Wednesday, May 13, 2020

133. மனசெல்லாம் மகிழ்கிறது கிராமிய கவிகளின் தொகுதி பற்றிய பார்வை

மனசெல்லாம் மகிழ்கிறது கிராமிய கவிகளின் தொகுதி பற்றிய பார்வை

பீ.ரீ. அஸீஸ் எழுதிய  மனசெல்லாம் மகிழ்கிறது என்ற நூல் கிராமிய கவிகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. இதில் 12 தலைப்புக்கள் அடங்கிய கிராமிய கவிகள் 124 பக்கங்களில் அமைந்தி ருக்கின்றது.

கிராமிய கவிகள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவை. ரசனை மிகு கற்பனைகளை உள்ளடக்கக் கூடியவை. காதல், பல்சுவை, தாலாட்டு, சோகம், சேனை, வயல், நகைச் சுவை, மீனவர், மாட்டு வண்டி, ஏக்கம், விளையாட்டு, வாழ்த்து ஆகிய பிரிவுகளை முன்னிருத்தி இத்தொகுதியில் பல கிராமிய கவிகள் காணப்படுகின்றன.

இந்தத் தொகுப்பு பற்றி வெளிவருவதற்கான காரணத்தை நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

'கிராமியக் கவிகள் மனித இனம் தோன்றிய காலம் முதலே இருந்து வருகின்றது என்பது இத்துறையில் ஆய்வு மேற்கொள்ளுகின்ற ஆய்வாளர்களின் கருத்தாகும். எழுத்து அறிமுகமாகும் முன்னர் பேச்சு மொழியே வழக்கில் இருந்திருக்க வேண்டும். பேச்சுமொழி தொடங்கப்பட்ட காலம் முதல் வாய் மொழியிலான இலக்கியங்கள் தோற்றம் பெற்றன. அவை கவி, பாடல், கதை, நொடி என பல்வேறு வடிவங்களில் காணப்பட்டனு. மனித வாழ்வியலையும் ஆற்றலையும் இத்தகைய படைப்புக்கள் பறை சாற்றி நிற்பதை இவற்றைப் படிக்கும்போது உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதனாலேயே இதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு என்னுள் ஆழ வேரூன்றத் தொடங்கியது'.

சங்க காலம் தொட்டு இந்தக் காலம் வரை காதல் பற்றி பாடாத கவிஞர்கள் இல்லை. காதல் சுவையை உணரும், உணரத் துடிக்கும் யாவரும் காதல் சம்பந்தமான படைப்புக்களில் அதிக நாட்டங் கொள்வர். இந்தத் தொகுப்பில் உள்ள காதல் பாடல்களும் ஆண்களை நினைத்துப் பெண்களும், பெண்களை நினைத்து ஆண்களும் பாடும் பாடல்களாக அமைந்திருக்கின்றன. இவை தூதுப் பாடல்களாகவும், ஏக்கத்தின் வெளிப்பாடாகவும், காதல் இன்பத்தை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குகின்றன.  ஆண் மூலம் வெளிப்படுத்தப்படும் காதலை கீழுள்ள கவிகளில் (பக்கம் 13) காணலாம்.

மச்சாளே
மனசு இனிக்கின்ற கற்கண்டே
உச்சால
நெலவு சாய ஒன்னிடத்தில்
நான் வருவேன்
கலங்காதே

**

காத்தாக நான் வாறேன்
கன்னி ஒன்ன தழுவிடவே
ஆத்தோரம் வந்து நில்லு
அங்கே உந்தன் சேதி சொல்லு

பெண் மூலம் வெளிப்படுத்தப்படும் காதல் உணர்வுகள் கீழுள்ள (பக்கம் 18) கவிகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விதம் வருமாறு..

வீடெல்லாம் வெளக்கேத்தி
தெருவாசல் அழகூட்டி
முத்தத்திலே பாய் போட்டு
அவர் வரப் பாத்திருந்தேன்
அவசரமாக் காத்திருந்தேன்

**

கொளத்து மீனைப்
பொறிச்சி வெச்சி
கொழ கொழயா
பழம் பறிச்சி
தலை நிறையப் பூவோடு
காத்திருக்கேன் ராசா

கிராமங்களில் சோளம் விளைந்திருக்கின்ற அழகே தனி. அதன் சுவையும் மணமும் நெஞ்சை விட்டு அகலாதவை. சோள விற்பனைப் பாடலாக (பக்கம் 88) கீழ்வரும் பாடல் அமைந்துள்ளது.

பால் வத்தாப்
புதுக் கதிர்கள்
பக்குவமா வெச்சிருக்கேன்
கை நிறைய எடுத்துப் போங்க
தோதுப்பட்டா மீண்டும் வாங்க

ழூழூ
கமகமக்கும் வாசம் தரும்
கலகலப்பை மனசில் தரும்
சீமை இன சோளக் கதிரு
இது சிவந்த நல்ல பெரிய கதிரு

மீனவப் பாடல்களும் கிராமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓசைநயமிக்க இப்பாடல்கள் (பக்கம் 102) இன்றும் மீனவர்களிடம் நிலைத்து நிற்கின்றன..

மீன் பிடிக்கப் போய் வருவோம்
எல்லோரும் ஐசலக்கடி ஏலேலோ
பாய் மரத்தை விரிச்சிடுங்க
பார்வையிலே மீன் படுது
போய் வரவே புறப்படுங்க
சீக்கிரமாய் எல்லோரும்

இத்தொகுப்பில் காணப்படும் ஏக்கப் பாடல்களுள் (பக்கம் 115) குழந்தைப் பாக்கியம் இல்லாமல் ஏங்கும் தாயின் துயரம் நன்றாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு உலகத்தில் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய அந்தஸ்து தாய்மை. மிகப் பெரிய சொத்து குழந்தை. அது இல்லாதவர்களின் ஏக்கம் இவ்வரிகளில் வழிந்தோடுகின்றது.

அடுக்கி வெச்ச சாமான்களை
பிரிச்சி விளையாட ஒரு புள்ளே இல்லே
வாய் நெற பேர் சொல்லி கூப்பிடவும்
எனக்கு ஒரு புள்ள இல்லே

இலக்கிய வித்தகர் பீ.ரீ. அஸீஸ் பல்துறைகளில் தன் படைப்புக்களை நல்கி வருகின்ற ஒரு இலக்கியவாதி. அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - மனசெல்லாம் மகிழ்கிறது 
நூலின் வகை - கிராமியக் கவி
நூலாசிரியர் - பி.ரீ. அஸீஸ்
தொலைபேசி - 0772902042
ஈமெயில் - azeesphfo@gmail.com
வெளியீடு - பாத்திமா றுஸ்தா பதிப்பகம்
விலை - 250 ரூபாய்

No comments:

Post a Comment