Saturday, October 6, 2012

33. குருத்துமணல் - கவிதைத் தொகுதி

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986 ஆம் ஆண்டுகளில் `கன்னிக் கவிதை' என்ற தலைப்பில் தனது கன்னிக் கவிதையை சிந்தாமணிப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் இலக்கிய உலகுக்குள் அறிமுகமாகியவர். அக்கரைப் பாக்கியனிடம் மரபுக் கவிதைகளைக் கற்றவர். ஏற்கனவே இவர் வெளிநாட்டில் தொழில் புரியும் போது உலா, பயணம் ஆகிய நூல்களை வெளியீடு செய்துள்ளார்.

குருத்துமணல் பரப்புகளால் நிரம்பி வளியும் என் முற்றம் என்ற தலைப்பிட்டு இப்றாஹீம் எம். றபீக் அவர்கள் தனதுரையில் ஷஅன்றைய காலப் பகுதியில் மரபுக் கவிதை என்றால் தேனைத் தொட்டு நாக்கில் வைத்தாற் போல் சுவையாக இருந்தது. அப்போது புதுக் கவிதையில் எனக்கு நாட்டம் குறைவாக இருந்தது. அது மாறி, இன்றைய நிலையில் பல கோணங்களிலும் புதுக் கவிதைகள் ஆலம் விருட்சம் போல் வளர்ந்து வருகின்றன. அவற்றுக்கு ஏற்ப என்னையும், எனது நடைமுறையையும் மாற்றிக் கொண்டேன். எனக்கு தெரிந்த வகையில் இதில் புதுக் கவிதைகளை எழுதியுள்ளேன். இதிலுள்ள அநேகமான கவிதைகள் இலங்கை வானொலியான பிறை எப்.எம். இல் ஒலிபரப்பாகியவை| என்கிறார்.

பாவாணர் அக்கரைப் பாக்கியன் குருத்துமணலில் ஒரு நண்டாக உலாவுதல் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

ஷஉணர்ச்சியின் வெளிப்பாடு கவிதை என்பார்கள். உள்ளத்தில் உள்ளது கவிதை என்றும் சொல்வார்கள். அவ்வாறெனில் மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி உண்டுதானே. உள்ளம் இருக்கின்றது தானே. ஏன் எல்லோரும் கவிதை எழுதுவதில்லை? என்பதெல்லாம் எமக்குள் எழும் வினாக்கள். கவிதை எழுதுவதற்கு ஆர்வம் உள்ளவர்கள், அதனால் உந்தப்பட்டவர்கள் கவிதைகளைப் படிக்கிறார்கள். ஒவ்வொரு கவிதையாகத் தன்னிடமிருந்து பிரசவிக்கிறார்கள். இதனைத்தான் கவியரசு கண்ணதாசனும் படிக்க படிக்க வரும் கவிபோலே தினம் பழகப் பழக வரும் இசை போலே என்றும், ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா. இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா என எமக்குத் தந்த பாடல்களின் வரிகளிலே துல்லியமாகச் சொல்லி இருக்கிறார். இவ்வாறு தான் எமது கவிஞரிடமிருந்து வெளிப்பட்டது குருத்துமணல் கவிதைகள். கவிதைகளுக்குரிய படிமச் சிறப்பும், ஓசை நயமும் இவற்றில் உள்ளதை நாம் உணர்வோம் என்கிறார்.

இனி இப்றாஹீம் எம் றபீக் அவர்களின் கவிதைகளைச் சுவைத்துப் பார்போம்.

ஒரு பெண்ணாணவள் தாய்மையடைவதில் தான் பூரணமாகிறாள். பூரிப்பாகிறாள். குழந்தைச் செல்வம் இல்லாது போனால் வாழ்வே இருண்டது போல் ஆகிவிடும். மற்றவரிகளின் கேளிப் பேச்சுக்களாலும் முனசுடைந்து விடக் கூடிய சூழ்நிலை உருவாகும். அவ்வாறு உடைந்த ஒரு மனசின் ஓலம் (பக்கம் 17) பிரார்த்தனை என்ற முதலாவது கவிதையின் பின்வரும் வரிகளில் புலப்படுகிறது.

என் வாழ்வை எண்ணியெண்ணி
என்றும் நான் கலங்குகிறேன்
என் ஆசைக்கோர் குழந்தையின்றி
எந்நாளும் அழுகின்றேன்.

மாதர்கள் கூடி நின்று
மலடி யென் றழைக்கிறார்கள்.
அன்பிலோர் வார்த்தையின்றி
அனுதினமும் வதைக்கிறார்கள்..

ஆண்டவா எனக்கோர் மகவை
மடிதனில் நீ தர வேண்டும்.
அடியேன் குறைகள் தீர்த்து
அவனியில் வாழ வேண்டும்.

நித்தமும் சுத்தமாய் இரு (பக்கம் 27) என்ற தலைப்பில் அமைந்த கவிதை சுகாதாரம் பற்றி பேசுகின்றது. இன்று பல நோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் சுகாதாரம் சுத்தம் இன்மையேயாகும். அதனால் டெங்கு, மலேரியா போன்ற பாரதூரமான நோய்கள் ஏற்படுகின்றன. உடல் சுத்தம், உடை சுத்தம் எவ்வாறு முக்கியமோ அதே போல் சூழல் சுத்தமாக இருப்பதும் அவசியம். அதை வழியுறுத்தும் கவிதை வரிகள் இதோ..

சுற்றுச் சூழலை
சுத்தமாக வைத்திரு
மா மனிதா - அச்
சூழல் உன்னை
சுத்தமாக வைத்திருக்கும்
மிக இனிதா
..........
டெங்கு வருவதை
தடுப்போம் மனிதா
அது சில நேரம் உயிரையும்
காவு கொள்ளும் பெரிதா

தண்ணீர் மனிதனுக்கு உயிர் போன்றது. ஆகாரம் இன்றி ஓரிரு நாட்கள் இருக்க முடியுமாக இருந்தாலும், நீர் இன்றி ஒரு மனிதனால் வாழ்வது மிக மிகக் கடினம். ஒரு சொட்டு நீருக்காக பல சண்டை சச்சரவுகள் நிகழ்வதைக் கூட கண்கூடாக காண இயலுமான காலகட்டம் இது. தண்ணீரின் பெருமை பற்றி பேசுகிறது தண்ணீர் (பக்கம் 31) என்ற தலைப்பில் அமைந்த கவிதை.

இயற்கையின் அருட்கொடைதான்
தண்ணீர்
அதை மாசுபடுத்தினால்
பொது நலவாதிகள்
விடுகின்றனர் கண்ணீர்
....................
அழுக்கான அத்தனையும்
தூய்மை செய்யும் தண்ணீர்
உன்னையும் என்னையும்
உயிர்வாழ வைப்பதும் தண்ணீர்

மக்கள் மனதில் மனதில் அன்பு ஊற்று வற்றிவிட்டதால் முதியோர்கள் அவசியமில்லை என்ற எண்ணம் தொற்றிவிட்டது. பெற்ற தாய் தந்தையர்களை வைத்து பார்க்க மனமில்லாததால் பல முதியோர் இல்லங்கள் முளைத்துவிட்டன. கண் போல் காத்துவந்த பெற்றோரை நாம், கண் இமைக்குள் வைத்து காக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை சொல்லி நிற்கும் கவிதையாக முதியோர் இல்லங்கள் தேவையில்லை (பக்கம் 41) என்ற கவிதையைக் கொள்ளலாம்.

உன் கால்களால்
நீ உதைக்க
பாதங்களை
முத்தமிட்டாள் தாய்

இனிப்பூட்டிய
உன் தாய்க்கு - நீ
கசப்பூட்ட எண்ணாதே

உன் இதயக் கதவை
திறந்து கொள்
தாயை அதனுள் வைத்து
தாலாட்டப் பழகிக் கொள்

..........................
உன் தாயை முதியோர்
இல்லத்திற்கு அனுப்புவதை
நிறுத்திக்கொள்..

ஏனென்றால் உன்னை
உன் பிள்ளைகள்
அனுப்பத் தயங்காது...

கொடுத்த காசுக்கு மதிப்பாக இன்று பொருள் கிடைப்பது முயற்கொம்பாக இருக்கிறது. எங்கும் கலப்படம். எதிலும் கலப்படம். பாலில் நீரைக் கலக்கிறார்கள். அரிசியில் கல்லைக் கலக்கிறார்கள். பொதுவாக அனைவருக்கும் தெரிந்தவை இக்கலப்படங்கள். இவை தவிர இன்னும் எதிலெல்லாம் எதைக் கலக்கிறார்கள் என்பதை கலப்படக்காரன் (பக்கம் 47) என்ற கவிதை மூலமாக அறியலாம்.

பாலுக்குக்குள் நீரை
ஊற்றுகின்றோய்..
அதைப் பாடிப் பாடி விற்று
பையிலே பணத்தைப்
போடுகின்றாய்

சீனிப் பாகை தேன் என்று
சில மனிதர்களை
ஏமாற்றிப் பிழைக்கின்றாய்..

குரக்கனுக்குள் தவிட்டைக்
கலக்கிறாய்..

இவ்வாறான பல விடயங்களையும் தனது கவிதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியர் இப்றாஹீம் எம். றபீக் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் காத்திரமான பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூலின் பெயர் - குருத்துமணல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இப்றாஹீம் எம். றபீக்
வெளியீடு - புதுப்புனைவு இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0715675585
விலை - 250 ரூபாய்

32. தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம்

தோட்டுப்பாய் மூத்தம்மா குறுங்காவியம் பற்றிய இரசனைக் குறிப்பு

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது கவிதைப் பங்களிப்புக்களை இலக்கிய உலகில் செய்துவரும் கலாபூஷணம் பாலமுனை பாறூக் அவர்கள் எழுதிய தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதி பர்ஹா வெளியீட்டகத்தின் வெளியீடாக 87 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. இது நூலாசிரியரின் நான்காவது நூல் வெளியீடாகும். இந்த நூலாசிரியர் ஏற்கனவே பதம் (கவிதை 1987), சந்தனப் பொய்கை (கவிதை 2009), கொந்தளிப்பு (குறுங்காவியம் 2010) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் மரபு சார்ந்த கவிதைகளில் தன்னை அடையாளப்படுத்திக் காட்டிக் கொண்டாலும், நவீன கவிதைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். 

தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியத் தொகுதிக்கு 2012 கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் சிறந்த காவிய நூலுக்கான பணப்பரிசு, சான்றிதழ் ஆகியவையும், இலங்கை இலக்கியப் பேரவையின் (யாழ்ப்பாணம்)சிறந்த காவிய நூலுக்கான சான்றிதழும், 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த காவிய நூலுக்கான அரச சாகித்திய விருது, பணப்பரிசு போன்றவை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் மக்களின் பண்பாட்டுக் கோலங்களைப் பதிவு செய்திருக்கும் முற்போக்கான படைப்பு என்ற தலைப்பிட்டு பேராசிரியர் சே. யோகராசா அவர்கள் இந்நூலுக்கு சிறந்ததொரு முன்னுரையை வழங்கியுள்ளார். அவர் மிகவும் சுருக்கமாக இந்நக் காவியத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 

நீண்டகாலமாக நிலவி வரும் சமூகப் பிரச்சினை என்ற விதத்தில் பொருத்தமற்ற திருமண முயற்சியினால் முஸ்லிம் குடும்பப் பெண்ணான செய்னம்புவுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களும், விவாகரத்தினை மேற்கொள்வதும் பின்னர் தந்தையின் முயற்சியினால் ஏர்வை வண்டி இசுமாயிலை மறுமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்வதும், ஊருக்கு உதவுவதும், கணவர் மறைந்த பின்னர் அநாதரவான நிலையில் வாழ்ந்து இறுதியில் மரணிப்பதுமே இக்காவியத்தின் உள்ளடக்கமாகிறது என்று குறிப்பிடுகிறார்.

பன்னூலாசிரியர் ஏ.பீ.எம். இத்ரீஸ் அவர்கள் தனதுரையில் இந்நூல் பற்றி பின்வருமாறு சிலாகித்து குறிப்பிட்டுள்ளார். சுமார் நூறு வருடங்களுக்கு முந்திய அதற்கு முன் பல நூறு வருடங்களாக உருவாகி வந்த நமது சோனகப் பண்பாட்டின் வாழ்வியலை, அதில் பெண் பெற்றிருந்த வகிபாகத்தை, அவள் அடைந்த வெற்றி தோல்விகளை இக் குறுங்காவியம் பதிவு செய்கிறது. செவ்வியல் பிரதித் தன்மையைப் பெறுவதற்கான அந்தஸ்தை இக் குறுங்காவியம் பெறுகின்றது. 

நெல் காய வைக்கப் பயன்படுத்தப்படும் நீண்ட பாயே இங்கு தோட்டுப்பாய் என்று குறிப்பிடப்படுகின்றது. தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற இக்காவியமானது, தோட்டுப்பாய் விரித்த மூத்தம்மா, அகலக் கண் திறந்த அடக்கத்தலம், குடிசைக்கு வந்த குதூகலம், சிற்றூரில் பூத்த செய்னம்பூ, பெருமைகள் நிறைந்த பெரியம்பி, அதபாய் வளர்ந்த அழகு, பருவம் பூத்த பளபளப்பு, சுடுதண்ணி என்ற மறு நாமம், மஞ்சக் குருவி வடிவு, மருக் கொழுந்து வாசம், ஏர்வை வண்டி இசுமாயில், கலியாணம் பேசும் களிப்பு, மாற்றியெடுத்த மருதோண்டி, காவின் பதிந்த கலியாணம், மனம் பொருந்தாத மணம், ஒட்ட முடியாத உடைவு, மறுமணம் பூசிய மருக்கொழுந்து, பற்றூரில் இருந்து பயணிப்பு ஆகிய பதினெட்டுத் தலைப்புக்களில் விரிந்து செல்கிறது. 

யாரிந்த மூத்தம்மா? என்ற கேள்விக்கு கவிஞர் பின்வருமாறு பதில் சொல்லிக்கொண்டே போகின்றார். கைக் குத்தரிசியிலே இரவு உணவைத் தயாரிக்க எண்ணி அதை உண்ணாமல் போய்ச் சேர்ந்த மூத்தம்மா.. கன நாளாய் ஒரு நேர உணவினையே உண்டு கழித்திருந்த மூத்தம்மா.. மாப்பிள்ளையோடு மாட்டு வண்டியிலே வந்திங்கு சேர்ந்தவளாம்.. ஊரார் ஒரு துண்டு நிலம் உபயம் என அளிக்க வேர் பிடுங்கிக் காடழித்து வசிக்கவென இல்லிடத்தை ஏற்படுத்திக் கொண்டவளாம்.. மாப்பிள்ளையோடு மனமொன்றிச் சேர்ந்திருந்து பார்த்திருந்தோர் கண்படவே பாசத்தைப் பிழிந்தவளாம்.. கிளியும் மொழியும் எனப் பழகி அவள் அன்பினையே பொழிந்து அவரோடு பொருந்தியே வாழ்ந்தவளாம்.. இப்படி பாலமுனை பாறூக் அவர்கள் மிகவும் அழகாக இந்த தோட்டுப்பாய் மூத்தம்மா பற்றி மிகவும் ரசனையாக சொல்லிக் கொண்டு போகிறார்.

காத்தான்குடியைப் பின்புலமாகக் கொண்டு அப்துல் காதர் புலவர் அவர்களினால் உருவாக்கப்பட்ட செய்னம்பு நாச்சியார் மாண்மியம் என்னும் மிகச் சிறந்த காவியம் முஸ்லிம் மக்களது திருமணச் சடங்கை மாத்திரமே எடுத்துரைத்தது. கலாபூஷணம் பாறூக் அவர்கள் அதைவிட ஒரு படி மேல் சென்று திருமணச் சடங்கை மட்டுமல்லாமல், மையத்துச் சடங்கு முறைமை, பிறப்புச் சடங்கு முறைமை, பெரிய பிள்ளைச் சடங்கு முறைமை முதலானவை பற்றியும் இக்காவியத்தில் சுவைபடக் கூறியுள்ளார். இதனால் இக்காவியம் விஷேடமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.

செய்னம்புவை முதல்நிலைப் பாத்திரமாகக் கொண்ட கதையம்சத்தோடு தென்கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு மொழி, பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், என்பவற்றைப் பதிவு செய்யும் படைப்பாகவே இக்குறுங் காவியம் அமைந்திருக்கின்றது. அதாவது இங்கு செய்னம்பு என்ற பெண் பாத்திரத்துக்கே மிக முக்கியமான இடம் வழங்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் காவிய நூல் மிகவும் அற்புதமானது. அனைவரும் வாசிக்க வேண்டியது. ஜனாப் பாலமுனை பாறூக் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தோட்டுப்பாய் மூத்தம்மா (குறுங்காவியம்)
நூலாசிரியர் - பாலமுனை பாறூக்
வெளியீடு - பர்ஹாத் வெளியீட்டகம்
தொலைபேசி - 0775367712
விலை - 200 ரூபாய்

Monday, September 17, 2012

31. மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் - கவிதைத் தொகுதி

மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

ஜீவநதி பதிப்பகத்தின் 10ஆவது வெளியீடாக வெ. துஷ்யந்தனின் மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. இத்தொகுதி 73 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. வெ. துஷ்யந்தன் ஏற்கனவே 2010ஆம் ஆண்டில் வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 2011 இலேயே தனது இரண்டாவது வெளியீடாக மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்து, கவிதைத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார். இவர் ஜீவநதி சஞ்சிகையின் துணையாசிரியருமாவார்.

போர்க்கால கவிதைகளை சொல்வதிலும், அகநிலை சார்ந்த கவிதைகளை சொல்வதிலும் துஷ்யந்தனுக்கென்று ஒரு தனிப்பாணியுண்டு. அவரது இரண்டு கவிதைத் தொகுதிகளை வாசிக்கும் வாசகர்கள் அதனைக் கண்டுகொள்ளலாம்.



இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அகவயமானவை. அதே வேளையில் அர்த்தம் எதனையும் பாதிக்காத வெறும் மனோரதியக் கற்பனை வடிப்புகளுமல்ல. மாறாக அந்தரப்படும் ஆத்மாவொன்றின் ஏக்கப் பெருமூச்சை இக்கவிதை வரிகளில் நாமும் சுவாசிக்கிறோம். நல்ல வேளையாக ஆழ்ந்த சோகத்தினூடாக விரக்தியும், ஏமாற்றமும் தோன்றாமல் வைர நெஞ்சமும், புத்துயிர்ப்பும் தோன்றுவதனால் கவிதைதான் பிறக்கிறது என்கிறார். மேலும் துஷ்யந்தன் போர்க்காலத்தில் வாழ்ந்து, அவதிப்பட்டு மனம் சோர்ந்த வடபுல இளைஞர்கள் பரம்பரையில் ஒரு வகைமாதிரி யுவன். இந்த மகனுக்குள் சொல்லாத செய்திகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றையேனும் சொல்லாமற் சொல்லி விளங்கப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் என்றும் குறிப்பிடுகிறார்.

துஷ்யந்தன் தனதுரையில் எனது இரண்டு கவிதைத் தொகுதிகளையும் வெளியீடு செய்யும் காலப்பகுதி சிறிது காலமாக (ஒரு வருடமாக) இருப்பினும் கவிதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆரோக்கியமான மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ...படைப்பு மனம் என்பது பறந்துபட்டது. படைப்புக்கான கருவைப் பொறுத்தவரை புனைவுகளையும், கற்பனாவாதத்தையும் புகுத்துவதில் எதுவித உடன்பாடுகளும் எனக்கில்லை. உள்ளதை உள்ளவாற எழுத வேண்டும் என்பதே எனது அவா என்கிறார்.

நமது மனதுக்குள் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் விடயங்களை வெளியே சொல்ல முடியாது. இன்றைய சூழ்நிலையில் உள்ளத்தை உறுத்துகின்ற பல சம்பவங்கள் நடந்தேறியபோதிலும் அதைத் தட்டிக் கேட்கும் வழிகள் தெரியாமல் தத்தளிக்கிறோம். அவ்வாறான நேரங்களில் எல்லாம் எமது இதயத்தில் உள்ள வலிகளை வெள்ளைத் தாள்களில் மாத்திரமே பதிவு செய்ய முடிகின்றன. வாழ்வு குறித்த ஐயப்பாடுகளை சொல்லி நிற்கும் கவிதையாக புதிர்களால் நிறையும் வாழ்வு என்ற கவிதையைச் சொல்லலாம்.

வாழ்க்கையின் மௌனம் வாழ்தலை தொலைப்பதற்கான ஆயத்தங்களை அறிந்தோ, அறியாமலோ மனிதனுக்கு உணர்த்தியபடியே.. நகர்ந்து கொண்டிருக்கும் நமக்கான வாழ்தலில் நிரம்பியிருக்கின்ற பதில்கள் ஏதும் அற்ற எண்ணற்ற புதிர்களால் எதிர்காலம் மீதான எதிர்பார்ப்புக்கள் ஏதுமின்றி பயணித்துக்கொள்கின்றது இந்த வாழ்வு. (பக்கம் 10)

யுத்தம் தந்துவிட்டுப்போன தாக்கம் மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள் என்ற கவிதையில் தெரிகின்றது. தெருநாய்கள் மாத்திரமே சத்தமிடக்கூடிய கொடிய இரவுகளில் மனிதர்கள் பயந்து பயந்தே செத்துக்கொண்டிருந்த அந்தக் காலங்கள் பயங்கரமானவை, எப்போது விடியும் என்ற ஏக்கத்தில் இரவுகள் கழிந்தன என்றவாறான கருத்துக்கள் இக்கவிதையினூடு சொல்லப்படுகின்றது. (பக்கம் 22)

இன்னல்களோடு
இரண்டரக் கலந்துவிட்ட
இருண்ட இவ்
இரவுகள்
விடியலின் வருகைக்காய்
தவமிருந்தபடியே..

தூக்கமில்லாத விழிகள்
தினமும் விழித்தவாறே
விடியலை எதிர்பார்த்துக்
காத்துக்கிடக்கின்றன..

எழுத முடியாத எழில்கள் என்ற கவிதையில் வார்த்தையால் வடிக்க முடியாத சிலவிடயங்கள் பற்றி சொல்லயிருக்கிறார் துஷ்யந்தன். சில அழகான காட்சிகளையோ அழகான பொழுதுகளையோ அப்படியே வார்த்தைகளில் வர்ணிக்க முடிவதில்லை. அத்தகைய பொழுதுகளை; கீழுள்ளவையாக அடையாளம் காட்டியிருக்கிறார் நூலாசரியர். (பக்கம் 26)

சூரிய அஸ்தமனம், நிலவொளியலான இராத்திரி, நட்சத்திரக் கூட்டங்கள், கரையைத் தழுவும் அலைகள், தென்றல் மோதும் தென்னங்கீற்று, அம்மாவின் தாலாட்டு, காதலியின் கண்கள், மழலையின் சிரிப்பு இவை எல்லாம் வார்த்தைகளால் எழுதப்பட முடியாத எழில்கள்.. எழுதப் போயினும் வார்ததைகளுக்கான பஞ்சங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன..

நீயாகிப்போன நான் என்ற கவிதை காதல் கவிதையாக பரிணமித்திருக்கின்றது. ஆரம்பத்தில் காதலி தன்னை விட்டுப் போனதாகவும், அவர்களுக்குள் இருந்த நேசம் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு அண்மைக்காலமாக விசாரிப்பதுமாக இருக்கிறாள் என்றும் கூறப்படும் அதே வேளை காதலன் ஒருபோதும் தன்னிலையிலிருந்து மாறாததால் மீண்டும் காதலியின் அன்பை எதிர்கொள்கின்றான் என்ற அடிப்படையில் அமைந்தருக்கின்றது இந்தக் கவிதை. (பக்கம் 29)

வலுப்பெறும் வலிகளோடும்
உன் நினைவுகளால் விளையும்
வாழ்வனுபவ புதிர்களோடும்
புலர்ந்துவிடுகின்றது
எனக்கான விடியல்கள்..

இருப்பினும் சில
நிர்ப்பந்தங்களின்
நிமிர்த்தமாக
கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது
எனது இருப்பும் நேசமும்..

என் மீதான உன் பிரியமும்
உன் மீதான என் நேசமும்
நம் நாட்டு
போர்க்கால அகதிகளாய்
அவஸ்தைப்பட்டுக்கொள்கின்றன..

பேசா மடந்தையாய் என்ற கவிதையும் அகநிலை சார்ந்த கவிதையாக இருக்கின்றது. தனது அசைவுகள் மூலம் ஆணை தவிர்க்கும் பெண் தனக்குத் தெரியாமலேயே அந்த ஆடவனை நோக்குகின்றாள். ஆண் அந்தப் பெண்ணுடன் பேசுவதற்கான ஒத்திகை பார்க்கும் போது பெண்ணோ ஏதும் தெரியாதவளாய் கேள்விகளைத் தொடுக்கின்றாள். பெண்ணின் காதலுக்காக காத்திருக்கும் ஒருவனின் கவிதையாக இக்கவிதையைக் கொள்ளலாம். (பக்கம் 52)

எனக்குள் குவிந்து கிடக்கும்
உனக்கான வார்த்தைகள்
உன்னோடு பேசிக்கொள்வதற்கான
ஆயத்தங்களை என்னுள்
நிகழ்த்திக்கொள்கிறது..

நம்மிடையே
ஊசலாடிக்கொண்டிருக்கும்
உறவு நிலையின் மீது
ஏதும் தெரியாதவளாய் நீ
கேள்விக் கணைகளை
தொடுத்துக்கொள்கின்றாய்..

இவ்வாறான விடயங்களை உள்ளடக்கி தனது இரண்டாவது தொகுதியைத் தந்திருக்கும் துஷ்யந்தன், இன்னும் பரந்துபட்ட பல விடயங்களையும் தொட்டுக்காட்டி காத்திரமான பல கவிதைத் தொகுதிகளை வெளியிட எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - மொழி பெயர்க்கப்படாத மௌனங்கள் (கவிதை)
நூலாசிரியர் - வெ. துஷ்யந்தன்
மின்னஞ்சல் - bvthushy@yahoo.com
வெளியீடு - ஜீவநதி வெளியீடு
விலை - 200/=

Monday, August 13, 2012

30. இன்னும் உன் குரல் கேட்கிறது - கவிதைத் தொகுதி

இன்னும் உன் குரல் கேட்கிறது கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு



உதட்டில் ஒன்றோடும்
உள்ளத்தில் வேறொன்றோடும் 
புரட்டுக்கள் புரியாத 
புனித மனம் கொண்டோருக்கு 

இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை சமர்ப்பித்திருக்கிறார் ஊவா மாகாணத்தின் தியத்தலாவையை தனது சொந்த இடமாகக் கொண்ட கவிஞர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக மலர்ந்திருக்கும் இத்தொகுதி 72 பக்கங்களில் 56 கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. 


கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் தடம்பதித்திருக்கும் இவர் பூங்காவனம் என்ற காலாண்டு இலக்கியச் சஞ்சிகையின் துணை ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி அவர்கள் தனது ஆசியுரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார். 


மலையக மண்ணின் மங்கை - கவிஞை
செல்வி எச்.எப். ரிஸ்னா என்பா(ள்)ர்
நிலையிலா உலகில் தன் பெயர் நிலைத்திட
நெஞ்சமர் கவிதை நிறையவே தந்தார்.

திறந்த கதவுள் தெரிந்தவை என்ற தலைப்பிட்டு கவிஞர் ஏ.இக்பால் அவர்கள் தனது அணிந்துரையில் ஒப்பீடு, குறியீடு இவ்விரு முறைகளிலும் குறியீடுதான் கருத்தை செம்மையாக வெளிப்படுத்தும். இப்படிமம் வாசகனை உணரவைக்கும். இக்கருத்தை இத்தொகுதியில் அதிகம் காணலாம். ரிஸ்னாவின் கவிதைகளில் கற்பனை, புதிய பார்வை, பாதிப்பு மூன்றும் கலந்துள்ளன என்கிறார். 


நீ வாழ்வது மேல் (பக்கம் 13) என்ற கவிதை போலி முகம் காட்டிப் பழகும் மனிதர்களுக்கு சாட்டையடியாக விழுந்திருக்கிறது. தன்னை நல்லவன் என்று காட்டிக்கொண்டும், தனக்கு உதவியவர்களை மறந்தும் வாழும் பலருக்கு இக்கவிதை பொருத்தமான அறிவுரையைப் பகிர்ந்து நிற்கிறது. நாம் பழகும், அல்லது பழகிய பலரில் நமக்குத் தெரியாமலேயே பொறாமைக் குணம்கொண்டு குழிவெட்டுபவர்கள் இருக்கின்றார்கள். அத்தகையவர்களை கண்டாலே விலக வேண்டும் என்கிறார் கவிஞர்.

அரிதாரம் பூசாமல்
பழகு - தீயவர் உன்னருகே
வந்தாலே விலகு..
சமூகத்தில் பலபேரு
ஏமாற்றக் காத்திருப்பர்
இது தானே இன்றைய உலகு..
இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு!

கற்பு என்பது ஆண் வர்க்கத்துக்கும், பெண் வர்க்கத்துக்கும் பொதுவானது. ஆனால் பெண்கள் சறுக்கினால் சரித்திரம், ஆண்கள் சறுக்கினால் சம்பவம் என்று கணித்து வைத்திருக்கிறது இந்த குருட்டு சமூகம். எதுவென்றாலும் உத்தமமமானவர்கள் ஆண்களிலும் இருக்கிறார்கள். பெண்களிலும் இருக்கிறார்கள். அத்தகைய தூய மனம் கொண்ட ஒரு ஆணின் மனது மழை ப்ரியம் (பக்கம் 16) என்ற கவிதையில் இவ்வாறு திறந்திருக்கிறது. 

நகம் கூட உனைத் தவிர
பிற பெண்ணில் பட்டதில்லை..
உன்னையன்றிய எவளையும்
மனசாலும் தொட்டதில்லை!

பெற்றோரை, குடும்பத்தினரை, சொந்த ஊரை எல்லாம் விட்டு இன்று தலை நகரில் வந்து தமக்கான அடையாளத்தை பலர் பதிய வைக்கின்றார்கள். அவ்வாறு தனது ஆளுமையை பதிய முனையும் பலபேர்களில் கவிஞரும் ஒருவர் என்பது இக்கவிதையினூடே புலப்படுகின்றது. உம்மாவுக்கு (பக்கம் 17)

உம்மா!
பிடிக்கவில்லை..
ஊரில் நீங்களும்
தூரத்தில் நானுமாய்
இருக்கும் இந்தக்காலங்கள்!
................
................
என் வாழ்க்கையின் 
வெற்றிப் படிகளை எட்டி
நானொரு நாள்
முன்னேறி வருவேன்..
அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள்
வாப்பாவுக்கும் சொல்லுங்கள்!

ஒரு பெண் சுமங்கலியாய் வாழும் போது வாழ்த்தும் பலபேர் அவள் அமங்கலியாகிவிட்ட பின்பு திருமணங்கள், திருவிழாக்கள் போன்ற இடத்துக்கும் அண்ட விடுவதில்லை. சபிக்கப்பட்டவர்கள் போன்று அவர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். தனது துணைவிக்கு அவ்வாறானதொரு நிலைமை வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறைக் காட்டும் மரண அவஸ்தையிலிருக்கும் அன்புக் கணவனின் வேண்டுகோளாக ஒரு வீணை அழுகிறது (பக்கம் 30) என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. இன்றைய காலத்தில் விதவைகள் மறுமணம் புரிவது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். 

வெள்ளாடை தரித்து நீ
வெறுமனே இருந்திடாதே..
வாழும் வரை வசந்தமாய்
வாழுவதை மறந்திடாதே!

எச்.எப். ரிஸ்னாவின் கவிதைகளில் பல சந்தக் கவிதையாக எழுதப்பட்டிருப்பவை. இது அவரது தனித்துவ அடையாளமாகும். ஓசை நயமும், சந்தமும் இணைந்து எழுதப்படும் கவிஞரின் எல்லா கவிதைகளும் தங்கு தடையின்றி எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கின்றது. முதல் முறை வாசிக்கும்போதே மனதைத் தொட்டுவிடும் வல்லமை ரிஸ்னாவின் கவிதைகளுக்கு உண்டு. அவ்வாறான ஒரு கவிதையின் சில வரிகள் இதோ... (மரணத்தின் தேதி - பக்கம் 45)

இத்தனை நாள் 
பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம் 
தீ கருகிய வாசம்!

உன் மாற்றம் என்னுள்ளே
தீயள்ளி போடும்..
உன் நினைப்பு 
என் உயிரின் 
அந்தம் வரை ஓடும்!

கவிதைத் தொகுதியின் மகுடக் கவிதையாக விளங்கும் இன்னும் உன் குரல் கேட்கிறது (பக்கம் 60) என்ற கவிதை ஓர் ஆத்மாவின் தேடலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கவிதையின் கருத்துக்களில் சொட்டும் ஈரம் மனதிலும் கசிந்துவிடுகிறது. இதோ சில வரிகள்:-

ஷநீ தான் என் எல்லாமே|
என அடிக்கடி நீ சொன்னது
இன்னும் ஞாபகமிருக்கு!

குயிலே! 
உனதந்த குரலின்னும்
காதுக்குள் ஈரமாய் 
கேட்டுக்கிட்டிருக்கு!

மனசாட்சி இல்லாமல், அல்லது சட்டத்து புறம்பான செயல்கள் நம் கண்முன் தினமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறான சில விடயங்களைத் தொட்டுக்காட்டி கடல் கொண்டு போகட்டும் (பக்கம் 66) எனும் கவிதை எழுதப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. 

பாடசாலை பருவத்து
சிறார்களை வைத்து நிதம்
தொழில் செய்து 
பிழைப்பவர்கள் சாகட்டும்..
அவரின் அந்தஸ்து சொத்தெல்லாம்
இப்படித்தான் வந்ததென்றால்
கடல்பொங்கி எல்லாம் கொண்டு போகட்டும்!!!

பூ மலர்வது, பொழுது புலர்வது... இப்படி எல்லாமே ஒரு கவிஞனுக்கு உவகையளிப்பன தான். அவ்வாறு பிறப்பவைகள் கூட காலப்போக்கில் பனியின் தொடுகையாகவும், தணலின் சுடுகையாகவும் மாறிப் போகின்றன என்று தனதுரையில் கூறியிருக்கும் நூலாசிரியர் கவிதைகளில் அகம் சார்ந்த கருத்துக்களைத் தவிர பெண்ணியம், ஆன்மீகம், தனிமை, துன்பம், சந்தோஷம், மலையகம் சார் பிரச்சனைகள், சமூக அவலம், சீதனக்கொடுமை, சுனாமி போன்ற உணர்வுகளும் கலந்திருக்கின்றன. காத்திரமான பல கவிதைகளைத் தந்த நூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - இன்னும் உன் குரல் கேட்கிறது 
நூலின் வகை - கவிதைகள்
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
தொலைபேசி - 0775009222
விலை - 180 ரூபாய்

Friday, August 10, 2012

29. வைகறை வாசம் - கவிதைத் தொகுதி

வைகறை வாசம் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஜனாப் பௌஸ் மௌலவி அவர்கள். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் மூலம் பத்திரிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பன்முக ஆளுமை கொண்டவர்.

மார்க்கத்தின் மனக்கதவு, காதிகோட், போதனைப் பொக்கிஷம்,  நிறை மார்க்கத்தின் நிலா முற்றம், ஊடகத்தில் உதித்த உபதேசங்கள், விடியலை நோக்கிய விசுவாசிகள் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும், முஅஸ்ஸினின் முறைப்பாடு, பாரெங்கும் பலஸ்தீனம், பாசம் சென்ற பாதையிலே போன்ற கவிதைத் தொகுதிகளையும், காத்திருந்த கண்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், பேனைக்குள் பெருக்கெடுத்த பெரியவர்கள், எகிப்து முதல் இலங்கை வரை இஸ்லாமியர்களின் இசை ஞானம் ஆகிய ஆய்வு நூல்களையும் இலக்கிய உலகுக்குத் தந்தவர்.

அவருடைய வைகறை வாசம் என்ற கவிதைத்தொகுதி 65 கவிதைகளை உள்ளடக்கியதாக 83 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

பாவலர் சாந்தி முகைதீன் தனது மதிப்புரையில் ஷகடந்த மூன்று தசாப்தங்களாக எழுத்துலகில் தடம்பதித்து கதை, கட்டுரை, கவிதை, ஹாஷ்யம், துணுக்கு என்பன போன்ற சகல துறைகளிலும் தனது எழுத்தாற்றலால் அடையாளப்படுத்தியவர் பௌஸ் மௌலவி. பாவலர் பண்ணை 1980 களில் பா எனும் கவிதைச் சஞ்சிகையை வெளியிட்ட போது அதன் ஆசிரியராக இருந்து அணிசெய்தவர். வீச்சான பேச்சாளர். அடிக்கடி பகிரங்க மேடைகளிலும் வானொலி, தெலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் தோன்றி சன்மார்க்க நெறி காட்டுபவர்| என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவனை மற்றவர்கள் மதிக்கச் செய்வது கல்வியாகும். கல்வியறிவு இருந்தால் எந்த இடத்துக்குச் சென்றாலும் நம்மால் சாதிக்க முடியுமாக இருக்கும். கற்றவனும், கற்காதவனும் சமமாக மாட்டார்கள். ஒருவனுக்கு எவ்வளவுதான் செல்வங்கள் இருந்தாலும், கல்விச் செல்வமே தலை சிறந்ததாகும். அதே போல் அந்த செல்வத்தை காப்பாற்றுவதற்கும் கல்வியறிவே அவசியமாகிறது. படித்து வாழு (பக்கம் 15) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் கல்வியின் பெருமை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்றோரைக் கணம் பண்ண வேண்டும்
கற்பதிலே கடும் முயற்சி வேண்டும்
கற்றார்கள் கல்லாதார் நிலையைக்
கட்டாயம் கவனித்தல் வேண்டும்

கல்லாதார் கற்றோரை நாடி
கரைகாணாக் கல்வியினைத் தேடி
நல்லறிவை மற்றார்க்கு ஊட்டி
நலம் காண்பார் புகழ்மாலை சூடி

பொழிவிழந்த மரகதங்கள் (பக்கம் 23) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் ஒரு தாயின் இதயக்குமுறல் கொட்டப்படடிருக்கிறது. பெண்களை மணமுடித்து வைத்தல் என்பது இன்றைய காலத்தில் குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. பலர் அதனால் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து வருகின்றார்கள். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வந்த பிற்பாடுதான் புரிகிறது வாழ்க்கை முடிந்துவிட்டது என்ற கதை. அத்தகையதொரு நிலையில் வாடும் ஒரு தாயின் ஏக்கம் இந்தக் கவிதை மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

வாழ்வைத் தேடி
வீட்டுக்குள் அடைபட்டு
காலத்தைத் தாண்டும்
கண்மணி என் மகளை
சிறப்பாக வைக்கவே
சிறகடித்துப் பறந்தேன்

வாழ்க்கையின் நிர்ணயத்தை மாற்றியமைக்கப்பட்ட சமூகம் தேயிலைத் தொழிலாளிகளாவர். அன்றாடம் அட்டைக்கடியிலும், மழை, வெயிலிலும் பாடுபட்டு உழைத்தாலும் விலைவாசிக்கு ஈடுகொடுத்து வாழ இயலாதவர்கள். தாம் கஷ்டப்பட்டு பறித்த தேயிலையை இதமாக பலர் ருசி பார்க்கிறார்கள். ஆனால் தமக்கோ அதை அமர்ந்திருந்து குடிக்கும் உரிமை கூட இல்லை என்று ஏங்குமவர்களின் வார்த்தைகளாக சரித்திரம் படைக்கிறோம் (பக்கம் 34) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் கூறப்பட்டுள்ளது.

எங்கோ இருப்பவர்கள்
இதமாய்ப் படிக்கையிலே
எங்கள் கரங்களினால்
எடுத்த தேயிலையை
சாய்ந்து கட்டிலிலே
சுவைத்து மகிழ்கின்றார்!

ஐயோ ஆண்டவனே
அந்தத் தேனீரை
ஆறி அமர்ந்து
அருந்த வாய்ப்பின்றி
சக்கரமாய்ச் சுழன்று
சரித்திரம் படைக்கின்றோம்!

பிட்டு வாங்கிய குட்டு (பக்கம் 69) என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் தமிழ், முஸ்லிம்களின் உறவு நிலை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக ஒற்றுமையாய் வாழ்ந்தவர்கள் நாம். ஒருவர் துக்கத்தில் இன்னொருவர் பங்கு கொண்டு, ஒருவர் சந்தோஷத்தில் மற்றவரும் மகிழ்ந்து வாழ்ந்த சகோதரர்கள் நாம். ஆனாலும் சிலரின் தனிப்பட்ட விடயங்களுக்காக இனங்களுக்கிடையிலான வேறுபாடுகள் முளைவிடப்பட்டன. அல்லது முடுக்கிவிடப்பட்டன. நாம் எத்துணை தூரம் ஒற்றுமையாக வாழ்ந்தோம் என்பதற்கு கீழுள்ள வரிகள் சாட்சிகளாகும்.

தேங்காய் போட்ட பிட்டென்றால்
தின்பதற்கு ருசியாகும்
பாங்காய் தேங்காய்ப் பிட்டென்றும்
பிரிக்க முடியா துறவாகும்
ஓங்கும் தமிழர் முஸ்லிம்கள்
ஒற்றுமைக்கு உதாரணந் தான்
தீங்காய் யார்தான் குழி பறித்தார்?
தினமும் உறவில் தீக் குளித்தார்?

காத்திரமான பல நூற்களை இலக்கிய உலகுக்குத் தந்த மௌலவி பௌஸ் அவர்கள் பாராட்டுக்குரியவர். தனது கவிதைகளினூடே சமூகத்துக்கு நல்ல பல செய்திகளை சொல்லி நிற்கிறார். இவர் மேலும் பல்வேறு நூல்களை வெளியிட வேண்டும் என்று வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - வைகறை வாசம்
நூலின் வகை - கவிதைகள்
நூலாசிரியர் - மௌலவி காத்தான்குடி பௌஸ்
முகவரி - 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல வீதி, ஹேனமுல்லை,                                                                                                                                          பாணந்துறை.
வெளியீடு - பாவலர் பண்ணை
விலை - 150 ரூபாய்

Wednesday, June 20, 2012

28. உணர்வூட்டும் முத்துக்கள் - கவிதைத் தொகுதி

உணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு




உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நூலாசிரியர் தனது 18 வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருபவர். 2012 இல் தான் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 20 வயதிலிருந்தே கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் இலக்கிய உலகத்திற்குள் பிரவேசித்தவர். பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தராக கடமை புரியும் இவர், வை.எம்.எம்.ஏ, ஆர்.டீ.எஸ், இளைஞர் சேவைகள் மன்றம், சர்வோதயம் போன்றவற்றிற்கு தலைவராகவும், ஜாவா ஜும்மா மஸ்ஜித், ஸஹீஹுல் முஸ்லிம் சங்கம், வாசகர் வட்டம், போன்றவற்றுக்கு செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய இவர் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டுள்ளார். அந்த ஒன்பது படைப்புக்களுள் ஒன்றுதான் இந்த உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதி. சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், கிராமிய, நாட்டார் பாடல்கள், மாண்புறும் மாநபி ஸலவாத்து புகழ் பாடல், கிண்ணிய முஸ்லீம்களின் கல்விக் கண் திறந்த காசிநாதர், சிறுவர் பாடல் இறுவட்டு, கிராமியக் கவி இறுவட்டு போன்றவை இவரது ஏனைய படைப்புக்களாகும்.

உணர்வூட்டும் முத்துக்கள் என்ற கவிதைத் தொகுதியானது 83 பக்கங்களில் சிறியதும், பெரியதுமான 73 கவிதைகளை உள்ளடக்கி பாத்திமா ருஷ்தா பதிப்பகத்தினூடாக வெளிவந்துள்ளது. ஸலவாத்து, ஈமான், ஆட்சிகள் அமைந்திட வழிகள் செய்திடுவோம், இளைஞர் தலைமைத்துவம், மகிழுவோம், உத்தம நபி, தலை குனிந்து போற்றுவோம், அருள் தந்த நபி, அனைத்தும் அறிந்தவன் போன்ற ஆண்மீகம் சார்ந்த பல கவிதைகளையும், மங்கை உன்னை அடைந்திடுவேன், புறந்தள்ளிப் போட்டிடுவேன், ஏக்கம் நீங்கிட, தாங்க மாட்டாய், தவிக்கின்றாய், எகிறிடும் நெஞ்சம், அழித்துவிட நினையாதே, பொழிவாய், நந்தவனம், ஒளி பரவும், தவிப்பு, தாகம், குடும்பத்தைத் தாங்கி நின்றாய், தெவிட்டாத இன்பங்கள், தேன் கொண்ட மங்கை, வந்திடுவாய் போன்ற அகம் சார்ந்த பல கவிதைகளையும் உள்ளடக்கியதாக இத்தொகுதி வெளிவந்திருக்கிறது.

மனிதநேயம் என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் மருவி மக்கள் காழ்ப்புணர்ச்சியோடும், நயவஞ்சக உள்ளத்தோடும் பழகுகின்றனர். வார்த்தைகளினால் அடுத்தவர் மனதை வதைத்து அதில் இன்பம் காணும் இழிகுணம் படைத்தவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். தன்னைவிட எவரும் நல்ல வசதியுடன் வாழக்கூடாது அல்லது எல்லோரையும் விட நானே உயர்ந்தவன் என்ற அகம்பாவத்தில் பலர் காணப்படுகின்றனர். அடுத்தவர் மகிழ்ச்சியாயிருப்பதை ஜீரணிக்கக் கஷ்டப்படுகின்ற பல வஞ்சக நெஞ்சங்கள் அவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும். இத்தகையவர்கள் பற்றி நேர்மையில்லா மானிடம் என்ற கவிதையில் (பக்கம் 08) பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

வஞ்சனை செய்து
வசை பாடும்
மகிழ்வு
மிஞ்சுகின்ற
காலம்
மிகைத்துப்
போகும் கோலம்..

நெஞ்சில்
வார்த்தை
ஆயுதங்கள்
பாயும்
நஞ்சுப் பகைகள்
பரவி
உடலேறும்
நய வஞ்சக
முக மலரும்..

மனிதர்கள் மதிக்கப்படாத இந்தக் காலத்தில் காலுக்குப் போடும் செருப்பையா யாரும் மதிக்கப் போகின்றார்கள்? மதிப்பு என்ற கவிதையினூடாக செருப்பின் பரிதாபகரமான நிலையைப் பற்றி மாத்திரம் கவிஞர் குறிப்பிடவில்லை. அதனூடாக இன்னொரு தத்துவத்தையும் கூறுகிறார். அதாவது காலம் செல்லச்செல்ல அனைத்து விடயங்களுமே மதிப்பற்றப் போகும் என்பதுதான். (பக்கம் 25)

காலுக்கு இதமளித்து
தினந் தினம்
அழுக்கைத் தள்ளிவிடும்
செருப்பு
ஈற்றில் காலாலேயே
உதைத்து தள்ளப்படுகிறது.

நாட்டார் பாடலாக புனையப்பட்டிருக்கும் சில கவிதைகள் மனதில் ரம்மியமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. வாசிக்கும் போது கிராமிய மணம் கமழ்கின்றது. வந்திடுவாய்; என்ற கவிதையில் (பக்கம் 70) அதை தரசிக்கலாம்.

சேனைக்குப் போகையிலே
சிவந்த புள்ள நெத்தியிலே
முத்தமிட்டுப் போன மச்சான்
முழு ராவும் தூக்கமில்ல

யானைக்குப் பயந்து நான்
சூர மரம் ஏறிவிட்டேன்
தானாக கீழிறங்கி
வீடு வர முடியவில்லை.

இவ்வாறான பல்வேறு கருப் பொருட்களுடன் உள்ளடங்கிய பல அழகிய கவிதைகள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாசகர்களுக்கு பல புத்தங்களைத் தந்துள்ள நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உணர்வூட்டும் முத்துக்கள்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
தொலைபேசி - 0772902042
விலை – 175 ரூபாய்

27. புதிய இலைகளால் ஆதல் - கவிதைத் தொகுதி

புதிய இலைகளால் ஆதல் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

மலரா என்ற புனைப் பெயரைக் கொண்ட திருமதி. புஷ்பலதா லோகநாதன் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். வைத்தியரான இவர் புதிய இலைகளால் ஆதல் என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியீடு செய்துள்ளார். இந்தக் கவிதைத் தொகுதி மூலம் ஈழத்துப் பெண் கவிஞர் வரிசையில் தனக்கென்றொரு காத்திரமான இடத்தைப் பிடித்துக்கொள்கிறார். தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் 108 பக்கங்களில் இந்த நூல் வெளிவந்துள்ளது.

பொதுவாக தனது தகப்பனின் அதிகாரத்திலோ, சகோதரர்களின் அடக்கு முறையிலோ அல்லது கைப்பிடித்த கணவனின் கட்டுப்பாட்டிலோ சிக்கிக்கொள்ளாமல் அன்பான குடும்பத்தில் அரவணைப்புடன் வாழ்ந்த பெண்களுக்கே மென்மை இழையோடும் கவிதைகளையும், ஆண்களின் பெருமைகளைச் சொல்லும் படைப்புக்களையும் எழுத முடிகிறது. அந்த வகையில் மலராவும் அடக்குமுறைகளுக்கு அகப்படாமல் ஆனந்தமாக வாழ்ந்த காரணத்தால் முழுக்க முழுக்க பெண்மையின் மென்மையான உணர்வுகளைத் துல்லியமாக இத்தொகுப்பில் பிரதிபலித்திருக்கிறார்.

உமா வரதராஜன் தனதுரையில் எத்தனை காலந்தான் ஒரு குயில் தன் குரலை ஒளித்துக்கொண்டிருக்கும்? உரிய காலந் தப்பி மலராவின் கவிதைகள் இப்போது வெளியாகின்றன. உரத்த குரல் எவற்றிலுமில்லை. காதோரம் அவை கிசுகிசுக்கின்றன. காற்று இழுத்து வந்து நம் முகத்தில் சேர்க்கின்ற பூமழைத் தூறல்கள் அவை என்று குறிப்பிடுகிறார்.

கலியுகமல்ல என்ற கவிதை போர்க்காலத்தின் கோர நிலையை படம்; பிடித்துக்காட்டும் கவிதையாகும். (பக்கம் 31) கோயில் திருவிழாக்களின்போது பல கடைகள் முளைத்துவிடும். பல்வேறுவிதமான விளையாட்டுப் பொருட்கள், தீன் பண்டங்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். அத்தகையதொரு நிகழ்வினிலே விளையாட்டுத் துப்பாக்கி கேட்டு அழும் பிள்ளையின் அடம்பிடிப்பினால் தவித்து எதிர்காலம் பற்றி மிரட்சியுற்றிருக்கும் ஒரு தாயின் புலம்பலிவை.

எங்கள் தெருக்களில் தோளில் துவக்கும் கையில் டோச்சும் கொண்டு இரவு பகலாய் அலையும் மனிதர்களையும் நட்ட நடு இரவில் அமைதியை அதிர்க்கும் வேட்டுச் சத்தங்களையும் வானிலிருந்து அதிர்ந்து விழும் நெருப்புத் துண்டங்களையும் வீட்டிற்குள் மூச்சுவிடவே பயந்து ஒதுங்கும் எம்மையும் கண்டுவிட்ட எம் குழந்தைகள் இப்போதெல்லாம் விளையாட்டுத் துவக்குகள் கேட்டு துளைத்தெடுப்பது அதிகமாகிவிட்டது. எதிர்காலத்தைப் பற்றிய கேள்விக் குறிகளில் என் பொழுதுகள் அமைதியின்றியே கழிகின்றன.

ஒரு குழந்தையின் மன உணர்வுகளாக எழுதப்பட்டிருக்கும் காற்றில் விடு என்ற கவிதை (பக்கம் 48) போலியான உலகம் பற்றியும், அதில் வாழும் ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றியும் விளக்குகிறது. அத்தகைய பேர்வழிகளை இனங்காண போலிகளை கற்றுத்தரச்சொல்லி கேட்டு நிற்கிறது குழந்தை. யதார்த்த உலகம் பற்றி சொல்லித் தரும்படியும், கற்பனை வர்ணனைகளை விட்டுத்தள்ளும் படியும் இறைஞ்சுகிறது அந்த மழலை மனம். அந்த வரிகள் பின்வருமாறு அமைகின்றது.

அம்மா எனக்குத் தொட்டில் வேண்டாம். தொட்டில் சட்டங்கள் என்னைக் குறுக்கிப் பார்க்கின்றன. ... உன் விருப்பப்படி நறுக்கிவிடாதே என் சிறகுகளை. அன்பிருந்தால் உலகம் பற்றிச் சொல். போலி எது? பொய் எது? ஏமாற்றுவது எப்படி? கற்றுக் கொடு. நிஜங்களைக் காணவும் ஏமாறாதிருக்கவும்.

நாணலாய் நான் என்ற கவிதை (பக்கம் 63) காதலை உணர்த்துகிறது.  உண்மையாக காதலிப்பவர்களின் இதயம் மென்மையாக இருக்கும் என்று சொல்வார்கள். அத்தகைய மனம் படைத்த தலைவனைப் பார்த்து கீழுள்ளவாறு கூறுகிறாள் தலைவி.

பூக்கள் பூக்கும் போது
பூக்களுக்கு வலிக்கும் என்றோ
தென்றல் வீசும் போது
எதிலாவது மோதி
நொந்து போகும் என்றோ
யாருமே கவலைப்பட்டதில்லை
உன்னைத்தவிர...

...............................
எல்லாமும் முழுமையாய்
நான் எனும் நாணல்
இன்று
நீ எனும் விருட்சத்தினடியில்

உன் மார்ச் சூட்டில் நான் அடை கிடப்பேன் என்ற கவிதை காதல் ரசம் ததும்பியதாக காணப்படுகின்றது. (பக்கம் 79)  பிரியத்தைப் போராடி புரிய வைக்கத் தேவையில்லை, மூச்சிரைத்து தழுவத் தேவையில்லை என அழகாக தொடங்கும் கவிதையின் இன்னும் சில வரிகள் இவ்வாறு அமைகின்றது.

பொருட்களாய் வாங்கி
வெறும் உயிரற்றவைகளை
என் முன் கிடத்துதலும் வேண்டாம்.
உன் இருப்புவிட்டு
என் காலடியே கதியென
வீழ்ந்திருக்கவும் வேண்டாம்.

அன்பே விடுதலையாய்
உனை நீ உணரும் பொழுதுகளில் மாத்திரம்
உன் மடியில் சிறிது எனை வளர்த்து..
தலை கோது.. விரல்கள் பிணை..
பின் கொஞ்சம் கண்ணயர்வேன் விடு.

டிசம்பர் 2004, 26ம் நாள் என்ற கவிதை (பக்கம் 93) சுனாமியின் தாக்கம் பற்றி இயம்பி நிற்கின்றது. சரித்திரத்தின் துயர் பக்கங்களை நிரப்பிப் போன சுனாமி மக்கள் மனதில் எத்தகைய துன்ப அலைகளை ஏற்படுத்தியது என்பது யாவருமறிந்ததே. நீலமாய், அழகாய் காட்சியளித்த கடல், திடீரென அரக்கனாய் மாறி மக்களைக் காவு கொண்டது. அதனால்

உன் இடம் விட்டு வானம் தொட
நீ முயல வானமே கடலாய் மாறியதோ?
உன் கடலில் மட்டுமல்ல
எங்கள் கண்கள் எங்கள் உள்ளங்கள்
எங்கள் கிணறுகளிலும்
இன்னமும் உப்புக் கரிக்கின்றது.. என்கிறார் கவிஞர்.

வாசகனைக் கட்டிப் போடுவதாய் அமையும் அகம் சார்ந்த கவிதைகள் பலவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளன. காத்திரமான கவிதைத் தொகுதியொன்றைத் தந்த நூலாசிரியர் மலராவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - புதிய இலைகளால் ஆதல்
நூலின் வகை - கவிதைத் தொகுதி
நூலாசிரியர் - மலரா (புஷ்பலதா லோகநாதன்)
மின்னஞ்சல் - lpushpalatha@yahoo.com
விலை - 200 ரூபாய்