Wednesday, May 13, 2020

144. திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் நூல் பற்றிய கண்ணோட்டம்

திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும் நூல் பற்றிய கண்ணோட்டம்

நாடறிந்த எழுத்தாளர் கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சினிமா தொடர்பான நூலே ''திரைப்பட விழாக்களின் படங்களும் அவை தொடர்பான சுவையான செய்திகளும்'' என்ற நூலாகும். இந்த நூலானது சென்னை மணிமேகலைப் பிரசுர வெளியீடாக 196 பக்கங்களில் வெளிவந்துள்ளது. உலக சினிமா பற்றிய நூலாசிரியரின் மனப்பதிவுகள், துணுக்குகள், தகவல்கள், உலகத் திரைப்பட செல்நெறி, சர்வதேச ரீதியில் திரைப்படக் கலையின் போக்கும் வளர்ச்சியும் போன்ற பல்வேறு விடயங்களை கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் இந்த நூலில் விரிவாகப் பதிகிறார்.

பாடசாலைப் பாடத்திட்டத்தில் ஊடகம் என்ற பொதுத் தலைப்பில் கற்கும் மாணவர்கள் திரைப்படத்துறை சம்பந்தமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகின்றது. அத்துடன் பல்கலைக்கழகங்களின் இதழியல் துறையில் கற்கும் மாணவர்களும் இத்துறைபற்றி கற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். நான் அறிந்த வகையில் தம்பி ஐயா தேவதாஸ் இத்துறையில் பல நூல்களை வெளியிட்டு இத்துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.

இலங்கை வானொலியில் பல்லாண்டு காலம் பணிபுரிந்த சிறந்த ஊடகவியலாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்த இவர், தனியார் ஆங்கிலப் பாடசாலைகளில் தனது ஆசிரியப் பணியை செவ்வனே செய்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டத்தைப் பெற்றுள்ளார். தற்போது முழு நேர எழுத்தாளராக தேசிய பத்திரிகைகள் யாவற்றிலும் பல்வேறு தலைப்புக்களில் மிகவும் பெறுமதியான விடயங்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.

1953களில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்து, மொழிபெயர்ப்பு, வானொலி, தொலைக்காட்சி அறிவிப்புகள், செய்தித்துறை, தூதரக தொடர்பாடல், விளம்பர பிரதி எழுதுதல், பத்திரிகை ஆசிரியத் துறை, கல்லூரி ஆசிரியம் ஆகியவற்றில் நிறையவே அனுபவங்கொண்ட இவர் இந்நூலை எழுதுவதற்கு தனது அவதானிப்புக்களையும் அறிவையும் செவ்வனே பயன்படுத்தி சிறப்பாக எழுதியுள்ளார்.

''திரைப்படத் திறனாய்வு'' என்ற முதலாவது கட்டுரையில் ''திரைப்படம் என்பது நெறியாளர் ஒருவரின் படைப்பு. அதனை நுகர, பார்வையாளர் முனைகிறார். தொடர்பாடலில் இவ்விரு தரப்பினரும் முக்கியமான பங்காளிகள். திரைப்படத் திறனாய்வாளரும் ஒரு பார்வையாளர்தான். ஆயினும் அவர் ஏனைய பார்வையாளரைவிடச் சிறிது வேறுபட்டவர். திரைப்பட விமர்சகரின் குறிப்புரைகளினால் ஏனைய பார்வையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் பயனடைகின்றனர். திரைப்படத் திறனாய்வு மூலம் திரைப்படம் ஒரு கலைச் சாதனமாக வளர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது'' என்று தனது பார்வையை ஆழமாகப் பதிகின்றார் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

''டொக்யூமென்டரி என்றால் என்ன?'' (பக்கம் 09) என்ற கட்டுரையில் ''திரைப்படத் திறனாய்வுத் துறையில் பயன்படுத்தப்படும் பதங்களில் ஒன்று டொக்யூமென்டரி (னுழஉரஅநவெயசல) இந்த ஆங்கிலச் சொல். ஒரு ரக திரைப்படத்தைக் குறிக்கும். தமிழில் இதனை நாம் மொட்டையாக விவரணப் படங்கள் என்று கூறி வந்தோம். ஆனால் இது இந்தத் துறைப் படங்களைக் குறிப்பிடப் பொருத்தமான சொல் அல்ல என்பதைப் பின்னர் உணர்ந்துகொண்டோம். விவரணம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் (யேசசயவழைn) அல்லது (யேசசயவiஎந) என்பார்கள். இலக்கியத் திறனாய்வுத் துறையில் யேசசயவiஎந போல னுநளஉசipவiஎந என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். விவரணம் யேசசயவiஎந என்றால் கதை, ஓவியம், திரைப்படம் போன்றவற்றில் நிகழ்ச்சி, காட்சி முதலியவற்றை உரிய ஒழுங்கில் ஒன்றையடுத்து ஒன்றாக வெளிப்படுத்துதல் என்பார்கள்'' என்று விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

''இரு சிங்கள நெறியாளர்கள்'' (பக்கம் 35) என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையில் பிரசன்ன விதானகே மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோர் பற்றிய தகவல்களை முன்வைத்துள்ளார். சிங்களத் திரையுலகில் இந்த நெறியாளர்கள் குறிப்பிடத்தக்க படங்களைத் தந்துள்ளனர். இப்படங்களில் சில அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் காட்டப்பட்டு பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

திரைப்படத் திறனாய்வு, டொக்யூமென்டரி என்றால் என்ன?, திரைப்படக் கலை பற்றித் தமிழில் ஓர் அருமையான நூல், தென்னிந்தியத் திரைப்படங்கள், கல்கத்தா திரைப்பட விழாவில் குறிப்பிடத்தக்க படங்கள், இரு சிங்கள நெறியாளர்கள், மெல்லெனக் காமத்தைத் தீண்டும் ஐரோப்பியப் படங்கள் இரண்டு, மேலை இசை விற்பன்னர், கன்னட சினிமா, மலையாள சினிமா, நான்கு மலையாளத் திரைப்படங்கள், அஸ்ஸாமிலிருந்து ஓர் அழகிய பெண்ணியப் படம், ஹிந்தி சினிமா பிக்ரம் சிங்கின் படம், தமிழ் சினிமா பூமணியின் படம், சிங்கள சினிமா எச்.டி. பிரேமரத்னவின் படம், சமஸ்கிருத மொழி சினிமா, இந்திய சினிமா, பம்பாய் பட விழா, பல மொழி நடிகை, குறுந்திரைப்படங்கள், பிரிட்டிஷ் சினிமா, கனேடிய சினிமா, உலக சினிமா, தமிழ் சினிமா ஆகிய தலைப்புக்களிலான பல்வேறு கட்டுரைகள் இந்த நூலை அலங்கரித்;துள்ளன. ஈழத் தமிழ் இலக்கிய வெளியில் திரைப்படத்துறை சார்ந்த நூல்கள் மிகவும் அரிதாகவே வெளிவந்துள்ளன. அந்தவகையில் சினிமாப் பிரியர்களுக்கும் இதுதொடர்பான ஆர்வலர்களுக்கும் இந்த நூல் வரப்பிரசாதமாக அமையும் என்பது திண்ணம். இந்த நூல் தவிர நூலாசிரியர் முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், அசையும் படிமங்கள் ஆகிய நூல்களையும் இதற்கு முன்னர் இத்துறையில் வெளியிட்டிருப்பது இங்கு குறிப்பிட்டுக்கூறப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கையிலும் இந்தியாவிலும் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ள கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழப் பிரார்த்திப்பதுடன் அவரது எழுத்துப் பணியை செவ்வனே தொடர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன். இன்னும் பல காத்திரமான நூல்களை தமிழுலகுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - திரைப்பட விழாக்களின் படங்களும் 
அவை தொடர்பான சுவையான செய்திகளும்
நூலின் வகை - ஆய்வு
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 0112587617
ஈமெயில் - sivakumaran.ks@gmail.com
வெளியீடு; - மணிமேகலைப் பிரசுரம்
விலை; - 300 ரூபாய்

No comments:

Post a Comment