Wednesday, May 13, 2020

129. வலிகள் சுமந்த தேசம் கவிதைத் தொகுதி

வலிகள் சுமந்த தேசம் கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

மீரா மொஹிதீன் ஜமால்தீன் என்ற இயற் பெயரையுடைய கவிஞர் மருதூர் ஜமால்தீனின் ''வலிகள் சுமந்த தேசம்'' கவிதை நூல் நூலாசிரியரின் 8 ஆவது நூல் வெளியீடாக வெளிவந்துள்ளது. சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும், ஏறாவூரை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது இந்த நூலை ஏறாவூர் வாசிப்பு வட்டம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலில் மறக்க முடியவில்லை, தெளிந்து கொள், உங்களுக்கின்னும், ஏன் விடிகிறாய், அபாபீல்கள், கழுகுப் பார்வைக்குள் நீ, என்றும் நானே தலைவனாக, ஏமாளிகள், உடன் பிறப்பே, ஆத்மாக்களே, நிலை மாறுகின்றேன், எதை எதிர்பார்க்கிறாய், நாளைய அபாபீல்களாக, நிம்மதி ஏது?, நாளை முதல், எம்மிலக்கு, காத்திருக்கிறது, சொல்லிக் கொடு, வாடிக்கிடக்கிறது, நினைவிருக்கட்டும் எம்மை ஆகிய தலைப்புக்களில் 20 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. இந்த நூலுக்கான முன்னுரையை தீரன் ஆர்.எம். நௌசாத்தும் பின்னட்டைக் குறிப்பை ஏறாவூர் தாஹிரும் வழங்கியுள்ளார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக  இலக்கியப் பணியாற்றி வந்த இவர் தனது கன்னிக் கவிதைத் தொகுதியை 2008 இல் புரவலர் புத்தகப் பூங்கா மூலம் வெளியீடு செய்தார். அதனைத் தொடர்ந்து மருதூர் ஜமால்தீன் ரமழான் ஸலவாத் (2010), கிழக்கின் பெரு வெள்ளக் காவியம் (2010), முஹம்மத் (ஸல்) புகழ் மாலை (2011), இஸ்லாமிய கீதங்கள் (2012), தாலாட்டு (2015), பத்ர் யுத்தம் (2016) ஆகிய நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். புதுக் கவிதை, மரபுக் கவிதை ஆகிய இரண்டு வடிவங்களிலும் கவிதை எழுதுவதில் சமர்த்தரான இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, இஸ்லாமியப் பாடல்கள் போன்ற ஐநூறுக்கு மேற்பட்ட படைப்புக்கள் தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எந்த மெட்டுக்கும் உடனடியாக பாடல் வரிகளை மிகவும் இலகுவாக எழுதும் ஆற்றல் கை வரப்பெற்ற இவர் தற்போது முகநூலிலும் பல்வேறு வலைத்தளங்களிலும் பல படைப்புக்களை எழுதி அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றார்.

அநியாயங்களுக்கு எதிரான காட்டமாகவும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கான சாடல்களாவும் முயற்சி செய்து முன்னேறாமல் சோம்பேறிகளாகவும் ஏமாளிகளாகவும் இருக்கும் மானிடர்களுக்கு சாட்டையடியாகவும் தனது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள அரும்பாடு படும் மானிடனின் அவலக் குரல்களை படம் பிடித்துக் காட்டும் விதமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களைத் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறுவதாகவும் இப்படி பல கருக்களை வைத்தே ''வலிகள் சுமந்த தேசம்'' என்ற கவிதை நூலை மருதூர் ஜமால்தீன் யாத்துள்ளார்.

மிகவும் எளிய வடிவில் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதி சுடும் நெருப்பாக பல விடயங்களை கக்கி நிற்கின்றமை ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கின்றன. இந்த நூலில் நெருப்பாகச் சுடும் சில வரிகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

* மறக்க முடியவில்லை என் தாய் நிலத்தை கொத்தியெறிந்து விட்டு குதூகலிக்கின்றீர்.. உமக்கென்ன தெரியும் என்னுயிர் அங்கிருப்பது..
* உன் முகமூடி கிழித்தெறியப்படும் ஒரு நாளில் மனிதப் போர்வைக்குள் எத்தனை உருவங்களில்தான் உலா வருகின்றாய்?
* உனது ஒவ்வொரு மூச்சுக்களுக்கும் கேள்வி காத்திருக்கிறது. தெளிந்து கொள் மௌத்தின் வரவு உனக்கு அருகிலிருக்கிறது..
* என்ன வயிற்றெரிச்சல் உங்களுக்கு எம்மைத் துவம்சம் செய்திட எத்தனிக்கும் உங்கள் கால்களை உசுப்பிவிட்டது யார்?
* குதர்க்கப் பேச்சாலும் குண்டாந் தடிகளாலும் அதர்மத்தைத் தூவியா அஹிம்சை வளர்ப்பது?
* நேற்றுக் கண்ட கனவு போல நேசத்தைப் பறிகொடுத்து போற்றத்தகு வளங்களை போக்கிரிகளின் புகலிடமாக்கிய அந்தக் காலங்கள் அந்திப் பொழுதுகளாய் மறையும் தருணத்தில் துவேஷ விளக்கைத் தூண்டுகிறீர்கள்..
* போர்க் கவசங்களால் பொன்னான உயிர்களை வேரற்று இடமற்று வெதும்பி வாழ்ந்து துன்பமே நாவலாகத் தொடர்கையில் இன்னுமே நீங்கள் பாடம் கற்கவில்லை.
* காலக் கவசத்தைக் கைப்பற்றி தனக்குக் கீழே ஏனைய சமூகம் கொத்தடிமைகளென்று கொக்கரித்தே உங்களின் கழுத்தறுபட்டதை மறந்துவிட்டீர்கள்.
* நினைவிருக்கட்டும் இந்த நாடு உங்கள் நீதிமன்றமல்ல நீங்கள் தீர்ப்பளிக்க எல்லா மக்களினதும்..
* இரவே நீயும் ஏனோ விடிகிறாய்? கடித்துக் குதறும் கழுகுப் பார்வை நடித்துப் பறிக்கும் நாடகசாலை கிடைத்தது லாபமாய் கொத்தியே செல்லும் பறவையாய் மிருகமாய் பாதையில் மனிதம் பாய்வன கண்டும் ஏனோ விடிகிறாய்?
* எனது வளவுக்குள் விழா எடுக்கின்றன சில வல்லூறுகள்.. அகிம்சைப் போதனைக்கு அத்திவாரமிடுவதாய் ஆளுமைகளை சுமக்கும் ஆத்மாக்களுக்கு பொறி வைக்கின்றன.. வன்மைக் குணத்துடன் வந்து இடம்பிடித்தும் சொந்தம் தமக்கு மட்டுமாய் சொதப்புகின்றன..
* வாழ்வுப் பாதையை பீதி வெள்ளத்திலாக்கி உயிர்க் கூடுகளை உடைக்க முயல்கின்றன..
* மானுடங்கள் மனித நேயத்திற்காய் விண்ணப்பிக்கும் நவீன யுகத்திலா இந்த வல்லூறுகள் வன்மம் புரிய வேண்டும்?

மேலுள்ள வரிகளின் மூலம் கவிஞரின் சுட்டுக் கொதிக்கின்ற இதயத்தையும் வெம்பி நிற்கின்ற மனதையும் கண்டு கொள்ளலாம். வாசிக்கின்ற எமக்கும் அதே மனநிலை ஏற்பட்டு இதயம் கனத்துவிடுகின்றது. எப்படியோ எல்லா இனங்களும் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் மற்றவர்களுக்குப் பிரச்சினையில்லாமல் வாழ முயற்சிப்போமாக என்று ஒவ்வொருவரும் பிரார்த்தித்துக்கொள்வோம். சமாதானம் ஒன்றின் மூலமே நாடு முன்னேற்றமடையும். இனத்துவேச காய் நகர்த்தல்கள் ஒரு நாட்டை அழிவுக்கே இட்டுச் செல்லும்.

ஷவலிகள் சுமந்த தேசம்| ஒரு சமூகத்தின் சோகத்தை சுமந்து நிற்கின்றது என்று சொல்வது பொருத்தமானது. வாசகர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் கவிஞரின் மனதில் உள்ள ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். இலக்கியப் பிரியர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலைக் கட்டாயம் வாங்கி வாசிக்கவும்.

மருதூர் ஜமால்தீன் இன்னும் பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - வலிகள் சுமந்த தேசம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதூர் ஜமால்தீன்
தொலைபேசி - 0775590611
வெளியீடு - ஏறாவூர் வாசிப்பு வட்டம்
விலை - 100 ரூபாய்

128. விடியல் உனக்காக...கவிதைத் தொகுதி

விடியல் உனக்காக...கவிதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் நுஸ்கி இக்பால். கட்டிடத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றாலும் கவிதைமீது தான் கொண்ட தீராத ஆர்வம் காரணமாக பல கவிதைகளை 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து எழுதி தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அவற்றை களப்படுத்தி வருகின்றார். அவ்வாறு களப்படுத்திவந்த கவிதைகளில் 46 கவிதைகளைத் தொகுத்து 'விடியல் உனக்காக...' என்ற தனது கன்னிக் கவிதைத் தொகுதியை  வெளியிட்டுள்ளார். 85 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள இந்த நூலை காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகம் வெளியீடு செய்துள்ளது.

என்னை விதையிட்ட இக்பாலுக்கும், விளைத்திட்ட றஸீனாவுக்கும் என்று இந்த நூலைத் தனது பெற்றோருக்கே நூலாசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். காத்தான்குடியைச் சேர்ந்த ரீ.எல். ஜவ்பர்கான் நூலுக்கான அணிந்துரையை வழங்கியுள்ளார். அதேபோல் நூலுக்கான வாழ்த்துரையை மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலின் வழங்கியுள்ளதோடு நூலுக்கான பின்னட்டைக் குறிப்பை காத்தான்குடியைச் சேர்ந்த எம்.ரி.எம். யூனுஸ் ஜே.பி. யும் வழங்கியுள்ளார்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடியிலிருந்து பல படைப்பாளிகள் பல படைப்புக்களை இலக்கிய உலகுக்குத் தந்திருக்கிறார்கள். அந்தவகையில் 'விடியல் உனக்காக...' என்ற கவிதை நூலை வெளியீடு செய்ததன் மூலம் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் நுஸ்கி இக்பால். அகம் சார்ந்தவை, இயற்கைமீது தான்கொண்ட பற்று, வாழ்வியல் அனுபவங்கள், துயரங்களின் வெளிப்பாடு, அராஜகத்துக்கெதிரான கர்ஜிப்பு, அகதி வாழ்க்கை, சமூக அக்கih, போலி அரசியல் போன்ற இன்னோரன்ன விடயங்களை உள்ளடக்கியதாக அவரது கவிதைகளின் கருப்பொருட்கள் காணப்படுகின்றன.

தன்னுரையில் நுஸ்கி இக்பால் தான் கவிதைமீதுகொண்ட ஆர்வத்தையும் தனது நூல் வெளியீடு பற்றியும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''ஆயிரம் கவிகளை எழுதுவதைவிட அவற்றில் சிலதை ஒரு நூலாக வெளியிடுவது சிறந்தது. என் கவிகளை என் உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கின்றேன். எத்தனை பேர் எத்தனை கவிகள் படைத்தாலும் அவற்றிலிருந்து சிறிதளவேனும் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதே எனது அவா. கவிகளில் பலவிதம் இருந்தாலும் என் கவிகளை எல்லோராலும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எனது மற்றுமொரு ஆசை. என் கவிகள் எத்தனை உணர்வுகளை பகிர்ந்தாலும் அனைத்தும் எனது பல்கலைக்கழக வாழ்வில் நான் கண்ட சம்பவங்கள், தனிமையின் அனுபவங்கள் அனைத்தினதும் பிரதிபலிப்பே.''

இந்த நூலில் 46 தலைப்புகள் பல்வேறு வகையான கருப்பொருட்களில் அமைந்துள்ளன. இக்கவிதைகளில் ஒருசிலவற்றை இரசனைக்காக எடுத்துக்கொள்வோம்.

நீ மட்டும் போதும் அம்மா (பக்கம் 07) என்ற கவிதை நம்மனைவரினதும் முதல் உறவான தாயைப் பற்றி பேசுகின்றது. கருவில் இருக்கும்போதே தாய்க்கும் சேய்க்குமான உறவு தொடங்கிவிடுகின்றது. குழந்தையின் அசைவுகளைத் தாய் உணரக்கூடிய அற்புதத்தை இறைவன் வகுத்து வைத்திருக்கின்றான். அந்த ஒற்றை உறவின் சக்தி இந்த உலகத்தையே இயக்க வல்லது. அதுபற்றி நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

மல்லிகை மணத்தாலும்
முல்லை மலரும் மணத்தாலும்
உன் சேலை முகர்ந்து தூங்கும்
அந்த வாசம் வருடுது அம்மா

எந்தன் ஸ்பரிசம் சுடுகையில்
உன் ஸ்பரிசத்தோடு என்னை அணைத்து
உச்சி முகர்ந்து எனக்குத் தரும்
அந்த முத்தம் போதும் அம்மா

தள்ளாடும் வயது (பக்கம் 17) என்ற கவிதை நன்றி மறந்த பிள்ளைகள் பற்றியும் பெற்றோரின் ஏக்கம் பற்றியும் எடுத்துக்கூறுவதாய் அமைந்துள்ளது. கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கிவிட்ட பிறகு பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுவதும், அவர்களை மதிக்காமல் விடுவதும் கண்கூடாக நாம் அறிந்திருக்கின்றோம். அத்தகையவர்கள் எதிர்காலத்தில் தம் பிள்ளைகளாலேயே கைவிடப்படும் நிலைமைகளையும் கண்டு வருகிறோம். பெற்றோரின் ஏக்கம் கீழுள்ளவரிகளில் நன்கு பளிச்சிடுகின்றது.

தள்ளாடும் வயதும் கூன் விழுந்த முதுகும் என் கதை சொல்லும்.. எலும்போடு சேர்ந்த தோலும் எழுந்திருக்க முடியா காலும் என் விதி பாடும்.. பாசத்தோடு வளர்த்த பிள்ளை பாவி நீ எனக்கு தொல்லையென்று தனியே விட்டுப் போகும்.. என் சாண் வயிறு சேதி ஒன்றும் அறியாமல் என்னை அள்ளித் தின்னும்.. பொறுக்கி வந்த மீனை பிரித்து அறுக்கும் போது பூனையும் அதற்கு ஏங்கும் இந்த வயோதிபம் உலையிலே வேகும்!!!

அண்ணா நீ ஒரு அன்னை (பக்கம் 52) என்ற கவிதை ஒரு பாசமிகு அண்ணாவைப் பற்றி தங்கை கூறுவதாய் அமைந்துள்ளது. அண்ணன் என்பவன் தந்தைக்கு சமம். தங்கை திருமணமுடித்து நான்கு குழந்தைகள் ஆனபோதும் அவர்களின் நெருக்கமும் இறுக்கம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. சமூகத்தில் இவ்வாறான உறவுகளை இக்காலத்தில் காண்பது அரிது. இத்தகைய உறவு வாய்த்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அண்ணாவுக்காக தங்கை உருகும் பாசம் கீழே வரிகளாக..

ஒரு கருவறையில் ஒன்றாய் பிண்டமாய் இருந்தவர்கள் நாம்.. ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பால் அருந்தி பசி தீர்த்தவர்கள் நாம்.. இச்சைக்காய் நம்மை பிரிந்து தந்தை சென்றபோது என் தந்தையாய் உருவெடுத்தவன் நீ.. என் பாதம் வெயிலில் சுடும் என்று உன் தோள்களில் என்னை சுமந்தவன் நீ.. கண்ணில் பட்டதெல்லாம் நான் அடம்பிடிக்க முகம் சுழிக்காமல் என் ஆசை தீர்த்தவன் நீ.. என்னை அம்மா அடித்து என் இமைகள் நனைகையில் உன் மடி சாய்த்து என்னை அரவணைத்தவன் நீ..

தொழிலாளி (பக்கம் 61) என்ற கவிதை அவர்களின் சேவையைச் சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தொழிலாளர்களும் எம் சமூகத்தின் தூண்கள். அவர்களுக்கு பிரதியீடாக யாரும் அமைந்துவிட முடியாது. மற்றவர்களை ஏமாற்றிப் பிழைக்கும் வரை எந்தத் தொழிலும் இழிவல்ல.ஆதலால் தொழிலாளர்கள் யாவரும் எம் நண்பர்கள் என்பதை நூலாசிரியர் ஆழமாக இக் கவிதையினூடாக பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

உதிரத்தை வியர்வையாக்கி
வியர்வையை உரமாக்கி
மண்ணைப் பொன்னாக்கும்
வித்தை தெரிந்தவன்
தொழிலாளி

மழைவெயில் பாராது
அலை கடல் பாராது
உப்பு நீரில் முத்து சுமப்பவன்
தொழிலாளி

பட்ட மரத்தில்
பச்சையம் சுரக்க வைப்பவன்
வெடித்த நிலத்தில்
வேர் பிடிக்க வைப்பவன்
இந்த தொழிலாளி

இவைதவிர 'வெட்கம் உன்னிடத்தில் வெட்கப்படும், கண்ணாலே பேசி பேசி, அடியே அழகி, உன் பதில கொஞ்சம் சொல்லுமா, என் வர்ணனைக்குரியவள், என் அன்பு மனைவி போன்ற தலைப்புக்களில் 06 காதல் கவிதைகளும் நூலில் இடம்பிடித்துள்ளன. புதிதாக எழுதுபவர்கள் அதிகமாக காதல் கவிதைகளை எழுதுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் நுஸ்கி இக்பாலின் இந்த ஷவிடியல் உனக்காக..' என்ற நூலில் காதல் கவிதைகள் சொற்ப அளவிலேயே இடம்பிடித்துள்ளன. இனிவரும் தொகுதிகளையும் சமூக அக்கறை கொண்டு கனதியான கவிதைகளை உள்ளடக்கியதாக வெளியிடுவார் என்று நம்புகிறேன். நுஸ்கி இக்பால் இன்னுமின்னும் வாசிப்பில் முனைப்புக் காட்டி பல காத்திரமான படைப்புக்களை வெளியிட வாழ்த்துகின்றேன்!!!

நூல் - விடியல் உனக்காக...
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - நுஸ்கி இக்பால்
தொலைபேசி - 0770390869
ஈமெயில் - nuskymim@gmail.com
வெளியீடு - இஸ்லாமிய இலக்கிய கழகம் - காத்தான்குடி
விலை - 300 ரூபாய்

127. மழையில் நனையும் மனசு - கவிதைத் தொகுதி

மழையில் நனையும் மனசு - கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஜனாப் கே.எம். ஹலால்தீன்  - திருமதி. பீ.யூ. நஸீஹா (ஓய்வு பெற்ற ஆசிரியை) ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார். கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணிபுரிந்த எச்.எப். ரிஸ்னா, பூங்காவனம் கலை இலக்கிய சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் தன் இலக்கியப் பணியைத் தொடர்கிறார்.

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதி ரிஸ்னாவின் 10 ஆவது நூலாகும். 78 கவிதைகளை உள்ளடக்கியதாக 120 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை பூங்காவனம் இலக்கிய வட்டம் வெளியீடு செய்துள்ளது. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை), வைகறை (சிறுகதை), காக்காக் குளிப்பு (சிறுவர் கதை), வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை), இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை), மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்), நட்சத்திரம் (சிறுவர் பாடல்), மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) ஆகிய நூல்களை இவர் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்கள் ''ஊவாவின் கவிதை இலக்கிய வரலாற்றில் ரிஸ்னாவுடைய கவிதைகளும் நிச்சயம் ஆராயப்படும். இளம் வயதிலேயே இலக்கியத் துறையில் இந்நூலாசிரியர் பல பங்களிப்புகளைச் செய்து வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கைநெறியை நிறைவு செய்துள்ள இவர் பல இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகித்து வருகின்றார். ஒரு சிறந்த கவிஞன் என்பவன் தக்க சொல்லை, தக்க இடத்தில், தக்கவாறு கையாள்பவன் என்றும் - சிறந்த கவிதை என்பது நல்ல சொற்கள், நல்ல ஒழுங்கில் அமைவது என்றும் கொள்ளலாம். இக்கவிஞரின் கவிதைகளில் இப்பண்புகளைத் தொடர்ந்து காணலாம் என்பதற்கு 78 இற்கும் மேற்பட்ட கவிதைகளில் பல உதாரணங்களை அவதானிக்க முடிகின்றது. கவிதைக்காகக் கற்பனையில் ஆழ்ந்துவிடாமல் தன்னைச் சூழ உள்ள சமூகம், அதில் வாழும் மனிதர்கள்.. இவற்றையே பொருளாகக் கொண்டு தனது கவிதா ஆற்றலைச் சிறப்புறக் காட்டியுள்ள நூலாசிரியரின் இந்நூல், சகல தமிழ் பேசும் மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் நிச்சயம் பெறும்.'' என்று கூறியுள்ளார்.

அதுபோல இந்த நூலுக்கு நயவுரை வழங்கியுள்ள முன்னாள் அரசாங்க தகவல் திணைக்கள தகவல் அதிகாரியான கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ''இலக்கியத் தடத்தில் கால்பதித்து அதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் இளையவர்களில் முக்கியமான ஒருவராகவே தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவை நான் பார்க்கிறேன். ஒருசில கவிதைகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு ஓய்ந்து போவோர்களாய் பல இளையவர்கள் இருக்கையிலே தான் சார்ந்த இலக்கியத் துறையில் ஒரு திடமான தடத்தைப் பதிக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் நிறையவே காணப்படுவதை நான் அறிவேன். இலக்கியத் துறையிலுள்ள மூத்தோருடன் அவருக்கு இருக்கும் தொடர்பு, அவர்களை அணுகும் முறை என்பனவுடன், இளையவர்களுடன் இருக்கும் சுமுக உறவு போன்றன இத்துறையில் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்வுடனும் ரிஸ்னாவை ஈடுபட வைக்கிறது என்று சொன்னால் அது பிழையல்ல. ஏறக்குறைய இலங்கையின் எல்லா பத்திரிகை, சஞ்சிகைகளிலும், வானொலி, தொலைக்காட்சிகளிலும் தனது பதிவினைச் செய்துள்ள எச்.எப். ரிஸ்னா, கடல் கடந்தும் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். அவருக்கென்றே பல பிரத்தியேக அழகான வலைப்பதிவுகள் சர்வதேசமெங்கும் அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவரிடமிருக்கும் தேடல் முயற்சிகள் அவரை பண்படுத்திக் கொண்டிருக்கின்றன.''

கருத்துரை வழங்கியுள்ள சிரேஷ்ட வானொலி அறிவிப்பாளர் கலாபூஷணம் எம்.எஸ்.எம். ஜின்னா அவர்கள் ''எழுத்துக்களால் சமூகத்தை திருத்திவிட முடியும் என்று நம்புகிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறார்கள். எழுத்தின் சமூக பயன்பாடு பற்றி நிறைய வாதப் பிரதிவாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இளம் எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா உன்னதமான நோக்கங்கள் நிறைந்தவராகக் காணக்கூடியதாய் உள்ளார். இவரது உறைப்பான வார்த்தைககள், உபதேசங்கள், போதனை கல்வி போன்றன நிச்சயம் சமுதாயத் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்றன. நெருப்பு வாழ்க்கை, இதயமும் பழஞ்செருப்பும், பெரிய புள்ள, போலி மனிதர்கள், சீதனம் தின்னும் கழுகுகள், ஏழைத் தாய் போன்ற கவிதைகளில் பொதிந்துள்ள கருத்துச் செறிந்த அவரது உன்னத எழுத்துக்கள் இந்த எதிர்பார்ப்பிற்கு வலு சேர்க்கிறது எனலாம்'' என்று ரிஸ்னாவின் கவிதைகள் பற்றி சிலாகித்துள்ளார்.

'மழைக் குளிரில் தளிர் பறிக்கும் மலையக மாதருக்கு' இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். இந்த நூலில் உள்ள 78 கவிதைகளில் சில கவிதைகளை எடுத்து நோக்குவோம்.

'சீற்றம்' (பக்கம் 21) என்ற கவிதை வெள்ள அனர்த்தத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. அத்துடன் அந்த அனர்த்தம் மனிதனுக்குப் புகட்டக்கூடிய பாடங்களையும் இக்கவிதை கற்பிக்கின்றது. எமனைப் போல மழை பெய்து அதனால் சேர்த்து வைத்த சொத்தெல்லாம் அழிந்துவிட்டதாகக் கூறும் நூலாசிரியர் அவ்வாறு அனர்த்தம் ஏற்பட்ட வீடுகளுக்குள் சென்று திருடுவோரையும் இக்கவிதையில் சாடியிருப்பது அவ்வாறு நடப்பவர்களுக்கு சாட்டையடியாகவும் அமைந்துள்ளது.

கொல்லும் எமனாய் வானவெளி
துன்ப மழையைப் பொழிந்ததம்மா
சேர்த்து வைத்த சொத்தெல்லாம்
பார்த்திருக்க அழிந்ததம்மா!

வெள்ளம் என்ற சொல் கேட்டு
உள்ளம் தீயாய் எரிந்ததம்மா
கனவில் பூக்கும் தோட்டத்தில்
கல்லறை மட்டும் தெரிந்ததம்மா!

கூரை வரையும் நீர் வந்து
பதறச் செய்து வதைத்ததம்மா
ஓடி ஒழிய வழிகளின்றி
பின்னால் வந்து உதைத்ததம்மா!

'எனது ஊரும் தலைநகரும்' (பக்கம் 43) கவிதை சொந்த ஊரின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதோடு, தலைநகரில் செயற்கை வாழ்க்கை வாழுகின்ற மனக்கிலேசத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. சொந்த ஊரிலிருந்து வருபவர்களுக்கு தலைநகரம் அபயமளித்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றதென்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மன வாட்டத்தைக் கொடுப்பதும் உண்மையே. காரணம் வீட்டைவிட்டு தொழிலுக்காக, படிப்புக்காக என்று தலைநகரில் வந்தேறு குடிகள்தான் அதிகம். அவ்வாறு காலச் சக்கரத்தின் காய் நகர்த்தலுக்கு ஆட்பட்டு வந்தவர்களின் மனவோட்டத்தை, ஊர் பற்றிய பிரக்ஞையை இக்கவிதை மூலம் நன்கு உணரலாம்.

அங்கு...
நான் ஓடித் திரிந்த மேட்டுநிலம்..
குளிர் பூசும் காலநிலை..
பசுமைமிகு பச்சை மரம்..
அண்ணார்ந்து பார்க்க குன்றுகள்!
மொட்டை மாடியமர்ந்து
கிறுக்கிய கவிதை..
மரத்தடி நிழலின் ஈரலிப்பு..
பலாப் பழத்தின் வாசனை..
என் சமையலை ருசித்தவாறே
கலாய்த்த உறவுகள்..
அன்பின் உம்மா வாப்பா..
செல்லத் தங்கை.. சுட்டித் தம்பி!!!

இங்கு...
சுட்டெரிக்கும் சூரியன்..
பச்சையம் மறந்த பொட்டல் வெளி..
ஜீவிதம் கசக்கும் விடியல்கள்..
வாகனங்களின் தொடர் இரைச்சல்..
மூடியே கிடக்கும் ஜன்னல்கள்..
கொலையுண்டாலும் புரியாத அடுக்குமாடி..
நெருப்பு விலையாய் சாமான்கள்..
சுனாமி தந்த கடல் அல்லது கரை
செயற்கை சிரிப்புமற்ற மனித உயிர்கள்!!!

'லயத்து வீடும் கரத்தை மாடும்' (பக்கம் 66) என்ற கவிதை காலாகாலமாக மலையக மக்கள் படுகின்ற துயரத்தை பிரதிபலிக்கின்றது. கொழுந்து பறிக்கும் தொழிலைச் செய்பவர்கள் மழை வெயில் பாராது, கஷ்டப்படுகி;ன்றனர். ஆனாலும் அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு ஷலயத்துக் காம்பறா| என்று சொல்லப்படும் சிறு அறையில் பல தலைமுறைகள் வாழ்ந்து வருகின்றார்கள். வாக்குகள் கேட்டு காலடி தேடிப் போகும் அரசியல்வாதிகள் கூட, அம்மக்களின் பிரச்சிகைளைத் தீர்த்து வைக்கப் பாடுபடுவதில்லை. ரொட்டியும் சம்பலும், தேயிலைச் சாயமும்தான் அவர்களது உணவு. இந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்க்கையை இக்கவிதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றமை சிறப்பம்சமாகும்.

கொழுந்த நாம பறிச்சு பறிச்சே
கையி காலு முறிஞ்சி போச்சி
தேங்கா மாவு குதிர வெல
ஒழக்கிறதும் எரிச்சலாச்சு!

சப்பாத்து இன்றி போனதால
புள்ள படிப்பு பாழாப் போச்சி
பட்டணம் போன மூத்தவனின்
சம்பளமும் கொறஞ்சி போச்சி!

மானியம், கடனுதவி
அர்த்தமெல்லாம் பிழச்சிப் போச்சி
வாழையடி வாழையாக
கஷ்டங்களே நிலைச்சிப் போச்சி!

நம்பிப் போட்டோம் வாக்குகள
எல்லாமே மோசம் போச்சி
தொரே மாரின் வேஷம் எல்லாம்
நல்லாவே வெளுத்துப் போச்சி!

லயத்து வீடும் கரத்தை மாடும்
எங்களுடைய சொத்தாப் போச்சி
மாடி வீடும், மஹத்தியா பட்டமும்
அவங்களோட நெலச்சிப் போச்சி!

குடிக்கலாம்னு பாத்தோமே
கொஞ்சமாவது கஞ்சி வச்சி
கூரை ஓட்டை தண்ணி வந்து
அடுப்பும் இங்கு நூந்து போச்சி!!!

இளம் தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராக எச்.எப். ரிஸ்னாவைச் சொல்லலலாம். இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிளும் காலூன்றி வெற்றி பெறக்கூடிய திறமை இவருக்கு நிறையவே இருக்கின்றது. இவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது. சந்தக் கவிதைகளில் மனம் லயிக்கச் செய்யும் எழுத்தாற்றல் கைவரப் பெற்ற இவரது இலக்கியப் பணி தொடர்ந்தும் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகிறேன்!!!


நூல் - மழையில் நனையும் மனசு 
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
தொலைபேசி - 0775009222
மின்னஞ்சல் முகவரி - riznahalal@gmail.com 
விலை - 400 ரூபாய்

Sunday, September 22, 2019

126. பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்

பேராதனை ஷர்புன்னிஸாவின் "கிராமிய மணம்" நூலை முன்னிறுத்திய ஒரு கண்ணோட்டம்

"சித்தி ஸர்தாபி" என்ற இயற்பெயரை உடைய ஷர்புன்னிஸா 1933ஆம் ஆண்டில் ஹட்டனில் பிறந்தவர். திருகோணமலையைச் சேர்ந்த இவரது தந்தையார் மொஹிதீன் பாவா. இவரது தாயார் சுலைஹா உம்மா அநுராதபுரத்தைச் சேர்ந்தவர். இலங்கைப் பொலிஸ் சேவையில் உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய இவரது  தந்தையாரின் இடமாற்றம் காரணமாகவே ஷர்புன்னிஸா பல்வேறு பிரதேசப் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார். காலப்போக்கில் கன்ஸுல் உலூம் எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்களை தனது துணைவராக ஏற்றுக்கொண்டார். இலக்கியத்திலான ஈடுபாடே இவர்கள் இருவரையும் இணைத்து வைத்துள்ளது. இந்த இணைப்பே இவர்களை மென்மேலும் எழுத்துத் துறையில் ஈடுபட வைத்தது.

1948களில் எழுத்துலகில் பிரகாசித்தவரே ஷர்புன்னிஸா. முஸ்லிம் பெண்களின் கல்வி பற்றி நினைத்தும் பார்க்காத அந்தக் காலத்தில் எழுத்துலகில் ஈடுபாடுகாட்டி வந்தார். ஈழத்துப் பெண் எழுத்தாளர்களுக்கு முன்னோடியாய் அமைந்த பெண்மணியான இவர், காலத்தின் தேவை கருதி கவிதை, சிறுகதை, சிறுவர் கதை, கட்டுரை ஆகிய பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் இவரது எழுத்து முயற்சியை செவ்வனே செய்து வந்தார். மட்டுமல்லாமல் 1948 – 1952 காலப் பகுதிகளில் இவரது தந்தையாரின் பிறப்பிடமான திருகோணமலையில் வாழ்ந்த காலத்தில் இத்தகைய கிராமியப் பாடல்களைச் சேகரிப்பதில் அதிக முனைப்புடன் ஈடுபட்ட இவர் அவற்றை தனது கதைகளில் சேர்த்தும் கட்டுரைகளில் நயந்தும் நிறையவே எழுதியுள்ளார். ஆரம்ப காலத்தில் பேராதனை ஷர்புன்னிஸா என்ற யெரிலேயே தனது படைப்புக்களைக் களப்படுத்தி வந்துள்ளார். "பேசாமடந்தை" என்ற புனைப் பெயலிலும் சிலவற்றை எழுதியுள்ளார். தற்போது கண்டி மாவட்டத்திலுள்ள ஹீரஸ்ஸகல என்ற இடத்தில் வசித்து வருகின்றார்.

இவர் தினகரன், வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, லங்கா முரசு, மலை முரசு, மலைநாடு இஸ்லாமிய தாரகை, புதுமைக்குரல் ஆகிய ஈழத்துப் ஊடகங்களிலும் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் ஆகிய இந்திய இதழ்களிலும் நிறையவே எழுதிவந்துள்ளார். "முஸ்லிம் பெண்களின் கல்வி", "முஸ்லிம் பெண்களும் சமூக சேவையும்", "முஸ்லிம் பெண்களும் அரசியலும்" போன்ற தலைப்புக்களில் தொடர் கட்டுரைகளை இவர் வீரகேசரிப் பத்திரிகையின் வனிதா மண்டலத்தில் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு விமர்சனங்களையும் இவர் எதிர்கொண்டார். இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் மூத்த ஆளுமையான இவர் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் உடுநுவர தொகுதியின் செய்தியாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் அண்மையில் வெளியிட்ட "மின்னும் தாரகைகள்" என்ற இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வு நூலில் இரண்டாவது ஆளுமையாக இவர் பற்றிய தகவல்களே காணப்படுகின்றன.

வாய்மொழியாக இருந்து வந்த இவர் நாட்டார் பாடல்களை நூலாக்கும் விருப்பத்துடன் 1996 இல் "கிராமிய மணம்" என்ற நூலை வெளியிட்டுள்ளார். கிராமிய மணங்கமழும் சிறந்த நாட்டார் பாடல்களை இந்த நூலில் வாசகர்கள் இரசிக்கலாம். தான் எழுதிய பல்வேறு சிறுகதைகளிலேயே இந்த நாட்டார் பாடல்களை மிகப் பொருத்தமான முறையில் உட்புகுத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளார். ஒரு கிராமத்தின் வெள்ளை இதயத்தை இவரது "கிராமிய மணம்" படம் பிடித்துக் காட்டுகிறது.

"எழுதப் படிக்கத் தெரியாத காலத்தில் வாய்மொழி வாயிலாக எழுந்த இப்பாடல்களில் காணப்படும் இயற்கைச் சூழல், அதனோடு ஒட்டிய மண்வாசனை, இன்ப துன்ப உணர்வுகள், உறவுகள், உவமை உருவக அணிகள் என்பன கல்வி உலகையே கலக்கி நிற்கின்றதெனலாம். இதனால் ஈர்க்கப்பட்டு ஈடுபாடு கொண்டதன் விளைவே கிராமிய மணம்|| என்னும் இந்நூல்" என்று ஷர்புன்னிஸா தனது நூலின் என்னுரையில் குறிப்பிடுவதிலிருந்து அவரது நாட்டார் பாடல்கள் மீதான அதீத ஈடுபாட்டைக் கண்டுகொள்ள முடியும். 1950 - 1960 களில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சிந்தாமணி; ஆகிய இலங்கைப் பத்திரிகைகளிலும் தமிழ்நாட்டின் மணிவிளக்கு, மணிச்சுடர், ஷாஜஹான் சஞ்சிகைகளிலும் எழுதி வந்த கிராமியக் கவிதைகளை அடக்கிய கதை, கட்டுரை வடிவங்கள் சிலவே இந்தக் "கிராமிய மணம்" நூலில் இடம்பெற்றுள்ளன என்றும் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.

வாதம், புதிது, உறவு, உருக்கம், நினைவு, தவிப்பு, பிரிவு, இணைப்பு, ஒளி, ஒழுங்கு, மசக்கை, அமுது ஆகிய 12 தலைப்புக்களில் கிராமியப் பாடல்கள் கலந்த சிறுகதைகளை நூலில் காணலாம். இக்கதைகளுக்கெல்லாம் பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வைரமுத்து, மருதகாசி, வாலி போன்ற பிரபல்யமான இந்தியக் கவிஞர்களது கவிதைத் துணுக்குகளைத் தலைப்பிட்டுள்ளதுடன் இலங்கைக் கவிஞர்களான பரீத் ஏ. ஜவ்ஸகி, அக்கரையூர் அப்துல் குத்தூஸ், அக்கரைப்பாக்கியன், கவிஞர் ஏ. இக்பால் ஆகியோரது இசைக் கவிதைகளையும் தலைப்பாக இட்டுள்ளார்.

இரசனைக்காக "புதிது" என்ற தலைப்பில் அமைந்த கதையைத் தருகின்றேன்.

"ஒரு மடமாது உருகுகின்றாளே
உனக்கேன் புரியவில்லை - இது
சோதனையா நெஞ்சில் வேதனையா - உன்
துணையேன் கிடைக்கவில்லை"

என்ற கவியரசு கண்ணதாசனின் வரிகளோடு தொடங்குகிறது இந்தக் கதை.

உதுமா நாச்சி புதுமணப் பெண். அவளது கணவன் ஸாலிஹ். கரத்தையைக் கட்டிக்கொண்டு சுபஹுக்கு முன்பு போன கணவனை இரண்டு நாட்களாகியும் காணவில்லை. எங்கு போனார்? என்ன ஆனார்? ஒன்றுமே தெரியாது தவித்தாள் புதுமணப் பெண் உதுமா நாச்சி. மிகுந்த வேதனையால் அவள் துடிதுடித்தாள். இன்று வருவார், இப்போ வருவார் என்று தினமும் அரிசியைக் கொட்டி ருசியாக சமைத்து வைப்பாள். ஈற்றில் ஏமாந்த உள்ளம் உண்ண மனமில்லாமல் வெப்புசாரம் நெஞ்சடைத்துப் போவாள். ஆக்கிய சோற்றையும் கறியையும் கொட்டி அடுத்த வீட்டு பாத்தும்மாவுக்கு கொடுத்தே விடுவாள்.

அடுத்த நாளும் இன்றாவது கணவன் வருவார் என்ற ஏக்கத்துடன் நாவுக்கு ருசியாய் மீண்டும் ஆக்கி வைப்பாள். பாவம் பதுமைப் பெண், மீண்டும் ஏமாற்றமடைவாள். கணவனின் நினைவுகளாளே நாள் முழுவதும் உந்தப்பட்டிருந்த உதுமா நாச்சிக்கு அவ்வப்போது கணவன் வரும் கரத்தையின் ஓசை கேட்பது போலவும் நினைவு வரும். காதைக் கூர்மையாக்கி கதவின் ஓட்டை வழியே பார்த்து நிற்பாள். அவளுக்கு ஒன்றுமே சாப்பிடப் பிடிக்கவில்லை. கோபமும் கவலையும் அவளை ஆட்கொண்டன. மனது வெடித்தே போய்விடும் போலிருந்தது அவளுக்கு. இருளின் போர்வை எங்குமே இழுத்து மூடப்பட்டதான உணர்வு. எமது மனதை உருக்குகிறதல்லவா? பாவம் பேதை என்ன செய்வாள்?

கரத்தையைக் கட்டிக் கொண்டு ஸாலிஹ் தொழிலுக்கு சென்றாள் என்றால் மீண்டும் அவன் திரும்பி வர இரண்டு மூன்று நான்கு நாட்கள் என்று அவனது வேலைக்கேற்ப நாட்கள் கழியும். இந்தப் பிரிவே புதுமணப் பெண் உதுமா நாச்சியை மிகவும் வருத்திவிடும். இரவோடு இரவாக ஸாலிஹ் வந்தால் விடியும் முன்பே போய்விடுவான்.

இஷாவையும் தாண்டிய பொழுதொன்றில் வீட்டு வாசற் கதவு தட்டப்படும் ஓசை. உதுமா நாச்சி ஆசையோடு கதவருகே ஓடோடி வந்து அப்படியே கதவோரம் நின்றுவிட்டாள்.

".. பொடு பொடுத்து மழை பொழிந்து
பூமி எங்கும் தண்ணி ஓடக்
குடை பிடித்து வந்து சேர்ந்தும்
குணமணியே தூங்கிறியோ ..?"

கணவனது கவிக் குரல் அவளை எதிர்பார்த்திருந்தது. அவளோ ரோசக்காரி. கதவருகே நின்றபடி தன்னையே மறக்கிறாள்.

".. நித்திரைதான் கொண்டியளோ – என்
நினைவை மறந்தியளோ
கதவு திறக்காத
கருத்து என்ன என் கிளியே ..?"

மீண்டும் அவனின் கவிக் குரல். உதுமா நாச்சி ஆவலுடன் கதைவைத் திறக்கிறாள். ஏக்கமாய் கணவனைப் பார்த்த அவளது மனது கவியாகப் பறக்கிறது.

".. ஆக்கின சோத்தி லொரு
கல்லிருந்து மின்னுதல் போல்
போக்கணங் கெட்ட ராசாக்கு - ஒரு
பொண்ணிருந்து மின்னுதுகா .."

தன்னை மறந்து தொழிலே கதியென்று தன்னைப் பிரிந்து சென்ற நாட்களுக்காக கணவனைக் கடிந்து கொண்டாள் அவள். அவனும் என்ன செய்வான் அவளுக்காகத் தானே ஓடியோடி உழைக்கிறான்.

".. கண்டுக் கிளியே
கதை பழகும் நங்கணமே
இன்பக்கடலே என்னை
என்ன செய்யக் காத்திருந்தாய் ..?"

கணவனது இந்தக் கவிக் கணையால் உதுமா நாச்சி கன்னங்கள் சிவந்து நாணங்கொண்டாள். அவனது கரங்களில் புதைந்து கொண்டாள் அவள்.

இப்படி ஒரு யுகத்தின் சோகத்தையே இந்தக் கதை அப்பி நிற்கின்றது. இப்படி 12 கதைகள் நாட்டார் பாடல்கள் கலந்ததாய் வாசகர்கள் இரசித்து வாசிக்கலாம்.

பல்வேறு வகையான மன அழுத்தங்களால் மிகவும் இறுகிவிட்ட மனித மனங்களை இவ்வாறான சுவை ததும்பிய இலக்கியங்கள் இலேசாக்கிவிடும் என்பதில் ஐயமேயில்லை. இவ்வகையான இலக்கியங்கள் காலத்தின் தேவையாகும்.

கலாசார அமைச்சின் இந்து கலாசாரப் பகுதி 'தமிழ் ஒளி' எனும் பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. இவர் இத்துறையில் பல பாராட்டுக்களையும் பரிசுகளையும் அதிகமாகப் பெற்றுள்ளார் என்பது போற்றத்தக்கது. மலையக கலாசார பேரவை 'இரத்தின தீபம்' விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கை அரசும் இவரது இலக்கிய சேவையை கௌரவித்து 'கலாபூஷணம்' விருதையும் வழங்கியுள்ளது.

ஷர்புன்னிஸா அவர்களின் இலக்கியப் பணி மகத்தானது. அந்தக் காலத்தில் நிகழ்த்திய இவரது மேடை உரைகள் கூட மிகவும் காத்திரமானதாகும். இஸ்லாமிய மகளிரின் கல்விக்காக குரல்கொடுத்த ஒரு மூத்த ஆளுமை இவர். 86 வயதுகளையும் தாண்டிய இவரது இலக்கியத் தொண்டுகள் தொடரவும் இவர் நீடூழி வாழவும் என்றென்றும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்!!!

நூல் - கிராமிய மணம்
நூல் வகை - நாட்டார் கவிகளுடன் கூடிய சிறுகதை
நூலாசிரியர் - பேராதனை ஷர்புன்னிஸா
வெளியீடு - பேசும் பேனா வெளியீட்டகம்


125. வல்லூறின் வானம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

வல்லூறின் வானம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

பல நூற்களுக்குச் சொந்தக்காரரான மருதூர் ஜமால்தீன் 'வல்லூறின் வானம்' எனும் கவிதைத் தொகுப்பிற்கும் இப்போது சொந்தமாகிவிட்டார். நூலாசிரியரின் 10 ஆவது நூலாகவே இந்த நூல் வெளிவந்துள்ளது. ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தடயங்கள், தாலாட்டு, வலிகள் சுமந்த தேசம், தீ நிலம் போன்ற கவிதை நூல்களையும் ரமழான் ஸலவாத், கிழக்கின் பெருவெள்ளக் காவியம், முஹம்மத் (ஸல்) புகழ் மாலை, இஸ்லாமிய கீதங்கள், பத்ர் யுத்தம் (ஸலவாத் மாலை) போன்ற படைப்புக்களையும் ஏற்கனவே இலக்கிய உலகுக்குத் தந்துள்ளார்.

அண்மையில் வெளிவந்துள்ள 'வல்லூறின் வானம்' எனும் கவிதைத் தொகுப்புப் பற்றி கவிஞர் ஏரூர் கே. நௌஷாத் குறிப்பிடுகையில், ''இறை சிந்தனையில், இலங்கும் கவிஞர் சமூகப் பிரச்சினைகள் கண்டு, சங்கடங்கள் கொண்டு உள்ளக்கிடக்கைகள் கொட்டி, சமூக விளிப்புணர்வைத்தட்டி, உள்ளது உள்ளபடியே கண்ணாடியாய் நின்று முன்னாடி நடக்கின்ற அநியாயங்களை, அத்துமீறல்களை, அரசியல் நாடகங்களை, அடாவடித்தனங்களை குத்திக்காட்டும் குத்தீட்டியாய், வெட்டிவிட நினைக்கும் வீர வாளாய்த் தனது வரிகளை வடிவமைத்திருக்கிறார்| எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ஷஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் இருக்க வேண்டிய சமய சமூக ரீதியிலான பற்றுதலும் பிடிமானமும், அநீதி கண்டு பொங்கியெழும் ஆழ்ந்த பார்வையும் கவிஞரிடத்தில் அபரிமிதமாகவே காணப்படுகிறது'' எனக் குறிப்பிடுவதிலிருந்து அவரது சமூகப் பற்று நன்கு புலனாகின்றது.

வல்லூறின் வானம் என்ற இந்தக் கவிதை நூலானது சமூகத்தில் நிலவும் இனவாதச் செயல்களை சுட்டிக் காட்டுவதாகவும் தட்டிக் கேட்பதாகவும் அமைந்துள்ளது. மேலும் இனப் பகையைக் கலைந்து ஒற்றுமையை நிலைநிறுத்த தனது கவிதைகள் மூலம் மருதூர் ஜமால்தீன் அவர்கள் அரும்பாடுபடுகின்றார். மரபு வடிவில் அமைந்த நூலாசிரியரின் இந்தக் கவிதைகள் நூலில் பல தலைப்புக்களில் அமைந்துள்ளன.

'எவர் கண்பட்டதோ?' என்ற கவிதையில், எத்தனை எத்தனையோ இழப்புக்கள், சோதனைகள் எம் தாய்த்திரு நாட்டில் வந்திருந்தும் அத்தனை அவலங்களையும் தீர்த்துக்கொண்டு வருகின்றவேளை இன்னுமொரு இனத்தீ புகைத்திட வேண்டுமா எனக் கேட்கின்ற இவர் பின்வருமாறு தனது ஆதங்கத்தை இறைவனிடம் கூறி நிற்கின்றார் கவிஞர் மருதூர் ஜமால்தீன் அவர்கள்.

ஒற்றுமையென்ற உயர்கொடியை
உயர்த்திப் பிடிக்கும் நிலைதவறி
பற்றுக்கள் வளரா பகை விளைத்து
பரிதவித்திடவே வினை தூவும்
புற்றுள நெஞ்சோர் வன்முறையை
புதிதாய் விதைக்கும் முறையென்ன
இற்றரை மீதில் மீண்டுமொரு
இனவன்செயலா இறையோனே!

'மனிதம் வாழ வேண்டும்' என்ற கவிதையில் சமூகத்தில் தீய செயல்களை விதைக்க வேண்டும் என்று முனைப்புடன் செயற்படுவோரை உள்ளம் மாசடைந்து கெட்டுப் போனவர்களாகக் குறிப்பிடும் இவர், அவர்கள் உண்மையான நேர்வழியில் முட்களைத் தூவி அதில் பயணிப்போரை இடர்படுத்துவதாக விபரிக்கும் இவர் அதன் ஈற்றில் மனிதாபிமானத்தையும் மனித நேசத்தையும் கொண்ட மனிதர்களை, பின்வருமாறு போற்றுகின்றார்.

மக்கள் வாழவுழைத்திங்கு
மனிதம் வாழ பதிசெழிக்க
தக்கோர் உறவில் கரம்கோர்த்து
தன்மைத் தூய மனங்கொண்டு
மிக்கோர் பணிகள் புரிவதுவே
முனையும் நன்மைச் செயலாகும்
இக்காலையாம் சிந்திப்போம்
இனிய மனிதம் போற்றிடுவோம்!

'ஒன்று சேர்வோம்' என்ற பின்வரும் கவிதையின் மூலம் சமூக ஒற்றுமைக்கு பாலமிடுகிறார் கவிஞர்.

இத்தரை வாழ்ந்திடும் பல்லினத்தோர்
இன்புற்று வாழ்ந்தி;டவும் ஒற்றுமைக்கு
சுத்தான விதை தூவி நல்லதோர் வழியை
சாதி மத குலப் பகையைத் தூர வீசி
புத்தியில் நல்லறிவோடு கருத்தைச் சிந்தி
புதியதொரு சமூக நல்லெழுச்சிக்காய்
நித்தமும் உழைத்திடக் கரங்கள் சேர்த்து
நலம் நாடு பெற்றிட ஒன்று சேர்வோம்!

விரிசல் அடைந்துள்ள இன ஒற்றுமையை மறுசீரமைக்க இவ்வாறான கவிதைகள் காலத்தின் தேவையாக அமைந்துள்ளன.  தலைவிரித்தாடும் இனப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே கவிஞரின் தலையாய நோக்கமாகும், இதனையே மேற்படி கவிதை வரிகள் பறைசாற்றுகின்றன.

பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு, இறுதி வெற்றி என்பன இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்த இவர், இறுதியாக ஷதுஆ ஏற்பாய்| என்ற கவிதையில் பகைவனிடமிருந்து காத்திடுமாறு படைத்தவனையே பின்வருமாறு வேண்டி நிற்கிறார்.

கொலை, கொள்ளை, பாதகங்கள்
கொழுந்துவிட்டுக் குளிர்காய
சிலைவாழ்வில் பயணிக்கும்
சிந்தையிலாத் தீயோரின்
நிலையற்ற வன்செயலால்
நிம்மதியைக் கெடுத்தெம்மைக்
கலைத்துவிடத் துடிக்கின்றார்
காத்திடுவாய் ரஹ்மானே!

மருதூர் ஜமால்தீன் தனது இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து மேலும் காத்திரமான நூல்களை வெளியிட வாழ்த்துகிறேன்.

நூல் - வல்லூறின் வானம்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - மருதூர் ஜமால்தீன்
விலை - 100 ரூபாய்
தொலைபேசி - 0775590611

Sunday, August 4, 2019

124. தமிழ்மணி மானா மக்கீனின் இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

தமிழ்மணி மானா மக்கீனின் இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மத்

மூத்த எழுத்தாளர் 'லைட் ரீடிங்' புகழ் மானா மக்கீன் அவர்கள் எழுதி வெளியிடும் ஆய்வு நூலே இலங்கை - மலைக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் என்ற நூலாகும். கலாபூஷணம், மானா மக்கீன் அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இலக்கிப் பணி புரிந்தவர். எம்.எம். மக்கீன் என்ற இயற்பெயரையுடைய இவரது இலக்கியச் சேவைகளை எழுதுவதென்றால் இந்தப் பக்கம் இதற்கு இடந்தராது. அந்தளவில் இவரது இலக்கியப் பணிகள் பரந்துபட்டது. மானா மக்கீன் என்ற ஒரு வித்தியாசமான எழுத்தாளரைத் தெரியாதவர்கள் ஒருவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவில் இவரது புகழ் நம்நாட்டில் மட்டுமல்ல அயல் நாடுகளிலும் ஓங்கியுள்ளது. இவரது துணைவியார் நூர் மின்ஷா, ஒரே மகள் வைத்திய கலாநிதி அஞ்சானா, அதேபோல் ஒரே மகன் பொறியியராளர் அஸீம் அகமது. இவர்கள் யாவரும் இந்த நூலாசிரியரின் எழுத்து முயற்சிகளுக்கு ஒரு உந்துசக்தியாக அமைந்தவர்கள்.


நாடகப் பிரதிகளுக்கு தட்டுப்பாடு நிலவிய 1950 - 1960 களில் பேராசிரியர் சரத்சந்திரா சிங்கள அரங்கிற்கு வழங்கிக்கொண்டிருந்த சமயம் இதன்பால் கவரப்பட்டவரே இந்த நூலாசிரியர். 1937.05.29 ஆம் திகதி கொழும்பில் பிறந்த இவர் மருதானை சாஹிராக் கல்லூரியில் கற்கும் காலத்தில் இவரது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தெடுத்தவர், எமது தென்னிலங்கையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியர் திக்குவல்லை எம்.ஏ. முஹம்மத் என்பதில் நானும் பெருமையடைகின்றேன். 1955 இலேயே இவரது முதலாவது நாடகம் ரேடியோ சிலோன் (தற்போது இலங்கை வானொலி) சிறுவர் மலர் நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டது.

அரச பத்திரிகையான தினகரனில் பத்தி எழுத்தாளராகவும், செய்தியாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய இவர், தினகரனில் தொடர்ந்து எழுதிய 'லைட் ரீடிங்' என்ற பகுதி வாசகர்கள் பலரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது. 'நிலா' என்ற பெயரில் பல்சுவைச் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டு சஞ்சிகைத் துறையிலும் இவர் தனது பணியைத் திறம்படச் செய்துள்ளார். பன்னூலாசிரியராகத் திகழும் இவர் இதுவரை 40 நூல்களுக்கும் அதிகமாக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்திருப்பது பாராட்டத்தக்கது.

கல்கண்டு இதழால் கவரப்பட்ட இவருடைய ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், தினக்குரல் போன்ற உள்நாட்டுப் பத்திரிகைகளிலும் கண்ணன், பூஞ்சோலை, அமுதம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளதோடு வாரா வாரம் ஒலிபரப்பாகும் வானொலி சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும் இவரது ஆக்கங்கள் களங்கண்டுள்ளன.

நாடகாசிரியராக, நெறியாளராக, மொழிபெயர்ப்பாளராக, இலக்கியவாதியாக, சஞ்சிகையாசிரியராக, ஆய்வாளராக, வானொலி நாடகப் பிரதி எழுத்தாளராக, பொப் இசை நிகழ்ச்சிகள் அமைப்பாளராக, ஊடகவியலாளராக என்று பல துறைகளிலும் இலக்கியப் பணிகளைப் புரியும் இவரது ஆளுமைமிக்க இலக்கியப் பங்களிப்புக்களுக்காக தாஜுல் உலூம் (1991), தமிழ் மணி (1992), தமிழ்க் குமரன் (1994), கலாபூஷணம் (2004), தேசத்தின் கண் (2005), இலக்கிய நிறைமதி (2007), வாழ்நாள் சாதனையாளர் (2017) ஆகிய பட்டங்களை நம் நாட்டிலும், தமிழ்நாடு முஸ்லிம் பத்திரிகையாளர் சங்கம் 'எழுத்து வேந்தன்' (1994), தமிழ்நாடு பண்பாட்டு நட்புறவு மன்றம் 'ஆய்வுத் தமிழ் ஆற்றுநர்' (2007) என்ற விருதையும் மற்றும் 'முத்தமிழ் வித்தகர்' (1996), 'ஆய்வு இலக்கியச் சுடர்' (1999), 'சேவைச் செம்மல'| (2011) ஆகிய விருதுகளை தமிழ் நாட்டிலும் தமிழ்க் காவலன் (1996) என்ற விருதை தாய்லாந்து நாட்டிலும் 'இலக்கிய சிரோமணி' (1999) என்ற விருதை மலேசிய நாட்டிலும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

சிறுகதைத் துறையிலும் இவருடைய ஈடுபாடு அதிகம். முஸ்லிம் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'றகுமத்தும்மா' என்ற இவரது சிறுகதை இதற்குச் சான்று. பின்னாட்களில் இந்தச் சிறுகதையை தமிழக இதழ்களும் மீள்பிரசுரம் செய்திருப்பதும் முக்கியமான விடயமாக அமைகிறது.

இலங்கை - தமிழக இணைப்புப் பாலமான இவர் பன்முக ஆற்றலுள்ள ஒரு வித்தியாசமான எழுத்தாளர் என்பதில் சந்தேகமேயில்லை. இவர் தொடாத துறை என்றால் அது கவிதைத் துறை மட்டுமே. கவிதைத் துறையில் இவருக்கு நாட்டமில்லாமல் போனமைக்கான காரணம் தெரியவில்லை. மட்டுமல்லாமல் கவிதைத் துறையை இவர் ஊக்குவிக்கவும் விரும்பவில்லை என்ற விடயம் கவிஞர்களுக்கு மிகுந்த மன வேதனையளிப்பதாக அமைகின்றது. எதனையும் மனதில் வைத்திராத குணம் இவருடையது. சிலவேளை பட்டாசு போன்று தனது கருத்துக்களை வெடித்துரைப்பார். புதுமையாகவும், புரட்சியாகவும், தனித்துவமாகவும் தனது பணிகளைச் செய்ய வேண்டும் என்ற இவரது ஆர்வத்தை கானக நிலா நூலிலும், இந்த நூலின் வெளியீட்டு விழாவிலும் காண முடியும். இனி இவரது நூலிலிருந்து வாசகர்களுக்காகச் சில தகவல்களை தரலாம் என்று நினைக்கிறேன்.

சென்னை தாழையான் பதிப்பகம் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளியிட்டுள்ள இந்த இலங்கை - மலையக 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார் என்ற ஆய்வு நூல் தமிழகத்திலிருந்து 1949 இல் இலங்கை வந்து 1962 வரை அதாவது 14 ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து வந்த பீரங்கிப் பேச்சாளர் டியெம்பி என்று அழைக்கப்படும் டி.எம். பீர் முகம்மத் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஆய்வு நூலாகும். இலங்கையில் வாழ்ந்த 14 ஆண்டுகளும் கொழும்பு வாழைத் தோட்டம் மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய இரண்டு பிரதேசங்களிலுமே; இவர் வாழ்ந்துள்ளார்.

இந்த டியெம்பி தமிழகத்தின் நெல்லை மாவட்டம், திருநெல்வேலிச்சீமை, கல்லிடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆதனால்தான் இவர் கல்லிடைக்குறிச்சியார் என்று அழைக்கப்பட்டார். தொழிற்சங்கவாதியாகவும், சஞ்சிகையாசிரயராகவும், எழுத்தாளராகவும், பீரங்கிப் பேச்சாளராவும் தனது பங்களிப்புக்களைச் செய்த இந்தக் கல்லிடைக்குறிச்சியாரை தழிழகத்திலும் மலையகத்திலும் மறந்து போன நிலைமையில் இவர் பற்றிய ஆய்வாகத் தனது நூலை மானா மக்கீன் அவர்கள் வெளியிட்டிருப்பது காலத்தின் தேவையாகும்.

இந்த நூலில் கானக நிலா கல்லிடைக்குறிச்சியார் டியெம்பி பற்றி, 'மேடைகளில் முழுங்கிய பீரங்கி', 'இலங்கையில் நவஜீவனாகவும் நண்பனாகவும் திகழ்ந்த கல்லிடைக்குறிச்சியார்', 'கல்லிடைக்குறிச்சியாரின் கங்காணி மகளும் சதியில் சிக்கிய சலீமாவும்| ஆகிய மூன்று தலைப்புக்களிலேயே நூலாசிரியரினால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த டியெம்பி நவஜீவன், நண்பன் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், தாரகை சஞ்சிகையில் எழுத்தாளராகவும் விளங்கியுள்ளார். கல்லிடைத் தம்பி, பீரங்கி, டியெம்பி, ஹமீதா பானு போன்ற புனைப் பெயர்களில் சஞ்சிகைகளில் எழுதியுள்ளார்.  நவஜீவன் சஞ்சகையில் நமது தீர்ப்பு, புத்தகத் திறனாய்வுகள் போன்ற பக்கங்களை இவரே எழுதியுள்ளார். சஞ்சிகையாசிரியராக மட்டும் இவரை மட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இவர் ஒரு எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் இயங்கியுள்ளார்.

கொலைகாரி, திடீர்த் திருமணம், பருவத்தின் கோளாறு, வள்ளித் திருமணம், ஏமாந்தவன், குழந்தைகள் கட்டி வைத்த திருமணம் ஆகிய சிறுகதைகளை டியெம்பி நவஜீவனில் எழுதியுள்ளார். இவ்வாறு பல சிறுகதைகளை எழுதியுள்ள இவரது ஆறு சிறுகதைகளைத் தொகுத்து 'சிறுகதைகள் ஆறு' என்ற நூல் வெளிவந்துள்ளது. மட்டுமல்லாமல் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் பற்றிப் பேசும் 'கங்காணி மகள்' (1955) என்ற நாவலும், முஸ்லிம்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் 'சதியில் சிக்கிய சலீமா' எனும் நாவல் 1953 களில் இலங்கையின் அக்கால முஸ்லிம் வார இதழ் தாரகையில் வெளிவந்து பல வாசகர்களையும் வசப்படுத்தியுள்ளது. 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்றும் ஆயிரக் கணக்கில் சொற்பொழிவாற்றியவர் என்றும் இவர் பற்றிய குறிப்பொன்றும் இந்த நூலில் உள்ளது.

மலையக மக்கள் பலரையும் கவர்ந்த இவர், 'பீரங்கிப் பேச்சாளர்' என்று அழைக்கப்பட்டது மட்டுமல்லாமல் 'ஈழத்து அண்ணா' என்றும் அவரது அபிமானிகளால் அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அப்துல் அஸீஸ், கே.ஜி.எஸ். நாயர் ஆகியோரால் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்ஸை உருவாக்கியபொழுது டியெம்பி அவர்களுக்கு உதவியாக இயங்கியுள்ளார். இவரது இலக்கியத் திறமைக்காகவும் பேச்சுத் திறமைக்காகவும் பல்வேறு வகையான கூட்டங்களில் சிறப்பதிதியாகக் கலந்து சிறப்புரையாற்றும் பேறு இவருக்குக் கிடைத்துள்ளன. இவரது பேச்சைக் கேட்கவென்றே மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் காணப்படும். மட்டுமல்லாமல் மண்டபத்திற்கு வெளியேயும் சனக்கூட்டம் நிரம்பி வழியும். 1955.10.24 இல் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அருணாச்சலம் மண்டபத்தில் 'வளரும் இலக்கியம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையும் 1960.11.13 இல் கொழும்பு விவேகானந்த மண்டபத்தில் ஆற்றிய உரையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. மலையகத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, கலை இலக்கியம் சார்ந்த சொற்பொழிவு, இஸ்லாமியச் சொற்பொழிவு போன்ற தலையங்கங்களில் அவருடைய சிறப்புரை இடம்பெறும். தோட்டங்களிலேயே இவரது பீரங்கி முழக்கம் அடிக்கடி ஒலித்துள்ளது. என்னதான் பீரங்கிப் பேச்சாளராக இவர் இருந்தாலும், இவருக்கு சொற்பொழிவாற்ற ஒரு மணித்தியாலம் வழங்கப்பட்டால் கைக்கடிகாரத்ததைப் பார்க்காமல் சரியாகப் பேசி ஒரு மணித்தியாலத்துக்குள் தனது சொற்பொழிவைச் சரியாக நிறைவு செய்வார் என்பது இவரது விசேட தன்மையாகும். இன்றைய மேடைகளில் விழாக்களில் இப்படியானவர்களைக் காண்பது உண்மையில் அபூர்வமாக இருக்கிறது.

1958.11.16 இல் கொழும்பு வாலிபர் முன்னேற்றக் கழகம் டியெம்பிக்கு பாராட்டு விழா எடுத்துள்ளது. இந்தப் பாராட்டு விழாவுக்குப் பின்னரும் அதாவது 1962 வரை இவர் இலங்கையில் தங்கி அவரது சேவைகளை இந்நாட்டு மக்களுக்காகச் செய்துள்ளார். 1962 இல் அவர் இந்நாட்டை விட்டு திடீரென தமிழகத்தை நோக்கிச் சென்றுள்ளார். பின்னாட்களில் இவருடைய மணி விழா 1976 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. தனது தாயகத்தில் எண்பது வயதைத் தாண்டியும் ஆன்மிக சொற்பொழிவாற்றியுள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயமாகும்.

இப்படி இந்தக் கல்லிடைக்குறிச்சியார் பற்றி ஒரு தெளிவான ஆய்வை மிகவும் சுருக்கமாகவும் இறுக்கமாகவும் வழங்கியுள்ள மூத்த எழுத்தாளர், பன்னூலாசிரியர் மானா மக்கீன் அவர்கள் பாராட்டுக்குரியவர். இவரது இலக்கியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!!!

நூல் - 'கானக நிலா' கல்லிடைக்குறிச்சியார்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - தமிழ்மணி மானா மக்கீன்
வெளியீடு - தாழையான் பதிப்பகம்



வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Sunday, April 8, 2018

123. ''கால் பட்டு உடைந்தது வானம்'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

''கால் பட்டு உடைந்தது வானம்'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்


''கால் பட்டு உடைந்தது வானம்'' என்ற கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்கிறார் எஸ்தர். இவர் மலையகத்தின் ஹட்டன் - டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். அதனால் தானோ என்னவோ சில கவிதைகளில் அப்பியிருக்கும் குளிர் இறுதியில் உஷ்ணக் காற்றை வெளியேற்றி நிறைவடைகிறது. ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் கலைமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் நிறைவுசெய்துள்ளார். சுமார் 15 வருடங்களாக எழுத்துத் துறையில் ஈடுபட்டுவரும் இவரது ''கால் பட்டு உடைந்தது வானம்'' என்ற கவிதைத் தொகுதியில், தனது எண்ணத்தில் பதிந்துள்ள நினைவுகளை கவிதைகளாக மொழிபெயர்த்துள்ளார். 

சென்னை - போதிவனம் பதிப்பகத்தினூடாக வெளிவந்துள்ள இந்த நூல் 136 பக்கங்களில் சிரியதும் பெரியதுமான 105 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. பெரும்பாலான கவிதைகள் தலைப்பிலிக் கவிதைகளாகவே காணப்படுகின்றன. கவிஞர் இங்கு தலைப்பிட்டுக் கவிதை எழுதவில்லை. தனது மனதில் சிறைப்பட்டவற்றை சுதந்திரமாக எழுதியுள்ளார். இந்தத் தொகுதியை தொடர்ந்து வாசித்துச் செல்கையில் கலீல் ஜிப்ரானின் ஷஷமுறிந்த சிறகுகள்|| கவிதை நூலை வாசிப்பது போன்ற உணர்வை இடையில் ஏற்படுத்திப் போவது இந்தத் தொகுதியின் சிறப்பம்சமாகும்.

நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள கோயமுத்தூர் அய்யப்ப மாதவன் நூலாசிரியரின் கவிதையுலகம் பற்றி பின்வருமாறு மனந்திறக்கிறார். ''எஸ்தர் கவிதைகளின் வழியாக, கவிதைப் பேச்சுகளின் வழியாக கவிஞனாகிய என்னைக் கண்டுகொண்டார். கவிதைகள் தவிரவும் பேருலகில் அவருக்குப் பிடித்தமானதாக வேறு இருப்பதற்கில்லை. ஏனெனில் எப்போதும் அவர் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். கவிதையாக எழுதிக்கொண்டிருக்கிறார். தன் வாழ்வை கவிதையாக்கிக் கொண்டிருக்கிறார். எஸ்தரின் விடியலும் அந்தியும் இரவும் கவிதைகளாகவே இருக்கின்றன. இவரது கவிதைகள் படித்து முடித்த பின்னரும் மனதைவிட்டு அகலாத கவிதைகளாய் விழித்திருக்கின்றன''

எஸ்தர் தனது கவிதை மீதான ஈடுபாட்டைப்பற்றி ''எவரும் அறியாத குகைகளின் உள்ளே உள்ள இருளின் அமைதியைப் போல அந்த எழுத்துகள் ஒருமாறுபட்ட தளத்தைச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என சிந்தித்தேன். பேராதனை பல்கலைக்கழகம்தான்; என் போதிவனம். அங்கே உள்ள நூலகத்தில் நான் கட்டிய கூடுகளை கலைக்க விரும்பவில்லை. எப்போதும் தேடலும் வாசிப்பும் என்னை இறுகக் கட்டிக்கொள்ளும் புதுக் கணவனாய். நான் எழுத்துக்கு நேர்மையாக இருந்தேன். அவற்றை வாசித்தேன். எழுத ஆரம்பித்தேன். கவிதைகளும் என்னை விடுவதாக இல்லை'' என்று குறிப்பிடுகின்றார். அத்தோடு நூலுக்கான வாழ்த்துரையை தி/ சிவசக்தி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் இலக்கிய வித்தகர், தேசாபிமானி செ. ஞானராசா அவர்கள் வழங்கியுள்ளார்.

பக்கம் 17 இல் உள்ள கவிதையானது தோட்டத் தெரிலாளர்களின் துயர் சூழ்ந்த வாழ்க்கையை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகின்றது. லயத்துக் காம்பறா எனப்படுகின்ற சிறிய அறைகளில் தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டும், நாட்டின் முதுகெலும்பாக இருந்தபோதும் கவனிப்பாரற்ற சமூகமாக வாழ்ந்து வருவதுமான ஒரு பரம்பரையின் சோகம் இக் கவிதை வரிகளில் தெளிவான இழையோடுகின்றது. அதேபோல இக்கவிதையில் படிமங்கள், குறியீடுகள் பொருத்தமான விதத்திலும், நயக்கத்தக்க முறையிலும் அமையப் பெற்றிருக்கின்றமை பாராட்டுக்குரியது. கவிதை வரிகள் இதோ:-

சில்லறைகள் நிரம்பிய
உண்டியலை உடைக்கும் ஆர்வமாய்
தீபாவளி ஆசைகள்
லயத்து ஜன்னல்களில் 
சாயமிழந்து தொங்குகிறது
லயத்து தகரக் கூரை
ஓயாத மழையில் அழுகிறது
தொழிலாளியின் துயர் கண்டு
இருளும் தீபாவளி!

பக்கம் 65 இல் உள்ள கவிதையானது காதல் மொழிகள் பேசுவதாக எழுதப்பட்டுள்ளது. கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் இதயத்தின் ஓரத்தில் சிறு வலி ஏற்படும் என்பது திண்ணம். கவிதையின் முதல் வரியிலிருந்து கடைசி வரி வரைக்கும் இயற்கை குறியீடுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜல்லிக்கட்டுக் காளையாய்
முரட்டாட்டமாக மோதுகிறது
உன் கண்கள்..
நீலக் கடலை உறைகொள்ள வைக்கும்
மௌனம்..
பாறையின் இடுக்கில் சிக்கியிருக்கிறது
அவரவரின் ஆசைகள்..
பொறுக்கிக் கொண்டே நடக்கிறேன்
நெய்தல் பூமியில் நீ உதிர்த்த வார்த்தைகளை..
அலையில் ஒதுங்கிய
பெறுமதியற்ற சிப்பிகளைச் சேகரிக்கும்
பெறுமதியான சிறுமியாய் வாழ்வு..
எரிக்கும் வெயிலிலே
கொழுந்துக் கூடை சுமந்து களைத்தவளாய்
பெருமூச்சாய் சரிகிறது
வாழ்வு..
இயற்கையைப் பார்த்து அணிந்துகொள்கிறேன்
வடிவமற்ற வாழ்வை!

பக்கம் 68 இல் உள்ள கவிதை ஆழமான அன்பின் அவஸ்தைகளையும், இன்பங்களையும் அள்ளித் தெளித்திருக்கின்றது. வாசிக்கும் புத்தகத்தை மூடும்போது உன்னையே அடையாளமாக வைக்கின்றேன் என்ற வரியில் இதயம் ஏந்திய காதல் வார்த்தை வழியே வெளிப்பட்டு நிற்கின்றதை அவதானிக்கலாம். நதியில் விழுந்த இலை எவ்வித பாரமுமின்றி நீந்திச் செல்வது போன்று அன்பானவனின் காதலால் தன் வாழ்வும் நகர்வதாக இக்கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளங்கையில் அள்ளித்தர 
என்னையும் என் எழுத்தையும் தவிர வேறேதுமில்லை
எப்போதுமே உன் வீட்டு ஜன்னல்களில் 
பச்சையத்தைப் பார்க்கிறேன்
நதியில் விழுந்த இலையாய் 
கனமற்று நகர்கிறேன்
ஒரு புத்தகத்தை வாசித்துவிட்டுப் 
பாதியில் உன்னையே 
அடையாளமாக வைத்துவிட்டுப் போகிறேன் 
அவ்வப்போது 
கருக்கட்டிய மேகம் 
என் நதியைத் தேடி பெய்துகொண்டிருக்கிறது
முனங்கும் காற்றும் 
உன் பிரியத்தைப் பேசுகிறது பாரேன்
பெருத்த கரும்பாறைகளை 
நாளும் பொழுதும் வேர்கள் கன்னமிடும் வித்தையை 
பாறைகள் அறிந்திட வாய்ப்பில்லை
உன் தலைமுறைத் தாடியின் வியர்வையாய் நிற்காமல் 
நகர்ந்துகொண்டேயிருக்கும் உன் வார்த்தை
எல்லைகளே இல்லாத உன் உடலில் 
என் காதலை அள்ளி இரைக்கிறாய் 
கனவு ஆந்தைகள் கொத்தித் தின்று விழித்திருக்க!

பக்கம் 72 இல் உள்ள கவிதையானது வீரத்தை பறைசாற்றும் தொனியில் எழுதப்பட்டுள்ளது. இன்று எல்லோரும் அநியாயங்களைப் பார்த்துப் பார்த்து பழகிவிட்டார்கள். எதிர்த்துக் குரல் கொடுக்காமல் தம் பாட்டுக்கு நகர்ந்துவிடுகின்றார்கள். கண் முன்னே நடக்கும் அநியாங்களைக்கூட தட்டிக்கேட்க மறுத்துவிடுகின்றார்கள். மென்மையானவர்களாக இருந்ததெல்லாம் போதும்.. இனிமேல் வீறுகொண்டு நமக்காகவும் சிந்திக்க வேண்டும். அதேபோல நம்மைபோல துயரத்தால் பீடிக்கப்பட்டு வாழ்வோருக்காகவும் கண்ணீர் சிந்த வேண்டும் என்பதாய் ஆக்ரோஷமாக நூலாசிரியர் கூறியிருப்பது அவர் பிறர் மீது கொண்டுள்ள அக்கரையை எடுத்துக் காட்டுகின்றது,

பூக்களின் மென்மையைப் பார்த்து
எவர்கள் மென்மையானார்கள்
முட்களைக் குத்தி
முள்ளின் வலிமையையேனும் அடைவோம்

தேனை ருசிக்கும் உங்கள் நாக்கு
கொஞ்சம் தேனியின் 
கொடுக்குகளையும் 
அறியவேண்டுமல்லவா

முட்கள் குத்தி ரத்தம் வழிந்திடும்போது
நீங்கள் இழந்த மண்ணையும் நினையுங்கள்
சிரியாவின் இரத்தத்தையும் 
நினைத்துக்கொள்ளுங்கள்

முகப் புத்தகம் வாயிலாக பலரை அறிந்துகொண்டு, அவர்களுடன் சிநேக பூர்வமான உறவை வளர்த்துக் கொண்டுள்ள நூலாசிரியர் எஸ்தர், சமூகம் குறித்த தனது பரந்த மனப்பான்மையை மென்மேலும் கவிதை வாயிலாக வெளிக்காட்ட வேண்டும். துன்பமுற்றோரின் கண்ணீர் துடைப்பதற்கு கவிதை என்ற கைகுட்டையை ஏந்தி வர வேண்டும். இன்னும் பல காத்திரமான கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு எஸ்தர் பரிசளிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூல் - கால் பட்டு உடைந்தது வானம்
நூலின் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்தர்
வெளியீடு - போதிவனம் பதிப்பகம்
விலை - 120 இந்திய ரூபாய்