Tuesday, July 19, 2016

102. என்னடா கொலமும் கோத்திரமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

என்னடா கொலமும் கோத்திரமும் சிறுகதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்

கிழக்கிலங்கையின் நிந்தவூரைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ். முத்துமீரான் அவர்கள் வெளியிட்டிருக்கும் என்னடா கொலமும் கோத்திரமும் என்ற சிறுகதைத் தொகுதி மீரா உம்மா வெளியீட்டகத்தின் மூலம் 110 பக்கங்களில் 10 சிறுகதைகளை உள்ளடக் கியதாகக் காணப்படுகின்றது. 
இந்த நூல் முத்துமீரான் வெர்களின் நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். இதில் முதலாவது சிறுகதை பூனைக்குட்டி செத்து பெயித்துகா (பக்கம் 09) என்ற சிறுகதையாகும். இந்தக் கதை குட்டிப் பூனையை கடுவன் பூனை கடித்து விட்ட கதையைக் கூறுகின்றது. அந்தச் சின்னப் பூனைக் குட்டியைப் பார்க்க பாவமாக இருக்கின்றது. கழுத்தில் இரத்தம் வழிந்தோடி உள் தசையெல்லாம் தெரிகின்றது. அதை தூக்கிக்கொண்டு போக சில காகங்கள் வட்டமிடுகின்றன. தாய் பூனை செய்வதறியாத கவலையுடன் காணப்படுகின்றது. அதைப் பார்த்து நாயும் மிகவும் பரிதாப்பட்டு சதாவும் குரைத்துக் கொண்டே இருக்கின்றது.

இந்தக் கதையின் சிறப்பம் என்னவென்றால் பூனைகளைக் குறியீடாக வைத்து சமூகத்தில் நடக்கின்ற அநியாயங்களைச் சுட்டி நிற்பதாகும். பூனைக் குட்டியாக பொது மக்களும் கடுவன் பூனையாக மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களும், அந்த பொது மக்களை இன்னும் கஷ்டப்படுத்துவதற்கு காகங்களாக அரசியல்வாதிகளும் இருப்பதாக உணர்த்தப்பட்டுள்ளது.

அதாவது பதவிக்கு ஆசைப்பட்டு தனக்குக் கீழ் உள்ளவர்களின் உரிமைகளை அவர்கள் ஒன்றணைந்து குறி வைக்கின்றார்கள். தமக்கு மாத்திரம் எல்லா அதிர்ஷ்டங்களும் வாய்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதை அனுபவிக்காமல் கட்டிக் காத்து மாப்பிள்ளையாக வருகின்ற டாக்டருக்கு ஏசீ காரும், வீடும் கொடுக்கின்றார்கள். பெருமைக்காக தம்பட்டம் அடிக்கும் இவர்கள் வாய்க்கு ருசியாக நன்றாக சாப்பிட்டோ, நன்றாக உடுத்தியோ அனுபவிக்காதவர்கள். மனதில் ஆசைகளை வைத்துக்கொண்டு இறப்பவர்களின் உயிர் இந்த உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை சிலரிடத்தில் உலவுகின்றது. இந்தக் கதையில் வருகின்ற கதாபாத்திரம் இறந்ததைத் தொடர்ந்து அவரின் ஆவி ஊரெல்லாம் திரிவதாக பேசப்படுகின்றது. உலகத்தில் பேராசை கொண்டு கருமியாக வாழ்ந்தவர்களின் ஆவி இப்படித்தான் அலைந்து கொண்டிருக்குமோ என்று வாசகரைக் கேட்டு நிற்கின்றது நூலாசிரியரின் இந்தக் கதை.

போடுங்கடா டயரயிம் கட்டயயிம் (பக்கம் 18) என்ற சிறுகதையும் காலத்துக்கு ஏற்றாற் போன்ற கதையம்சத்தைக் கொண்டுள்ளது. அகமது மாமா என்பவருக்கு உடல் நலம் குன்றிப் போகின்றது. பலருக்கு சிக்கன் குனியா காய்ச்சல் ஏற்பட்டு தீடீரென பல மரணங்கள் சம்பவிக்கின்றன. மார்க்கத்தை முறையாகப் பின்பற்றாமல் தான்தோன்றித் தனமாக வாழ்பவர்கள் சுனாமி வந்தாலென்ன.. சிக்கன் குனியா வந்தாலென்ன எதற்கும் அஞ்சாமல் ஏழைகளின் வயிற்றிலடிக்கின்றார்கள்.

இவ்வாறானதோர் ஏழையான அகமது காக்கா ஊருக்குள் ஒரு வைத்தியசாலை இல்லாத காரணத்தால் பல மைல் தூரம் தள்ளி அமைந்திருக்கின்ற வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமையில் காணப்படுகின்றார். சுனாமிக்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் பலர் காசை எடுத்துக்கொண்டு வைத்தியசாலை கட்டித் தருவதற்கு உதவி செய்ய வந்த போதிலும் அந்த ஊரில் உள்ள படித்தவர்கள், எம்பிக்கள் எல்லாம் ஏதேதோ கூறி அந்த வேலைத் திட்டத்தை நிறுத்திவிட்டதால் இந்த நிலைமை என்று கூறுகின்றார் அகமது.

அப்போது அவ்விடம் வந்த சிலர், முஸ்லிம் நாடுகளான ஜோர்டான் மற்றும் ஈராக் நாடுகள்  அமெரிக்காவால் தாக்கப்படுவதாகவும் ஊர் எம்பியின் கட்டளைக்கு இணங்க, அதை எதிர்த்து கடைகள் மூடப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் அவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். மீறி வாகனங்கள் செல்லுமானால் அவை எரிக்கப்படும் என்றும் சவால் விடுக்கும் அவர்களிடம் தனக்கு வருத்தமாக இருப்பதால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சுகின்றார் வயோதிபர் அகமது. அவரது குரலைக் காதில் வாங்காதவர்கள் வீட்டிற்குச் சென்று கைமருந்து குடித்துவிட்டு வீட்டிலேயே நிற்குமாறு அவரை வழியனுப்புகின்றனர். 

அயலவர்கள் கஷ்டத்தில் வாடும்போது எங்கோ உள்ளவர்களுக்கு போர்க்கொடி தூக்கி ஊரில் மையத்துக்கள் விழுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இவர்களும், எம்பி மார்களும் என்றுதான் மார்க்கத்தை உணர்ந்து திருந்தி நடக்கப் போகின்றனரோ என்று அங்கலாய்கின்றார் அகமது.

சமூக நிகழ்வுகள் முத்துமீரான் என்ற படைப்பாளியால் மிகத் துல்லியமாக படம்பிடிக்கப்படுகின்றன. வாசகரை மகிழ்விப்பதற்காக அவரது படைப்புக்கள் இன்னும் பல நூல்களாக வெளிவர வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!!!

நூல் - என்னடா கொலமும் கோத்திரமும்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - எஸ். முத்துமீரான்
வெளியீடு - நெஷனல் பப்ளிஷர்ஸ் 
விலை - 250 ரூபாய்

No comments:

Post a Comment