறந்த காத்திரமான நூல்களை வெளியிட வேண்டும் என்பதே எமது அவா. அவரது முயற்சி தொடர எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - கரை தேடும் அலை (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ம. புவிலக்ஷி
வெளியீடு - டிசைன் லப்
முகவரி - 190, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை, கொழும்பு - 15.
விலை - 200/=

Friday, September 30, 2011

13. இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி

இப்படிக்கு அன்புள்ள அம்மா கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

டென்மார்க்கில் டெனிஷ் மொழியில் திருமதி கலாநிதி ஜீவகுமாரன் எழுதிய இப்படிக்கு அன்புள்ள அம்மா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை (காவிய) த் தொகுதியை விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக 163 பக்கங்களில் திரு வி. ஜீவகுமாரன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. திரு வி. ஜீவகுமாரன் அவர்கள் தனது பதிப்புரையில் ''விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் இரண்டாவது படைப்பாக இப்படிக்கு அன்புள்ள அம்மா வெளிவருதல் பற்றி மனம் மகிழ்ச்சி அடைகிறது. காரணம் இதில் வரும் அம்மாவுடனும், அவரின் மகன் ஹரியுடனும் பதிப்பாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடந்த ஆறு மாதகாலமாக நான் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். பிரிவு! வாழ்வின் முதல் அத்தியாயத்தில் உலகத்தை விட்டுப் பிரியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது" என்கிறார்.

"இலக்கியம் மனிதனின் சிக்கலைக் கலைத்துவப் பாணியில் எடுத்தியம்புவது ஆகும். இப்பொழுது நாம் வாசிக்க எடுக்கின்ற புத்தகம் எளிமையான கவி நடையில் புதுக்கவிதை நடையில், வயோதிக மாது ஒருவரின் மனக்குமுறலை பதிவு செய்கிறது. முதுமை என்பது ஒரு பெரும் நூல் நிலையத்திற்கு சமமானது என ஒரு அமெரிக்க வாய்மொழி ஒன்று உண்டு. எமது நாட்டினுடைய ஈழத்து மக்களின் சமகால வாழ்வு உலகமெங்கும் சிதறிய வாழ்வாக, முதுமையான பெற்றார்களை ஆதரிக்க முடியாத ஒரு வாழ்வாக அமைந்திருப்பது எமது சாபக்கேடுதான். புலப்பெயர்வுகளால் குடும்பங்கள் குலைந்துபோக, பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளை விட்டுப் பெற்றோரும் வாழ்கின்ற நிலைமை.

இப்படிக்கு அன்புள்ள அம்மாவுக்கு என்கிற கவிநடையில் அமைந்த திருமதி. கலாநிதி ஜீவகுமாரனின் இலக்கியப் படைப்பின் நாயகியும் ஒரு வயதான அம்மா. இந்த மூதாட்டி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து டென்டார்க்கில் வாழும் நாயகி. இம் மூதாட்டியின் மிகப்பெரும் அவலம் தனது மகனை ஈழத்தில் இழந்ததுதான். அவரின் இறப்புக் காலம் நெருங்க நெருங்க அந்தப் பிள்ளையின் நினைவுகள் இம் மூதாட்டியை அல்லல்படுத்துகின்றது. அவர் அதனை தன் மனக்குமுறல்ளை கொட்டும் ஒரு வடிகாலாக, துயரங்களைக் கடிதங்களாக எழுதி தன்னை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு ஓட்டமாகத்தான் இந்த இலக்கிய வடிவத்தை அச்சில் கொண்டுவந்துள்ளார்.

மூதாட்டி தன் வாழ்வை கடிதம் மூலம் மகனுடன் பகிர்ந்துகொள்வதினூடாக டென்மார்க் தேசத்து வசதியான வாழ்வும், மருத்துவ வசதிகளும், மனித உறவுகளின் தொடர்புகளும் பங்களிப்புக்களும் இந்த இலக்கியத்தில் பதிவாகின்றன. திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் தாங்கள் கண்டு கொண்ட வாழ்க்கையை கூடிப்பழகிய மனிதர்களின் உறவுகளை இங்கு நன்கு பதிவுசெய்கிறார்" என்று கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் குறிப்பிடுகின்றார்.

திருமதி கலாநிதி ஜீவகுமாரன் அவர்கள் நுழைவாயிலில் என்ற தனதுரையில் "யுத்தத்திற்கு பிள்ளைகளைக் காவு கொடுத்த ஆயிரம் ஆயிரம் என் அம்மாக்கள். இவர்கள் வரிசையில் இந்த யசோ அம்மா - இப்படிக்கு அன்புள்ள அம்மாவின் கதை நாயகி. ... புத்திர சோகம்! இது நம் தேசத்தின் சாபம்!! இந்த வலி - என் அப்பா அம்மா பட்ட வலி. என் மாமா மாமி பட்ட வலி. இது என்னையும் துரத்திய போது என்னுள் எழுந்ததுதான் இப்படிக்கு அன்புள்ள அம்மா. இது டென்னிஷ் மொழியில் கருவானது" என்கிறார்.

1. முதியோர் இல்லம் 2. ஹரி என் கனவில் வந்தான் 3. அந்த சிவத்த ரங்குப்பெட்டி 4. எனது பேரப்பிள்ளை 5. அனைத்தும் இழந்தோம் 6. அகதி முகாமில் எங்கள் வாழ்வு 7. என் உதய சூரியனே 8. பாசத்தின் போராட்டம் 9. எண்பது வயதில் ஒரு பிள்ளையைத் தத்தெடுத்தேன் 10. போய் வருகிறேன் மகனே ஆகிய தலைப்புக்களில் இப்படிக்கு அன்புள்ள அம்மா என்கின்ற காவியக் கவிதை நூல் விரிந்து செல்வதை அவதானிக்கலாம்.

டென்மார்க்கில் தனியாக காலம் கழிக்கும் அந்த மூதாட்டிக்கு இயற்கையின் அன்றாட நிகழ்வுகள் கூட தன் நிலையை உணர்த்துவதாய் கற்பனைகள் எழுந்து வதைக்கின்றன. வழமையாக நிகழும் சூரிய அஸ்தமனத்தைக்கூட தனது மகனின் பிரிவுத் துயருடன் ஒப்பிட்டு கீழுள்ளவாறு வருந்துகிறார் அவர்.

கடைசிக் காலம் எனக்கு வந்திட்டுதா? கண் கலங்குது - என் கண்மணியைக் காணாது போகப் போறன் எண்டு... அந்த சிவத்த ரோஜாக்கள் மீண்டும் என்னைப் பார்த்து சிரிக்கின்றன.. அந்திமச் சூரியன் எனக்கு கைகாட்டி விட்டுப் போவது போல இருக்குது.. அவனும் தன் தாயிடம் தான் போகின்றானா? என் மகனும் இந்த அந்திமத் தாயிடம் வருவானா? (பக்கம் 20)


தனயனின் அருகாமை இல்லாத இரவுகள் அவளுக்கு வேதனையை அள்ளித் தெளிக்கின்றன. ஆனாலும் அவள் அமைதியைத் தேட முற்படுகின்றாள். ஆழ்மனதில் கணவனின் நினைவுகள் ஊசலாடுகின்றன. மூதாட்டிக்கு தற்போது ஊன்றுகோலைத் தவிர துணைக்கென யாருமில்லை. ஊன்றுகோலையே தனது உற்ற நண்பனாக கருதும் அவள், தன்னை ஆறுதல் படுத்துவாக கீழுள்ள வரிகளில் தன்னையே ஆசுவாசப்படுத்தும் பாங்கை அவதானிக்க முடிகின்றது.

அழகிய அந்த யன்னலுக்கு வெளியே தெரியும் தெளிந்த வானமும்... கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் என் வீட்டுக்காரரை எனக்கு காட்டுகின்றன.. என் ஆன்மா அரவணைக்கப்படுகின்றது. ஷஷநிம்மதியாக தூங்கு யசோதா||
அமைதியாக சொல்லுகின்றார் - என் கண்கள் அவருள் ஐக்கியமாகின்றன! நானும் தூங்கப் போறன். நாளை தொடர்கின்றேன். (பக்கம் 24)

மகனே! அதிகாலை ஐந்து மணி அவசரப்பட்டு விழித்த கண்கள் மூட மறுக்கின்றன.. இரண்டு கால்களிலும் வலி இடது முழங்காலில் இன்னும் வலி.. கைத்தடியை எடுத்துக்கொள்கிறேன். என் புதிய நண்பன் அவன்! அவனின் துணை இனி எனக்கு எப்பவுமே வேண்டும். கைத்தடி இல்லாமல் இனி என்னால் நடக்க முடியாது (பக்கம் 37)

மகனை யுத்தத்தில் தொலைத்தது போல் அல்லாமல் அவனது ரங்குப் பெட்டியை ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும் அவள் தன்னுடனேயே கொண்டு வந்து விடுகின்றாள். மகனைத்தான் காணவில்லை. சிறுவயதில் அவனது பிஞ்சுக் கரங்கள் தொட்டு விளையாடிய அந்த விளையாட்டுப் பொருட்களாவது அந்தக் கிழவியை ஆறுதல்படுத்துமா? கீழுள்ள வரிகளின் அந்த ஏக்கம் துளிர்ப்பதைக் காணலாம்.

ஞாபகமிருக்கா ஹரி உன் விளையாட்டுப் பெட்டியை? சிவப்பு நிற ரங்குப் பெட்டி உன் விளையாட்டுப் பொருள்கள் அத்தனையும் அதனுள்ளே! அவற்றுடனேயே விளையாடிக்கொண்டிருப்பாய்.. அதனுடனேயே அயர்ந்து தூங்கிவிடுவாய்.. அம்மா என்னுடனே அதை எடுத்து வந்துவிட்டேன் இந்த பனிபடரும் தேசத்திற்கு! ஒவ்வொரு இடப்பெயர்விலும் அதனை மட்டும் என் கையில் எடுத்துவிடுவேன் உன்னைத் தொலையவிட்ட மாதிரி அல்லாது! (பக்கம் 38)

என் நாடிகளிலும் நாளத்திலும் இரத்தம் ஓடும் வரை.. இதயத்தின் சுவர்கள் சந்தம் மாறாமல் அடிக்கும் வரை..
சுவாசப்பைகள் இரண்டும் விரிந்து மூடும் வரை.. காதுகள் உன் குரலைக் கேட்கும் வரை.. கண்கள் உன்னைக் காணும் வரை.. உன் ரங்குப் பெட்டியுடன் இந்தத் தாய் காத்திருப்பாள்! (பக்கம் 44)

போரின் வடுக்களைப் பற்றி அந்த மூதாட்டி சொல்லும் கதைகள் வாசக உள்ளங்களையும் கவலையில் மூழ்கடித்து விடுவதை மறுக்க முடியாது. யதார்த்தமாக கதையின் பாங்கு நகர்த்தப்பட்டிருப்பதினூடாக அந்த சமூகத்தின் அவலம் எமக்கு நன்கு புலப்படுகின்றது.

ஆகாயத்தில் இருந்து தரையை நோக்கி வான வேடிக்கை தொடங்கியது.. இல்லை உயிர்வேட்டை தொடங்கியது!
எங்கள் கிராமம் உழப்பட்டது! எங்கள் வீடு எரிந்துவிட்டது! மரண பயத்தை கையால் தொட்டுப் பார்த்த முதல் கொடிய இரவு அது! நடுங்கின கைகள்.. உதறிய உடம்பு.. தடுமாறின சொற்கள்.. வேறு வழியில்லை இடம்பெயர்ந்தோம்! இரண்டாம் தடவை என் தொப்புள் கொடி அறுந்தது.. குண்டுவீச்சு தந்த இரத்த வெள்ள மரணத்தில் நெளிந்தோம். விடியலில்லாத இரவை சந்தித்த வாழ்வின் முதல் நாள் அது (பக்கம் 63)

தனது அந்திம காலத்தின் தான் ஓடியாடி விளையாடிய ஊரை ஒருமுறையாவது காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு யசோதா கிழவிக்கு ஏற்படுகின்றது. எனினும் அது சாத்தியப்படக்கூடிய விடயமில்லை. ஆதலால் அவளது உள்ளம் இவ்வாறு மௌனமாக கதறி அழுகின்றது.

ஹரி! எனக்கு பறக்கும் கம்பளம் ஒன்று அனுப்பி வைப்பாயா? சிவத்த பறக்கும் கம்பளம்! அதில் பறந்து என் தாயகத்திற்குப் போக வேண்டும். கிளித்தட்டும் எட்டுக் கோடும் விளையாடிய மண்ணில் என் சிறு கை அளாவ வேண்டும். கைகளை விரித்தபடி மழை பெய்யும் பொழுது.. வானத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். வெள்ளம் மூடிய வயல் காணிகளில் நடந்து நடந்து போக வேண்டும். நெல்லின் கதிர்கள் என் கால்களுடன் கதை பேச வேண்டும். பள்ளிக்குச் செல்லும் பின் வளவு ஒழுங்கையூடே கைகளினால் கார் விட்டபடி ஓட வேண்டும். நான் சின்னப் பெண்ணாக வேண்டும். என் தாய் மண்ணில் விளையாட வேண்டும். பாழாய்ப் போன போர் எல்லாத்தையுமே பந்தாடிவிட்டது. பஞ்சாக்கிவிட்டது. (பக்கம் 90)

இன்று எல்லோரையும் தொற்றிக்கொண்டு விட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக்கிலும் தனது மகனைத் தேடியதாய் சொல்லியிருக்கிறார் அந்த மூதாட்டி. என்றாவது மகன் அதனைக் காணக்கூடும். கண்டால் அவளைத்தேடி வரக்கூடும் என்ற அந்த தாயின் எதிர்பார்ப்பு மனதை கனக்கச் செய்கின்றது.

உனக்குத் தெரியுமா? ஃபேஸ் புக்கில் உனக்கொரு பக்கம் ஒதுக்கி உன்னைத் தேடினேன். ஒரு நாள் நீ அதைக் காண்பாய். என்னிடம் வருவாய். இது கதையல்ல என் கண்ணா.. இது நிஜம்! (பக்கம் 97)

கதையின் இறுதியில் கலாநிதி ஜீவகுமாரன் வாசகர் மனதை அப்படியே கவலையால் துடிக்க வைக்கின்றார். காரணம் உலகத்தில் பரவி வரும் புற்றுநோய் மூதாட்டிக்கும் ஏற்பட்டுவிட்டது என்று மாத்திரம் கூறாமல் அது நோயாளிகளின் புறத்தோற்றத்தை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது. அந்த மாற்றத்தை யசோதாக் கிழவி எந்தப் பாங்கில் வெளிப்படுத்துகிறாள் என்பதை வாசிக்கும் போது கதாசிரியர் வெற்றி பெறுகின்றார் என்றே கூற வேண்டும். அந்தக் கொடுமையை விபரித்து இருக்கும் விதம் இப்படி வருகிறது.

ஹரி! நான் சொல்வதைக் கேட்டு நீ கலங்காதே. வைத்தியசாலையிடம் இருந்து இறுதி முடிவு வந்தது. உன் அம்மாவுக்கு புற்று நோயாம். மரணத்தின் வாசலுக்கு மெது மெதுவாய் அழைத்துச் செல்லும் புற்று நோயாம்!! (பக்கம் 140)

உனக்குத் தெரியுமா ஹரி! இங்கு ஒரு ஒற்றுமை. இந்த வார்டில் ஒருவருக்கும் தலையில் முடியில்லை. கண்ணில் இமையில்லை. கான்சர் பேசண்ட் சங்கத்தின் முத்திரை இது. ஊதாக் கதிரின் வெப்பத்தில் இந்த ஊளைச் சதையில் தொங்கி நிற்கும் அத்தனை மயிர்களும் கொட்டிவிடும். நீ அம்மாவைப் பார்த்திருந்தால் பயந்திருப்பாய். இங்குள்ள அனைவருக்கும் இருட்டும் ஒன்றே. வேதனையும் ஒன்றே!! வலிகளும் ஒன்றே!!! (பக்கம் 145)

யசோதாவின் இறுதிக் காலங்கள் ஹெஸ்பிக் என்ற ஆசிரமத்திலேயே கழிகிறது. அன்னையர் தினமொன்றில் அவளது மற்ற பிள்ளைகள் ரோஜாக்களை அன்பளிப்பாக வழங்குகின்றார்கள். ஆனால் அந்த ரோஜாக்களிலும் கிழவி தனது இறுதி நாட்களையே காணுகிறாள். ஹரியின் குரலையாவது கேட்காமல் தனது இதயம் செயலிலழந்து விடக்கூடாது என கடவுளிடம் மன்றாடுகிறாள்.

ஆனாலும் என்ன ஹரியின் குரலையும் கேட்காமல், அவனையும் பார்க்காமல் பிரிவுத்துயரிலே கழிந்து வந்த அவளின் வாழ்க்கைப் பயணம் காலனின் கைகளுக்குள் அமிழ்த்தப்படுகின்றது. ஆம் யசோதா இறந்துவிடுகிறாள்! புத்தகத்தை வாசிக்கும் தொடக்கத்திலிருந்து கிழவி மகனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் புத்தகத்தை படிக்கும் எங்களுக்கும் தொற்றிவிடுகிறது. எனினும் ஹரியைக் காணாமலேயே கிழவி இறந்த பிறகு எங்கள் மனசும் விம்மி அடங்குகிறது.

திரு. ஜீவகுமாரன், திருமதி. கலாநிதி ஜீவகுமாரன் ஆகிய இலக்கிய தம்பதியரின் இலக்கிய முயற்சி இன்னும் தொடர எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - இப்படிக்கு அன்புள்ள அம்மா (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - கலாநிதி ஜீவகுமாரன்
தமிழில் - வி. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கியப் பாலம்
தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com

Saturday, August 20, 2011

12. நீலாவணன் காவியங்கள் தொகுதி

நீலாவணன் காவியங்கள் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

கவிஞர் நீலாவணன் 1931 இல் பிறந்தவர். பிராயச்சித்தம் என்ற சிறுகதை மூலம் 1952 இல் எழுத்துலகில் பிரவேசித்தவர். அன்னார் இயற்கை எய்தும் வரை ஒரு கவிஞராகவே வாழ்ந்துள்ளார். பல்வேறு இலக்கியத் துறைகளில் அவரது பங்களிப்பு விரவிக் காணப்பட்டிருந்தாலும் தன்னை ஒரு கவிஞராக நிலை நிறுத்தி இலக்கிய உலகுக்கு அவர் செய்த சேவைகள் ஏராளம். ஈழத்து கவிதையுலகில் அவருக்கென்று ஒரு தனியிடம் உண்டு. பெரிய நீலாவணையிற் பிறந்தவரான கேசகப்பிள்ளை சின்னத்துரை ஆகிய இவர் ஊரின் மீதுகொண்ட பற்றுக் காரணமாகவே நீலாவணன் என்ற பெயரைப் பயன்படுத்தி வந்தார்.

நீலாவணன் காவியங்கள் என்ற தொகுதி நன்னூல் பதிப்பகத்தினூடாக 112 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. இந்த நூல் கவிஞர் நீலாவணனின் மூன்று காவியங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. பட்டமரம், வடமீன், வேளாண்மை ஆகிய காவியங்களே அவையாகும். நீலாவணனை நிலவுக்கு ஈந்த அவர் தாயார் தங்கம்மா தாளடிக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந் நூலுக்கான பதிப்புரையை கவிஞர் நீலாவணனின் மகனான திரு. எஸ். எழில்வேந்தன் வழங்கியுள்ளார். மிகப் பொருத்தமான முறையில் இரட்டை மாட்டு வண்டியில் நெல்லு மூடைகளை ஏற்றிச்செல்லும் காட்சி நூலின் முகப்போவியத்திற்கு அழகு சேர்த்திருக்கின்றது. அண்ணன் நிலாவணனுக்கு என்ற தலைப்பில் திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் கவிஞர் நீலாவணன் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

'நம் காவிய மரபுகள் எப்படி இருந்தாலும் அவைகளை அப்படியே தூக்கி வைத்துவிட்டு நவீன வாழ்வின் கதையை யதார்த்தமாகவோ குறியீடாகவோ செய்யுளில் வடித்துக் காட்டிய மூவர்களில் நீயும் ஒருவன். மூத்தவர் மஹாகவி அடுத்தது நீயும் முருகையனும். உன் வழியும் ஒருவிதமான கதை கூறும் காவியப் பொலிவுடைய நெடும்பாடல்தான். உங்கள் காவியங்களைக் கதைப் பாடல்கள் என்றும் சொல்லலாம். மரபுக் காவியங்களில் உள்ளது போலவே நவீன காவியங்களிலும் கதை பிரதான அம்சம். கதையின் சரடு இல்லாமல் காவியப் பொருள் விரியாது. உனது காவியங்களில் மூத்தது பட்டமரம். 1956 வாக்கில் எழுதியிருப்பாய். அடுத்தது வடமீன். பட்டமரத்திலிருந்து வடமீன் பெற்றுள்ள பாய்ச்சலுக்குக் குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். வேளாண்மை அறுபதுகளின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்டு அடுத்த பத்து ஆண்டுகளின் பருவங்களில் வளர்ந்திருக்கும்'.

பட்டமரம் காவியம் 39 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. பண்ணையாரிடம் பணிபுரியும் பரந்தாமன் பண்ணையாரின் மகளான பத்மாவைக் காதலிக்கிறான்;, அதனை அனுமதிக்காத பண்ணையார் பரந்தாமனைக் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் புதைத்துவிடுகின்றார். பண்ணையாரின் மகளும், பரந்தாமனின் காதலியுமான பத்மா கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறார். இவற்றைக் கண்ட பட்டமரம் ஒன்று கதை சொல்வதாகவே இந்த பட்டமரக் காவியம் அமைந்திருக்கிறது. இரசனைக்காக ஒரு சில வெண்பாவை இங்கு நோக்கலாம். (பக்கம் 06)

"பரந்தாம னுங்களது பாட்டைப் படித்தா(ல்)
இரங்காதாருள்ள மிரங்கும் - பறந்தோடிச்
சென்று தவம் நீங்கள் செயவேண்டா மிங்கேயே
என்று மிருப்போ மிணைந்து"

பத்மா வுரைத்தாள் பரந்தாமன் கேட்டதனைப்
"பத்மா விதென்ன பரிகாசம் - பித்திலையே!
ஏழைக் கணக்கனுக்கு ஈவா ரெவருன்னை
நாளை யெனக்கு நமன்!"

"ஏழை பணக்கார னில்லையன்பா! காதலுக்கு
கோழைபோன் றெல்லாங் கூறாதீர் - ஏழைதான்
எட்டி! மரமதனை ஏற்றே அரசொன்று
ஓட்டி வளர்த்திருப்ப தோர்!

அடுத்தது வடமீன் காவியம். இக்காவியம் 47 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. தனது ஊரிலிருந்து கொழும்புக்கு வந்து குடியேறிய தம்பதிகள் பற்றிய கதைதான் வடமீன் காவியம். கணவன் தன் வீட்டில் வாடகைக்கு இருக்கும் இளைஞனோடு தொடர்புபடுத்தி தன் மனைவியை சந்தேகிப்பதும், பின்னர் எப்படியோ பிரச்சினை தீர்வதுமாக இக்காவியம் அமைந்துள்ளது. மாதாந்தம் சம்பளம் பெறுவோரின் திண்டாட்டங்கள், சிக்கல்கள், போராட்டங்கள் இக்கதையினூடு நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். (பக்கம் 14)

'பட்டிக்காட்டாளே, ஈது
பாராளு மன்றம் என்னுங்
கட்டிடம் கோட்டைப் பார்த்துக்
கடவையில் நடவும்; நில்! இம்
எட்டிவை காலை: 'காலான்'
இடறுதோ? கடவுளே... சீ!
கட்டதை இறுக்கி; 'கோல்பேஸ்'
கடற்கரை இதுதான் கண்ணே!

இறுதியாக வேளாண்மைக் காவியம். இது கவிஞர் நீலாவணனின் கடைசிக் காவியமாகும். இக் காவியத்தின் படலங்களுக்கு கவிஞர் மிகப்பொருத்தமாக குடலை, கதிர்ப்பருவம் எனத் தலைப்பிட்டுள்ளார். குடலைப் பருவமானது பல்வேறு தலைப்புக்களில் 148 விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது. இது போலவே கதிர்ப் பருவமும் பல்வேறு தலைப்புக்களில் 125 விருத்தப் பாக்களால் விரிந்து செல்கின்றது.

வேளாண்மைக் காவியத்தில் உதாரணத்திற்காக சிலதைப் பார்ப்போம்.

ஆரங்கே? பொன்னம்மா உன்
அடுப்படி அலுவல் ஆச்சா?
நேரமும் கடந்து போச்சே!
நீ என்ன செய்கின்றாய் போய்ச்
சோறெடு, சிவசிவா... ஏய்
சுரைக் காயை என்ன செய்தாய்?
நீறினை நெற்றியிட்டு
நெஞ்சினை வயலில் விட்டுச்
சோறொடும் மீனைப்பிட்டுச்
சுவைக்கின்றார் கந்தப்போடி

சோக்கான கறிகா! தோலிச்
சுண்டலில்வை: முன் னால் நான்
கேட்காமல் அள்ளி வைப்பாய்,
கிழவனாய்ப் போனேன் பாரு!
காக்கையேன் பகல் முழுக்கக்
கறுபுறுக்கிறதோ? சேதி
கேட்கவோ, வீட்டுக் காரும்
கிளை வழி வருகின் றாரோ?...

ஆனாலும் இது ஒரு முற்றுப்பெறாத காவியமாக எழுதப்பட்டிருப்பதாகவே கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். எவ்வாறாயினும் இதனை படித்து பயன்பெற வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இந்த அற்புதமான காவியத்தை நீங்களும் படித்து பயன்பெற உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்!!!

நூல் - நீலாவணன் காவியங்கள்
நூலாசிரியர் - நீலாவணன்
வெளியீட்டாளர் - எஸ். எழில்வேந்தன்
தொலைபேசி - 0777 313720
விலை - 300/=

Thursday, June 30, 2011

11. இதயத்தின் ஓசைகள் - கவிதைத் தொகுதி

இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஈழத்தின் பெண் கவிஞர்கள் வரிசையில் கலைப்பட்டதாரி ஆசிரியரான ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களும் இணைந்துகொள்கிறார். தனது கவிதைத் தொகுதியாக இதயத்தின் ஓசைகள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டிருக்கும் இவர், விடியலின் விழுதுகள் (சிறுகதைத் தொகுதி), முதிசம் (பொன்மொழித் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியராகவும் காணப்படுகிறார்.

ஆசிரியர் தொழிலை பெரும் சேவையாக மேற்கொண்டு பல மாணவர்களுக்கு அறிவுக்கண் கொடுத்தவர் ஸக்கியா அவர்கள். அதனால் பல மாணவர்கள் இன்றும் அவரை நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள என்ற சிறந்த ஆய்வு நூலையும் எழுதி பலரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவரது எழுத்து ஆளுமைக்கு இந்நூல் சிறந்த சான்று. அந்த எழுத்து ஆளுமையோடு கவிதைத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். என்று தனது அணிந்துரையில் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கான கவிதைகளும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான கவிதைகளும் இந்தக் கவிதைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ளன. மொத்தத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய விதத்தில் இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுதி அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இத்தொகுதியில் சமாதானம், தாயின் பெருமை, ஒற்றுமை, அறிவுரைகள், உழைப்பின் மகிமை, போர் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

தாயின் கருவறை சுகம் இந்த உலகத்தில் எந்த பாகத்திலும் கிடைக்காது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கருவறை என்பது மிகவும் பாதுகாப்பானதொரு இடம். குழந்தையாக நாமிருந்தபொழுது இந்த உலகத்தின் எந்தவித அக்கிரமங்களும், நோய்நொடிகளும் எம்மைத் தாக்கும் வீதம் மிகக்குறைவு. தன் கண்ணைப்போல நம்மை நேசிக்கும் ஒரேயொரு உயிர் நம் தாய் மாத்திரம்தான். உலகத்தில் யாரை நாம் நேசித்தாலும் அல்லது யார் நம்மை நேசித்தாலும் அதில் ஒரு சுயநல உணர்வு கலந்திருக்கும். ஆனால் அத்தகைய எந்த உணர்வும் இன்றி நூறுவீத அன்புடன் பழகும் தாயின் பெருமை அம்மா வேண்டும் (பக்கம் 17) என்ற கவிதையில் இப்படிக் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.

அம்மா வேண்டும் எனக்கு ஓர் அம்மா வேண்டும். அள்ளி அணைத்து ஆறுதல் தந்திட எனக்கு அம்மா வேண்டும். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் இப்பாரினில் எதற்குமீடாகா அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். பள்ளி விட்டுத் துள்ளி வரும் என்னை அள்ளியணைத்து முத்தமிட்டு பக்குவமாய் வளர்த்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும். அன்னைக் கீடான ஓருயிர் ஆயிரம் தேடினாலும் உண்டோ உலகில் ஆறுதல் அளித்தெனைக் காத்திட அம்மா வேண்டும். எனக்கு ஓர் அம்மா வேண்டும்.

ஏமாற்றங்களும், களவு பொய் புரட்டுக்களும் நிறைந்த உலகத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எதிரி யார் என்று தெரியாமல் அல்லாடிக்கொண்டிருக்கின்றோம். உற்ற தோழர்களை சந்தேகப்படுமளவுக்கு சிலரின் நடவடிக்கைகள் துரோகமாய் அமைந்துவிடும் துரதிஷ்டங்களைப் பரவலாக சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகையதொரு நிலைமையினை நம்ப நட நம்பி நடவாதே (பக்கம் 18) என்ற கவிதையினூடாக அறிவுரை கூறுகிறார் இப்படி

உள்ளத்தில் நஞ்சு வைத்து உதட்டினிலே அமுதம் வைத்து பள்ளத்தில் தள்ளி விடும் பாவிகள் தான் எத்தனை பேர்? கள்ளமாகப் பழகிக் காரியம் சாதித்து குள்ள நரிகளாய் வாழும் கயவர்கள் எத்தனை பேர்? நல்லவன் போல் நடித்து நயவஞ்சகம் புரியும் நண்பனை நம்பியதால் நாதியற்றோர் எத்தனை பேர்?

மழையில்லை என்று வாய்கிழியப் பேசும் நாம் மரம் வளர்ப்பதை மாத்திரம் ஏனோ மறந்து போகிறோம். மரங்களற்ற பொட்டல் வெளியில் மழை வரும் வரை காத்திருத்தல் எத்தனைப் பெரிய முட்டாள் தனம்? காடுகளை அழித்து கட்டடிடங்களை நிர்மாணித்துச் நச்சுப் புகையை சுவாசிப்பதால் எவ்வளவு நோய்களுக்கு ஆளாகின்றோம். இதையெல்லாம் உணர்த்துமாற்போல மரங்களை நாட்டுவோம்: மாநிலம் காப்போம் (பக்கம் 24) என்ற கவிதை அமைந்திருக்கின்றது.

மனிதனோ மண்ணதன் புனிதத்தை நீக்கி
மதியினை இழந்து மறம் பல புரிந்து
மரங்களை வெட்டி மாளிகை கட்டி
மாநிலமதனை மாசுபடுத்திட்டான்
மழை வழி நீரெல்லாம் வற்றிப் போகாமல்
மரமெல்லாம் பட்டுப் போய் மணல் வெளியாகாமல்
மன்பதை வாழ்வெல்லாம் கருகிப் போகாமல்
மரங்களை நாட்டுவோம் மாநிலம் காப்போம்

யாருடைய தலையெழுத்து மாறினாலும் தோட்டத்தொழிலாளர்களின் தலையெழுத்து மட்டும் இத்தனைக் ;காலங்களாக இன்னும் மாறவில்லை. அந்த பாவப்பட்ட ஜீவன்கள் பரம்பரை பரம்பரையாக பலருக்கும் அடிமைப்பட்டு முறையாக உண்ணக் குடிக்க வழியில்லாமலும், உடுத்துவதற்குரிய துணியில்லாமலும் அவதிப்படுவது கண்கூடாக நடக்கின்ற விடயம். மலையக சிறுமிகளை தலைநகரத்தில் உள்ள பெரிய பணக்கார வீடுகளுக்கு வேலைக்கு அனுப்புதல், பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டிய காலத்தில் கடைகளில் வேலை செய்யும் வாலிபர்கள் என்று அவர்களது வாழ்க்கை தன்னிச்சையின்றியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.

வெயில் மழை பாராமல் மலைகளில் தேயிலை பறித்து தமது ஜீவனோபாயத்தை நடத்துகின்ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் ஒரு மங்கை பற்றிய தனது ஆதங்கத்தை தேயிலைத் தோட்டத்தில் மாடாக உழைத்து ஓடாகிப் போன மங்கையே (பக்கம் 25) என்ற கவிதையில் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்.

கொழுந்து கொய்து கொய்து உன்
கொடும் பசியைத் தீர்த்திடும்
கொடியே உந்தன் வாழ்வினில்
கொடுமை என்று நீங்குமோ?
முதுகில் கூடை சுமந்ததால்
முள்ளந்தண்டு வலிக்குதோ
முதுமை காணும் வரையிலும்
முடிவே இன்றி உழைப்பதோ?

இன்று பணக்காரர்களாக நம்மத்தியில் வாழும் பலரை நாம் அவதானித்திருக்கின்றோம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர்தான் உண்மையில் நல்மனம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள். வேறு சில பணம் படைத்தவர்கள் தாமும் தங்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருந்தால் போதும் என்ற கீழ்த்தரமான எண்ணம் மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பள்ளிப் படிப்புக்கு பணமின்றி தவிக்கும் ஒரு மாணவனின் துன்பமோ, உண்ண உணவின்றி பசியால் வாடும் ஏழைகளின் கதறல்களோ, திருமணம் முடிக்க அத்தனை தகுதியிருந்தும் சீதனம் கொடுக்க வழியில்லாமல் ஏங்கும் அபலைகளின் உஷ்ண மூச்சோ இவர்களின் இதயத்தை உருக்குவதில்லை. மாறாக அவ்வாறானவர்கள் உதவி கேட்டு சென்றாலும் அவர்களை அவமதித்து அனுபபும் நிலைகள் பரவலாகிவிட்ட நிலைiயில் அவர்களின் கவனத்துக்காகத் தான் செல்வச் சீமானே என்ற கவிதை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

உண்ண உணவின்றி
உறவினர் உழல
உற்றாரும் பெற்றாரும்
ஊமை போல் வாட
உதவி செய்யாமல் வாழலாமோ செல்வச் சீமானே

இவ்வாறான மனதைத் தொடும்; கவிதைகளை கவிஞர் உணர்வுபூர்வமாக மிகவும் அற்புதமாக முன்வைத்திருக்கிறார். பல்வேறு பிரச்சனைகள், அறிவுரைகள் பற்றியும் பல கவிதைத் தொகுதிகளை வெளியிடக்கூடிய வல்லமை மிக்கவராக காணப்படுகின்றார் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள். அவரது இலக்கியப்பணி சிறக்க எமது நல்வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இதயத்தின் ஓசைகள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
வெளியீடு - முஸ்லிம் கல்வி முன்னேற்றச் சங்கம் (ஆநுPளு)
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 150/=

10. இடி விழுந்த வம்மி - கவிதைத் தொகுதி

இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சமகாலத்தில் கவிதைத் தொகுதிகளின் வரவு இலக்கியத்துறையில் அதிகமாய் அணிசேர்த்து தமிழ்ச் சுவை செழுமையுடன் இலக்கிய தாகத்துக்கு அமிர்தமாகின்றது. அந்த வகையில் இடி விழுந்த வம்மி| என்ற கவிதைத் தொகுதியின் வருகை சிறப்பாக அமைகின்றது. இந்த நூலின் ஆசிரியர் கல்முனை அபார் அவர்கள். இவர் பிரபலக் கவிஞர் சோலைக்கிளி அவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கவிதைத் தொகுதி அபாரின் கன்னித் தொகுதியாக, ஒரு உயிரின் வெளியீடாக 48 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

தொலைந்து போன கிராமம், திருடப்பட்ட இரவு, தலையெழுத்து மாறிய ஊர், சந்தையை சுமந்து வந்த பைத்தியம், என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, என்னுள் நானில்லை, பூமியை விட்டுப் பயணம், கட்டில் காதலி, மனதைச் சப்பிய மாடு, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், கவிதை பேசிய இரவு, சுவைக்காத சுதந்திரம், நன்றியுடன் நான், துளிர் - காய் - பழு, ஒரு மூடைப் பயம், காறித் துப்பிய ஜுலை, மலட்டு வானம், காகக் கூடு, குட்டு வாங்கும் நகரம், எனது மயானம், சப்பாத்துக் கால் இரவு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் கவிதைத் தொகுதியில் பெரும்பாலான கவிதைகள் உருவக, உருவகித்தல்களை வெளிப்படுத்துவனவாக நிரம்பிக் காணப்படுகின்றன.

''இடக்கரடக்கல் அற்ற பச்சையான பிரதேச வழக்குகளினதும், கிராமத்தவர்களின் உருவக உருவகிப்பு பேச்சுமுறையினதும் வெளிப்போந்தலாக 1989களின் பிற்பகுதியில் கல்முனைப் பிரதேசத்தில் உருவான கவிதைச் சூழலைச் சுவீகரித்து 1990களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர்தான் அபார். ... அவரின் கவிதைகள் தனக்குரிய முறையில் தாளிதமாகி, சுதாகரித்து புதிய பரிமாணங்களைத் தொட்டது. அதன் விம்பங்களை அபாரின் இந்த இடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதியில் பார்க்கக் காணலாம். முதல் வாசிப்பில் இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகள் எல்லாமே ஒன்று போலத் தோன்றக்கூடும். மரத்தில் தாவும் குரங்குகள் எல்லாம் ஒரே மாதிரி தெரிவதுபோல - இந்தக் கவிதைப் போக்கின் பாணியில் சொன்னால் இதற்குக் காரணம் இந்தக் கவிதைகளின் இடைவிடாத உருவக, உருவகிப்புத் தன்மையே.'' என்று அபாரின் கவிதைகள் பற்றி திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

இனம். மதம், மொழி, என்ற வகையில் பிரிந்து போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைந்துகொள்கிறான். இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் எவருமே கட்டுண்டுப்போகின்றார்கள். இந்த வகையில் அபாரின் இயற்கை ரசிப்புக்கு உட்பட்ட கவிதைகளாக என்னுடன் இரவைக் கழித்த நிலவு, ஆத்திரம் தீர்த்த அலை, இடி விழுந்த வம்மி, சுடப்பட்ட சூரியன், மலட்டு வானம், காகக் கூடு, வானமே வா, சூரியன் காற்று, வயிறு வற்றிய கிணறு, கடல் மாடு, நிலவுப் பெண்டாட்டி ஆகிய கவிதைகளைக் குறிப்பிடலாம்.

என்னுள் நானில்லை (பக்கம் 12) என்ற கவிதையில்

என் கண்ணைக் கொத்திக் குடிக்க
அரவங்கள் அரளுகின்றன
என் எலும்பை வேட்டையாட
நாய்கள் வட்டமிடுகின்றன

என் இதயத்தைக் கொத்திப் புரட்டி
மரவள்ளி நடலாம்!
அல்லது
கீரை விதை தூவலாம்!

இந்தக் கவிதையூடாக காதலில் தோற்றுப்போன ஒரு வெறுமைத் தன்மையை வெளிப்பட்டிருப்பதைக் காணலாம். மானம் காத்த ஆடைகளை காற்று கழற்றிக்கொண்டு போவதாக குறிப்பிடுவதிலிருந்து எல்லா வஸ்துக்களும் தன்னை பந்தாடிப்பார்க்கின்றன என்ற நிலையை இயற்கையோடு ஒப்பிட்டு மிக அருமையாக உவமித்திருக்கின்றார்.
மனதைச் சப்பிய மாடு (பக்கம் 17) என்ற கவிதையில் அழுக்கடைந்திருந்த மனம், தூய்மையாகிவிட்டது போன்றதொரு விடயத்தை இயம்பி நிற்கிறார். மாடு சாணத்தை ஈரலில் கழித்தது எனவும், அதை மொய்க்க வந்த இலையான கூட்டங்கள் இடம்மாறி சிறுகுடலில் மொய்த்து விளையாடியது எனவும் சொல்லும் கவிஞர், இறுதியாக மனமிருந்த இடம் வாசமாவது வீசட்டும் என்று கீழுள்ள வரிகளினூடாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.

போகட்டும்
ஊத்தை மனம்
மனமிருந்த இடத்தில்
மல்லிகைக்கொடி நட்டால்
வாசமாவது வீசும்!

தூக்கம் வராத தருணங்களில் பலவித கற்பனைகள் எல்லோருக்கும் எழுவதுண்டு. அந்தமாதிரியான சில அனுபவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கவிதை பேசிய இரவு (பக்கம் 21) என்ற கவிதை சுவாரஷ்யமாகவும், சிந்திக்கத்தக்கதாகவும் பயங்கரத்தை நாசூக்காக சொல்லப்பட்டதுமாக இருக்கிறது. அந்தக்கனவு கீழுள்ளவாறு வரிகள் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

தாலியறுத்த பெண்கள்
வேலி பாய்கிறார்கள்
அஹிம்சை பேசிய மனிதன்
ஆள் தின்னுகிறான்

என் பேனைக்குள்ளேயிருந்து
இரண்டு புடையான்கள்
படமெடுத்து வந்து
என் கவிதைக்கு
கொத்திவிட்டுப்போயின

சுவைக்காத சுதந்திரம் (பக்கம் 23) என்ற கவிதை காதலின் சோகத்தை சொல்லுகின்றது. சின்ன வயசில் செதுக்கியெடுத்த சிற்பிபோன்றிருந்த தன் காதலி, ஒரு குரோட்டன் இலையாய் அலறிப்பூவாய் தனக்குள் வாழ்ந்த காதலி.. இல்லாமல்போன வேதனையை வெளிப்படையாக காட்டும் கவிதையாக இதை நோக்கலாம். உலகக் காதலர்கள் அறியும் வரைக்கும் காகங்களுக்கு கத்தச்சொல்லியும், நாய்களுக்கு குரைக்கச்சொல்லியும் தனது காதலின் வேதனையை முகாரி இசைக்கிறார் இப்படி

என் சிறகு
முறிந்து விட்டது
இனி
எங்கே போவேன்?
யாரைத் தேடுவேன்?

என் இதயம்தான்
இருந்தென்ன
இறந்தென்ன
என் இதயம் போனபிறகு?

பறவைகளைப் பார்த்திருக்கிறோம். அதன் கீச்சுக்குரலைக் கேட்டிருக்கிறோம். பறவைகள் பற்றிய பல கவிதைகளை படித்துமிருக்கிறோம். எனினும் அபார் தனது காகக் கூடு (பக்கம் 34) என்ற கவிதையில் காகத்தைப்பற்றி பாடியிருக்கிறார். தினமும் பெருக்கிய முற்றத்தில் சுள்ளியும் முள்ளும் பரவிக்கிடக்கிறது. பெண் காகம் அடைகாத்துக்கொண்டிருக்கின்றது. அண்டை வீட்டுக்காரியின் கோழிகளின் இறகுகளையும், தென்னந்தும்புகளையும் கூடுகட்டுவதற்காகக் கொண்டு சென்ற காகம் அவற்றை தனது வீட்டு முற்றத்தில் போட்டிருப்பதாக கூறும் கவிஞர் தனது கற்பனையின் உச்சகட்டமாக காகத்தின் எச்சத்தை எப்படி எழுதியிருக்கிறார் என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

வாசல் முழுக்க எச்சங்கள்
மண்ணுக்கு மருதாணி போட்டாற்போல
இருக்கிறது

இவ்வாறு இயற்கையோடிணைந்த வாழ்வியலை கவிதைகளில் தத்ரூபமா தந்திருக்கும் அபார் இன்னும் பல படைப்புக்களைத் தந்து ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும் என்று வாழ்த்தி நிற்கிறேன்.

நூலின் பெயர் - இடி விழுந்த வம்மி (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - அபார்
முகவரி - 143, சாஹிப் வீதி, கல்முனை - 05.
தொலைபேசி - 0776 912029
விலை - 200/=

Thursday, June 23, 2011

09. "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" - கவிதைத் தொகுதி

"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" - கவிதைத் தொகுதி

மன்னார் நானாட்டான் பிரதேசத்தைச் சேர்ந்த பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்ற கவிதைத் தொகுதி 76 பக்கங்களை உள்ளடக்கி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது இவரது இரண்டாவது நூலாகும். ஏற்கனவே இவர் வேர்களும் பூக்கட்டும் என்ற உளவியல் நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

தியாகம் அவள் பெயர், நீதான் அவள், நீ - நட்பு - காதல், முதிர்கன்னி, செத்தா போய்விட்டேன், கல்லறைக் கனவு, எனது ஆட்டோகிராப்ஃ, ஒரு ரயில் பயணம், முள்ளிவாய்க்கால் முடிவுரை, தமிழ் சுதந்திரம், ஊர்ப் பக்கம், பயணங்கள் முடிவதில்லை, ஒரு காதல் காவியம், அடங்காத காதல், கொன்றுவிடுங்கள், மொட்டைக் காதலும் முடிந்து போன கற்பனையும், கடற்கரைக் காதல், புதுமைப் பெண்ணும் தோற்றுப்போன ஆணும் ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.


இந்தக் கவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன.

'காதலையும் கிளர்வையும், இளம் பெண்களையும் மட்டுமே கவிப் பொருள்களாகக் கொள்ளும் எம் இளைஞர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான கவிஞனாக அமல்ராஜைக் காண்கிறேன். சமூகத்தின் நிகழ்வுகளை தன் அக்கரையுள்ள சமூகப் பார்வையினால் நோக்கி ஆதங்கப்படுகிறார், ஆத்திரப்படுகிறார். தாய்மை பற்றி உருகும் கவிஞர், யுத்தம் பற்றிக் கவலைப்படுகிறார். முள்ளி வாய்க்கால் முடிவுரையை வாழ்க்கையை முழுதும் தொலைத்த ஒரு பெண்ணை முன்னிறுத்தி எம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறார். சில காதல் கவிதைகளிலும் அவரின் கவித்திறமை, காதல் உள்ளம் புரிகிறது.' என்று ஏ.ஆர்.வீ. லோஷன் அவர்கள் தனதுரையில் குறிப்பிடுகின்றார்.

அணிந்துரை வழங்கிய கவிமாமணி அகளங்கன் அவர்கள் 'இன்று ஈழத்தில் வெளிவரும் இலக்கியப் படைப்புக்களில் கவிதை நூல்களே அதிகம் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. புதுக்கவிதைத் தொகுப்புக்களே அதிகம் வெளிவருகின்றன. அதில் காதல் கவிதைகளே அதிகம் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் இளைஞர்களே அதிகமாக இத்துறை சார்ந்த நூல்களை எழுதிவெளியிடுவதே. சில புதுக் கவிதைத் தொகுப்புக்கள் வெறும் நாட்குறிப்புப் புத்தகம் போல அல்லது காதலிக்கு அனுப்ப வேண்டிய காதலனின் கடிதம் போல இருக்கின்றன. சில தொகுப்புக்கள் காதலையும் சமூகத்தையும், சம காலத்தையும் பாடுவனவாக அமைந்துள்ளன. இந்த வகையில் பி. அமல்ராஜின் கிறுக்கல்கள் சித்திரமாகின்றன என்னும் இக்கவிதைத் தொகுதி காதலோடு சமகாலம், சமூகப் பிரச்சினை என்பவற்றை கலந்ததாக அமைந்துள்ளதைப் பாராட்டலாம்.' என்கிறார்.

நூலாசிரியர் தனதுரையில் 'கவிதையை நான் அதிகம் நேசிப்பவன். அவற்றை அதிகம் வாசிப்பவனும் கூட. கவிதையை எழுதுவது சுலபம். ஆனாலும் அதை நல்ல கவிதைக்குரிய இயல்புகளுடன் காலத்திற்கு ஏற்றாற் போல் உருவாக்குவதில்தான் ஒரு கவிஞனின் வெற்றி தங்கியிருக்கிறது. அந்தவகையிலே, நானும் ஒரு நல்ல சமூகக் கவிஞனாக வெற்றிபெற வேண்டுமென்பதே எனது ஆவல். வாசித்தாலும் யதார்த்தச் சிந்தனைப் போக்கும் தரமான கவிதைகளை உருவாக்க ஊன்றுகோல்களாக அமையவல்லன.' என்கிறார்.

திருமணமாகாத ஒரு பெண்ணின் மனநிலையை முதிர்கன்னி (பக்கம் 12) என்ற கவிதையில் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். சீதனம் என்ற பிரச்சனைப் பற்றி காலங்காலமாக பேசி வந்தாலும் அது தருகின்ற காயங்கள் மட்டும் ஏனோ இன்னும் ஆறவில்லை. வாழையடி வாழையாக அந்த பிரச்சனை எல்லா சமூகத்திலும் ஊடுறுவி விட்டது. தாலி பாக்கியம் பெறாமல் முதுமையாகிக்கொண்டிருக்கும் ஒரு பெண் இதயத்தின் ஓசைகள் இவ்வாறு சோக கீதம் பாடுகின்றது.

மஞ்சத்துப் பெண்கள் கொஞ்சிக் குலாவும் முற்றத்தின் மூலையில் மூச்சுமின்றி பேச்சுமின்றி முக்காட்டோடே முப்பது வருடங்கள்... இது அலரிப் பூவும் அந்தஸ்து கேட்கும் காலம் அப்படியிருக்க இந்த அல்லிப்பூ மட்டும் ஏன் இன்னும் சாகாமலும் சமையாமலும் விலைபோகாமல் கிடக்கிறது? கையிலில்லை - எங்களிடம் ஆனால் கைகளிருக்கு. பணமில்லை உண்மைதான் மனமிருக்கு - நல்ல குணமிருக்கு...

செத்தா போய்விட்டேன் (பக்கம் 18) என்ற கவிதையில்

ஓர் அந்திப் பொழுதின் முந்திப் பார்க்கும் பிந்திய பகல்களுக்;குள் சிக்கிக் கேட்கும் யுத்த விமானங்களின் குண்டு மழையில் நனைந்து கரைந்த வலது கையும்... வெட்ட வெளியில் விட்டு வந்த வீட்டுப் பொருட்களை மீட்கப்போய், நட்டு வைத்த கன்னி வெடியில் காலை வைத்து மண்ணோடு போன மற்றொரு காலும்... என் உடலில் - ஓர் உறுப்பென்று இன்று மறந்தே போனது எனக்கு... என்று கவிஞர் வேதனைப்படுகிறார். மட்டுமல்லாமல் எங்களையும் கண்கலங்க வைக்கிறார்.

கடந்த காலங்களின் பொதுமக்கள் பட்ட துயர்களை வைத்து பயணங்கள் முடிவதில்லை (பக்கம் 52) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கின்றது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாம் மடிந்து போக மாட்டோம் என்றும் வயிற்றில் உதைத்தாலும் முதுகில் பிள்ளையை சுமப்பவர்கள் தமது வீரத்தாய்கள் என்றும், இழப்பும் களைப்பும் தம்மை ஒன்றும் செய்யவியலாது என்றும் உறுதியாக கூறி நிற்கிறார். இவரது மன ஆதங்கம் நியாயமானது. இதை அவர் சொல்லியிருக்கும் பாங்கு வித்தியாசமானது.

இன்று தொடங்கிய
பயணமல்ல - அது
நாளை முடிவதற்கு
எமது பயணங்களுக்கு
எனது வயதாகிறது...
சொத்தை இழந்தோம்
செத்துவிடவில்லை
மண்ணை இழந்தோம்
மாண்டுவிடவில்லை
மானமிழந்தோம்
மண்டியிடவில்லை

ஒரு காதல் காவியம் (பக்கம் 58) என்ற கவிதை நகைச்சுவைப் பாங்கில் எழுதப்பட்டிருக்கிறது. காதலித்து ஏமாறும் ஆண்களின் வேதனையும், காதலித்தவளையே கரம்பிடித்த ஆடவனின் சோகத்தையும் நயக்கத்தக்கதாக வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு இதமாயிருக்கிறது. ஓரிரு பெண்கள் செய்யும் சில தவறுகள், சில ஆண்கள் செய்து விட்டுப்போகும் காதல் லீலைகள் காதல் என்ற வார்த்தையின் உள்ளார்ந்த சுகத்துக்கே கேடு விளைவிப்பதாக மாறிவிட்டது. தற்காலத்தில் காதல் வெறும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. இந்தக் கவிதையின் சிறப்பாக உவமான உவமேயத்தை மாலை நேரம் கவிஞரின் மனதில் எத்தகைய கற்பனையை தோற்றுவித்திருக்கிறது என்பதை நோக்கலாம்.

சோம்பல் முறிக்கும் மாலைப்பொழுது
தங்கச் சூரியனும் தாண்டமுடியாக் கடலும்
கொஞ்சம் கூட வெட்கமின்றி
ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி
முத்தமிட்டுக்கொள்ளும் நேரம்

விஷமிகளாக சமூகத்தில் நடமாடித்திரியும் இரட்டைவேடம் கொண்டவர்களுக்கு சாட்டையடியாக எழுதப்பட்டிருக்கிறது கொன்றுவிடுங்கள் (பக்கம் 65) என்ற கவிதை. நேர்மையில்லாத பார்வைகளும், மகிழ்ச்சியற்ற சிரிப்பும், உண்மையற்ற புகழ்ச்சியும், யதார்த்தமற்ற வார்த்தையும் கொண்டு போலிகளாக நடிக்குமிவர்களிடமிருந்து தப்புவதே சிறப்பானது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டும் அழகிய முன்மாதிரி இந்தக் கவிதை. இவ்வாறானவர்களுடன் வாழ்வதை விட செத்துவிடுதல் மேலானது என்ற கருத்தை இன்று பலர் சொல்வதைக் கேட்கிறோம். இந்த கருத்தை பிரதிபலிக்கும் இரு வரிகள் இவ்வாறு அமைந்திருக்கிறது.

பொய்யான வாழ்க்கை மலிந்துகிடக்கிறது இதற்குள் உண்மைகள் மட்டும் பொசுங்கித் துடிக்கிறது.. போலி முகங்களை ஒப்பனை செய்து அழகாக பொருத்தியிருக்கிறார்கள் சில மனிதர்கள்.

காதல், சமூகம், போர், தாய்மை போன்ற பல அம்சங்களை வைத்தும் கவியெழுதும் ஆற்றல் மிக்க இளம் கவிஞரான பி.அமல்ராஜ், எதிர்வரும் காலங்களிலும் இன்னும் பல இலக்கிய படைப்புக்களைத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - சிறுக்கல்கள் சித்திரமாகின்றன (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - பி. அமல்ராஜ்
முகவரி - 66, பெரியகமம், மன்னார்.
தொலைபேசி - 023 2251364, 0773 268913.
விலை - 150/=