Wednesday, April 6, 2011

03. வான் அலைகளில் தேன் துளிகள்

வான் அலைகளில் தேன் துளிகள்



வான் அலைகளில் தேன் துளிகள் - விமர்சனப்பார்வை


வான் அலைகளில் தேன் துளிகள் ஒரு பாடல் தொகுப்பு. அல்ஹாஜ் N.M. நூர்தீன் தனது 05 தசாப்த கால படைப்புக்களை சிரமம் பாராது வாசகர் மனசை கொள்ளை கொள்ள வழங்கியிருக்கிறார்.

தனது திறமையால் உருவாகிய இனிமையான பாடல்களை பிறர் பாடிய போது அது தனக்கு எத்தனை பரவசமாக இருந்தது என்பதை `... அவர்கள் அன்று பாடிப் பரவசமூட்டிய, மறக்க முடியாத சொற்பிரவாகங்களை இசையோடு பிசைந்து இன்ப இனிப்புகளாய் நுகர்ந்த நாட்களை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். அவற்றுள் சிலவற்றை, தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற இங்கே அடக்கியுள்ளேன்'என அவர் குறிப்பிடுவதிலிருந்து புலப்படுகிறது.




இப்புத்தகத்தின் முதல் பாடலாக காணப்படுகின்ற `வாழ்க நம் தாய்நாடு' என்பது இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இயற்றப்பட்டதாகும். யாப்பிலக்கணம் கற்றுத் தெளியாத பள்ளிப்பருவத்தில் தன் உள்ளத்தில் துள்ளி எழுந்த நாட்டின் மீதான அக்கறையில் பாடிய பாடல்கள் சக்கரையாய் இருப்பதில் வியப்புதான்.



நூர்தீனின் இளமைக்காலமானது, இலக்கிய வித்தகராக திகழ்ந்த தனது தந்தையான இஸ்லாமிய அறிஞரின் வாழ்வுச் சூழலின் பின்னணியாக அமைந்திருந்தமை அவர் பெற்ற வரம் என்றே கூறலாம்.



நூர்தீன் அவர்களின் பாடல் திறமையை தீனுல் இஸ்லாம், அருவி, தமிழன், தினகரன், சிந்தாமணி இத்தியாதி... போன்ற பத்திரிகைகள் நன்கறியும். இசையுடன் பாடுதல் பற்றின சர்ச்சையை நூர்தீன் பின்வருமாறு தீர்த்துச் செல்கிறார்.



`முஸ்லிம்களிடையே, பாடல்களை இசையுடன் பாடுதலில் பலதரப்பட்ட கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அந்த வேற்றுக்கருத்துக்களை வெளியிடும் உள்ளங்களும் ஒரு தடவையாவது தனது எண்ணத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டே இருக்கும். இசை ரசனையுடன் பாடியே இருக்கும் என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது என்பது எனது அபிப்பிராயம்'



இக்கருத்து இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் தர்க்கத்துக்கு உரியதாயிருந்த போதும் தனது பாடல்கள் மூலம் தன் கருத்தை எவ்வாறு நிலை நாட்ட முனைந்துள்ளார் என்பது சுவையான அம்சமாகும். இஸ்லாத்தின் மாண்புமிகு விழுமியங்களை உள்வாங்கி அவற்றை வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்பது தொழுகை, நோன்பு, ஸக்காத் போன்ற பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



நயந்து எழுதப்பட்ட இவர் பாடல்களை வியந்து பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன் வாழ்த்துரையில் `...பாடல்களைத் தாமே இயற்றி, அவற்றிற்கு மெட்டமைத்து, இசையமைத்து பல சந்தர்ப்பங்களில் சொந்தக் குரலிலேயே அவற்றை இசைத்து கேட்டு இன்புறுவோரை பரவசப்படுத்தும் இவரது ஆற்றலையிட்டு நான் வியப்படைவதுண்டு' என்றும்,



பாராளுமன்ற ஆலோசகர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் `...வாய்விட்டு வகுப்பறையில் பாடிய அவரை, பொன் பட்டுப் போர்த்தி வாழ்த்துவேன் என, அன்று நான் கனவு கண்டேனா? இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் நிகழ்ந்து விட்டது!' என்கிறார். மேலும் அல்ஹாஜ் என். எம். அமீன், யூ.எல். அலியார், மர்ஹூம் எம்.எச்.எம். ஷம்ஸ், எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோரும் தத்தமது அணிந்துரைகளில் வாழ்த்துப் பா(பூ)க்களை தூவுகின்றனர்.



விசேடமாக பாடல்களின் முடிவில் திருநபி (ஸல்) அவர்களினால் மொழியப்பட்ட ஹதீஸ்கள் உள்ளடக்கியிருப்பது சிறப்பம்சமாகும். இளம்பிறை இலக்கிய மன்றத்தினால் வெளியிடப்பட்ட வான் அலைகளில் தேன் துளிகள் என்ற இந்தப் புத்தகத்துடன் நிற்காமல் இன்னும் பலவற்றை வெளியிட வாழ்த்துகிறோம்!!!



நூலின் பெயர் - வான் அலைகளில் தேன் துளிகள் (பாடல்)
நூலாசிரியர் - அல்ஹாஜ் என்.எம். நூர்தீன்
வெளியீடு - இளம்பிறை இசை மன்றம்
முகவரி - A 58, Sir Henry De Mel Mw, Colombo - 02.
விலை – 150/=



.....................................................................................



இசைக்கோ நூர்தீன் பற்றிய சில குறிப்புக்கள்



மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வசித்து வரும் நெய்னா முஹம்மது நூர்தீன் அவர்கள் சுமார் அரை நூற்றாண்டுகளாக இலக்கியப்பணிக்குள் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகிறார். கொழும்பு ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் M/S Noorsons (Pvt) Ltd, M/S Noorsons Furniture Hirers, Al Samit Interna’l ஆகிய நிறுவனங்களுக்கு தலைவராகவும் இருக்கிறார்.



ஊடல் கொண்ட இதயங்களுக்கு தன் பாடல் மூலம் ஆறுதல் தந்தவர். தேடல் உள்ள நெஞ்சங்களுக்காக தன் எழுத்து மூலம் மாறுதல் சொன்னவர். கடந்த ஐந்து தசாப்தங்களாக வீச்சுடன் கூடிய இலக்கியம் யாக்கும் நூர்தீன், கலைஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் போன்ற பன்முகங்கொண்டவர்.



இலங்கை திருநாடு சுதந்திரம் கண்டது முதல் இற்றை வரை ஏறத்தாழ 2000 பாடல்களை எழுதி மெட்டமைத்து பாடியும் உள்ளார். கலாபூஷணம் புன்னியாமீன் தொகுத்த இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 08லும் இவர் பற்றிய அறிமுகம் காணப்படுகிறது.



'வான் அலைகளில் தேன் துளிகள்' என்ற இவரது புத்தகம், பாடல் மீது இவர் கொண்டுள்ள ஈடுபாட்டை பறைசாற்றி நிற்கிறது. இலக்கிய அரங்குகள், முழுமையும் தெரிந்த ஒரு கலைஞனாகவே இவரை ஏற்றுக்கொண்டுள்ளது.



பாடல்கள் தவிர 30 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவை தீனுல் இஸ்லாம், அருவி, மாணவர் மலர், தமிழன், தினகரன், சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் பிரசுரமாகி உள்ளதுடன், சக்தி, மலேசிய, சிங்கப்பூர் வான் அலைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.



ஏழு இறுவட்டுக்களை (CD) வெளியிட்டுள்ளதுடன் சென்னை ரெக்கோடிங் கம்பனிக்காக பாடியுள்ள நூர்தீன் வெளிநாடுகளிலும், தாயகத்திலும் இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்.



வானொலியில் இசைச்சித்திரம், நாடகம், கவிதை, இஸ்லாமிய கீதம், பொப்பிசை போன்ற நிகழ்ச்சிகளையும் தந்துள்ளார். மீலாத், ஹஜ், நோன்பு தினங்களில் இடம்பெறும் விசேட அரங்குகளில் பாடல்களை பாடியவர். டேன் (DAN) தெலைக்காட்சியிலும் இவரது பேட்டி இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



'வானலைகளில் தேன் துளிகள்' என்ற அவரது நூலில் '...அரசியல் கலப்பற்ற சமுதாய உணர்வோடு என் வாழ்நாளில் சில பகுதியை கலைச்சேவைக்கும், மதச்சேவைக்கும் தொடர்ந்து அர்ப்பணிக்க வேண்டும் என்ற இந்த ஏழையின் குறிக்கோளை அல்லாஹூதஆலா பொருந்தச் செய்வானாக...' என்று கூறியதிலிருந்து அறநெறியில் அதீத ஈடுபாடு கொண்டவர் என்று புலப்புடுகிறது.



இவர் பெற்ற விருதுகள் சில...



1. இசைத்திலகம்
2. இசைக்கோ
3. மூஸிக்நூரி
4. சாமஸ்ரீ இசைவாணன்
5. இசைக்கலாநிதி
6. இசைப்பேராசிரியர்
7. கலாபூஷணம்

கொழும்பு இளம்பிறை இசை மன்றத்தின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியின் தலைவராகவும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளராகவும் இருந்து கலைச்சேவைகளை நல்கி வரும் இவரிடமிருந்து இன்னும் பல கலைச்சேவைகளை இலக்கிய உலகம் எதிர்பார்க்கிறது!!!

02. உயிர்கசிவு - சிறுகதைத்தொகுதி

உயிர்கசிவு சிறுகதைத்தொகுதி பற்றிய விமர்சனம்


வாழ்க்கையினை பாடுகின்ற வானம்பாடி எழுத்தாளர் சுதாராஜ்!


இலக்கியம் மனித வாழ்க்கைக்கு இன்பத்தை தருகிறது. மனித உள்ளத்தில் புதுத்தெம்பையும், புத்துணர்ச்சியையும் ஒரு தெளிவையும் ஏற்படுத்துகின்றது. சிந்தனா சக்தி கொண்ட மனிதனின் வாழ்வில், தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களை காத்திரமான முறையில் கருத்து ரீதியாக வெளிப்படுத்தும் முயற்சிக்கான ஊடகம், இந்த இலக்கியம் தான். இலக்கியம் காலத்தின் கண்ணாடி.


கற்பனை கலந்த யதார்த்தத்தை உணர்த்துவதுதான் இலக்கியம். எனவே ஒரு எழுத்தாளனின் எழுதுகோலுக்கு யதார்த்தங்களை படம்பிடித்துக் காட்டும் சக்தி உண்டு. தொலைந்து போன வாழ்வை தோண்டிக்கொடுப்பது இலக்கியம். எழுத்தாளனின் கண் ஒரு கெமரா.


கவிதைகளை விட சிறுகதைகளால், சொல்ல வந்த விடயங்களை நன்றாகவே சொல்ல முடிகிறது. அந்த வகையில் ஈழத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் சுதாராஜ் பல சிறுகதைத் தொகுதிகளை வாசகர்களுக்கு முன்வைத்துள்ளார். 1970களில் எழுத்துலகத்துக்கு பிரவேசித்தவர் இவர். எழுத்தாளர் சுதாராஜ் அமைதியான தோற்றத்துடன் காணப்படும் ஆர்ப்பாட்டமில்லாத ஒருவர். அவரது நடத்தைகள் அவரது எழுத்துக்கு புறம்பாக இருக்காது. ஏனையவர்களின் துன்பங்களைக் கண்டு வருந்தும் மனமுடையவர் இவர். யதார்த்தத்தை பேசுகிற யாத்ரீகன், வாசிப்பவர்களை யோசிக்க, நேசிக்க வைக்கும் இந்த கதைஞருக்கு வார்த்தைகள் வாலாயப்பட்டதால் கருத்தானது கட்டிடங்கள் செய்வதற்கு கற்களைக் கொடுத்திருக்கிறது. கற்பனைகள் சொற்களைக் கொடுத்திருக்கிறது.

தனிமனித உயர்வுகளில் மட்டுமே நுழைந்திடாமல் சமூக அவலங்களை புடம் போட்டுக்காட்டும் இவரது கதைகள் மனதை செழுமைப்படுத்துவதுடன் மனநிலையையும் செதுக்குகின்றன. அருமையான, ஆழமான கருத்துக்களைக் கொண்டு அமைந்த நிஜங்களைப் படம் பிடித்துக்காட்டுகிறது இவரது சிறுகதைகள்.

ஒரு நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள், தெரியாத பக்கங்கள், கொடுத்தல், மனித தரிசனங்கள், மனைவி மகாத்மியம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும், இளமைக் கோலங்கள் என்ற நாவலையும் ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ளார்.

703 பக்கங்களில் வெளிவந்துள்ள உயிர்க் கசிவு என்ற இவரது சிறுகதைகளின் தொகுப்பு நூல் 60 சிறுகதைகளை உள்ளடக்கியதாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. `ஒரு தேவதையின் குரல்' (பக்கம் 22) என்ற சிறுகதை அற்புதமானது. சகல இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய இந்தச் சிறிய இலங்கையில் இனவேற்றுமை தலைதூக்கி, சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதே இந்தக் கதை. இவ்வாறு ஒரு தேவதையின் குரல் அல்ல... ஓராயிரம் தேவதைகளின் குரல்கள் ஒலிக்க வேண்டும்.

`கால்கள்' (பக்கம் 256) என்ற கதை, வறுமையில் வாடும் குடும்பம் பற்றியது. சோற்றைக் கண்டு பத்து நாட்களுக்கும் மேலாகிற நிலையில் சோறு சாப்பிட வேண்டும் என்ற அந்த சிறுவனின் ஆசை, கண்ணீரை வரவைத்த உருக்கமான கதையாகும்.

ஆனந்த விகடனில் பரிசு பெற்ற `அடைக்கலம்' (பக்கம் 307) என்ற கதை ஜீவகாரூண்யம் பற்றி பேசுகிறது. இதே தொகுதியில் அமைந்திருக்கும் `மெய்ப்பொருள்' (பக்கம் 321) என்ற கதை ஏழ்மையின் காரணமாக இன்னும் மணமுடிக்காத மூன்று சகோதரிகள் பற்றியது. அகிலா (40 வயது), சாந்தா, அம்பிகா (35 வயது) என்ற வயதடிப்படையில் இருக்கும் சகோரிகளில் முதலாமவளை அவளது இருபதாவது வயதில் சதானந்தன் என்றொருவன் காதலிக்கிறான். ஆனால் அவன் பிரான்ஸிருந்து வந்த பிறகு 35 வயதுடைய அம்பிகாவை மணமுடிக்க விரும்புவதாய் கூறுகிறான். இது அகிலாவை மட்டுமல்ல. நம் எல்லோருடைய இதயத்திலும் தீ மூட்டுகிற, மனதை சுட்டெரிக்கிற ஒரு விடயம். நரை தட்டும் முடியை வைத்துக்கொண்டும் சில ஆண்வர்க்கத்துக்கு இளமையான பெண் கேட்கிறது என்று வைகிறார்.

எழுத்தாளர் சுதாராஜ் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளும், சவால்களும், அனுபவங்களும் இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு சிறந்த ஆதர்சனங்களாகும். சமூகத்தில் ஏற்படுகிற அநீதிகளுக்கு சாட்டையடி கொடுத்து மனித நேயத்தைப் பாடுகிறது இந்த வானம்பாடி.

`சில யதார்த்தங்களைச் சொல்வது சிலருக்கு கசப்பாகத்தான் இருக்கும். எனினும் என்னால் சொல்லாமலே இருக்க முடியவில்லை' என்று சொல்லும் சுதாராஜ், நேரில் சந்திக்கும் மிகவும் பணிவாகக் கதைத்தார். பின்னர்தான் அவர் ஒரு பொறியியலாளர் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.

உண்மையில் மேடைப் பேச்சுக்களில் `மானிடத்தை நேசிக்கிறோம்' என கதையளப்பவர்கள் தம்மை மனிதநேயம் மிக்கவர்களாக இனங்காட்ட பிரயத்தனப்படுகிறார்கள். இவர்கள் சொற்களில் மாத்திரம் இல்லாமல் வாழ்விலும் மனிதத்தை கடைப்பிடிக்க வேண்டும். மிக அடக்கமாக காட்சி தரும் சுதாராஜ் போன்றோர் மனிதர்களையும் இலக்கியத்தையும் மதிப்பவர்களாய் இருப்பது நிதர்சனம்.

கலைத்துறையில் கற்றவர்கள் ஷகளை|த்துறையில் நிற்கும் போது, கணிதத்துறையில் கற்ற இவரின் எழுத்துக்கள் சாதிக்கும். போதிக்கும். வாழ்வின் வசந்தங்களையும், வறுமையையும் காட்டி நெஞ்சை வருடி திருடி செல்கின்றன இவரது படைப்புக்கள்.

செல்லரித்த கருத்துக்களோடு கைகோர்க்காத இவரது கதைகளை படிக்கையில் நெஞ்சில் புல்லரிக்கிறது. இவரது கதைகளின் செழுமை மிக்க செய்நேர்த்தி இவரது தனித்துவத்தை பறைசாற்றுகிறது.

இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சுதாராஜ் போன்ற காத்திரமானவர்களின் படைப்புக்களைக் கற்காமல் எழுத்துத் துறையில் காலூன்றுவது கடினமே. கர்வமே இல்லாத இந்த கதைஞருக்கு காலத்தின் பொன்னாடை காத்துக்கொண்டிருக்கிறது. திரு சுதாராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - உயிர்க்கசிவு (சிறுகதைத் தொகுதி)
நூலாசிரியர் - சுதாராஜ்
வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மின்னஞ்சல் முகவரி - rajsiva50@gmail.com
விலை – 1500/=

01. நிழல் தேடும் கால்கள் - கவிதைத் தொகுதி

நிழல் தேடும் கால்கள் கவிதைத் தொகுதி மீதான விமர்சனப் பார்வை

தென்கிழக்கு பல்கலைக்கழகம், பல கவிஞர்களின் உருவாக்கத்திந்கு கருவாயிருந்து, மெல்ல வளர்கையிலே குருவாயிருந்து அவர்களை வேர்விட்டு பிரகாசிக்கச் செய்திருப்பதில் சந்தோஷமாக மார்தட்டிக்கொள்ளலாம். அந்தவகையில் கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் மூன்றாவது கவிதை நூலான நிழல் தேடும் கால்கள் கவிதை நூல் வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே விடியலின் விலாசம், நெஞ்சம் நிறைந்த மாமனிதர் அஷ்ரப் ஆகிய தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

வனிதைகளைப் பற்றியே யோசிக்கும் இளைஞர்கள் மத்தியில் மிக வித்தியாசமாக கவிதைகளை நேசிக்கும் இக்கவிஞரின் நிழல் தேடும் கால்களில் சமுத்திரம் சூழ்ந்த இலங்கைத் தீவில் தரித்திரமாய் இடம் பெற்று, சரித்திரம் படைத்திருக்கும் இன ரீதியான போராட்டத்தையும், அதனால் ஊற்றெடுக்கும் கண்களின் நீரோட்டத்தையும் அவலமாகிப் போன சமூகத்தையும், சுமுகமாய் இல்லாத நாட்டின் சூழ் நிலையையும், ஆங்காங்கே காதலையும் பற்றி சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

``எம்மைச் சூழ்ந்த...'' என கவிஞர் என்னுரையில் எழுதியிருப்பதிலிருந்து அவை எத்தகைய தாக்கத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தி அவர் அவர் மனதைப் புரட்சி செய்தது மட்டுமன்றி வரட்சியாயிருக்கும் சில வாசகரின் மனசிலும் நர்த்தனம் செய்யும் என்பதை வாசித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

``இன்னும் வெழுக்கவில்லை'' என்ற கவிதையில் நினைவுகளில் நிழலாடும் சில துளி நம்பிக்கைகளால் மட்டுமே நீள்கின்றன எம் சுவாச நிமிஷங்கள்... எனும் வரிகள் மக்களது உள்ளத்திலே ஆழமாக ஊடுருவி, நீளமான வலி தந்து அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. கவிதைகளிலே கற்கண்டு சொற்கொண்டு அவர் யாத்துள்ள வசனங்கள் இயல்பாகவே இதயத்தை தூண்டில் போட்டு இழுப்பதுடன், எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கின்றது.

ஒரு கருவை மனதில் விதைப்பதற்கு இலகுவான உத்திகளை, கத்தியால் சொருகுவது போல தடம் பதிக்க வேண்டும். அவை வாசகர்கள் உள்ளத்தில் இடம்பிடித்து மீண்டும், மீண்டும் வாசிக்க இதயம் அவர்களிடைமே அடம்பிடிக்க வேண்டும். நீயா பிரமையா என்ற கவிதையில் உள்ள வரிகளில் மேற்சொன்ன கருத்தை நிதர்சனமாகக் காணலாம்.

மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துன்பங்களையே சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் சிந்திப்புகள் எப்படிப்பட்டவை என்பதை நானும் ஒரு பெண், திசைகளின் வாசல்களில் தடுப்புகள் என்ற கவிதைகளில் சந்திக்கலாம். மோதல் தந்த காதல் பற்றி அர்த்தமில்லாத அவஸ்தை, அறுந்து போன சிறகுகள் என்பவற்றில் தரிசிக்கலாம். வார்த்தையாடல்களை அள்ளியெடுத்து ருசிக்கலாம்.

புதுக் கருத்துக்களையே கூற விளைவதன் மூலம் ஒருபோதும் வெறுத்துப் போகாமல், இளங்குருத்துப் போல் கவிதைகள் ஊஞ்சல் கட்டி உலா வருகிறது. அதனால் ஆசையோடு தழுவ வந்த தூக்கம் கூட துக்கத்துடன் விடைபெற்றுவிடுவதால் இன்பமாக (சு)வாசிக்க முடிகிறது.

படைப்பாளிகளின் இலக்கியத் தேடல்களுக்கு இவரின் முத்தான கவிதைகள் நிச்சயம் சத்தாக அமையும். ஷிப்லியின் முன்னோடிக் கவிவரிகளுக்குள் மூச்செடுத்தால் இளம் படைப்பாளிகளின் திறமைக்கு களம் அமைத்துத் தரக்கூடிய கண்ணாடியாகவும் அது இருக்கும்.

``தன் குழந்தை தன் மார்பில் முதந்பால் அருந்தும் போது தாய் அனுபவிக்கின்ற சுகமான வலிபோலவே ஒரு கவிஞன் தனது எழுத்தின் மீதான மோசமான முதல் விமர்சனத்தின் போதும் அடைந்துகொள்கின்றான். அதற்காக வலிக்கிறது என்று சொல்லி எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு பால்கொடுக்க மறுத்தது கிடையாது. இது போலத்தான் மற்றையதும்...'' என்ற தென் கிழக்கு பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். அஸாரினதும், மொழித்துறைத் தலைவர் அ.ப.மு. அஷ்ரப் அவர்கள் ஷஷதமது சமூகத்தின் பிறிதொரு முகத்தினை அவர் இங்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு கவிஞர்களும் பலமுறை பேசிப் பேசி அலுத்த விடயங்களானாலும் ஷிப்லியின் கைகளில் அவை புதியதொரு பொலிவினைப் பெற்றிருக்கின்றன....'' மற்றும் வ.ஐ.ச. ஜெயபாலனின் ``தன்னைச் சூழ பிளவுண்டு மோதும் அச்சுறுத்தப்பட்ட ஒரு சூழலில் அன்றாட முரண்பாடுகளின் பாதிப்புகளுக்குள் அமிழ்ந்துவிடாமல் நிமிர்வதுதான் ஒரு கவிஞனுக்குப் பெருமை. அந்தப் பெருமை கவிஞர் ஷிப்லிக்கு நிறையவே வாய்த்திருக்கிறது...'' என்ற அணிந்துரைகளால் புத்தகம் புதுப்பொலிவுடன் பிரகாசிக்கிறது.

எழுத்தை தன் கழுத்தாகவே கருதும் ஷிப்லி, சுமார் ஒரு தசாப்த காலமாக இலக்கியத்துக்குள் தன்னைத் தொலைத்தவர். தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி உட்பட இணையத்தளங்களிலும் எழுதிவருவதோடு, முகாமைத்துவத்தைவிஷேட பாடமாகப் பயிலும் தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மாணவர். எதிர்கால இலக்கிய உலகத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர வேண்டும். காத்திரமான பல படைப்புக்களைத்தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும்!!!

நூலின் பெயர் - நிழல் தேடும் கால்கள் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - நிந்தவூர் ஷிப்லி
வெளியீடு - தமிழ்ச் சங்கம், தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
முகவரி - 50, Hajiyar Road, Ninthavur - 18.
தொலைபேசி - 071 6035903, 067 2250404
விலை – 120/=