Wednesday, January 25, 2017

110. வாழ்க்கைச் சோலை நாவல் மீதான பார்வை

வாழ்க்கைச் சோலை நாவல் மீதான பார்வை

ஒரு சமூகத்தின் வரலாற்றை நாவலினூடாக வெளிக்கொணரும்போது அச்சமூகம் பற்றிய விடயங்கள் வாசகனும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். நாவலில் உலாவும் பாத்திரங்கள் மனதோடு பதிந்து நேரில் பார்க்கக்கூடிய ஒரு நிகழ்வை மனதுக்குள் ஏற்படுத்துவது நாவலில் கட்டாயம் காணப்பட வேண்டிய விடயமாகும். சில நாவல்கள் காலத்தால் அழியாதவை. சில நாவல்கள் வாசித்ததும் மறந்துவிடக் கூடியவை. இது எழுதுகின்ற ஆற்றலிலும், மொழிப் புலமையிலும், எழுத்தாளனுக்கும் வாசகனுக்குமிடையில் உள்ள உள்ளுணர்வுக்கும் உட்பட்டிருக்கின்றது.

வாழ்க்கைச் சோலை என்ற நாவல் நித்தியஜோதியின் இரண்டாவது நூலாகும். இவர் ஏற்கனவே மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். பூனாகலை நித்தியஜோதி எழுதியுள்ள வாழ்க்கைச் சோலை என்ற நாவல் 88 பக்கங்களில் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால்
வெளியிடப்பட்டிருக்கின்றது.

பலரது வாழ்க்கை இன்று பாலைவனமாக மாற்றியிருக்கின்ற நிலையில்
ஏதாவதொரு வகையில் வாழ்க்கை வசந்தமாக வேண்டும் என்று ஏங்குபவர்கள் ஏராளம். வாழ்க்கைச் சோலை என்ற தலைப்பு நாவலை வாசிப்பதற்கு முன்னரேயே வாசகனை மகிழ்ச்சியிலாழ்த்தி விடுகின்றது.

இந்த நாவலானது அறிவியல் சார்ந்த விடயங்களோடு பயணிப்பதுடன் பல்லின சமூகத்தின் நிலவரங்களையும் ஆங்காங்கே படம் பிடித்துக் காட்டுகிறது. அது மாத்திரமல்லாமல் அரசியல் சார்ந்த விடயங்களும்
இந்நாவலில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. நாவலுக்கு சுவாரஷ்யம் சேர்க்கக் கூடியதாக ஒரு மெல்லிய காதல் கதையும் நகர்கிறது.

இலங்கையின் வரலாற்றில் என்றுமே முன்னேற்றம் காணாதவர்களாக தோட்டத் தொழிலாளர்கள் இனம் காணப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்க்கை வசதிகள்கூட சரிவர அமையாதவர்கள் வெறும் கூலிகளாக நோக்கப்பட்டு வந்தாலும் தற்போது அந்த நிலமை மிக வேகமாக மாறி வருகின்றமை கண்கூடு. கல்வியறிவிலும், தொழில்நுட்பத்திலும் அவர்களின் பங்கும் அளப்பரியதாகக் காணப்படுகின்றது. மலையகப் பிரதேசம் சார்ந்த கருத்துக்கள் மாத்திரமல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளையும் உள்ளடக்கி சுமூகமான உறவுக்கு வித்திடும் வழிமுறையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மலையகத்தைச் சேர்ந்த பிற கவிஞர்களின் பொருத்தமான கவி வரிகள் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ளமையானது இந்நாவலின் முக்கிய சிறப்பம்சமாகக் கொள்ளக் கூடியதுடன் குறித்த மலையக கவிஞர்களின் திறமையை பறைசாற்றுவதாகவும் அவை அமைந்திருக்கின்றது.

இந்நாவலின் இரண்டாவது பாகத்தை வெளியிடவிருக்கும் நூலாசிரியர்
நாவலின் மென்மை தன்மையை தக்க வைப்பதற்கான இன்னும் புதிய பல
உத்திகளையும் கையாண்டு வெற்றிபெற வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - வாழ்க்கைச் சோலை
நூலின் வகை - நாவல்
நூலாசிரியர் - பூனாகலை நித்தியஜோதி
வெளியீடு - தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்
விலை - 290 ரூபாய்

No comments:

Post a Comment